Sunday, December 21, 2014

ஆழி மழைக் கண்ணா


"ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்து
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்சங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்"

மேலே சொன்ன ஆண்டாள் திருப்பாவையின் பொருள் :

"மேகத்திற்கு அதிபதியான கண்ணா, கடல் நீர் முழுவதையும் எடுத்துக் கொண்டு மேலே செல். கண்ணனின் நிறம் போல் கருத்து, பத்மநாபன் கையில் உள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல மின்னலை வீசு.  வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலி எழுப்பி அவனது   வில்லில் இருந்து வெளிப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக.  மார்கழி நீராடுலக்காக எல்லா நீர் நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சி அடையச் செய்வாயாக".

கடல் நீர் ஆவியாகி பிறகு மேகமாகி மழை பொழிகிறது என்று இன்றைய அறிவியல் சொல்வதை போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறாள் ஆண்டாள்.  இப்படி பல விஷயங்களை நம்முடைய முன்னோர் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர்.  நாம்தான் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றோம்.

திருப்பாவையின் ஒவ்வொரு பாடலின் வரிகளும் positive vibration அளிப்பது என்பது என் கருத்து.  உதாரணத்திற்கு திருப்பாவையின் 3 வது பாசுரத்தில் வரும் சில வரிகள் "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து",  "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்" , "நீங்காத செல்வம்". இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.     

ஆண்டாளின் திருப்பாவையை நாம்தான் கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் (அது என்ன கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் என்று கேட்காதீர்கள் - but  ஆனா, நடு  centre  என்ற வகையில் புரிந்து கொள்ளவும்) மட்டும் நல்ல கணவன் கிடைப்பதற்காக படிக்க வேண்டும் என்று சுருக்கி விட்டோம்.

என்னைப் பொறுத்த வரை திருப்பாவையை ஆண்  பெண் என்று எல்லோரும் படிக்க வேண்டும்.

கல்யாணம் ஆகாத பெண்கள் (ஆண்களும்தான்) தினமும் திருப்பாவை பாசுரம் படித்தால் நல்ல வாழ்க்கைத் துணையும், நிறைந்த செல்வமும் கிடைக்கும் என்பது நம் பெரியவர்களின் நம்பிக்கை.

"நாம் கூட திருப்பாவை பாசுரங்கள் படித்திருந்தால் நமக்குக் கூட .........." என்று மணமான (I mean கல்யாணமான) சிலபேர் நினைக்கக் கூடும். கவலையே படாதீர்கள்.  இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை.  இப்போதாவது ஒழுங்காகப் படித்தால், கொஞ்சம் ஏடாகூடமாக வாழ்க்கை (துணை) இருந்தால் கூட, தட்டி சரி செய்துவிடுவார் நம் ஆண்டாள்.  




Thursday, December 11, 2014

அருந்தவப்பன்றி


     "தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?"

என்று பாடிய மகாகவி பாரதியின்  132 வது பிறந்த நாள் இன்று.  11/12/1882-ம் ஆண்டு பிறந்து 39 ஆண்டுகளே இந்தப் புவியில் வாழ்ந்து 11/09/1921-ம் ஆண்டு மறைந்த மகாகவியின் பல கவிதைகள் அவனை ஞானக்கவிஞன் என்று பறை சாற்றும்.  அதற்கு மேல சொன்ன கவிதை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல.

1921-ம் ஆண்டே  இந்த உலகை விட்டு மறைந்தாலும், 1947-ம் ஆண்டு நாம்  பெற்ற  விடுதலையை "ஆடுவோமே பள்ளு  பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று" என்று தீர்க்க தரிசனமாகப் பாடியவன்.

சாதாரண மனிதர்களான நம்மோடு ஒப்பிடுகையில் பல மடங்கு உயர்வான வாழ்க்கை வாழ்ந்த பாரதி தன்னை ஒரு பன்றியோடு ஒப்பிட்டு சொல்லியிருக்கிறான் என்று நம்ப முடிகிறதா.  ஆனாலும் தன மேல் அவனுக்கு அவன் தகுதிக்குரிய உயர்வு மனப்பான்மையும் இருந்ததால்தான் தன்னை வெறும் பன்றி என்று குறிப்பிடாமல் "அருந்தவப்பன்றி" என்று குறிப்பிடுகிறான்.

இந்த  "அருந்தவப்பன்றி" குறித்த ஒரு கதை இருக்கிறது.  அருந்தவம் செய்த ஒரு முனிவன் ஒரு சாபத்தின் காரணமாக பன்றியாக மாறிவிடுகிறான். அப்படி  மாறுவதற்கு முன் தன்  மகனை அழைத்து அந்த முனிவன் சொல்வான்.  "மகனே நான் பன்றியாக மாறியதும் என்னை வெட்டிவிடு. அப்போதுதான் எனக்கு சாப விமோசனம் கிடைத்து நான் மீண்டும் முனிவனாக மாறுவேன்" என்று.  மகனும் சரி என்று சொல்வான்.

அதே போல் முனிவன் பன்றியாக மாறியதும் அவனை வெட்ட மகன் தயாராகும் சமயம், பன்றியாக மாறிய முனிவன் மகனிடம் "பன்றி வாழ்க்கை  நான் நினைத்தது போல் அவ்வளவு மோசமாக இல்லை.  நான் இன்னும் கொஞ்ச நாள் இந்த வாழ்க்கை வாழ்ந்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி காட்டுக்குள் சென்று விடுவான்.

சில மாதங்கள் கழித்து  மீண்டும் தன்  தந்தையைத்  தேடி காட்டுக்குள் வந்த மகன் தன்  தந்தை குடும்பம் குட்டியாக இருப்பதைப் பார்த்து திகைத்து நிற்பான்.  பன்றியான் முனிவன் தன மகனிடம் எனக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது. நீ போய்  வா என்று சொல்லி விடுவான்.

அற்ப சந்தோஷங்கள்  எப்படி உயர்ந்த தவ வாழ்க்கை முனிவர்களையும் கீழ் நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது என்று வருந்தி திரும்புவான் மகன்.

"எமக்குத் தொழில் கவிதை" என்று சொல்லிய பாரதி சில வருடங்கள் வறுமையின் காரணமாக எட்டயபுரம் மன்னனிடம் வேலை செய்த காலத்தில் தனக்கு மிகவும் பிடித்த கவிதை தொழிலைச் செய்ய முடியாத நாட்களை பன்றியின் வாழ்க்கையோடு ஒப்பிடுகிறான்.

மகாகவி என்று நாம் கொண்டாடும் பாரதியே தன்னை "அருந்தவப்பன்றி" என்று சொல்லும்போது, "தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி" வாழும் நாம் ordinary  பன்றிகள் வகையில்கூட சேருவோமா என்று தெரியவில்லை.

பாரதி கிருஷ்ணகுமார் எழுதியுள்ள "அருந்தவப்பன்றி - சுப்பிரமணிய பாரதி"  என்ற நூலில்  மகாகவியைப் பற்றி நாம் இதுவரை அறியாத பல விஷயங்கள் தெரிய வருகிறது.

ஆனால் எனக்கு ஒரு வருத்தம்.  நாளை (டிசம்பர் 12) சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கொண்டாடிக் கொண்டிருக்கும் எல்லா சேனல்களும் மகாகவியைப் பற்றி ஒரு நிகழ்ச்சியைக் கூட நடத்தாதது ஏன் ? ஏதோ ஒரு சேனலில் மட்டும் பாரதி திரைப்படத்தைக் காட்டி தங்கள் கடமையை முடித்து விட்டார்கள்.  என்ன செய்வது ரஜினிக்கு இருக்கும் TRP Rating மகாகவிக்கு இல்லை.  அது சரி நாளை ரஜினியின் பிறந்த நாள் என்று தெரிந்திருக்கும்  நம்மில் எத்தனைப் பேருக்கு இன்று பாரதியின் பிறந்த நாள் என்று தெரியும்.

அதனால் என்ன பாரதி இன்னும் பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னும் உன்னுடைய பிறந்த நாளை தமிழ் கொண்டாடிக் கொண்டுதானிருக்கும். உன்னுடைய "புதிய ஆத்திச்சூடி" அன்றும் புதிதாகத்தான் இருக்கும்.

"புதிய ஆத்திச்சூடி"

1. அச்சம் தவிர்
2. ஆண்மை தவறேல்
3. இளைத்தல் இகழ்ச்சி
4. ஈகை திறன்
5. உடலினை உறுதிசெய்
6. ஊண் மிக விரும்பு
7. எண்ணுவது உயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சிகொள்
10. ஒற்றுமை வலிமையாம்
11. ஓய்தல் ஒழி
12. ஔடதம் குறை









Friday, November 28, 2014

வீடு திரும்பும் மகளின் பாதை


தினந்தோறும் கொலை> கொள்ளை> விபத்துச் செய்திகளை படித்தும் கேட்டும் பழகிப் போன நமக்கு பள்ளி> கல்லூரி> அலுவலகம் சென்று வீடு திரும்பும் நம் அன்புக்குரியவர்கள் கொஞ்சம் தாமதமாக வந்தாலும்> தினசரி படித்து> கேட்ட அல்லது பார்த்த அவநம்பிக்கைச்  செய்திகள் நம் மனதில் Flash அடித்து மனதைப் பதைபதைக்கச் செய்யும். அதிலும் பெண்களைப் பெற்றவர்களின் பயம் அதிகம் மட்டுமல்ல. ஒருவகையில் நியாயமானதும்கூட.  

ஆனால் வீடு திரும்பும் மகளின் பாதை என்ற கவிதையை ஆனந்த விகடன் இதழில் (5/11/14) படித்த போது. நம் மனதில் தோன்றும் அவநம்பிக்கைகளை அகற்றி நம்பிக்கையை விதைகின்றன.

இந்தக் கவிதையில் கவிஞர் விடுமுறைக்கு வீடு திரும்பும் தன் மகளின் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல், தன் மகளின் நல்ல எண்ணங்களும் அவள் தாயின் நம்பிக்கையும் சேர்ந்து அவள் பயணத்தைப் பாதுகாக்கும் கவசமாகிறது என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

இதோ அந்தக் கவிதை .....

கொரியன் தொடர்களைப் பார்க்கும் உன் தோழிகளிடையே
பாவ்லோ  கொயலோவை (Paula Coelho) பின்தொடரும் அருமை மகளே

நீ விடுமுறைக்கு வீடு திரும்பும் பாதை
நம்மிருவரின் புனைவுகளாலான திருப்பங்களை உடையது

எப்போதும் நீ எழுந்து இடம் தரும் மூதாட்டிகளின்
ஆசிர்வாதத்தால்தான் உன் உள்ளங்கைகளில்
மழை பொழிந்துகொண்டே இருக்கிறது

ஜன்னலோரம் வெள்ளரிப்பிஞ்சு விற்பவனை
சார் என்று அழைத்ததற்காக கடிந்து  கொண்ட
தோழியையும் நேசிப்பாயல்லவா 

இவ்விளகிய மனமே உன் வாகனத்தின் பாதுகாப்பு கவசம்

உன் செவிகளுக்குள் பாடிப் பாடி
சிறகுகளை வளரச் செய்திருக்கிறாள் அல்லவா காகா

அந்நம்பிக்கையில்தான் 
ஆசிட் வீசும் கதைகள் நிறைந்த பாதையில் 
நீ வந்துகொண்டிருக்கும் போதிலும் 
பதட்டமின்றி உனக்கான இரவு உணவைத் 
தயாரித்துக் கொண்டிருகிறாள் உன் தாய் 

அவளுடைய கனிந்த எண்ணங்கள் 
உன்னைச் சுற்றியும் ஓர் அகழியை உருவாக்குகிறது 

உன்னோடு உண்ணவும் படுத்து உறங்குவுமான விழைவில் இருக்கும்
கறுப்பு நாய்க் குட்டி பெலிசியாவின் கனவுகளை
எல்லா தேவதைகளும் அறிந்துதான் வைத்திருக்கின்றனர் 

காமுகர்களும் பெண்களை பாலியல் தொழிலுக்கு பழக்குபவர்களும் 
உறுப்புகளை திருடுபவர்களும் நிறைந்த சந்தைகள் ஊடாக 
விரைந்துகொண்டிருக்கிறதுன் வாகனம் 

தைரியமாய் பயணித்துக் கொண்டிருக்கும் நீ அறிந்ததுதானே 
மகள்கள் வீடு திரும்பும் வாகனத்தை 
கடவுள்தான் இயக்குகிறார் என்பது !

அவலங்கள் நிறைந்தது போன்று தோன்றும் வாழ்கை உண்மையில் மிகவும் அழகானது என்பதையும், வாழ்க்கை குறித்து வீண் அச்சங்கள் கொள்ளத் தேவையில்லை என்பதையும் மேலே உள்ள கவிதை வரிகள் நிரூபிக்கின்றன.

கவிதையை எழுதிய கவிஞர் கரிகாலனுக்கு நமது வாழ்த்துக்கள்.

Wednesday, November 12, 2014

நச்சென்று நாலு வார்த்தை


சில சமயங்களில் நீண்ட வாக்கியங்களும், சொற்க்குவியல்களும் விளக்க முடியாத விசயங்களை ஒரு சில வார்த்தைகள் விளக்கி விடும்.  Zen கவிதைகளின் சிறப்பே ஒரு சில வார்த்தைகள் நம் மனதில் பல எண்ணங்களை (நல்ல எண்ணங்கள்தான்) கிளறி விடும்.

ஆனால் இவை Zen கவிதைகளும் இல்லை அல்லது என் கவிதைகளும் இல்லை.   என் மனதில் பதிந்த வரிகளில் சில.   உங்களுக்கும் இதைப் படித்தால் இது போல சில வரிகள் நினைவில் தோன்றலாம்.


இந்திரா காந்தி சுடப் பட்ட அன்று யாரோ எழுதிய கவிதை.

"இன்றுதான் இந்திரா
காந்தியானார்"

இளமைக் கால கவிஞர்  வைரமுத்து சுதந்திரம் பற்றி  எழுதிய கவிதை.

"அவன் பட்டு வேட்டி பற்றிய
கனாவில்  இருந்த போது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப் பட்டது"

கம்பனை copy அடித்து யாரோ ஒரு இளைஞனின் (ஒரு அனுமானம்தான்) நையாண்டி புதுக் கவிதை :

"அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
பின்னாலிருந்து அவள்
அண்ணனும் நோக்கினான்"

அம்மா (தமிழ் நாட்டு அம்மா) சிறையில் இருந்த போது :

"அம்மா வேணும் என்று
குழந்தைகள் அழுகிறார்கள்
சும்மாவேனும் என்று
அமைச்சர்கள் அழுகிறார்கள்"

பாரதியின் சில வரிகள் :

"அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"

 "நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில்
எறிவதுண்டோ"

திருமூலரின் சில வரிகள் :

"மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்கத்
தேவை இல்லை"

(என் வரிகள் - மனமது செம்மையாக மந்திரம் செபிக்க வேண்டும்)

உங்களுக்கும் இது போன்ற நச்சென்ற நாலு வார்த்தைகள் நினைவுக்கு வந்தால் எனக்கு சொல்லுங்கள்.  குறித்துக் கொள்கிறேன்.



Saturday, October 18, 2014

பரம பதம்


முன்பெல்லாம் ஏகாதசி இரவில் பரம பதம் விளையாடுவார்கள் (முன்பெல்லாம் என்று ஏன் சொன்னேன் என்றால் இப்போது நிறைய பேருக்கு 'ஏகாதசி' என்றால் என்ன 'பரம பதம்' என்றால் என்ன என்று முதலில் விளக்க வேண்டும் பிறகுதான் விளையாடுவதைப் பற்றி யோசிக்க வேண்டும்).

பரம பத விளையாட்டை நம் வாழ்வின் அங்கமாக வைத்த நம் முன்னோர்கள் வாழ்வின் உண்மை உணர்ந்தவர்கள்.  தாயக்  கட்டையை  உருட்டுவது  நாமாக இருந்தாலும்  எப்போது ஏணி நம்மை ஏற்றி விடும் எப்போது பாம்பு நம்மை கீழே  இறக்கி விடும் என்று தெரியாது.

இந்த உண்மை புரியாமல் ஏணியில் ஏறும் போது "என்னால் என்னால்" என்று மார் தட்டிகொள்கிறோம், இறங்கும்போது "உன்னால் உன்னால்" என்று ஊரையே குறை சொல்கிறோம்.  நம் வாழ்வில் உயர்வதற்கு நாம் மட்டுமே காரணமாக இருந்தால், அந்த logic படி இறங்கும்போதும் நாம் மட்டுமேதானே காரணமாக இருக்க வேண்டும்.

சீன ஞானி Lao Tzu (இவரை லாட்சு என்றும் சொல்வார்கள் லாசு என்றும் சொல்வார்கள்.  நான் லாசு என்று சொல்லி அதை நீங்கள் லூசு என்று படித்து - எதற்கு அந்த ஞானி பெயரைக் கெடுக்க வேண்டும்.   அதனால் லாட்சு என்றே குறிப்பிடலாம்).

லாட்சு சொல்கிறார் - வாழ்வில் மறைந்து  கிடக்கும் உண்மைகள்தாம் நம்மை வழி நடத்துகின்றன என்று (இவருடைய இதே கருத்தை James  Allen  போன்ற தத்துவ ஞானிகளும் வழி மொழிந்திருக்கிறார்கள்).  அது என்ன மறைந்து கிடக்கும் உண்மைகள். வேறொன்றுமில்லை  நம்முடைய எண்ணங்கள்தான்.

மக்கள் நம்முடைய சொல்லையும், செயல்களையும்,  வைத்து நம்மை மதிப்பீடு செய்கிறார்கள்.  ஆனால்  இறைவன் (இறைவன் என்ற வார்த்தை பிடிக்காதவர்கள் இயற்கை என்று எடுத்துக் கொள்ளலாம்) நம்முடைய எண்ணங்களை வைத்து மட்டுமே நம்மை மதிப்பீடு செய்கிறான்.

இப்போதுதான் புரிந்தது தாயத்தை உருட்டுவது நாமாக இருந்தாலும் (அது செயல் மட்டும்தான்) ஏணியா அல்லது பாம்பா என்பதை நம் எண்ணத்தை வைத்து  இறைவன் முடிவு செய்கிறான்.

சரி இப்ப என்ன இந்த சிந்தனை என்கிறிர்களா ? எல்லாம் அம்மாவுக்கு bail கிடைத்த சந்தோசம்தான்.


Monday, September 22, 2014

கல்யாண வைபோகமே


கடந்த 20 நாட்களாக நிறைய கல்யாண வைபவங்கள்.  எல்லா விருந்துகளிலும் கிட்டத் தட்ட ஒரே மாதிரியான menu.  இலை நிறைய அயிட்டங்களை (items - தவறாக நினைத்து விடாதீர்கள்) பார்த்தாலே வயிறு நிரம்பி விடுகிறது (நான் என்னைச் சொன்னேன்).

அதிலும் சாப்பாட்டு  விசயத்தில் நான் கொஞ்சம் slow (சாப்பாட்டு விசயத்தில் மட்டுமா என்று கேட்டு விடாதீர்கள்).  நான் சாம்பாரில் கை வைக்கும்போதே பக்கத்து இலைகாரர், yeh dhil maange  மோரில் இருப்பார்.  நான் ரசத்திற்கு வரும்போது  மோர்காரர்,  கை கழுவிக் கொண்டிருப்பார்.  அதற்குள் இலை எடுப்பவர் பக்கத்து இலை வரை மடித்து பேப்பரை 'சர்' என்று கிழிக்கும்போது தெறித்து விழும் சில பருக்கைகள் போதும் எழுந்திரு என்று சொல்லாமல் சொல்லும்.  அதுவும் தவிர இப்போதெல்லாம் வெட்கமே இல்லாமல் நாமோ அல்லது மற்றவர்களோ அடுத்தவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் பின்னால் போய் நின்று விடுகிறோம்.   அதிலும் பின்னால் நிற்கும் சிலர் தெரியாதது போல தெரிந்தே நம் chair ஐ இடித்துக் கொண்டிருப்பார்கள்.  அதனால் சாப்பிடும்போது பெரும்பாலும் குப்பையில் கொட்டுவது போல எல்லா அயிட்டங்களையும் வயிற்றில் கொட்டிவிடுகிறோம்.


எதற்கு இத்தனை  அயிட்டங்களை பரிமாற வேண்டும் எனக் கேட்டால், ஒன்றுமில்லாதவனே ஓஹோ என்று செய்யும் போது நாம் இதைக் கூட செய்யவில்லை என்றால் நம்மை ஊர் என்ன சொல்லும் என்று நம்மை திருப்பிக் கேட்பார்கள்.  அதுவும் உண்மைதான். பல சமயங்களில் நாம் ஊருக்காகதான் சில விசயங்களை செய்ய வேண்டி இருக்கிறது (அல்லது செய்யாமல் இருக்க வேண்டி இருக்கிறது).

 
அதே சமயத்தில் இப்படி உணவு விரயமாவதைத் தவிர்த்தால் எல்லோருக்கும் நல்லது. Buffet சிஸ்டம் ஓரளவுக்கு ஓகே.  ஆனால் அதையும் நம்ம ஆட்கள் எல்லோரும் விரும்புவதில்லை.

ஒரு சின்ன யோசனை எனக்கும் என் மனைவிக்கும் தோன்றியது.  நாம் தாம்பூலப் பையில் ஒரு சின்ன box வைத்து அதை சாப்பிடும்போதே கொடுத்து விடலாம்.  Sweet, Cutlet போன்ற dry dish-களை, அப்போது சாப்பிட விரும்பாதவர்கள் அந்த box  இல் வைத்து வீட்டிற்குச் சென்று பொறுமையாகச் சாப்பிடலாம். 

ஆனால் இதிலும் ஒரு அபாயம் இருக்கிறது.  நம்மில் சில பேர் இலையிலும் போடு boxசிலும் போடு என்று அடம் பிடித்தால், இரண்டாவது  பந்தியிலேயே இலையில் வைப்பதற்கு ஒன்றும் இல்லாமல் .போகக்கூடும்.

இருந்தாலும் எதையாவது செய்து விரயத்தை தவிர்ப்போம்.  கொஞ்சம் சிந்திக்கலாம்.



Sunday, August 17, 2014

Celebrate the Life - The Krishna Way


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

                                        ஆண்டாள் திருப்பாவை 

பொருள்: தேவகியின் மகனாகப் பிறந்து, ஒரே இரவில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வந்து யசோதையிடம் சேர்ந்தவனே. உன்னால் தனக்கு கேடு வரும் என்று நினைத்துப் பயந்த கம்சன் உன்னை அழிக்க நினைத்தான். ஆனால் நீயோ அதை தவிடுபொடியாக்கி, அவனது வயிற்றில் நெருப்பைப் போல பயத்தை உண்டாக்கி நின்றாய்.


நான் சென்ற வருடம் Mount Kailash - Manasarovar சென்று திரும்பிய நாள் கிருஷ்ண ஜெயந்தி. நான் இதை ஒரு "good omen" என்றே எப்போதும் நினைப்பேன்.  ஏனென்றால் கண்ணன் காட்டிய வழியில் நடந்தால் நம்மால் வாழ்க்கையை எந்த சூழ்நிலையிலும் positive  ஆக மாற்றிக் கொள்ள முடியும்.   

வெண்ணை திருடிய "திருட்டு" கண்ணன், கோபியரோடு கொஞ்சிய  "குறும்பு" கண்ணன், போர்க்களத்தில் அர்ஜுனன் மூலமாக உலகுக்கே புத்தி சொன்ன "விஸ்வரூப" கண்ணன், இதையெல்லாம் சற்று விலக்கி விட்டு கண்ணன் பிறந்த சூழ்நிலையை எண்ணிப் பார்ப்போம். மேலே ஆண்டாள்  கூறியபடி "ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர" வேண்டிய சூழல்.  தனக்கு முன் பிறந்த குழந்தைகளை எல்லாம் தன்னுடைய தாய்மாமன் கம்சன் கொன்ற நிலையில், தான் வயிற்றில் இருக்கும்போது தன்னுடைய தாயுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும் (குழந்தை வயிற்றில் இருக்கும்போது தாய் இருக்கும் மனநிலை குழந்தையை பாதிக்கும் என்ற வாதத்தைப் பொய்ப்பித்தவன் கண்ணன் - கண்ணன் கடவுளின் அவதாரம் என்பதை கொஞ்சம் ஒதுக்கி வைத்துப் பார்த்தால்).

வளரும் பருவம் முழுவதும் தன்னை பகை சூழ்ந்த நிலையிலும் வாழ்க்கையை கொண்டாட மறக்காதவன்.  போர்க்களத்தில் பாண்டவர்களின் பக்கம் இருந்தாலும் கௌரவர்களின் மீது பகைமை  கொள்ளாதவன்.    

தன்னுடைய சொந்த சோகங்களைப் பற்றி புலம்பிக் கொண்டு இருக்காமல், போர்க் காலத்திலும் (அல்லது போர்க் களத்திலும்) வாழ்வாங்கு வாழ்வதை கீதை மூலமாகச் சொன்னவன் கண்ணன்.

கண்ணன் மூலமாக நாம்  கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் "Celebrate  the  Life - Inspite of your  Odds".

மேலே உள்ள படத்தில் புன்னகை பூத்துக் கொண்டிருப்பவன் எங்கள் வீட்டில் எங்களோடு கொண்டாட வந்த கண்ணன்.

அனைவருக்கும் "கிருஷ்ண ஜெயந்தி" நல்வாழ்த்துக்கள். 




Monday, July 28, 2014

சித்தி


இன்று காலை எழுந்ததும் எங்கள் குடும்ப நண்பர் சுதாவிடமிருந்து "சித்தி இறந்துவிட்டார்" என்ற அதிர்ச்சியான குறுந்தகவல் (SMS) வந்தது.

சுமார் 7 மாதங்களுக்கு முன்புதான் சித்தியின் கணவர் மணி ஐயர் காலமானார். யாருக்கும் தொந்தரவு தராத நல்ல மரணம் என்று மனம் நினைத்தாலும், மணி ஐயர் காலமான பிறகு சித்தியை பார்க்க வேண்டும் என்று நானும் என் மனைவியும் பல முறை நினைத்தும் ஏதோ  ஒரு காரணத்தினால் தள்ளிக் கொண்டே போனது.  ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது தன்   கடமையை செய்து கொண்டே இருக்கிறது.

சித்தியும், மணி ஐயரும் எங்கள் ரத்த சம்பந்தம் அல்ல.  ஆனால் தன்னுடைய மாறாத அன்பால் எங்கள் குடும்ப உறவாய் ஆனவர்கள்.  சுமார் 25 வருட கால உறவு இது.

மணி ஐயர்தான் எங்களுடைய திருமணத்தை நடத்தி வைத்தவர். திருமணத்தின் ஒவ்வொரு சடங்கையும் விளக்கி, வேத மந்திரங்களின் பொருளைச் சொல்லி, மந்திரங்களை ஒழுங்காக உச்சரிக்கச் செய்து எங்கள் திருமணத்தினை நடத்திக் கொடுத்தார்.

நாங்கள் அவர் வீட்டுக்குப்  போகும்போதெல்லாம் நீங்களெல்லாம் எங்கள் குழந்தைகள் கண்ணா என்று அன்புடன் உபசரிப்பார்கள்.

அவர்கள்  வசித்த சிறிய வீட்டில் எத்தனை பேர் எத்தனை முறை சென்றாலும் முகம் கோணாமல் சுவையான காபி (coffee) கலந்து கொடுப்பார்கள். ஏதாவது sweet  அல்லது பலகாரம் செய்தால் "சீனு உனக்கு பிடிக்குமே என்று வைத்திருந்தேன்" என்று சொல்லி கொடுப்பார்கள்.  

இன்று நம்மில் எத்தனை பேர் வசதி இருந்தும் உறவுகளையும், நட்பையும்  வீட்டுக்கு அழைத்து விருந்தோம்ப நினைக்கிறோம்.  மிஞ்சிப் போனால் Party  என்ற பெயரில் ஏதாவது ஒரு ஹோட்டலில் விருந்து கொடுத்து உறவைப் பேணி (?) விடுகிறோம்.

இப்படி பல நினைவுகளோடு சித்தியை கடைசியாக பார்க்கச் சென்றோம். சித்தியின் மகன் சிவா என்னைப் பார்த்ததும், "அண்ணா, அம்மாவுக்கு AC யில் தூங்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசை.  ஆனால் அந்த ஆசையை என்னால் கடைசி வரை நிறைவேற்ற முடியவில்லை" என்று அழுதான்.

ஆனால் குளிர்பதனப் பெட்டியில் வைக்கபட்டிருந்த சித்தியின் முகம் தன் மகன், AC யில் தூங்க வேண்டும் என்ற தன்னுடைய கனவை நிறைவேற்றி விட்டான் என்பது போல மலர்ச்சியுடனும் பொலிவுடனும் இருந்தது. 

உடலுக்குத்தான் மரணம், ஆத்மாவுக்கு அல்ல.



  

Sunday, July 27, 2014

நிறைய Vs நிறைவாக


சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன்.  நிறைய பேர் பேசினார்கள்.  ஆனால் மனதுக்கு நிறைவாக பேசியவர்கள் மிகச் சிலரே.  சில "பெரிய மனிதர்கள்" கூட பார்வையாளர்கள் தங்கள் பேச்சை ரசிக்கவில்லை என்று தெரியாமலேயே (அல்லது தெரிந்தும்கூட) குறித்த நேரம் கடந்தும் பேசிக்  கொண்டிருந்தார்கள்.

ஆனால் மிகச் சிலர் அவை அறிந்து பேச வேண்டிய கருத்துக்களை மிகவும் சுவையாக பேசி குறித்த நேரத்தில் பேசி அமர்ந்தார்கள். இதன் நீட்சியாக எனது சிந்தனைகள் சில.

நாம் வாழ்கையில்  நிறைய சந்தர்ப்பங்களில் நிறைய செய்ய ஆசைப்படுகிறோம். ஆனால் நிறைவாகச்  செய்கிறோமா என்று யோசித்தால் இல்லை என்றுதான் தோன்றுகிறது.  நாம் பொதுவாக செய்யும் கீழ்க்கண்ட சில விஷயங்களை யோசித்துப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.


  • நிறைய படிக்கிறோம் - நிறைவாக படிக்கிறோமா ?
  • நிறைய சாப்பிடுகிறோம் - நிறைவாக சாப்பிடுகிறோமா ?
  • நிறைய தூங்குகிறோம் - நிறைவாக தூங்குகிறோமா ?
  • நிறைய பேசுகிறோம் - நிறைவாக பேசுகிறோமா ?
  • நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் - நிறைவான நண்பர்களாக இருக்கிறார்களா ?
  • நிறைய செலவு செய்கிறோம் - நிறைவாக செய்கிறோமா ?
  • நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம் - நிறைவாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோமா ?
  • நிறைய வருடங்கள் வாழ்கிறோம் - நிறைவான வாழ்க்கை வாழ்கிறோமா ? (ஆதி சங்கரரும், விவேகானந்தரும் நிறைய வருடங்கள் வாழவில்லை - 40 வருடங்கள் கூட இந்த பூமியில் இல்லை - ஆனால் நிறைவான வாழ்வு வாழ்ந்தார்கள்).


உங்களுக்கும் நான் மேலே சொன்னது போல நிறைய விஷயங்கள் தோன்றக்கூடும்.

யோசித்துப் பார்த்தால் நாம் வாழ்கையின் மதிப்பை பெரும்பாலும் எண்ணிக்கையில் அடக்கி விடுகிறோம். நம்மை சுற்றியுள்ள வாழ்வின் ஒப்பிடுகளால் (comparisons) நம் மன அமைதியை கெடுத்துக் கொள்கிறோமா என்று கூட தோன்றுகிறது.

உடுத்திக்கொள்ள இரண்டு set உடைக்கு மேல் இல்லாத கக்கனும், இறக்கும்போது சில நூறு ரூபாய் கூட தன்னுடைய சொத்தாக வைத்துக் கொள்ளாத நம் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரும் நிறைவான வாழ்க்கை  வாழவில்லையா ?

அதே சமயத்தில் இன்றைய சூழலில் நாம் கக்கனைப் போல, காமராஜரைப் போல வாழ்ந்தால் நம்மை மன நிலை சரியில்லாதோர் பட்டியலில் உலகம் சேர்த்துவிடக் கூடும்.

ஆனால் நம் மன அமைதிக்கு எது சரி என்று நினைக்கிறோமோ அதன் படி நம் வாழ்கையை அமைத்துக் கொண்டால் நம்மால் நிறைவான வாழ்கை வாழ முடியும் என்பதுதான் நமது முப்பாட்டன் வள்ளுவன் காலத்தில் இருந்து நமக்கு சொல்லி கொடுக்கபட்டிருக்கும் பாடம்.  நாம்தான் அடிப்படையை மறந்து விட்டு அந்தரத்தில் திண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

சரி சரி நான் நிறைய எழுதிக் கொண்டே போகிறேன் என்று நினைத்துவிடப் போகிறிர்கள்.  அதனால் இத்துடன் நிறைவு செய்கிறேன்.


Wednesday, June 25, 2014

புத்தரின் மனைவி


கடந்த ஜூன் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) சென்னை பல்கலை கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற தினமணி தமிழ் இலக்கியத் திருவிழாவின் இரண்டாவது நாள் அமர்வில் பார்வையாளனாக சில மணி நேரங்கள் பங்கு பெற்றேன்.

நிறையப் பேர் நிறைய  பேசினாலும் நிறைவாகப் பேசியது சில பேர் மட்டுமே. அவர்களில் என்னை மிகவும் கவர்ந்த இருவர் - வைகோ மற்றும் பாரதி கிருஷ்ணகுமார்.  கையில் ஒரு குறிப்பைக் கூட வைத்துக்கொள்ளாமல் தங்கு தடையின்றி சரளமாகப் பேசுவது ஒரு கலை.  அதில் இருவருமே வல்லவர்கள்.

வைகோவைப் பற்றி பலருக்கும் "ராசி இல்லாத" அல்லது "பிழைக்கத் தெரியாத" அரசியல்வாதி என்ற அளவில் தெரிந்து இருக்கும்.  ஆனால் இன்று பேச்சாற்றலிலும் இலக்கிய அறிவிலும் செறிந்து இருக்கும் ஒரே அரசியல்வாதி வைகோ என்று கூறலாம்.

என்னைச் செதுக்கிய இலக்கியம் என்ற தலைப்பில் சிலப்பதிகாரத்தினை அவர் மடை திறந்த வெள்ளம் போல் பேசியது "வாவ்" போட வைத்தது.  ஆனால் எதைப் பற்றி பேசினாலும் அதை இலங்கைப் பிரச்சினையோடு ஒப்பீடு செய்து பேசுவது அவருடைய பலமா அல்லது பலவீனமா என்று தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது.  அரசியலில் இன்று அவருடைய நிலை எப்படியோ எதிர்காலத்தில்  தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக வைகோ விளங்குவார்.

பாரதி கிருஷ்ணகுமார் அவர்களை ஒரு இலக்கியவாதி என்ற அளவில் தெரியும்.  ஆனால் இவ்வளவு அருமையான பேச்சாளர்  என்று தெரியாது.

புத்தக வாசிப்பின் அவசியத்தைப் பற்றி பாரதி கிருஷ்ணகுமார் பேசியது புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களைக் கூட வாசிப்பின் அருகில் கொண்டு வந்துவிடும்.

பேச்சில் கேட்ட புத்தரைப் பற்றிய ஒரு சம்பவம் சுவையாக இருந்தது.

புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர்.  அவர்  தனது 16 வயதில் யசோதரையை 
மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன்.  பிறகு அவர் தனது 29வது வயதில் மனைவி மக்களைப் பிரிந்து துறவறம் பூண்டார்  என்பது அனைவரும் அறிந்ததே. 

ஆனால் நிறையப் பேருக்குத் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது.  சித்தார்த்தர் புத்தர் ஆனா பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய மனைவியையும் மகனையும் சந்தித்தார்.  அப்போது அவர் மனைவி யசோதரை புத்தரைப் பார்த்து  சில கேள்விகள் கேட்டாள் :

1. நீங்கள் எங்களை விட்டுச் செல்லும்போது எங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்று விட்டீர்களே.  ஏன்  ?

2. நீங்கள் போக வேண்டாம் என்று நாங்கள் தடுத்து விடுவோம் என்று சொல்லாமல்  சென்று இருந்தால் அவ்வளவு பலகீனமானவரா நீங்கள் ?

3. நீங்கள் செய்த இதே வேலையை நான் செய்து இருந்தால் நீங்களும் இந்த சமுதாயமும் என்னை இப்படி கொண்டாடி இருப்பீர்களா ?

போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரால் ஒரு கேள்விக்கும் பதில் கூற முடியாமல் மௌனமாகத் தலை கவிழ்ந்தார்.

போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தனுக்கே மனைவியின் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்றால் ???? - ஆகையால் ஆண்மக்களே  .........

எனக்குத் தெரியும் நான் தனி மரமல்ல ஒரு பெரிய தோப்பு என்று. ......





Wednesday, May 28, 2014

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ......

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ......


"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகன்
சான்றோன் எனக்கேட்ட தாய்".

வள்ளுவன் தாய் மகன் என்று குறிப்பிட்டு இருந்தாலும் இந்தக் குறள் தந்தை மகளுக்கும் பொருந்தும்.

எங்கள் மகள் நிவாஷினி (என்ற நிவி) CBSE பிளஸ் 2 தேர்வில் 500 க்கு 480 மதிப்பெண் பெற்று அவள் படிக்கும் மகிரிஷி வித்யா மந்திர் பள்ளியில் commerce பிரிவில் 2 வது இடம் (முதல் இடம் 482 மதிப்பெண்) பெற்ற தகவல் கிடைத்ததும் எனக்கு திருவள்ளுவரின் மேலே குறிப்பிட்ட திருக்குறள்தான் நினைவுக்கு வந்தது.

ஸ்கூல் first அல்லது ஸ்டேட் first என்ற கனவெல்லாம் எனக்கு எப்போதும் இருந்தது கிடையாது (அதாவது என் மகள் எடுப்பாள்  என்று -  நான் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்).  ஆனால் மதிப்பெண்ணை வைத்து மட்டுமே நாம் நினைத்த  கல்லூரியில் சுலபமாக இடம் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தினால் என் மகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.   அந்த ஆசைக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டாள் நிவி.

இங்கு ஒரு விசயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.  சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் நிவியை LKG சேர்க்கும்போது, எல்லா பெற்றோர்களையும் போலவே நாங்களும் நிவிக்கு, தகுதிக்கு மீறிய விசயங்களை மூளையில் திணித்துக் கொண்டிருந்தோம். எங்கள் பங்குக்கு  ஐந்து ஆறு திருக்குறளையும் எக்ஸ்ட்ராவாக  மனப்பாடம் செய்ய வைத்து அவளை interviewக்கு தயார் செய்தோம்.

ஆனால் முதல் ரவுண்டு interview விலேயே நிவி clean  bold  ஆகிவிட்டாள் (ஆகிவிட்டோம்).  நீங்கள் உங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாள் போட்டோ ஆல்பத்தை எடுத்து பாருங்கள்.  பெரும்பாலும் குழந்தையைத் தவிர அனைவரும் மெழுகுவர்த்தியை ஊதிக் கொண்டிருப்பார்கள்.  அதே போல் கேக்கை குழந்தைக்கு ஊட்டும் போது அது வாயை இறுக்கமாக மூடிக்  கொண்டிருக்கும்.  ஆனால் சுற்றியுள்ள அனைவரும் வாயை "ஆவேன்று" திறந்து கொண்டிருப்பார்கள்.

அப்போது நாங்களும் அந்த நிலையில்தான் இருந்தோம்.  திருக்குறளை நானும் என் மனைவியும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் நிவி வாயைத் திறக்கவேயில்லை.

"Child not able to speak" என்ற முத்திரையுடன் எங்களை தலைமை ஆசிரியர் அறைக்கு அனுப்பி விட்டார்கள்.

அன்றுதான் "counseling" என்றால் என்ன என்று நிவி எனக்கு முதன் முதலாக சொல்லிக் கொடுத்தாள்.  தலைமை ஆசிரியர் அறைக்கு செல்லும் முன் அவளை தனியே அழைத்துச் சென்று ஒரு ஐந்து நிமிடம் அவளிடம் திருக்குறள் ஒழுங்காகச்  சொன்னால் என்ன கிடைக்கும் என்று ஆசை காட்டியும் ஒழுங்காகச் சொல்லவில்லை என்றால் என்ன நடக்கும் என்று பயமுறுத்தியும் (ஆனால் உண்மையில் பயந்திருந்தது நாங்கள்தான்) அவளை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றோம்.

உள்ளே சென்றதும்  தலைமை ஆசிரியர் Radha மேடம் ரிபோர்ட்டை பார்த்துவிட்டு "என்னம்மா பேச மாட்டியா" என்று பரிவாக கேட்க, நாங்கள் பாவமாக பார்க்க, என்ன நினைத்தாளோ  என் மகள் - அருள் வாக்கு வந்தது போல் கட கடவென்று ஆறு திருக்குறளையும் ஒப்பித்து விட்டாள்.

தலைமை ஆசிரியர் ஆச்சரியமாக அவளைப் பார்த்து உன்னையா பேச மாட்டாய்  என்று சொன்னார்கள் என்று சொல்லி உடனே "Child eligible for Admission" என்று எழுதி எங்களை அனுப்பி வைத்தார்கள்.  அன்று முழுவதும் கடவுளுக்கு நன்றி சொன்னோம். 

இப்போதும் அதே கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டேயிருக்கிறோம். "இறைவா நன்றி."

   

 

 


Thursday, May 15, 2014

தேர்வு முடிவுகளும் தேர்தல் முடிவுகளும்


எல்லா சமயங்களிலும் தேர்வுக் காலமும் தேர்தல் காலமும் ஒன்றாக அமைவது இல்லை.  தேர்வு முடிவுகள் (CBSE தவிர) வந்து விட்டது. தேர்தல் முடிவுகள் on the way.  தூங்கி எழுந்தால் தெரிந்து விடும்.

எந்த விசயத்தில் அரசியல்வாதிகளை மாணவர்கள்  follow  பண்ண வேண்டுமோ இல்லையோ, தேர்தல் முடிவுகளை அவர்கள் எதிர்கொள்ளும் விசயத்தில்  கண்டிப்பாக அரசியல்வாதிகளை  மாணவர்கள் பின்பற்ற வேண்டும்..

தேர்தல் நாள் வரை நிச்சயம் நம்மால் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைப்பார்கள்.  தேர்தல் முடிவுக்கு முதல் நாள் வரை  கண்டிப்பாக வெற்றி எங்களுக்கே என்று  நம்பிக்கையுடன் பேசி வருவார்கள்.

ஆனால் தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் அதற்காக பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அதற்கு ஒரு காரணத்தினை சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

தேர்தல் தோல்விக்காக தீக்குளித்த தொண்டர்கள் உண்டு.  ஆனால் தீக்குளித்த எந்த தலைவரையாவது நாம் கண்டதுண்டா ?

ஆனால் சில மாணவர்கள் தேர்வில் தவறிவிட்டாலோ அல்லது மதிப்பெண் குறைந்துவிட்டாலோ வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.

தேர்தல் தோல்விகளால் தவறான முடிவுகளை எடுத்து இருந்தால் இன்று பல தலைவர்கள் நம்மிடையே இருக்க மாட்டார்கள் (நல்லாத்தான் இருந்திருக்கும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது !!!).

தேர்தலாவது ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதான் வருகிறது.   ஆனால் தேர்வோ ஒவ்வொரு வருடமும் (அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை) வருகிறது.

ஒரு தேர்வின் முடிவை வைத்து வாழ்கையை முடிவு செய்ய வேண்டாம். குறைவான மதிப்பெண்ணால்  நாம் எதிர்பார்த்த course  அல்லது college கிடைக்காமல் போகலாம்.  ஆனால் வாழ்க்கை மிகப் பெரியது.   சாதனையாளர்கள் பலரும் மதிபெண்ணில் கோட்டை விட்டவர்கள்தான்.

அதனால் மாணவர்கள் தேர்வு விசயத்தில் அரசியல்வாதிகளின் உழைப்பையும் நம்பிக்கையையும் பிறகு எந்தவிதமான முடிவையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கையும் கடைப்பிடித்தால் வாழ்கையில் வெற்றி பெறுவது உறுதி.







Thursday, May 8, 2014

Selamat Datang


நானும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சென்று வந்தேன் என்று எப்படி ஆரம்பிப்பது.  அதனால்தான் Welcome என்பதை "Selamat  Datang" என்று மலாய் மொழியில் தலைப்பு கொடுத்தேன்.

பணி நிமித்தமாக சென்றதால் ஊரைச் சுற்றி பார்க்க முடியவில்லை. ஆனாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் flavour-ஐ அறிந்து கொண்டு வந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் மும்பை, டெல்லி செல்வது போல் சில நாட்கள் மட்டும் சென்றதால் எனக்கு வெளிநாடு செல்லும் உணர்வு   தோன்றவில்லை.  ஆனால் விமான நிலையத்தில் மனைவி குழந்தைகள் பெற்றோர் மற்றும் பல சொந்தங்களையும் விட்டு விட்டு திரும்பி வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியாமல் செல்லும் பலரின் கண்களின் ஈரம் மனதை கொஞ்சம் பிசைந்தது.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சொன்ன தமிழனும் "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்று சொன்ன தமிழனும் வறுமைக்கு பயந்து மட்டும் வெளிநாடு சென்று இருப்பார்கள்  என்று தோன்றவில்லை. தன்னுடைய வளமையைப் பெருக்கிக்  கொள்ளத்தான் பெரும்பாலும் சென்றிருக்க வேண்டும்.

நம்முடைய  தமிழ்ச்  சமூகம்  உலகில் பெரும்பாலான நாடுகளில் வேருன்றி இருப்பது மகிழ்ச்சியான விசயமாக இருந்தாலும், பெரும்பாலும் மற்றவர்களுக்கு வேலை செய்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது.  நாம் மற்றவர்களிடம் வேலை தேடாமல் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் சமூகமாக மாறினால் நம்முடைய வளமை இன்னும் அதிகமாக பெருகும்.

ஆனால்  நம்ம ஆட்கள் எங்க போனாலும் நம்ம brand ஐ குத்தி விடுகிறார்கள். பொதுவாக எந்த நாட்டுக்கு சென்றாலும் நம்ம ஊர் முருகனுக்கோ, அம்மனக்கோ அல்லது பெருமாளுக்கோ கோவில் கட்டி விடுவார்கள்.   இது நல்ல விசயம்தான் (அல்லது தவறான விஷயம் அல்ல).  ஆனால் இப்போது சிங்கப்பூரில் "டாஸ்மாக்" கையும் ஆரம்பித்துவிட்டார்கள்.  இதுதான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.



இருந்தாலும் நம்ம ஊரை விட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள்  தமிழை அதிகம் வளர்க்கிறார்களோ என்று தோன்றுகிறது.  இருக்கும்போது அதன் அருமை தெரியாது என்பதை போல.

சிங்கப்பூரில் தற்போது வசிக்கும் திரு மா. அன்பழகன் அவர்கள் சீரிய முயற்சியால் தமிழ் அன்பர்கள் பலர் கூடி தமிழை வளர்க்க பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.  நான் சென்ற நாளும் அப்படி ஒரு விழா நடந்து கொண்டு இருந்தது.  அதில் நான் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


சிங்கப்பூர் மலேசியாவைப் பற்றி நல்லதாக நாலு விசயங்களைச் சொன்னால் "நீயும் ஆரம்பிச்சிட்டியா வெளிநாட்டு புராணம்" என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுந்துவிடும்.

ஆனால்  நான் சொல்ல நினைக்கும் செய்திகளை  பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதி கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் குரலில் நம்ம சூப்பர் ஸ்டார் ஏற்கனவே பாடிவிட்டார்.  ஜஸ்ட் rewind செய்து பாருங்கள். இதோ உங்களுக்காக அந்தப் பாடல்.

அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே

புதுமையிலே மயங்குகிறேன் 

பார்க்கப் பார்க்க ஆனந்தம் பறவை போல உல்லாசம் 

வேலை இன்றி யாருமில்லை எங்கும் சந்தோஷம் 

வெறும்பேச்சு வெட்டிக்கூட்டம் ஏதுமில்லை இந்த ஊரில் 

கள்ளம் கபடம் இன்றி கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன் 

வாழும் சிங்கப்பூர் 

சிட்டுப்போல பிள்ளைகள் தேனில் ஆடும் முல்லைகள் 

துள்ளித் துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம் 

தினம் தோறும் திருநாளே சுகம் கோடி மனம் போலே 

சீனர் தமிழர் மலேய மக்கள் உறவினர் போல 

அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர் 


மஞ்சள் மேனிப்பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள் 

காவியத்தில் வார்த்தை இல்லை உன்னைப் பாராட்ட 

நடைபார்த்து மயிலாடும் மொழிகேட்டு கிளி பேசும் 

கண்ணில் தவழும் புன்னகை கண்டேன் 

சொர்க்கம்போல இன்பமும் பெருமையும் 


வாழும் சிங்கப்பூர்.


Terima Kasih (நன்றி)

 



Saturday, April 19, 2014

Desiderata


The “Desiderata” (means something that is needed or wanted) poem was originally written by Max Ehrmann. It was used by Rev. Frederick Kates of St Paul´s Church in Baltimore in devotional materials he compiled for his congregation. On top of this material he had written "Old St Paul´s Church, Baltimore A.C. 1692". The year was the foundation year of the church.

Life is so precious and valuable. The advice given in this poem is valuable and worth some serious contemplation.   During my college days, my friend had sent this to me and now only I could fully understand and appreciate its relevance in life.  Surely, you will find this very useful.

Desiderata

Go placidly amid the noise and the haste, and remember what peace there may be in silence.
As far as possible, without surrender, be on good terms with all persons.

Speak your truth quietly and clearly; and listen to others,
even to the dull and the ignorant; they too have their story.

Avoid loud and aggressive persons; they are vexatious to the spirit.
If you compare yourself with others, you may become vain or bitter,
for always there will be greater and lesser persons than yourself.

Enjoy your achievements as well as your plans.
Keep interested in your own career, however humble;
it is a real possession in the changing fortunes of time.

Exercise caution in your business affairs, for the world is full of trickery.
But let this not blind you to what virtue there is;
many persons strive for high ideals, and everywhere life is full of heroism.
Be yourself. Especially do not feign affection.
Neither be cynical about love, for in the face of all aridity and disenchantment,
it is as perennial as the grass.

Take kindly the counsel of the years, gracefully surrendering the things of youth.
Nurture strength of spirit to shield you in sudden misfortune.
But do not distress yourself with dark imaginings. Many fears are born of fatigue and loneliness.

Beyond a wholesome discipline, be gentle with yourself.
You are a child of the universe - no less than the trees and the stars;
you have a right to be here. And whether or not it is clear to you,
no doubt the universe is unfolding as it should.

Therefore be at peace with God, whatever you conceive Him to be.
And whatever your labors and aspirations,
in the noisy confusion of life, keep peace in your soul.

With all its sham, drudgery, and broken dreams, it is still a beautiful world.
Be cheerful. Strive to be happy.

Monday, April 14, 2014

தீதும் நன்றும் பிறர் தர வாரா



விஜய வருடம் முடிந்து ஜய  வருடம் தொடங்கி விட்டது. எப்போதும் போல் சில நட்புக்களின் வாழ்த்துக்கள், சர்க்கரை பொங்கல், டிவியில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன மற்றும் திரைக்கே வராத படங்களில் எதைப் பார்ப்பது என்று தெரியாமல் எதையும் பார்க்காமல், காமெடி சேனலுக்கு பதிலாக கேப்டன் டிவியில் கேப்டனின் பேச்சை பார்த்துவிட்டு, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் புது வருடத் தொடக்கம் பெரும்பாலும் முடிந்து விட்டது.

இன்று ஏதாவது ஒரு உபயோகமான தகவலை வலை தளத்தில் பதிவு செய்யா விட்டால் என் நூற்றுகணக்கான (ஆயிரக்கணக்கான, இலட்சகணக்கான என்று மிகைப் படுத்தி பொய் சொல்ல விரும்பவில்லை) வாசக நண்பர்கள்  ஏமாந்து விடுவார்கள் என்பதால் இந்த பதிவு.

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் எழுதிய "உலகால் அறியப்படாத ரகசியம்" என்ற புத்தகத்திலிருந்து சில செய்திகள்.

ஜேம்ஸ் ஆலன் என்ற தத்துவ ஞானி கூறுகிறார் "வாழ்வில் மறைந்து கிடக்கும் சில உண்மைகள்தான் நம்மை வழி நடத்திச் செல்கின்றன என்று".

தனி மனித வாழ்விலும் சரி, சமுதாய வாழ்விலும் சரி இது உண்மை.  நாம் விளைவுகளை கண்டு  அஞ்சுகிறோம் அல்லது தவிர்க்க முயல்கிறோம், ஆனால் ஏன் இந்த விளைவுகள் என்று யோசிப்பதில்லை.  எந்த விளைவும் தானே அல்லது தற்செயலாக நிகழ்வதில்லை.  எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

இதைத்தான் "வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை  விதைத்தவன் தினை அறுப்பான்" என்றும் கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் "cause and effect" என்று சொல்கிறோம்.

நமக்கு ஒரு துன்பம் நேரும்போது யாரும் நம் முன் வந்து நீ இந்த செயலை செய்ததால் இந்த துன்பம் வந்தது என்று கூறுவதில்லை.  நாமும் விளைவில் வருந்தும் அளவுக்கு காரணத்தை யோசிப்பதில்லை.

நம்மை அப்பழுக்கற்ற மனிதர்களாக நினைத்துகொண்டு "நமக்கு ஏன் இந்த சோதனை என்று புலம்புகிறோம்".  என்னுடைய எந்த தீய எண்ணங்களால் இந்த விளைவு என்று யோசித்தால் வாழ்வில் மறைந்து கிடக்கும் நியாயங்கள் புலனாகின்றன.

நமது எண்ணங்களுக்கு ஏற்பத்தான் நம்முடைய சூழ்நிலைகள் அமைகின்றன. தீக்குள் விரலை வைத்தால் சுடுவது போல தீய எண்ணங்களின் விளைவுகள் உடனுக்குடன் நிகழ்வதில்லை. அப்படி நிகழ்ந்தால் நமக்கு காரண காரியம் புலப்பட்டுவிடும். நாமும் தவறுகள் செய்ய மாட்டோம்.  ஆனால் வாழ்வில் அப்படி எண்ணங்களுக்கும் விளைவுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதில்லை.

எண்ணங்கள் ரகசியமானவை, அவற்றை மறைத்துவிடலாம் என்று நாம் நினைக்கிறோம்.  ஆனால் அவற்றை ஒரு நாளும் ஒளித்து வைக்க முடியாது.

நாம் எதை மற்றவர்களுக்கு நினைகிறோமோ அல்லது செய்கிறோமோ அது நமக்கே வந்து சேர்கிறது.

நமக்கு வந்த துன்பங்கள் எத்தகைய எண்ணங்களினால் உருவாயின என்று ஆழ்ந்து யோசிக்கும்போது நமக்கு காரண காரியம் புலப்படத் தொடங்கும்.

புத்தகத்தினை படித்தவுடன் அதில் உள்ள சில சிந்தனைகளை அசை போட்டு பார்த்தேன். மிகவும் சத்தியமான வார்த்தைகள் அவை.

காரண காரியங்களைப் பற்றி அறியாமல் அல்லது கவலைப்படாமல் வாழ்வின் நியதிகளுக்கு மாறாக செயல்கள் செய்த பலரும் இன்று அதற்கான பலனை அனுபவிப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

என் காரின் பின்னால் நான் எழுதியிருக்கும் வாசகம் "தீதும் நன்றும் பிறர் தர வாரா".  இந்த ஒரு சொற்றொடரின்  விளக்கம்தான் மேலே சொன்ன அத்தனை விசயங்களும்.

"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கத் தேவையில்லை" என்ற திருமூலரின் வார்தைகளை இங்கு நினைவில் கொள்வோம்.





Sunday, March 23, 2014

நம்பிக்கையில் நிம்மதி

நம்பிக்கையில் நிம்மதி

நான் அடிக்கடி படிக்கும் புத்தகங்களில் ஒன்று கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்.  இதன் ஆறாம் பாகம் 'நெஞ்சுக்கு நிம்மதி' என்ற புத்தகத்தை இன்று புரட்டிக் கொண்டு இருந்தபோது கண்ணில் பட்டது 'நம்பிக்கையில் நிம்மதி' என்ற தலைப்பு.  வாருங்கள் கவிஞரின் வார்த்தைகளை கொஞ்சம் உள் வாங்கலாம்.

எதன் மீது எனக்கு சந்தேகம் வந்தாலும் நிம்மதி தொலைகிறது.  எது பிடிக்கவில்லையோ அதில் இருந்து ஒதுங்கி  நில். ஆனால் தினமும் சந்தேகப்பட்டு உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொள்ளாதே.

சாப்பிட்டு முடித்த பின் எதை சாப்பிட்டோமோ என்று நினைத்தால் அடிவயிற்றை கலக்கும்.  சாப்பிடுவதற்கு முன்னாலேயே நன்றாகப் பார்.

யோசித்து செய்த முடிவுகளில் நம்பிக்கை வை.

திருப்பதிக்கு போவது என்று முடிவு கட்டினால் திரும்பி வரும்போது பலன் இருக்கும் என்று நம்பு.

நம்பிக்கையும் சந்தேகமும் மாறி மாறி இருந்தால் அப்போதும் நிம்மதி இருக்காது.  மீன் கூடைக்கு பக்கத்தில் பூக்கூடையை வைத்தால் மீன் வாசமும் தெரியாது பூ வாசமும் தெரியாது. கலப்படமான ஒரு அருவருப்பே தோன்றும்.

இன்றைய பொழுது நன்றாக இருக்கும் என்று நம்பு. நன்றாகவே இருக்கும்.

தண்ணீரில் விழுந்து விட்டால் நீந்தத்  தெரியும் என்று நம்பு. நீந்தத் தெரிந்து விடும்.  கடன் வந்துவிட்டால் கட்ட முடியம் என்று நம்பு. கட்டிவிட முடியும்.

திருநீறோ திருமண்ணோ இடும் போது கடனுக்கு இடாமல் நம்பிக்கையில் இடு. அவை இருக்கும்வரை மூளை பிரகாசிக்கும்.

நாளைக்குத்  திருச்சிக்கு போகிறோம் என்று Rockfort  எக்ஸ்ப்ரஸில் ஏறு.  அது திருச்சி போய்  சேர்ந்து விடும். இதுவா போகும் என்று சந்தேகப்படு.  அது புறப்படவே புறப்படாது.

நம்பினால் கை கொடுப்பது நம்பிக்கை.

என்ன நண்பர்களே எப்படி இருக்கிறது கவிஞரின் வார்த்தைகள். எப்போதாவது நமக்கு வாழ்க்கையில் அவநம்பிக்கை தோன்றினால் சற்று கவிஞரின் வார்த்தைகளை படிப்போம். நம்பிக்கை கொள்வோம்.

  










Saturday, March 8, 2014

பெண்மையை போற்றுவோம்


பெண்மையை போற்றுவோம் 

பத்து  மாதம் சுமந்த கடனுக்காக காலம் முழுவதும் ஆண்களை வட்டி கட்ட வைப்பவர்கள் பெண்கள்.  ஆண்களுக்கு சற்றும் சளைக்காமல் பப்பில் (PUB) உட்கார்ந்து "கப் கப்" என்று அடிப்பவர்கள் பெண்கள். உள்ளத்து அழகை  விட உடல் அழகை அதிகம் நம்புவர்கள் பெண்கள். மூக்கை சிந்தி சிந்தியே ஆண்களை சந்தி சிரிக்க வைப்பவர்கள் பெண்கள்.  சுற்றும் வரை சுற்றி விட்டு கடைசியில் "அண்ணா" என்று அல்வா கொடுப்பவர்கள் பெண்கள்.  (எல்லா இடத்திலும் இந்தக  காலத்து பெண்கள் என்று படிக்கவும், இல்லைஎன்றால் அந்தக் காலத்துப் பெண்கள் (ஆயாக்கள் என்ற பாட்டிகள்) கோபித்துக் கொள்வார்கள்).

மேலே கூறியதில் கூட குறைய இருந்தாலும் உண்மைதானே என்று நினைக்கும் ஆண்களா (அல்லது பெண்களா) நீங்கள்.

தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவும்.  விதி விலக்குகளை வாழ்வின் விதியாக எண்ணி விடாதீர்கள்.

பொதுவாக ஒரு பெண் தாயாக, சகோதிரியாக, மனைவியாக, மகளாக மற்றும் நட்பாக - ஏதாவது ஒரு உறவில் மற்றொரு ஆணை வழி நடத்துபவளாக இருந்து கொண்டுதான் இருக்கிறாள்.

என் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் (அப்படி என்ன பெரிய முன்னேற்றம் என்று கேட்டு விடாதீர்கள்) என் மனைவியின் பங்கு மிக அதிகம் என்று சொன்னால் அது மிகை இல்லை.  சின்ன சின்ன விசயங்களில் கூட என்னிடம் முரண்படும் என் மனைவி, நான் எடுக்கும் முக்கிய முடிவுகளில் எல்லாம் தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்ததால்தான் நான் இன்று வெளி உலகில் நம்பிக்கையுடன் நடை போட முடிகிறது.

இன்று உலகில் வெற்றிகரமாக உலவி வரும் பல ஆண்களின் பின்னால் சத்தமில்லாமல் தோள் கொடுப்பவர்கள் பெண்கள்தான்.

ஒவ்வொரு ஆணும் தன் வீட்டுப் பெண்களை (மனைவியோ, தாயோ, சகோதிரியோ, அல்லது மகளோ) முழுமையாக மதித்து அன்பு செலுத்தினாலே உலகில் பல தவறான உறவுகள் ஏற்படாது என்பது என் தாழ்மையான கருத்து.

தவறான உறவால் கேட்டுப் போன ஆண்களைவிட சரியான நட்பால் உயர்ந்த ஆண்கள் அதிகம்.  (பல சமயங்களில் சில ஆண்களின் சுயநலத்தால் தவறிய பெண்கள்தான் அதிகம்).

நீரின்றி அமையாது உலகு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை பெண் இன்றி அமையாது ஆணின்  வாழ்வு (இதற்கு முற்றும் துறந்த ஆதி சங்கருரும், ரமணருமே சாட்சி).

பெண்களை மதிப்போம்.  பெண்களை உயர்த்துவோம்.  பெண்களால் உயர்வோம்.





Saturday, March 1, 2014

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி

படுத்த பத்தாவது நொடியில் ஆழ் துயில் கொள்ளும் எனக்கு மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் முழிக்க வேண்டும் என்ற நினைவே மஹா அசதியை தந்தது.  என்றாலும் 'எண்ணிய முடிதல் வேண்டும்'  என்ற முடிவில் முழிக்க ஆரம்பித்தேன் (பரிட்சையில் கூட இப்படி முழித்தது இல்லை).

டிவியை ஆன் செய்து ஒவ்வொரு சேனலாக மாற்றினேன்.  நம்மை தூங்க விடக் கூடாது என்று ஒவ்வொரு சேனலும் வேலை செய்து கொண்டிருந்தது. ஈஷா யோகாவின் மஹா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிரந்த சேனலில் கவனத்தை செலுத்தினேன்.

சத்குரு அவர்களின் உரையும், மக்கள் கூட்டமும், இசையும், அந்த இடத்தில் ஒரு சிறந்த  அதிர்வலையை ஏற்படுத்தி இருந்ததை உணர முடிந்தது.  சத்குரு "ஷம்போ" மஹா மந்திரத்தை தியானம் செய்ய சொன்னதும் மொத்த கூட்டமும் அவர் சொன்னபடியே கைகளை வயிற்றுக்கும்  மார்புக்கும் இடையில்  வைத்து தியானம் செய்யத்  தொடங்கியது.

நானும் என் வீட்டில் இருந்தபடியே தியானம் செய்யத் தொடங்கினேன். கொஞ்ச நேரம்தான்.     "ஷம்போ"  "அம்போ" ஆகிவிட்டது. முழித்துப் பார்த்தால் ஒரு அரை மணி நேரம் ஆகிவிட்டிருந்தது.  நான் ஆழ் நிலை தூக்கத்தில் இருந்தேனா  அல்லது  ஆழ் நிலை தியானத்தில் இருந்தேனா  என்று தெரியவில்லை.  ஆனால் மனம் இப்போது நல்ல விழிப்புடன் இருந்தது.

என் விழிப்பைப் பற்றி கவலைப் படாமல் என் மனைவியும் குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் - எங்கே யாரவது தூக்கத்தைப் பறித்துக் கொண்டு விடுவார்களோ என்பது போல போர்வையை இழுத்துப் போர்த்தியபடி இருந்தார்கள்.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நாமும்  போர்வைக்குள் அடைக்கலம் ஆகி விடுவோம் என்ற பயத்தில் வெளியே வந்து,  பின்னிரவை புத்தகம் படித்துக்கொண்டும், டிவி பார்த்துக்கொண்டும், ஊஞ்சல் ஆடிக் கொண்டும் மெதுவாக கழித்தேன்.

பொதுவாக கண் முழிப்பவர்கள் கோவிலுக்கு சென்றோ அல்லது சத்சங்கத்திலோ நேரத்தைக்  கழிப்பார்கள்.  ஆனால்  நான் மட்டும் வள்ளலார் சொன்னபடி "தனித்து இருந்து விழித்து இருந்தேன்".

முடிந்தால் ஒரு இரவு தனித்து இருந்து விழித்துப் பாருங்கள். வாழ்கையின் மற்றொரு கோணம் புரிய ஆரம்பிக்கும்.


  






Wednesday, February 12, 2014

Illusions


Encouraged by the feedback about the insights taken from the book “The Alchemist”, I am now sharing a few thoughts on the book “Illusions: The Adventures of a Reluctant Messiah” by Richard Bach.  He is more popular for the book “Jonathan Livingston Seagull.

Again, it is not the story but the insights from the story that inspires me more. Just read for yourself.

  • Teaching is reminding others that they know just as well as you. You are all learners, doers, teachers.
  • Your only obligation in any lifetime is to be true to yourself.  Being true to anyone else or anything else is impossible. 
  • The simplest questions are the most profound. Where were you born? Where is your home? Where are you going? What are you doing? - Think about these once in a while, and watch your answers Change.
  • You teach best what you most need to learn.
  • Your friends will know you better in the first minute you meet than your acquaintances will know you in a thousand years.
  • The best way to avoid responsibility is to say, “I’ve got responsibilities.
  • You are led through your lifetime by the inner learning creature, the playful spiritual being that is your real self.
  • Don’t turn away from possible futures before you’re certain you don’t have anything to learn from them.
  • You’re always free to change your mind and choose a different future, or a different past.
  • There is no such thing as a problem without a gift for you in its hands. You seek problems because you need their gifts.
  • The bond that links your true family is not one of blood, but of respect and joy in each other’s life.
  • Rarely do members of one family grow up under the same roof.
  • Argue for your limitations, and sure enough, they’re yours.  
  • A cloud does not know why it moves in just such a direction and at such a speed. It feels an impulsion... this is the place to go now. But the sky knows the reasons and the patterns behind all clouds, and you will know, too, when you lift yourself high enough to see beyond horizons.
  • You are never given a wish without also being given the power to make it true.  You may have to work for it, however.
  • The world is your exercise-book, the pages on which you do your sums.  It is not reality, although you can express reality there if you wish. You are also free to write nonsense, or lies, or to tear the pages.
  • If you will practice being fictional for a while, you will understand that fictional characters are sometimes more real than people with bodies and heartbeats.
  • Your conscience is the measure of the honesty of your selfishness. Listen to it carefully.
  • Every person, all the events of your life are there because you have drawn them there.  What you choose to do with them is up to you.
  • The truth you speak has no past and no future. It is, and that’s all it needs to be.
  • Here is a test to find whether your mission on earth is finished: If you’re alive, it isn’t.
  • In order to live free and happily, you must sacrifice boredom. It is not always an easy sacrifice.
  • Don’t be dismayed at good-byes. A farewell is necessary before you can meet again. And meeting again, after moments or lifetimes, is certain for those who are friends.
  • The mark of your ignorance is the depth of your belief in injustice and tragedy.
  • What the caterpillar calls the end of the world, the master calls a butterfly.

Wednesday, January 29, 2014

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி


நானும் என் மனைவியும் சில சமயங்களில்  TV யில் பழைய பாடல்களை போட்டு விட்டு பேசி கொண்டிருப்போம்.  நாங்கள் பேசுவதை கேட்காமல்  TV யில் நாயகனும் நாயகியும் பாடிக்  கொண்டிருப்பார்கள். அவர்கள் பாடுவதை கேட்காமல் நாங்கள் பேசிக் கொண்டிருப்போம். எங்களையும் TV யையும் கண்டுகொள்ளாமல் எங்கள் பிள்ளைகள் படித்துக் கொண்டிருப்பார்கள் (என்ற ஒரு நம்பிக்கைதான்!!).

ஒரு நாள் எங்கள் பேச்சு சுவாரசியத்தையும் மீறி ஒரு பாடல் எங்கள் காதையும் மனதையும் நிறைத்தது.  அந்தப் பாடல் பாச மலர் படத்தில் வரும் கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள்தான்.

"மலர்ந்தும்  மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடியும் விடியாத காலைப்  பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே".

கண்ணதாசனின் கவிதை வரிகளில் தமிழ் மொழி கொஞ்சி விளையாடுகிறது.

சத்தியமாக இன்றைய "why this கொலவெறி" இளசுகள் மேலே குறிபிட்டுள்ள பாடலுக்கு சரியாக அர்த்தம் புரிந்து கொள்வார்களா என்று தெரியவில்லை.

முடிந்தவரை நம் தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு சேர்க்க நம்மால் இயன்றதைச்  செய்ய வேண்டும்  என்ற எண்ணம் தோன்றியது..