Friday, August 28, 2015

தவமின்றி கிடைத்த வரமே


Advocate  தொழிலில் இருப்பதால் இப்போதெல்லாம் நிறைய விவாகரத்து case- களும் வருகின்றன.  நாய் விற்ற காசு குரைக்காது என்று தெரியும். இருந்தாலும் பிரித்து வைத்து சம்பாதிக்க மனம் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால்  விவாகரத்து வழக்குகளை நடத்துவதில்லை என்று ஒரு பொதுவான விதியை வைத்து இருக்கிறோம். 

மிகவும் அரிதாக ஒன்றிரண்டு வழக்குகளைத்  தவிர விவாகரத்துக்கான காரணங்கள் பெரும்பாலும் மிகவும் silly ஆக இருக்கின்றன. இந்தக் காரணங்களுக்கெல்லாம்   விவாகரத்து செய்து இருந்தால் நம்முடைய பெற்றோரோ அல்லது ஏன் நாமோ கூட (I mean கல்யாணம் செய்து சண்டையும் சமாதானமுமாக இருக்கும் பெரும்பான்மையான தம்பதியர்) குறைந்தது சில நூறு தடவையாவது விவாகரத்து செய்து கொண்டிருக்க வேண்டி இருந்திருக்கும்.

விவாகரத்துக்கு  வரும்  சில  தம்பதியர் குறைந்தது 6 அல்லது 7 வருடங்கள் காதலித்து கரம் பிடித்தவர்கள் (காதலித்து இருக்கும் போதும் பிடித்து (??) இருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை) .  "என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" என்று ஆணும், "தவமின்றி கிடைத்த வரமே, இனி  வாழ்வில் எல்லாம் சுகமே" என்று பெண்ணும்  உருகி உருகி காதலித்தவர்கள்தான்.  ஆனால் கல்யாணம் ஆகி சில வருடங்களில் (அல்லது சில மாதங்களில்)  court படி ஏற வேண்டிய நிலை என்ன என்று யோசித்தால் சில விசயங்கள் புரிகிறது.

ஆங்கிலத்தில் juxtaposition என்று ஒரு வார்த்தை உள்ளது. இதன் ஆங்கிலப் பொருள் "place something closely alongside something else".  சுருக்கமாக சொல்வதென்றால் இரு துருவங்கள் இணையும் இடம் என்று பொருள் கொள்ளலாம்.  நாம் இப்போது கிட்டத் தட்ட அந்த காலக் கட்டத்தில் இருக்கிறோம்.

அதாவது "அடங்க மறு அத்து மீறு" என்று தொல் திருமா பாணியில் பெண்ணும், அதே கோஷத்துடன் ஆணும் புறப்பட்டு இருப்பதுதான் (விந்தையாக இருந்தாலும் அதுதான் உண்மை - atleast நடுத்தர வர்க்கங்களில்  அல்லது அதற்கும் மேலே).

ஆணும் பெண்ணும் சமமாக வளர்க்கப்படும் இந்த நாட்களில் இருவருக்குள்ளும் ego சரிசதவிகிதமாக இருக்கிறது. அடிப்படையில் ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் தான் இருக்கிறோம். ஆண் Hello FM என்றால் பெண் Big FM   (Hello அது என்ன ஆண் என்றால் Hello பெண் என்றால் Big என்று சண்டைக்கு வந்து விடாதீர்கள் - ஒரு எதுகை மோனைக்காக போட்டது. வேண்டுமானால் மாற்றிப் போட்டுக் கொள்ளுங்கள்). அதனால் இரண்டும் ஒரே அலைவரிசையில் இருக்க முடியாது.  அவரவர் நிலையில் இருந்துதான் ஒரே விஷயத்தை இருவரும் அணுகுவார்கள். அதனால் கருத்து வேறுபாடு தவிர்க்க முடியாதது.  அதே சமயத்தில் ஆணோ பெண்ணோ மற்றவரை சார்ந்து இருக்கும் சமயங்களில் அடங்கி இருப்பார்கள் (அல்லது அடங்கி இருப்பது போல இருப்பார்கள்).  இல்லாவிட்டால் அடங்க மறு அத்து மீறுதான்.


இதற்குதான் நம் முன்னோர்கள் "அர்த்தநாரி" தத்துவத்தை சொன்னார்கள். அதாவது ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். அதே போல ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள் என்று.   இதன் முக்கிய பொருள் எந்த ஒரு விஷயத்திலும் ஆண் இந்த விஷயத்தை எந்தக் கோணத்தில் அணுகுவான் என்று பெண்ணும் அதே போல பெண் இந்த விஷயத்தை எந்தக் கோணத்தில் அணுகுவாள் என்று ஆணும் சிந்திப்பதுதான்.  இப்படிச் செய்தாலே பல தகராறுகளை தவிர்த்து விட முடியும்.

ஆனால் இதற்குத் தேவை கொஞ்சம் சிந்திக்கும் திறனும், ஈகோவை மிஞ்சின கொஞ்சம் extra அன்பும்தான்.

அப்படி இருந்தால் சண்டையே வராதா என்று கேட்காதீர்கள்.  அப்பவும் நிறைய வரும்.  ஆனால் முதல் நாள் போட்ட சண்டையை மறந்து விட்டு மறுநாள் ஆனந்தமாக சிரித்துக் கொண்டு இருப்போம் - சிரிப்பின் முடிவில் மற்றொரு சண்டை ஆரம்பிக்கக்கூடும் என்று தெரியாமல்.

சண்டையே வேண்டாம் என்று நினைத்தால் சரணாகதி தத்துவம்தான் ஒரே வழி.   நான் ஏன் சரணாகதி அடைய வேண்டும் என்று இருவரும் நினைத்தால் அதற்கு இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம்.  அது வரை சந்தோஷமாக சண்டை போட்டுக் கொண்டிருப்போம்.



Sunday, August 16, 2015

நல்லாயிரு



சமீபத்தில்  படித்த ஒரு கதை.  நீங்களும் கேள்விப்பட்டு இருக்கலாம்.  இருந்தாலும் நல்ல விஷயங்களை மீண்டும் படிப்பதில் தவறில்லை என்பதால் இந்தப் பதிவு.

ஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான்.  எல்லோரையும் எப்போதும் வம்புக்கு இழுத்துக் கொண்டே இருப்பான். அதனால் அவனிடம் நெருங்குவதற்கே எல்லோரும் பயப்பட்டார்கள்.  ஆரம்பத்தில்  அவனுக்கு இதில் ஒருவித பெருமிதம் இருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல தன் மீதே அவனுக்கு ஒரு கோபம் தோன்றியது.  தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.   ஆனால் எப்படி என்று தெரியவில்லை. 

அந்த சமயத்தில் அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்தார். அவரிடம் சென்று அந்த முரடன் தானும் ஒரு சாதாரண ஒரு மனிதனாக எல்லோரையும் போல் வாழ வேண்டும் என்று ஆசைப் பாடுவதாகவும் அதற்கு அந்த ஞானி உதவ வேண்டும் என்றும் வேண்டினான். 

அந்த ஞானி சிரித்துக் கொண்டேஅவனிடம் இனி யாரைப் பார்த்தாலும் "நல்லாயிரு" என்று சொல்லிக் கொண்டே இரு. வேறு எதுவும் அவர்களிடம் பேசாதே என்று சொல்லி சென்று விட்டார்.

முரடனுக்கு இப்போது ஒரே குழப்பம் மற்றும் சந்தேகம்.  எப்படி நல்லாயிரு என்ற ஒரு வார்த்தை தன்னுடைய வாழ்க்கையை மாற்றிவிடும் என்று. இருந்தாலும் சொன்னது ஞானி ஆயிற்றே.  அதனால் முயற்சி செய்து பார்த்து விடுவோம் என்று முடிவு செய்தான். 

அன்றிலிருந்து அவன் யாரைப் பார்த்தாலும் நல்லாயிரு என்ற வார்த்தையை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.  அவனை இதுவரை முரடனாக பார்த்தவர்கள் எல்லாம் இப்போது அவனை வியப்புடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.  அவனைத் தெரியாத பக்கத்துக்கு ஊர்க்காரர்கள் அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நம்ப ஆரம்பித்தார்கள்.  

ஊர்க்காரர்கள் சிலருக்கு அவன் நல்லாயிரு என்று சொன்ன ராசி சில நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பித்ததும் அவனைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.  

இப்போது அந்த முரடன் யோசிக்க ஆரம்பித்தான்.  ஒரே ஒரு நல்ல வார்த்தை சொன்னதற்கே இவ்வளவு நல்லது நடக்க ஆரம்பித்தால் நம் வாழ்க்கை முழுவதும் நல்ல வார்த்தைகளை பேசினால் எப்படி இருக்கும் என்று.  

முன்பு சந்தித்த ஞானி இப்போது மறுபடியும் அந்த முரடன் இருந்த ஊருக்கு வந்தார்.  முரடன் அந்த ஞானியை வணங்கி தன்னுடைய வாழ்கை மாற்றத்தினை சொன்னான்.  

ஞானி சிரித்துக் கொண்டே சொன்னார் "நல்லாயிரு" என்று.


சமீபத்தில் படித்த இன்னொரு விஷயம்.

நம் ஊரில் திருக்குறள் முனுசாமி என்ற ஒரு பிரபல பேச்சாளர் இருந்தார்.  திருக்குறளை நாடு முழுவதும் கொண்டு சென்ற முன்னோடி இவர்.  திருக்குறளார் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் இவர்.

ஒரு முறை அவரிடம் ஒருவர் தன்னுடைய பிள்ளைகள் தன் பேச்சை கேட்பதில்லை என்று ஆதங்கப் பட்டார்.

அதற்கு திருக்குறளார் சொன்ன பதில் classic.

அவர் சொன்னார்.  நாம் பிறந்ததில் இருந்து நம் கூடவே இருக்கும் நம் கை கால்களே ஒரு காலத்தில் நம் பேச்சைக் கேட்பதில்லை.  அப்படி இருக்கும் போது நம் வாழ்வின் பாதியில் வந்த பிள்ளைகளோ மற்ற உறவுகளோ நம் பேச்சைக் கேட்பார்கள் என்று நினைப்பது எப்படி சரியாக இருக்க முடியும் என்று.

அப்போதுதான் யோசித்தேன். 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்து  நாம்  வைத்த அலாரத்தை நாமே கேட்பதில்லை.  பிறகு நம் பேச்சை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமானது.


அனந்தராமன் சார்

திருவல்லிக்கேணி அருணாச்சலம் தெரு எண் 36-இல் இருக்கும்  குடியிருப்பு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும்.  இந்தக் குடியிருப்பின் மாடியில் உள்ள வீட்டில்தான் அனந்தராமன் சார்  வசித்து வந்தார்.  வீட்டின் வாசலில் K S .Anantharaman, Advocate & Professor என்ற ஒரு board மட்டும் இருக்கும். ஆனாலும் இந்த விலாசம் ஊர் அறிந்த ஒன்று.

அந்த வீட்டின் ஹாலில் அதிக பட்சம் 15 பேர் அமர முடியும்.  ஆனால் இந்த ஹால் அனந்தராமன் சார் மூலமாக பல நூற்றுக்கணக்கான கம்பெனி செக்ரெட்டரிகளையும் (Company Secretaries) Aravind Dattar  உள்ளிட்ட பல வழக்கறிஞர்களையும் (Advocates) உருவாக்கியுள்ளது.

அவர் தன்னுடைய 87 வது வயதிலும் கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் கொண்டு இருந்ததால்  அவருக்கு 60 வயது முதல் 20 வயது வரை எல்லா வயதிலும் மாணவர்கள் உண்டு.   அவர்களில் பெரிய வழக்கறிஞர்களாகவும், அல்லது உயர்ந்த பதவிகளிலும் இருப்பவர் பலர்.   ஆனால் எவரிடமும் பர்சனல் ஆக எந்த உதவிக்கும் செல்லாதவர்.  

சில ஆண்டுகளுக்கு முன் நான்  நண்பர்கள் Prakash மற்றும் Sandeep உடன் சென்று அவரை சந்தித்து ஒரு shirt பரிசாக  அளித்து ஆசி பெற்று வந்தோம்.  அந்த shirt ஐ கொடுப்பதற்கே, ஏதாவது சொல்லி விடுவாரோ என்று கொஞ்சம் பயந்தோம்.  நல்ல வேளை எதுவும் சொல்லாமல் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

நானும் அவரிடம் Company Law கற்றுக் கொள்வதற்காக ஒரு மாணவனாக சேர்ந்தவன்தான். ஆனால் விரைவில் Teacher - Student என்ற நிலையில் இருந்து குரு சிஷ்யன் என்ற நிலைக்கு வந்தது. என்னைப் போலவோ அல்லது என்னை விட அதிக நெருக்கமாகவோ அவருக்கு பல சிஷ்யர்கள் உண்டு.  என்னைப் பொறுத்தவரை நான் அவரை மிகவும் நெருக்கமாக நினைத்தற்கு சில காரணங்கள் உண்டு.

நான் Company Secretaryship Course சேர்ந்த போது வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.  அதனால்  வேலை பளுவின் நடுவில் exam-ஐ சுலபமாக பாஸ் செய்வது எப்படி என்ற கோணத்தின் அடிப்படையில்தான் அவரிடம் சேர்ந்தேன்.   ஆனால் அவர் law subject எடுத்த விதம் என்னை  வெறும் மார்க்குக்காக படிக்காமல் subject-ஐ ஆழமாக படிக்கும் ஆர்வத்தினை உண்டாக்கியது.

அனந்தராமன் சார் மிகவும் கோபக்காரர்.  அவர் வீட்டில் வரிசையாக போட்டிருக்கும் chair-களை நம் இஷ்டத்திற்கு மாற்றினாலோ அல்லது உட்காரும் போதும் எழுந்திருக்கும் போதும் chair-களை நகர்த்தி சத்தம் உண்டாக்கினாலோ tension ஆகி விடுவார்.   கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப உடனே கோபம் தணிந்து cool ஆகி விடுவார்.

அவரின் கோபத்திற்கு இடையில் புகுந்து தப்பித்து அவரின் அன்பை மட்டும் பெற்ற பாக்கியவான்களில் நானும் ஒருவன்.

ஸ்ரீனிவாசன் உங்களுக்கு law subject நன்றாக வருகிறது.   Advocate தொழிலில்  உங்களால் நன்றாக shine ஆக முடியும் என்று சார் சொன்னதும் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி  பட்டம் வாங்கிய மகிழ்ச்சி எனக்கு.

அவருடைய Lectures on Company Law புத்தகத்தின் 7 வது பதிப்பின் போது என்னை பிழை திருத்தம் (proof reading)  செய்யச் சொன்னார். எனக்கு company law-வை ஓரளவு முழுமையாக அறிந்து கொள்ளும் ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக அது அமைந்தது.

அந்தப் பதிப்பில் என்னுடைய பெயரை போட்டு எனக்கு நன்றி கூறியதை highlight செய்து ஊருக்கெல்லாம் காட்டிக் கொண்டிருந்தேன்.  அது அவ்வளவு பெருமையான விஷயமாக இருந்தது.

அந்தப் பதிப்பின் ஒரு புத்தகத்தில் "With Blessings"  என்று தன் கைப்பட எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தாலும் கடந்த ஓராண்டாக அவரை சந்திக்கவில்லை.  அதற்கு ஒரு முக்கியமான காரணம் நான் "Professional Guide on Drafting, Appearances and Pleadings" என்ற தலைப்பில் ஒரு சிறிய புத்தகம் எழுதி இருந்தேன்.  அதை அவரிடம் காட்டி அவரின் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  ஏனென்றால் இந்தப் புத்தகம் எழுதுவதற்கான நம்பிக்கையையும்  அறிவையும் ஊட்டியது அவர்தான்.  ஆனாலும் அந்தப் புத்தகத்தை அவரிடம் நேரில் காட்டுவதற்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு உதறல்.  அதனால் அதை தள்ளி வைத்துக் கொண்டே இருந்தேன்.  வாழ்கையில் சில விஷயங்களை நினைத்தபோது செய்து விட வேண்டும்.   ஏனென்றால் மீண்டும் செய்வதற்கு அது வாய்க்காமல் போய் விடக் கூடும்.

அதனால் என்ன சார், உங்கள் "Blessings" இன்றும் என்னுடன் உள்ளது.  எப்போதும் அது என்னுடன் இருக்கும்.