Saturday, September 19, 2015

குறையொன்றுமில்லை .......


kurai ondrum illai song download க்கான வீடியோ

திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் நூற்றாண்டு விழா 16/09/2015 முதல் 16/09/2016 வரை கொண்டாடப்படுகின்றது என்று தினமணி செய்தி வாயிலாக அறிந்தேன்.

MSS என்று சுருக்கமாகவும் அன்பாகவும் அழைக்கப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி அவர்கள் பெற்ற பரிசுகளும் விருதுகளும் மீண்டும் எந்தப் பெண்ணாலும் பெற முடியுமா என்பது சந்தேகமே. பத்மபூஷன் விருது ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்திலேயே அதைப் பெற்றவர்.  இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா முதல் ஆசியாவின் நோபெல் பரிசு எனப்படும் ரமோன் மக்சேசே விருது வரை பல விருதுகளை வாங்கியவர்.

இதெற்கெல்லாம் மேலாக கடவுளையும் நம்மையும் எழுப்பும் ஸுப்ரபாதம் பாடி நம்மிடம் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.  ஆனால் அவர் பாடிய குறையொன்றுமில்லை என்ற பாடலை அறியாதவர் யாரும் இருக்க முடியாது.

பேரும் புகழும் இருந்தாலும் பேர் சொல்ல ஒரு குழந்தை இல்லையே என்று அவர் முடங்கிப் போயிருக்கலாம்.  ஆனால்  குறையொன்றுமில்லை என்று ஊரெல்லாம் சென்று பாடி பலருடைய மனக் குறைகளைத் தீர்த்தவர்.

நம்மில் யாருக்குதான் குறை இல்லை. சொல்ல ஆரம்பித்தால் நாம் ஒவ்வொருவரும் பக்கம் பக்கமாக குறைகளை அடுக்கலாம்.  ஆனால் நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கண்ணதாசன் வரிகளை நினைத்துப் பார்த்தால் நம்முடைய குறைகள் ஒன்றுமில்லை என்று ஆகிவிடும்.


நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பது மகாகவி பாரதியைத்தான்.   தாயின் அரவணைப்பு மிகவும் தேவைப் படும் ஐந்து வயதில் தாயை இழந்தவன்.   தந்தையின் அரவணைப்பு மிகவும் அவசியமான பதினாறு வயதில் தந்தையை இழந்தவன்.  வாழ்க்கை முழுவதும் வறுமை துரத்தியது. சுதந்திர போராட்டத்தின் அடக்கு முறையால் நாடு விட்டு நாடு சென்று திரைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவன்.


அப்படிபட்டவன் சொல்கிறான்.  "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" என்றும் "தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" என்றும்.

ஆனால் நாம்தான் கண் எதிரில் இருக்கும் இன்பத்தை எல்லாம்  மறந்துவிட்டு கற்பனையான துன்பத்தினை துரத்திக் கொண்டிருக்கிறோம்.

துன்பப் பறவைகள் நம் தலைக்கு மேல் வட்டமடிப்பதை நம்மால் தவிர்க்க முடியாது.  ஆனால் கண்டிப்பாக அவை நம் தலை மேல் கூடு கட்டுவதை தவிர்க்க முடியும் என்ற ஒரு பழமொழி உள்ளது. 

எப்போதாவது நம் தலைக்கு மேல் துன்பப் பறவைகள் வட்டமடிப்பதாகத் தோன்றினால் MSS அம்மாவின் குறையோன்றுமில்லை பாடலைக் கேட்கலாம் அல்லது பாரதியின் கவிதைகளை படிக்கலாம்.  துன்பப் பறவைகள் தெறித்து ஓடி விடும். 

மூதறிஞர் ராஜாஜி எழுதி MSS பாடிய இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். நம்பிக்கை இருந்தால் நிம்மதி கிடைக்கும்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாகுறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா.