Thursday, October 22, 2015

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் ....

என்னுடைய Blog-இல் இது 50-வது பதிவு. இன்று விஜயதசமி என்பதால் 50-வது பதிவை இன்றே எழுதி விடலாம் என்று முடிவெடுத்தேன். 


உண்மையில் சொல்வதென்றால் blog எழுதுவதை விளையாட்டாகத்தான் ஆரம்பித்தேன்.  ஆனால் விளையாட்டு வினையாகிவிட்டது (வினை என்பதை செயல் என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளவும்).  


இந்த நேரத்தில் இருவரை நான் நினைத்துக் கொள்ளவேண்டும்.  ஒன்று என் மகன் கோகுல். அவன்தான் ஒருமுறை சொன்னான். "அப்பா நீங்கள் இவ்வளவு புத்தகங்களை படிக்கிறீங்களே.  ஏன் உங்கள் புத்தகம் ஒன்று கூட இல்லை". வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத சிறுவனாக இருந்தாலும், தந்தைக்கு உபதேசித்த மந்திரமாக அந்த வார்த்தைகள் எனக்குப் பட்டது. அப்போதுதான் என்னுடைய எண்ணங்களை ஏதோ ஒரு வகையில் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

இரண்டாவது, நண்பர் மோகன்குமார். Blog-ல் எழுதுவது குறித்த சில அடிப்படை விஷயங்களை ஆரம்பத்தில் சொன்னது அவர்தான். .   


எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் Discovery Book Palace திரு வேதியப்பன் மூலமாக எனக்கு நன்கு அறிமுகம் ஆனவர்.  ஒருமுறை பேசும் போது அவர் சொன்னது. எழுத்தாளன் என்பவன் லட்சக் கணக்கான வாசகர்களை கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை.  சில நூறு பேராவது உங்கள் எழுத்தை விரும்பினால், உங்கள் எழுத்துக்கள் அவர்களை எதோ ஒருவகையில் பாதித்தால் நீங்களும் ஒரு எழுத்தாளர்தான் என்று.  


என்னுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் என் நண்பர்கள் என்னுடைய எழுத்து நடை நன்றாக இருப்பதாக சொன்னபோது ஒரு திருப்தி இருந்தாலும் அவர்களுக்கு என்னைப் பிடிக்கும், அதனால் என்னுடைய எழுத்தைப் பிடித்திருகிறது என்ற அளவில்தான் அவர்களுடைய feedback-ஐ எடுத்துக் கொண்டேன்.


ஆனால் எனக்கு அறிமுகம் இல்லாத பல நண்பர்களும் என்னுடைய பதிவுகளைப் பாராட்டிய போது, ஓகே நானும் rowdy தான் என்று காலரைத்  தூக்கிவிட்டுக் கொண்டேன். ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும். நான் செல்ல வேண்டிய தூரம் மிக மிக அதிகம் என்பது. அதனால் என்ன இது ஓடிக் கடக்கும் ஓட்டப்பந்தயமா என்ன ? என்னுடைய கால் தடங்களை அழுத்தமாக பதித்து மெதுவாகவே செல்ல விரும்புகிறேன்.  எவ்வளவு அதிகம் எழுதுகிறேன் என்பதில் என் கவனம் இல்லை. எவ்வளவு அழுத்தமாக எழுதுகிறேன் என்பதில்தான்  என் கவனம் எல்லாம். 

என்னுடைய பதிவுகளின் நோக்கம் "இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்" என்பதல்ல.  பொருளாதாரத் தேவைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்  இந்த அவசர வாழ்வில், காலையில் செய்த தவற்றை நினைத்து மாலையில் மனம் வருந்தி மீண்டும் மறு நாள் காலையில் அதே தவற்றைச் செய்யும் நம்முடைய சராசரி மனித வாழ்வில் எப்படியாவது ஒரு படி மேலே வர வேண்டும் என்ற நம்முடைய இடையறாத போராட்டத்தில் கிடைக்கும் சில அனுபவங்களை குறித்து வைத்துக் கொள்ளும் ஒரு டைரிக் குறிப்பாகத்தான் இதை நினைத்துக் கொள்கிறேன்.  அதற்காக மாதத்தில் சில மணி நேரங்களை செலவிடுவது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. 

சுற்றமும் நட்பும் சூழ இருப்பது ஒரு காலம்.  சுற்றமும் நட்பும் சூழ இருந்த நாட்களை நினைத்துக் கொண்டு தனிமையில் இருப்பது ஒரு காலம்.  எல்லாக் காலங்களிலும் யாரையாவது நாம் காயப் படுத்திக் கொண்டோ அல்லது யாராலோ நாம் காயம் அடைந்து கொண்டோ தான் இருக்கிறோம்.

எந்தக் காலமாக இருந்தாலும் யாரையும் காயப்படுத்தாமலும் யாராலும் காயப்படமாலும் நம்மால் சந்தோஷமாக வாழ முடிந்தால் நாம் வாழ்கையில் வென்று விட்டோம் என்று அர்த்தம்.  அந்த அர்த்தத்திற்கு இந்த டைரிக் குறிப்புக்கள் உதவும் என்று நம்புகிறேன்.  

ரமண மகரிஷி சொல்வது போல் "பிறர்க்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்". அந்த வகையில் இந்தப் பதிவுகள் பிறருக்கு என்று சொல்வதை விட முதலில் எனக்கு. 

நம்மால் முடியும் போதே நமக்குப் பிடித்த சில நல்ல விஷயங்களை செய்து விட வேண்டும். பிறகு முடியாத போது அப்போதே செய்திருக்கலாமே என்று புலம்புவதால் எந்தப் பயனும் இல்லை.

பெரியாழ்வார் திருமொழியில் ரங்கநாதனை நினைத்துச் சொல்கிறார். எனக்கு மூப்பு வந்து நான் நலியும் போது உன்னை நினைக்க முடியுமா என்று தெரியவில்லை.  அதனால் இப்போது நான் நன்றாக இருக்கும்போது உன் நாமத்தைச் சொல்லி விடுகிறேன்.  இப்போது நான் சொல்வதையே என்னுடைய கடைசிக் காலத்தில் சொல்வதாக நினைத்து என்னை கரையேற்றுவயாக என்று, அந்தப் பாடல் இதுதான்.

துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் 
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன் 

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே

என்னுடைய பதிவுகளும் கிட்டத்தட்ட அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் category தான்.

இந்த 50-வது பதிவை எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் கவிதையோடு முடிக்கிறேன் (கண்டிப்பாக இதற்கு translation தேவை இல்லை என்று நினைக்கிறன்).

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

Saturday, October 17, 2015

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் ....


கூடவே இருந்தாலும் சில விசயங்களை நமக்கு பிடிப்பதில்லை (ஒரு வேளை  கூடவே இருப்பதால்தானோ  என்னவோ).  அப்படி ஒரு பாவப்பட்ட ஜன்மம் நம் வீட்டில் இருக்கும் பல்லி. (நீங்கள் உங்கள் கணவர் அல்லது மனைவி அல்லது வேறு ஏதாவது உறவை நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)

நம் வீட்டு பெண்கள் பல்லிக்கும் கரப்பானுக்கும் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.  ஒரு வேளை அவர்கள் அப்படி பயப்படுவதால்தான் ஆண்கள் பயப்படாமல் இருக்கிறோமோ (அல்லது பயப்படாமல் இருப்பது போல் இருக்கிறோமா)  என்றும்  தெரியவில்லை.

எங்கள் வீட்டு சமையல் அறையில் கடந்த சில நாட்களாக ஒரு சிறிய பல்லி சுற்றிக் கொண்டு இருந்தது. அதை வெளியேற்றச் சொல்லி  என் மனைவி இரண்டு நாட்களாக சொல்லியும். கொஞ்சம் பொறு அதுவாக போய் விடும் என்று சால்ஜாப்பு (சமாதானம்) சொல்லிக் கொண்டிரேந்தேன்.  ஆனால் அது போன மாதிரியாகத் தெரியவில்லை.

கடைசியாக அதை வெளியே விரட்டி விடுவது என்று முடிவெடுத்தேன். என்னுடைய  plan ஒரு துணியை அதன் மேல் போட்டு அப்படியே அலேக்காக தூக்கிச் சென்று வெளியில் விட்டு விடுவது.  அதன்படி ஒரு துணியை கையில் வைத்துக் கொண்டு அதன் அருகில் சென்றேன்.  என்னைப் பார்த்ததும் அந்த பல்லி தன தலையை மெல்லத் தூக்கி நாக்கைத் துருத்தி பாகுபலி வில்லன் போல ஜிப்ரிஷ் மொழியில் ஏதோ சொல்லியது.  அதை நானாகப் புரிந்து கொண்டது "என்னை வெளியில் தூக்கிப் போடுவதற்கு உனக்கு ஏன் இவ்வளவு நடுக்கம் ?"  ஒருவேளை என்னுடைய body vibration ஐ (உடல் அதிர்வுகள் - நடுக்கம் என்று தவறாகவோ அல்லது சரியாகவோ? புரிந்து கொள்ள வேண்டாம்) வைத்து அப்படி சொல்லியிருக்கக் கூடும் என்று நானாக புரிந்து கொண்டேன்.  என்னுடைய பயம் எல்லாம் பல்லியை விரட்டுகிறேன் பேர்வழி என்று சொல்லி அதற்கு குந்தகம் விளைவித்துவிடக் கூடாது என்பதுதான்

அதனால் பல்லி  என்ன நினைத்தது என்று கவலைப் படாமல் நான் வைத்திருந்த துணியை அதன் மேல் சார்த்தினேன் (போட்டேன் என்று சொன்னால் அது மிகவும் harsh ஆக இருக்கும்).  ஒரு இந்தியனாக என்னுடைய planning நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதே இந்தியனாக execution-ல் கோட்டை விட்டு விட்டேன்.  அந்த பல்லி துணியின் நடுவில் இருந்த சின்ன cycle gap ல் வெளிய வந்து விட்டது. வெளியில் வந்து என்னைப் பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்தது (அல்லது சிரிப்பது போல எனக்குப் பட்டது).

இப்போது அடுத்த plan ஆக ஒரு துடைப்பத்தை கையில் எடுத்துக் கொண்டு அதை வெளியில் தள்ளி விடலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் அந்த பல்லி என்ன நினைத்ததோ (எனக்கு அதிகம் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நினைதிருக்கலாம்)  குடு குடுவென்று பால்கனி பக்கம் ஓடியது.  எங்கள் வீடு இரண்டாவது மாடியில் இருந்தாலும் பல்லி மேலே இருந்து கீழே விழுந்தாலும் அதற்கு ஒன்றும் ஆகாது என்று என்று என் அறிவுக்கு ஏற்கனவே தெரிந்து இருந்ததால் அதை அங்கிருந்து தள்ளி விட்டு எட்டிப் பார்த்தேன்.  கீழே இருந்த மணலில் விழுந்த பல்லி எந்த சேதாரமும் இல்லாமல் ஓடியதைப் பார்த்து திருப்தியுடன் வீட்டுக்குள் வந்தேன்.

இந்த பதிவு பல்லியை விரட்டிய என் பராக்கிரமத்தை பறை சாற்றுவதற்காக அல்ல. பல்லி ஒரு சாதுவான அப்பிராணி.  அதை விரட்டுவதற்கு எந்த மெனக்கெடலும் தேவை இல்லை.

பின் எதற்கு இந்தப் பதிவு ?  பல்லியை துரத்திய பிறகு அது குறித்த சில விவரங்களை கூகுளில் தேடினேன்.  சில முக்கியமான விஷயங்கள் தெரிய வந்தது. அதில் சில :

முதலில் பல்லிக்கு பற்கள் கிடையாது.  அதனால் பல்லி நம்மை கடித்து விடுமோ என்ற பயம் தேவை இல்லை.

பல்லியின் உணவு பொதுவாக கரப்பான், கொசு, ஈ போன்ற insects தான். பல்லி ஒரு நாளில் சில நூறு insects ஐ தன்னுடைய உணவாக கபளீகரம் செய்துவிடும்.  பல்லி என்ற ஒரு ஜந்து (ஐந்து என்று படித்து விடவேண்டாம்) இல்லாவிட்டால் நம்முடைய வருமானத்தின் பெரும் பகுதியை Hit வாங்குவதற்கே செலவு செய்ய வேண்டி இருக்கும்.

இப்படி காசு செலவில்லாமல் நமது ஆரோக்கியத்தை காப்பாற்றுவது பல்லிகள்தான்.  

இதுவும் தவிர இந்து நம்பிக்கையில் பல்லி வீட்டில் இருந்தால் அதை ஒரு good vibration என்றுதான் சொல்கிறார்கள்.  

ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.  பல்லி வீட்டில் இருப்பது நம் யாருக்கும் எந்தக் கெடுதலும் இல்லை (சில சமயங்களில் அதற்குத் தான் கெடுதல்).  நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு செயல் உணவு பண்டங்களை ஒழுங்காக மூடி வைக்க வேண்டியதுதான்.

நான் பல்லிக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைத்து விடாதீர்கள். 

கண்ணதான் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது "பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா ?  யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்   எல்லாம் சௌக்கியமே. கருடன் சொன்னது" (அப்பாடா இன்று  கண்ணதாசனின் நினைவு நாள். அவரையும் நினைத்தாகி விட்டது)

ஆண்டவன் படைப்பில் எதுவுமே தேவை இல்லாத ஒன்றல்ல.  யாரும் (அல்லது எதுவும்) இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.