Tuesday, November 17, 2015

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்


கடந்த வாரம் வரை வெயிலில் வெண்ணையாக உருகிக் கொண்டிருந்த சென்னை திடீரென்று நடுக்கடலில் கப்பலை இறங்கித்  தள்ள முடியுமா என்று சோக கீதம் பாட ஆரம்பித்து விட்டது.  Thanks to the unprecedented rain.

ஆனால் இடுக்கண் வரும்போதும் நகும் நக்கல் நம் மக்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே உண்டு.  அதனால்தான் தண்ணீர் இல்லாதபோது கழுதைக்கு கல்யாணம் பண்ணி வைத்தவர்கள் இப்போது மழையை நிறுத்த அந்த கழுதையை தேடிக் கொண்டிருக்கிறார்கள் - divorce செய்து வைக்க.

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுவாய் இயற்கை அன்னை மடை திறந்த வெள்ளம் போல மழையை நமக்கு கொடுத்தும் நாம் ஓட்டை குடங்களை வைத்துக் கொண்டிருந்தால் கோடைக் காலத்தில் காலி குடங்களைத்தான் வைத்துக் கொண்டு தண்ணீருக்கு அலைந்து கொண்டிருப்போம்.

There is enough available for everyone's need, but there is never available for anyone's greed என்று சொல்வார்கள். ஒவ்வொரு கோடைக் காலத்திலும் நாம் தண்ணீருக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்று அண்டை மாநிலங்களுடன் மல்லுக் கட்ட வேண்டிய தேவையே இல்லை - ஒழுங்காக மழை பெய்யும் போதே சேமித்து வைத்தால்.

நுங்கம்பாக்கம் lake view ரோடு இருக்கிறது.  Lake எங்கே ?
மொகப்பேர் ஏரி Scheme இருக்கிறது.  ஏரி எங்கே ?

இப்படி சென்னையிலும் சென்னையை சுற்றியும் உள்ள நூற்றுக் கணக்கான ஏரிகளையும் குளங்களையும் தூர்த்து பிளாட் போட்டு விட்டால் (விற்றால்) மழைக்கு தண்ணீர் வராமல் தயிரா வரும் (கோபத்தில் வேறு வார்த்தை வந்தது.  ஆனால் நாகரீகம் கருதி சொல்லவில்லை).

அரசாங்கத்தை Jaya டிவி யைத் தவிர எல்லோரும் திட்டித் தீர்த்தாகி விட்டது. அரசாங்கத்தை மட்டுமே குறை சொல்வதால் நம் கோபம் கொஞ்சம் குறையலாம்.  அவ்வளவுதான். இந்த அரசாங்கம் மட்டும் அல்ல எந்த அரசாங்கமும் தும்பை விட்டு விட்டு வாலைத் தான் பிடித்துக் கொண்டிருகிறது.  மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.  அல்லது மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி.

நாம் மட்டும் என்ன செய்கிறோம்.  அண்ணாந்து பார்த்து காரி உமிழ்வது போல plastic குப்பைகளை கண்ட இடத்திலும் வீசி எறிகிறோம்.  மழைக் காலத்தில் தண்ணீர் வேகமாக வெளியேற முடியாமல் அடைத்துக் கொண்டு நம் மீதே துப்புகிறது.

சில விஷயங்களை அரசாங்கம்தான் செய்ய முடியும்.  ஏரி மராமத்து, அணையை பலப்படுத்துதல், புதிய நீர்நிலையை உருவாக்குதல் அல்லது இருக்கும் நீர் நிலையை ஒழுங்காக பராமரித்தல், இவை எல்லாம் அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியும்.  

அதே நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் செய்யக் கூடிய சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக செய்தாலே நமக்கு ஏற்படும் பாதிப்பை பெருமளவு குறைக்க முடியும்.  நம் வீட்டில் மழை நீர் சேகரிப்புத் திட்டம், குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல் இருத்தல், வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க முடியாவிட்டாலும் ஒரு செடியாவது வளர்த்தல், இப்படி ஒவ்வொருவரும் செய்யக் கூடிய எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. 

இப்போது சில நாட்களுக்கு கஷ்டப்பட்டாலும் இரண்டு வருடங்களுக்குத் தேவையான தண்ணீர் இருப்பு வந்து விட்டதால் கண்டிப்பாக இந்த மாமழையை போற்றுவோம்.

Thursday, November 12, 2015

லா.ச.ரா.


கடந்த வாரம் எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் (சுருக்கமாக லா.ச.ரா.) அவர்களின் நூற்றாண்டு விழா ஆழ்வார்பேட்டை Russian Cultural மையத்தில் நடைபெற்றது. Discovery Book Palace-ம் வேறு சிலரும் இணைந்து இந்த விழாவை நடத்தினார்கள்.

லா.ச.ரா.வின் "சிந்தா நதி"  என்ற புத்தகத்தை என் கல்லூரி நாட்களில் படித்த போது எனக்கு பெரிதாக ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் பெரிய எழுத்தாளர்களின் புத்தகத்தைப் படித்தால்தான் நம்மை 'அறிவு ஜீவி' வட்டத்துக்குள் சேர்ப்பார்கள் என்ற எண்ணத்தில் (தவறான என்று சேர்த்துக் கொள்ளவும்) படித்தேன்.  படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது அல்லது இல்லை - இந்த இரண்டுமே உண்மைதான் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டேன்.

அவருடைய எழுத்துக்கள் புரியவில்லை என்பது குறித்த என்னுடைய புரிதல் சரியானதுதான் என்று அந்த விழாவில் எனக்குப் புரிந்தது (உங்களுக்கு என் எழுத்துக்கள் புரிந்ததா ?).  லா.ச.ரா.- தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்ற தலைப்பில் அவருடை மகன் சப்தரிஷி தொகுத்த நூலில் லா.ச.ரா.வே இப்படி குறிப்பிடுகிறார் "என்னுடைய எழுத்துக்கள் புரியவில்லை என்று சொல்கிறார்கள்.  இன்று புரியாவிட்டால் என்ன நாளை புரிகிறது. நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள். அட அப்படியே புரியாவிட்டால் என்ன ? எழுதுபவனுக்கே சில நேரங்களில் புரிவது இல்லை".

இதை மேம்போக்காக படிக்கும் போது சாதாரணமாகத் தெரிகிறது.  ஆனால் அதில் ஒரு ஆழ்ந்த உண்மை எனக்குப் புரிந்தது.  நாம் எந்த மன நிலையில் இருந்து ஒன்றை சொல்கிறோமோ அல்லது செய்கிறோமோ அந்த எண்ண அலையின் நேர்கோட்டில் இருப்பவர்களால்தான் நாம் சொல்வதை அல்லது செய்வதை சரியானபடி புரிந்து கொள்ள முடியும்.

சித்தர்கள் சொன்ன பல விஷயங்கள் நமக்கு புரியாததின் காரணம் இதுதான். இன்று புரியாவிட்டால் என்ன நாளை புரிகிறது என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளை வேண்டியதுதான்.

லா.ச.ரா.என்ற எழுத்தாளர் கொஞ்சம் கடினமானவராக இருக்கலாம்.   ஆனால் அவர் மிகவும் எளிய மனிதராக வாழ்ந்தவர்  என்று அந்த விழாவில் பலரும் பேசியதில் இருந்து தெரியவந்தது.

அவர் சொல்கிறார் "நாம் யாரும் கெட்டவர்கள் இல்லை.  ஆனால் நமக்கு கெட்ட எண்ணங்கள் தோன்றாமல் இருக்கிறதா என்ன ?"  அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதுதானே வாழ்க்கை.  பொதுவாக மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைக்கும் அல்லது வெளிப்படுத்த தயங்கும் எண்ணங்களை தன்னுடைய கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்துவதில் திறமையானவர் லா.ச.ரா.

எழுத்தாளர் சாரு நிவேதிதா. திருப்பூர் கிருஷ்ணன் மற்றும் பலர் பேசினாலும். 90 வயதினை கடந்த லா.ச.ரா-வின் மனைவி ஹைமவதி அவர்களின் பேச்சு மிகவும் இயல்பாக இருந்தது.  நடையில் தள்ளாட்டம் இருந்தாலும் பேச்சில் தெளிவு இருந்தது.  அவர் சொன்னார் "என் கணவர் எழுதுவதை main ஆகவும் வைத்துக் கொள்ளவில்லை side  ஆகவும் வைத்துக் கொள்ளவில்லை. இயல்பாக தோன்றும்போது எழுதினார்.  சில கதைகளை எழுத அவர் வருடக் கணக்கில் எடுத்துக் கொண்டார்.  அவருடைய கதைகளுக்கு அவர் ஒரு கருவியாகத்தான் தன்னை நினைத்துக் கொண்டார்.

அவருடைய எழுத்தில் கனம் அதிகம். எழுத்தில் கனம் இருந்தும் அதை தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிய மனிதர் லா.ச.ரா.  

அவருடைய அபிதா என்ற நாவலில் இருந்து ஒரு sample :

"புது இடத்தைக் காணும் வியப்பைக் காட்டிலும் பழைய இடம், பழகின இடம் திரும்பும் உள்ளக் கிளர்ச்சி தாங்க முடியவில்லை.  தேங்கிவிட்ட நினைவுகள் கொந்தளிப்பு கண்டு உணர்சிகள் ஒருங்கே அழுத்தும் நிலை முற்றிலும் இன்பம் என்று  சொல்வதற்கில்லை.  திரும்பியே வந்திருக்க வேண்டாமோ ? என்று கூட சித்தம் சலிக்கிறது.  ஆயினும் ஒரு எண்ணம். ஒரே எண்ணம் - நீர்த்துப் போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருக்கிறது ஒரு பொறி. நினைவின் காற்றுவாக்கில் பற்றிக் கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலையாக்கி என்னைத்  தன்முன் உந்தித் தள்ளிச் செல்கிறது.  நானும் பற்றி எரிகிறேன்.  ஒன்று கண்டேன்.  எதுவுமே மறப்பதற்கில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே".