Thursday, December 31, 2015

நல்ல காலம் பொறக்குது


மார்கழி மாதத்தின் அதிகாலை பொழுதில் குடுகுடுப்பைக்காரன் குரலைக் கேட்டது பழங்கனவாகி விட்டது.  சிறு வயதில் அவனது குரலும் உருவமும் சற்று அச்சமூட்டுபவையாக இருந்தாலும், இப்போது யோசித்துப் பார்த்தால் அவன் பொதுவாக நம்பிக்கை ஊட்டுபவனாகத்தான் இருந்திருக்கிறான். ஏனென்றால் அவனை நினைத்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது "நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது" என்ற வாக்கியங்கள்தான்.

பாரதியாருக்கும் அவனைப் பிடித்திருக்கிறது போல் இருக்கிறது. அதனால்தான் புதிய கோணங்கி என்ற தலைப்பில் குறி சொல்லி இருக்கிறான் (அவனது முண்டாசும், மீசையும்கூட ஓரளவு  குடுகுடுப்பைக்காரனைத்தான் நினைவு படுத்துகிறது).

குடுகுடுப்பைக்காரன் வாயில் இருந்து வரும் நல்ல வார்த்தைகள் எப்படி நம் மனதுக்கு நம்பிக்கை அளிக்கிறதோ அதேபோல அவன் தவறாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்ற பயமும் இருக்கும்.  பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போதும் அந்த உணர்வுதான்  வருகிறது.

அதனால்தான் "தரித்திரம் போகுது; செல்வம் வருகுது; படிப்பு வளருது; பாவம் தொலையுது" என்று அவன் சொல்லும்போது நம்பிக்கையாக இருந்தாலும், "படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோவென்று போவான்" என்று சொல்லும்போது "ஐயோ நாமும் படித்திருக்கிறோமே, ஏதாவது தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருக்கிறோமா அல்லது செய்துவிடுவோமோ" என்று  மனம் பதைபதைக்கிறது.  ஏனென்றால் சூது அல்லது பாவம் என்பதின் முழுமையான   விளக்கமே நமக்கு சரியாகப் புரிவதில்லை.  இதற்கும் பாரதியே நமக்கு வழி காட்டுகிறான்.  அவன் சொல்கிறான் -

பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன் றுமுதல்
நீயாய்  ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தருமமென யான் குறிப்பதிலும்
ஓயாதே நின்றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால். 

"தருமமென யான் குறிப்பதிலும்", இந்த வார்த்தைகளுக்கு நான் கொண்ட பொருள் நம்முடைய மனசாட்சிப்படி நடப்பதுதான்.   மற்றது எது குறித்தும் கவலை கொள்ளத் தேவை இல்லை. சூது வாது அல்லது பாபம் எதுவும் இல்லாமல் அது பார்த்துக் கொள்ளும் (சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லியவண்ணம் செயல் - அதனால் என்ன கஷ்டம் என்பதற்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறோமா என்ன ? - முடிந்தவரை மனசாட்சியின்படி வாழ்ந்துதான் பார்ப்போமே).

2015-ன் துன்ப நினைவுகளை 2015-லேயே விட்டுவிட்டு, சந்தோஷ நினைவுகளை மட்டும் 2016-ம் ஆண்டுக்கு கொண்டு சென்று அதை மேலும் பல மடங்கு பெருக்குவோம்.

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.  Again  எனக்குப் பிடித்த பாரதியின் கவிதையுடனேயே முடிக்கிறேன் (அவர்  சென்றதினி மீளாது மூடரே என்று சொன்னார், நான் நண்பரே என்று சொல்லி இருக்கிறேன். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. எனக்கு இல்லை).

சென்றதினி மீளாது, நண்பரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

புதிய கோணங்கி

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரந் தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான்.

வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்;
சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது,வளருது,

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடீ சொல்லடி,மலையாள பகவதீ!
அந்திரி,வீரி,சண்டிகை சூலி!
குடுகுடு குடுகுடு.

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது;சுறுசுறுப்பு விளையுது;
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
பயந் தொலையுது,பாவந் தொலையுது,
சாத்திரம் வளருது, சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தௌயுது;
வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;
சொல்லடீ சக்தி,மலையாள பகவதீ!
தர்மம் பெருகுத,தர்மம் பெருகுது


Friday, December 25, 2015

பிரளயம்


இயற்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவுமே எப்போதோ எங்கோ நடைபெற்ற சம்பவம்தான்.  நமக்குத்தான் புதிது.  வரலாறு காணாத மழை என்று நாம் சொன்ன மழையும் வரலாறு கண்டதுதான்.  நமக்கு வரலாற்றுக் குறிப்புக்கள் இல்லை  அவ்வளவுதான்.

நேற்று ஜெயகாந்தனின்  பிரளயம் என்ற குறுநாவலை படித்தேன்.  1965-ல் வெளிவந்த இந்தக்  கதையும் சென்னையின் வெள்ளம் பற்றியதுதான்.  50 வருடங்களுக்குப் பிறகும் அதே வெள்ளம், மக்கள் மழைக்கு பள்ளிக்கு ஒதுங்குதல், உணவுப் பொட்டலங்கள் மற்றும் பிற அவதிகள்.  இந்த வெள்ளத்தின் நடுவில் கதை செல்கிறது. கதையின் நடுவில் அவரின் சில வரிகள்: 

"சென்னை நகரின் பல பகுதியிலுள்ள சேரிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல பிரதான ரஸ்தாக்களில் கூட மரங்கள் வீழ்ந்தும், முழங்காலுக்கு மேல் ஆறாக மழை நீர் பாய்ந்தும் போக்குவரத்துக்கள் ஸ்தம்பித்து இருந்தன.  தினசரிப் பத்திரிகைகள் எல்லாம் அந்தக் காட்சியைப் படம் பிடித்துப் போட்டுப் பிரசுரித்தும், பேய் மழை என்று தலைப்பிட்டும், புயல் உருவாகி வருகிறது என்று எச்சரித்தும் மழையால் விளைந்த நாசங்கள் குறித்துச் செய்திகள் வெளியிட்டன.  இவை எல்லாவற்றுக்கும் சிகரம்போல் உதவிக்கு ஓடோடி வரும் நகரப் பிரமுகர்களின் வள்ளண்மையைக் குறித்து அவை புகழ் பாடின. பள்ளிகளுக்குக் குடியேறியுள்ள சேரிவாசிகளுக்கு சில பெரிய மனிதர்கள் ஆயிரக்கணக்கான உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தார்கள்"

"எப்படியோ கஷ்டப்பட்டு, மானத்தோடு கஞ்சி குடித்து நேற்றுவரை வாழ்ந்திருந்த இவர்கள், இன்று மழையின் காரணமாக வீடிழந்து நிற்கிறார்கள்.... எதன் காரணமாக இப்போது   மானத்தை இழந்தனர் ?..."

2015-ல் நாம் கண்ட இந்த வெள்ளத்துக்கும், அந்த வெள்ளத்துக்கும் உள்ள முக்கிய வித்தியாசம். 1965 கதையில் வந்த வெள்ளம் அடித்தட்டு மக்களை மட்டும் பாதித்தது. இந்த வெள்ளம் அடித்தட்டு, நடுத்தட்டு, மேல்தட்டு என்று எல்லா தட்டு மக்களையும் ஒரு தட்டு தட்டி விட்டது (வேட்டியை மடித்து பல பேரை சினிமாவில் புரட்டிய ராஜ்கிரண் கழுத்தளவு வெள்ளத்தில் புரண்டு பரிதாபமாக படகில் காப்பாற்றப் பட்டது முதல் கோடிகளின் அதிபர் அஸ்வின் முத்தையா லுங்கியோடு படகில் சென்றது வரை - மழை எல்லோரையும் சமப்படுத்திவிட்டது).

இந்த மழையினால் விளைந்த மனித நேயத்தைப் பற்றி எல்லோரும் பேசியாகிவிட்டது.  நம்மில் பலர் சில ஆயிரம் அல்லது சில இலட்சம் ரூபாய் கொடுத்தது முதல், உணவு, உடை, உறைவிடம் வழங்கியது முதல் பல உதவிகளை செய்திருக்கலாம்.  நாம் எவ்வளவு கொடுத்தாலும் அது  வாழ்க்கையில் நாம் பெறுவதைக் காட்டிலும் குறைவுதான். ஆனால் உண்மையில் அதிகம் கொடுத்தவர்கள் என்று சிலரை மழை அடையாளம் காட்டி இருக்கிறது.

சென்னையின் பல பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய பலரைக் காப்பாற்றி தன்னுடைய இன்னுயிரை இழந்த பல இளைஞர்கள் இருக்கிறார்கள். பெயர் தெரிந்தவர் சிலர், பெயர் தெரியாதவர் பலர். 

நாட்டைக் காப்பாற்ற தன்னுடைய உயிரைத்  தியாகம் செய்யும் வீரர்களை அரசாங்கம் கௌரவித்து அவர்களின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை செய்கிறது. 

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் போராட்டத்தில் தன்னுடைய உயிரை இழந்த இந்த இளைஞர்களும் அத்தகைய வீரர்கள்தான். இந்த விஷயத்தில் அரசாங்கம் எந்த அரசியலும் பார்க்காமல் அவர்களை கௌரவித்தால் அது நமக்குப் பெருமை.  இதைப் பற்றி யாரேனும் ஏற்கனேவே பதிவு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. 

ஜெயகாந்தன் பிரளயம் கதையை இப்படி முடித்திருந்தார்.

"ஒரு பிரளயமே வந்து இந்த உலகை அழித்தாலும் அது மீண்டும் புதிதாய்ப் பிறக்கும்.  கேவலம் இந்த மழையா வந்து மனிதர்களின் வாழ்வுக்கு முடிவு கட்டிவிடும்".


Saturday, December 5, 2015

இதுவும் கடந்து போகும்


Nightmare என்று சொல்வார்கள். அதற்கு சரியான பொருள் தமிழில் என்னவென்று இனிமேல் தேட வேண்டாம். "2015 சென்னை மழை" என்று சொன்னால் போதும்.   போன மழையோடு ஆபத்து நீங்கியது என்று நினைத்து இருந்தவர்களுக்கு மீண்டும் சென்ற செவ்வாய் கிழமையில்  (1-12-2015) இருந்து பெய்ய ஆரம்பித்த மழை சென்னையை முழுவதுமாக புரட்டிப் போட்டுவிட்டது.

ஏற்கனவே சென்ற மழையின் traffic jam -இல்  மாட்டிய அனுபவம் இருந்ததால் செவ்வாய் கிழமை பெய்ய ஆரம்பித்த மழையின் வீரியத்தைப் பார்த்து மதியமே அலுவலகத்துக்கு leave declare செய்து விட்டு எல்லோரையும் வீட்டுக்கு கிளம்ப சொல்லி விட்டோம்.

மாலை நேரம் செல்லச் செல்ல மழை வெளுத்து வாங்கியதும் அடுத்து வரும் நாட்கள் எப்போதும் போல இருக்கப் போவதில்லை என்று உள்மனது சொல்லியது.  அதற்கேற்றார்போல அடுத்த சில நிமிடங்களில் power cut ஆகிவிட்டது.   Peak hour traffic-ன் நெரிசலுக்கும் இரைச்சலுக்கும் பழகிப் போயிருந்த எங்கள் தெருவுக்கும், காதுகளுக்கும் அந்த இருட்டும் மழையின் சத்தமும் ஒரு அமானுஷ்ய சூழ்நிழையை  உருவாக்கி இருந்தது. இப்போதும் மழை கொட்டிக் கொண்டுதான் இருந்தது.  எந்த நேரத்தில் என்னுடைய முந்தைய "மாமழை போற்றுதும்" என்ற பதிவை செய்தேனோ தெரியவில்லை, உண்மையிலேயே மாமழை கொட்டிக் கொண்டிருந்தது.

நான் என் நண்பர்களுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினேன். அதன் சாராம்சம் இதுதான் "இந்த மழை இயற்கையின் முன்  நாம் ஒன்றுமேயில்லை என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறது.  நம் பாதுகாப்பை அந்த இயற்கையின்  பேராற்றலிடமே விட்டு விட்டு நாம் அனைவரும் நமக்காக பிரார்த்தனை செய்வோம்" என்பதுதான். 

வீட்டில் invertor இருந்ததால் மின் தடை பாதிப்பு அதிகம் தெரியவில்லை.  நீண்ட நாட்களுக்குப் பிறகு டிவியில்  யாரோ பேசுவதைக் கேட்டுக் கொண்டு சாப்பிடாமல் எங்கள் பேச்சை  நாங்களே கேட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

வெளியில் எட்டிப் பாத்தால் மழை இன்னும் வெளுத்து வாங்கி கொண்டிருந்தது.  Torch அடித்துப் பார்த்த போது தெருவில் கணுக்காலை நனைத்தபடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது.  எங்கள் தெருவில் எப்போதும் தண்ணீர் தேங்காது. மழை விட்ட சில நிமிடங்களில் தெரு பளிச்சென்று ஆகிவிடும். அப்படியே இன்றும் ஆகிவிடும் என்று நினைத்து கதவை மூடி அன்று  கொஞ்சம்  சீக்கிரமே படுத்துவிட்டோம்.  பொதுவாக படுத்தவுடன் தூங்கிவிடும் எனக்கு அன்று mind மிகவும்  disturb ஆகவே இருந்தது.

நள்ளிரவுக்கு மேல் வெளியில் அக்கம் பக்கத்துக்கு மனிதர்களின் பேச்சுக் குரல் கேட்டு வெளியில் எட்டிப் பார்த்தேன். தண்ணீர் ஆறாக பெருகி ஓடிக் கொண்டிருந்தது.  எங்கள் தெருவில் இப்படி ஒரு காட்சியை இதுவரை கண்டதில்லை.  எங்கள் Flat -ன் 2-வது மாடியில் இருந்து கீழே வந்து பார்த்தேன். மாலையில் கணுக்காலை நனைத்த தண்ணீர்   இப்போது parking area-வில் ஏறி காரின் டயர்களை நனைக்கத் தொடங்கி இருந்தது.  எங்கள் ground floor-க்கு  இன்னும் இரண்டு  படிகள்தான் பாக்கி.  

எங்கள் பகுதி அமைந்திருக்கும் சூளைமேடு area வில் வெள்ளம் வந்தால் சென்னையின் (தென் சென்னை) பெரும்பாலான பகுதிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்று அர்த்தம்.  ஏரிகளை திறந்து விட்டார்கள் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. எனக்கு உடனே Tambaram Mudichur போன்ற பகுதிகளின் நிலைமையை நினைத்துதான் கொஞ்சம் concern-ஆக இருந்தது.

மீதி இரவை படுப்பதும் எட்டிப் பார்ப்பதுமாக கழித்தேன்.  காலை மீண்டும் ஒரு சோதனை.  எங்கள் நெருங்கிய உறவினரின் மரணச் செய்தி.  வெளியே இப்போது இடுப்பளவு தண்ணீர்.  நாங்கள் செல்ல வேண்டிய இடமோ மாதவரம். காரை வெளியில் எடுக்க முடியாது .  எந்த cab க்கு phone செய்தாலும் not reachable. பிள்ளைகளை அழைத்து செல்லவும் முடியாது. தனியே  விட்டுச் செல்லவும் பயம்.  கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு நானும் என் மனைவியும் இடுப்பளவு தண்ணீரில் வெளியே வந்து மெயின் ரோட்டுக்கு வந்து எப்படியோ மாதவரம் சென்று safe ஆக திரும்பி விட்டோம்.  

நல்ல வேளை செவ்வாய் கிழமை இரவுக்குப்  பிறகு  அவ்வளவு மழை இல்லை. அந்த மழை மீண்டும் ஒரு நாள் தொடர்ந்திருந்தால் ..... சென்னை என்னவாக  ஆகி  இருக்கும்  என்பதை  உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இப்போது அரசாங்கத்தையோ அல்லது யாரையுமோ குறை சொல்லி புண்ணியம் இல்லை.   இயற்கையின் பேராற்றலுக்கு முன் நாம் ஒரு தூசுக்கு கூட சமம் இல்லை என்பதை மீண்டும் நினைவு படுத்தி இருக்கிறது இந்த மழை.  அதே சமயம் நாம் தனி மனிதராகவோ அல்லது அரசாங்கமாகவோ செய்யும் தவறுகள்தான் இயற்கையால் ஏற்படும் ஆபத்தினை பேராபத்தாக ஆக்கி விடுகிறது.

இயற்கை இன்னமும் நம் மீது கருணையோடு இருப்பதால்தான் இந்த அளவோடு நிறுத்தி இருக்கிறது.   இயற்கையை வணங்கி இயற்கையோடு இணைந்து தன்னுடைய வாழ்வை நடத்திய  நம்முடைய முப்பாட்டனின் அறிவு, படித்த நமக்கும் வந்தால் நன்றாக இருக்கும். 

பீனிக்ஸ் பறவை நெருப்பில் இருந்து உயிர்தெழுமாம். சென்னை நகர மக்களும் அப்படிதான்.