Friday, December 23, 2016

வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜிக்கு வாழ்த்துக்கள்


கவிதைகளில் கல்யாண்ஜியாகவும் கதைகளில் வண்ணதாசனாகவும் அறியப்படும் எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது  2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்காக வண்ணதாசனின் “ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது. 

ராவ் ரெட்டிகளின் வருமான வரி சோதனைகளும், சின்னம்மா அதிமுக பொதுக்ககுழுவில் பெரியம்மா ஆவாரா என்ற கேள்விகளும் நிறைந்திருக்கும் இந்த நாட்களில் சில நல்ல மனிதர்களுக்கு கிடைக்கும் உண்மையான மரியாதையை miss செய்துவிடக் கூடாது என்பதற்க்காகத்தான் இந்தப் பதிவு.


"வண்ணதாசன் கடிதங்களில் வாழ்வின் வண்ணங்கள்" என்ற தலைப்பில் திருமதி .தி.சுபாஷிணி என்பவரது பதிவை வண்ணதாசனின் வலைதளத்திலேயே  படிக்க நேர்ந்தது.  மிகவும் அருமையாக இருந்தது. 

இனி வண்ணதாசனின் வண்ணங்கள் உங்கள் எண்ணங்களை நிறைக்கட்டும்.  

வாழ்க்கை எப்போதும் ஆதாரமற்றுப் போய்விடுவதில்லை. ஆதாரத்தின் புள்ளியும் அவ்வப்போது மாறிச் சமன் செய்துகொண்டிருக்கின்றன.
வாழ்வின் மர்மமும் புன்னகையும் ஒளியும் நிறைந்தது. தனிமை நிரம்பியது. உங்களின் முகத்தில் ஜீவனைத் தரிசிக்க முடிந்தது. நீங்கள் எவ்வளவு அழகு.
*****************************
திட்டமிட முடியாத வாழ்வின் எல்லைக் குறைவால் ஆசைகளின் பழுப்பு இலைகள் உதிர்ந்துகொண்டே இருக்கும். எதையாவது தொடர்ந்தும், அதனாலேயே தொடரப்பட்டும் கடைசி வரை செய்வினை, செயப்பாட்டு வினை ஆகிவிட்டது. வாழ்க்கையில் விருப்பமில்லாத திருப்பங்கள் எத்தனையோ. அவை தவிர்க்க முடியாதவை. காதலினால் அல்ல. கருணையினால் என்றும் “கருணையினால் அல்ல காதலினால்” என்றும் ஒவ்வொன்றும் வெவ்வேறு அறியாத சதவீதங்களுடன் நிகழ்கின்றன. இன்றும் பௌர்ணமி நிலா, நிலா மாதிரியே இருந்தது.
*****************************
இந்த மழைக்கால இருட்டில் இந்தப் படிக்கட்டுகள் போல வாழ்வும் இந்த மண்விளக்குகள் போல நானும் இருந்து விடலாம். யாராவது ஏற்றுவார்கள். யாருக்காவது வெளிச்சம் தெரியும், ஈரப் புல்லில் ஓரமாவது ஒரு தரம் மினுக்கும் நடுங்குகிற ஒளியில். எல்லாவற்றையும் நீருக்கும் நெருப்புக்கும் காற்றுக்கும் வெளிச்சத்திற்கும் உண்மையாக இருக்க அனுமதியுங்கள். இயல்பு நம்மை வழி நடத்தும், புல்லை யாரும் தருவதில்லை தானாகவே வளர்கிறது.
*****************************
சிக்கல்களின் நெரிசல்களுக்குக்கு இடையில் மனிதர்கள் சதா நோம்பிருப்பது அன்பெனும் சிறு வரத்திற்கு. பந்தியில் போட்ட வாழை இலையின் குருத்துப் பச்சையை ரசித்துப் புற விரல்களால் நீவிக் கொடுத்த நமக்குத்தான் சரியான இடத்தில் விழுந்து போகிறோம். மருகியுருகித் தவிப்பவர்களின் மேல்தான் மெழுகுவர்த்திச் சொட்டாக எல்லாம் விழுந்து இறுக அடிக்கின்றன. என்றாலும் நாம் இதையெல்லாம் தாண்டிப் போகிறோம்.
*****************************
நல்லவையாக எழுதியவையெல்லாம் உடலும் மனமும் உயரப் பறந்து, ஓய்ந்த காலத்தில் தான். ஒரு முழு நாளில் சிறகடிப்பிற்க்கு முன் கோபுரத்தில் உட்கார்கிற அந்த மயங்கும் நேரத்தில் தான். இது போன்ற சமயங்களில் குழுந்தையைவிட மனைவி பெரிய ஆறுதல். எல்லாம் அறிவது இம்சை போதும்.
*****************************
வாசிக்கிறவனை வீணை மீட்டத் தொடங்குகிற நேரம் அபூர்வமானது. இசையின் கொடுமுடிகளைத் தொடரப் பிரயாசைப்பட்டு, அடையும் போது இடையே இன்னும் சில சிகரங்களுக்கும் பாடகனை நகர்த்தும்.
*****************************
குளிப்பதற்கு முந்தைய ஆறும் குளித்த பிறகான ஆறும் மட்டும் வேறு வேறு அல்ல, நீங்கள் பார்க்கிற ஆறும் நான் பார்க்கின்ற ஆறுமே வேறு வேறு. எதுவும் ஒன்றல்ல. எதுவும் வேறு வேறும் அல்ல.
*****************************
அன்போ, காதலையோ கல்வியையோ தன்னை மறந்து அல்லது தன்னை மறக்கச் செய்கிறபடி எப்போதாவது வாய்க்கிறது. மனைவியுடன் சினேகிதினுடன், குழந்தைகளுடன், எந்தச் சலனமுமற்ற நிறைந்த நதி நகர்வது போல, கரை தொட்டு கரை அற்றுக் கலந்திருப்பதால் தனித்த நீண்ட அருமையான இரவுகளும் அப்படித்தான். சுற்றிப் பிரகாரத்தில் கடைசியில் தெரிகிற கருணைச் சுடர் போல் தெரிகிறது. ஒரு பந்து மல்லிகையைவிடக் கிள்ளித் தலைமையில் செருகிய ஒரு இணுக்குப் பூ படுத்துகின்ற பாடு ஜாஸ்திதான். அலை அலையான ஆண் பொண்ணுமில்லாவிட்டால் திருவிழா ‘நிரம்பாது’. ரோடு என்ஜின் மாதிரிக் தேர் அளந்து போகமுடியாது. வாழ்க்கை முதல் மரியாதைகள் நிரம்பியது.
*****************************
பாசாங்குகளற்ற, வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும் எந்தக் காதலும், எந்தக் காமமும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும்.
எல்லா மனிதனும் எல்லா மனுஷியும் அழகாக இருக்கும் போது, இந்த வாழ்வும் இந்த உலகும் மேலும் அழகுறும். உண்மையும் பாசாங்கு அற்றதும் ஆன என் முகமும் என் வரிகளும் அங்கீகரிக்கப்படுவதுதான். இதே முகத்துடன் இதே வரியுடனும்தான் எங்கும் இருக்கிறேன். ஆனால் தமிழ் இலக்கியச் சூழலில் இந்த ஆரோக்கியம் இல்லை, இந்த சினேகிதம் இல்லை. நான் மற்றவர்களுக்கும், மற்றவர்கள் எனக்கும் என்றாகிவிட்டது என் மார்புக் காம்பிலிருந்து நான் பாலருந்த முடியாது. வளர்வதும், வளர்வதைக் கண்டு மகிழ்வதும்தான் வாழ்வாக இருக்க வேண்டும். ஒன்றுமில்லை என்று உணர்வது போல் உன்னதம் வேறு உண்டோ!
*****************************
சில பேரை நிஜமாகத் தொட முடிந்திருக்கிறது. நிஜம் தொட்டால் நன்றாகத்தானே இருக்கும். தற்செயல்கள் எல்லாம் எவ்வளவு அழகாகப் பூவைப் போல மலர்ந்துவிடுகின்றன.
*****************************
நான் எதையும் சுருதி பாடவில்லை. எதையும் எதிர்த்துத் தர்க்கமிடவில்லை. நான் இதுவுமில்லை, அதுவுமில்லை, எதுவுமில்லை. எதுவாகவேனும் நான் நிர்ப்பந்தமாக என்னைச் சொல்லிக்கொள்ள வேண்டுமெனில் என்னைப் புல் என்று சொல்லுங்கள். புல்லாக இருக்க எனக்கு முற்றும் சம்மதம்.
*****************************
இனிப்போ, கசப்போ எதிர்கொள்ளுங்கள். கசப்பைப் போல் ருசியில்லை. காலம் போல் அமுதில்லை. விழுங்குங்கள். செரித்துக்கொள்ள முடிந்ததெனில் செய்யுங்கள். விழுங்கவும் முடியவில்லை, அப்போதும் தோன்றவில்லை எனில் நீலகண்டனாக நிறுத்துங்கள். மனிதர்களைச் சம்பாதிப்பதற்காக, முதலில் ஒடுங்கள். சம்பாதிப்பதற்காக அப்புறம் ஒடுங்கள். ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுகின்ற புள்ளிமான் சூட்சுமம் பிடிபடுகிறபோது, நீங்கள் வெற்றிபெற ஆரம்பிக்கிறீர்கள்.
*****************************
மனிதர்கள் தான் சூழல். சூழல்தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது முன்னே செல்வது. முன்னே செல்வது உழைப்புச் சார்ந்தது. உழைப்பு என்பது உள்ளிருந்து எழுவது. உள் என்பது வெளி.
*****************************
மண்ணை அறிவது மனிதர்களை அறிவது மாதிரிதான். ஒரு விதை முளைத்தலை மீறிய உன்னதக் கவிதையை என்னால் ஒருக்காலும் எழுதி விட முடியுமா என்ன! நிகழக் கூடியதுதான் என்பதற்காக நிகழ அனுமதித்து விடமுடியுமா?
*****************************
உலகம் முழுவதும் ஆயிரம் நடந்து கொண்டிருக்க அவரவர் வாழ்விலேயே பெரிதும் சிறிதுமாக நிறைய தூரம் வந்துவிட்டோம். செய்யத் தோன்றியதே மிகக் கொஞ்சம். அதையும் செய்துவிட்ட பாடில்லை. போய்க்கொண்டே இருக்கிறோம். அன்றன்றே சரியாகிப் போகிறது. மலையும் வனமும் நதியும் சதா அழைத்துக்கொண்டிருக்கின்றன. அந்த அழைப்புக்கு உடன்படாத ஹிம்சை இருக்கிறதே தவிர, இந்த அழைப்பின் குரல் ஒருபோதும் இம்சையாகிவிடாது இருக்கிறது.
*****************************
என்னைப் பொறுத்தவரை குரல்கள் எனக்கு முக்கியமானவை. அவரவர்களைக் காட்டுகிற அவரவர் குரல்கள், முகம் மாதிரி, முகத்தை விடவும் எல்லாம் காட்டவல்லவை.
*****************************
அம்மாவுக்குப் பேச்சு வேண்டும். சத்தம் வேண்டும். சலசலப்பு வேண்டும். சிலபேர் அன்பை அப்படி வெளிப்படுத்துகிறார்கள். யாருக்கு எழுதினேன் என்பதும் என்ன எழுதினேன் என்பதும் ஞாபகம் இருப்பதில்லை தற்போது. வாழ்தல் இருத்தலாகிவிடும்போது இதுபோன்று ஆகும். மறுபடியும் ஒன்றுக்கொன்று இடம் மாறிச் சமன் செய்துகொள்ளும். அதனதனை அதுவே கவனித்துக் கொள்ளும். மிக உள்ளடங்கி, மிகத் தொலைவில், மிக அடர்த்தியுடன் பூக்கும் மரங்களும் எங்கெங்கோ இருக்கின்றன. உடனடி வாழ்வில் எங்கெங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
*****************************
வாழ்க்கைக்கு எது எல்லாம் தேவையோ, அல்லது போதுமோ அது அவற்றுக்கும் பொருந்தும். ஒன்றின் ஜீவன் மற்றொன்றில் இருக்கிறது. எதுவும் வேறு வேறில்லை. எல்லாம் புரியும் தினம் வரும். எல்லாம் தானாகப் புரியவும் செய்யும். அந்த நேரம் முன் & பின் எனினும் அருமையானதாக இருக்கும். எனக்கு எதிர்த்தாற் போல உன்னதமான மனிதர்கள் தட்டுப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். என்னால்தான் எதையும் திருப்பித் தர முடியவில்லை.
*****************************
மனிதர்கள் நம் கையைப் பற்றுகிற நேரம் எவ்வளவு உன்னதமானது. அவர்களின் கண்களில் திரள்கிறதும் கசிகிறதும் எவ்வளவு ஒப்பற்றது.

உங்களுடைய துணைவியாருக்கும் சற்று நெருக்கமான நேரம் ஒதுக்குங்கள். ஸ்தாபனமோ, இலக்கியமோ அந்தப் பெண்களை அவர்களுடைய இடத்திலேயே விட்டுவிட்டு நீங்கள் மட்டும் எங்களுடைய காரியங்களைப் பார் என்று சொல்லவில்லை. நமக்கு வாய்த்திருப்பதெல்லாம் அருமையான மனுஷிகள், பூமி உருண்டையைப் புரட்டி விடுகிற நெம்புகோல்களுக்கு அடியில் அவர்கள்தான் செங்கா மட்டை. நசுங்கிக்கொண்டு கிடக்கிறார்கள். என்னையும் உங்களையும் அப்படியெல்லாம் அனுசரணையாயும் பத்திரமாகவும் வைத்திருக்கிற பெண்களுக்கு நாம் அப்படியொன்றும் அதிகம் செய்துவிடவில்லை.
*****************************
யாரையும் பயன்படுத்திக்கொள்ள எனக்குத் தெரியவில்லை. மனிதன் பயன்படுத்திக் கொள்ளப்படுவதற்கு உண்டானவனாக எனக்குப் படவில்லை, அதிகபட்சம் இந்த வாழ்க்கைக்கும் மனிதனுக்கும் உண்மையாக இருப்பதையே முயல்கிறேன். விட்டுக் கொடுத்துக்கொண்டே செய்கிற உறவு நிலையில் எந்த இழப்பும் இல்லை எனத் தோன்றுகிறது. குடும்பத்திலும் அலுவலகத்திலும் என்னைக் காயப்படுத்த, சிறுமைப்படுத்த முனைந்த மனிதர்களை இன்னும் நெருங்கியிருக்க என்னால் முடிகிறது.
*****************************
மண் புழுக்களை நேசிக்கிற மனம் இன்றும் இருக்கிறது. அதனதன் காரியங்களை அவை யாவையும் அவரவர் காரியங்களை அவரவர்களும் செய்து விடுகிறோம். இதில் ஒப்பிட ஒன்றுமில்லை. ஒரு கூழாங்கல் போல் இன்னொன்றில்லை. ஒரு குன்னி முத்துப்போல் மற்றொன்றில்லை. ஒரு வேப்பங்கன்றின் காற்றை இன்னொன்று தருவித்து விடாது. இன்றைய சூரியன், நேற்றைய சூரியன் அல்ல. நாளைய கல்யாணி, இன்றினுடையவன் அல்ல. எதன் எதன் நீட்சியாகவோ, எல்லாம். அடிக் கணு இனிப்பு நுனிக் கரும்புக்கு அகப்படவில்லை. இதற்கிடையில் ஆரக்கானை நொந்துகொள்ள கடையாணிக்குத் துப்பில்லை. எல்லாம் உருண்டு உருண்டு நடந்து நடந்து கடந்து கடந்து.
*****************************
நான் சிப்பியைப் போல ஒதுங்கிக் கொண்டிருப்பேன். சிறு கீரையைப் போல என் பாத்தியில் தழைத்துக் கொண்டிருப்பேன். அவரவர் வாழ்க்கை அவரவர்களுக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குற்ற உணர்வு. அசைபோட அசைபோட அத்தனையும் பிரம்படி. வேண்டும் என்று யாரும் கிழிப்பார்களா தலைவாழை இலையை! ஒரு பூட்டில் அஞ்சு இலை என்ற கணக்கு இன்னும் மாறவில்லை. ஆண்டாள் தோளில் தொங்கினால் மாலையும் அழகு. கிளியும் அழகு. இடைச்சி கடைந்தாலும் மோர் சிலும்பாமல் இருக்குமா? தெறிக்கத் தெறிக்கத் திரளும் வாழ்வு.
*****************************
ஒரு ஸ்டில் லைஃப் ஓவியத்தின் பழக்கிண்ணத்தில் நிறையத் திராட்சைத் தொங்குவது போல. சில சமயம் நெரிசல் அழகு. நெரிசல் ஜீவன்.
யார் நம்முடைய அறிவைத் தூண்டுகிறார்களோ, அந்தச் சுடர்க் கடவுளின் மேலான ஒளியை நாம் தியானிப்போமாக! எப்போதுமே சற்று முந்தைய பருவங்கள் அழகானவை. அப்பழுக்கற்றவை. உண்மையை ஏந்தி நிற்பவை. காலைக்கு முன் விடியற்காலை, வேனிலுக்கு முன் இளவேனில், பூப்பதற்கு முந்தைய பூ, பேறுக்கு முந்தைய இளம் தாய், கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு மண்டபம், யோசிக்க யோசிக்க இன்னமும் நிறைய இப்படி…
*****************************
வீடு அதில் உள்ள மனிதர்களால் நிறைகிறது. அழுந்துகிறது. ஒன்றுமே இல்லை என்று ஞானமும் தர்க்கமும் அறுதியிடுகிறவற்றிலிருந்து எல்லாச் சந்தோஷமும் பெருகி வழிவது போல் இருக்கிறது. கொட்டின ஆரத்தியில் கிள்ளின வெற்றிலையை அப்பியிருக்கிற வாசல் மாதிரி, ஏற்றினால் இன்னொன்று அழகாகி… காலத்தின் சிறகுகள் அகன்றவை. வீச்சு நிறைந்தவை.
*****************************
நீரைப் போன்ற அற்புதமில்லை. அதுவும் வனாந்திரங்களில் மீன் மொய்த்துக் கிடக்க, சதுர கூழாங்கல்லுக்கு வேதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டும், காற்றின் பாடல்களுக்கு இசைந்து கொண்டுமிருக்கிற நீரைப் போன்ற உயிருள்ள திரவம் வேறில்லை.
*****************************
உள்ளங்கைகள் மிக அழகாக இருப்பது, அப்படி ஒரு சேர அந்தத் தண்ணீரை அள்ளும்போதுதான். சில பதிலற்ற கேள்விகள், தொடர்ந்து நம்மிடம் இருந்துகொண்டே இருக்கின்றன. போன தலைமுறையில் இருந்து இந்தத் தலைமுறைக்கு வம்சாவளியாக அந்தக் கேள்விகளையும் அங்கீகரித்து விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஓடுகிற ஆறு, கூழாங்கற்களைத் தராது இருக்காது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எவ்வளவுதான் ஒருத்தி எழுந்திருக்க முடியாமல் இம்சைப்படுவது என்று உன்னைப் போல் ஒரு மனுஷிக்குத் தோன்றிவிடக் கூடாது. கைப்பிள்ளையோடு வேனா வெயிலில் லொங்கு லொங்கு என்று ஓடுகிற கிராமத்துப் பெண்பிள்ளைகளுக்கு ஆதரவு சொல்ல முடியாதபடி ரஸ்தாக்கள் நீளக் கிடக்கின்றன.
*****************************
பேசினதைவிட என் வீட்டு கேட் வரை வந்து விட்டுப் போனீர்களே அது அல்லவா பெரிய பேச்சு. மனது சூடுற்றும் புடைத்துப் பரபரப்புக் கொள்ளும்போது எழுத்து சரியான வடிகாலாக இருக்கும்.
*****************************
இந்தத் தாளின் கசங்கலைப் பொறுத்துக்கொள்வீர்கள்தானே. மனித குணாம்சங்களின் கசங்கல்ளைப் புரிந்துகொள்ளவும் அனுமதிக்கவும், அனுசரிக்கவும் விலகி நின்று ரசிக்கவுமான பக்குவமும் வாழ்வனுபவமும் உடைய புத்தகக் கூர்மை உடைய மனிதனாக நீங்கள் இல்லாவிட்டால், இந்த இரண்டு கதைகளையும் இதற்கு முந்தைய கதைகளையும் எப்படி எழுதியிருப்பீர்கள். கசங்குவது கசக்கப்பட்ட வஸ்துவின் குற்றமாகாது என்பதும் இன்னொரு நிஜம்.
*****************************
தெரிவதுதான் உண்மை. உண்மை சுடுவது மட்டுமல்ல, உண்மை தன்னைக் காட்டிக்கொள்ளவும் செய்யும். சுட்டிக்கொள்ளவும் செய்யலாம், செய்யக்கூடும்.
*****************************
ஊற்றுகிற எண்ணெய்க்கும் ஏற்றுகிற திரிக்கும் ஏற்ப, ஒளிரும் சுடர். வெளிச்சம் விளக்குக்கு அப்பாலிருந்தும் வருகிறது, அல்லது அப்பால் இருந்துதான். அதிர்ச்சிகளைத் தருகிற வாழ்க்கையே அதிர்ச்சித் தாங்கிகளையும் தரத்தானே செய்யும். பாதையிடுக்குகளில் புல் தானாக வளர்கிறது. மழைத் தண்ணீரில் தானே வாய்க்கால் வகுத்துக்கொள்கிறது. திடமான தாயின் கர்ப்பம் தானாகவே தலை பிறக்கிறது. நானாக உணராதது எல்லாம் தானாக.
*****************************
சாவு எனக்கு மரண பயம் தரவில்லை. சாகச் சம்மதம். அமைதியும் நிறைவுமான ஒரு விடுதலை இது. வாழ்க்கை அழைக்கிறது போல, சாவும் சதா அழைத்துக்கொண்டிருக்கிறது. இரண்டிற்கும் இடையில் நாம் தீவிரமாக முத்தமிட்டுக்கொண்டு இருக்கிறோம். வியர்வை ஒழுகிக்கொண்டிருக்கின்றது. கடைக்கண்ணில் நீர் பெருகி, காதோரம் சிகை கலைகிறது. அகலாது அணுகாது எரிகிறது தீ. தான் எவ்வளவு குரூபி எனினும் கண்ணாடி பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? எல்லோரும் அவரவர்களைத் தெரிந்துதானே இருக்கிறோம். நல்ல பட்டியலின் நீட்சிக்கு மத்தியில் என் பெயர் விட்டுப் போகிறதை எதிர்கொள்கிற எத்தனையோ இடங்களில் இதுவும் ஒன்று. உண்மை எதிர்கொள்ள வேண்டிய வகையிலேயே மிகவும் உறுதியுடன் தன்னை வைத்துக்கொள்கிறது. காலம் காலமாக இழந்த காதல்தானே கொண்டாடப்படுகிறது.
*****************************
நெல் வயலில் ரோஜா கூட ஒரு களைதான். நான் நெல்வயல் ரோஜாவாக இருக்கக் கூடாது இல்லையா? ஒரு நேரத்தில் ஒன்றை மாத்திரம் கவனியுங்கள். இலக்கியத்தில் திளைக்கும்போது எதற்கு இலக்கியவாதிகள் ஞாபகம். விதை பரவுதல் என்று சின்ன வயது சயன்ஸ் பாடத்தில், நீரால், காற்றால், பறவைகளால், மனிதர்களால் விதைகள் பரவுவது பற்றி வரும். நம்முடைய பிள்ளைகள் மனிதர்களையும் பறவைகளையும் அன்றி இந்தக் காற்றால் பரவுகிற எருக்கலஞ்செடி, இலவம் பஞ்சு, வாரியப்புல் வகைத் தாவரங்கள் ஆகிப் போனார்கள். முகவரியற்றுப் போவது ஒரு துன்பம் எனில் அப்படி முகவரியற்றுப் போனதை உணர முடியாதவர்கள் ஆனார்கள் என்பது இன்னும் ஒரு பெரிய துன்பம். வலியை உணர்வது அதிக வலி.
*****************************
நாம் உணர்வுபூர்வமானவர்கள். மனத்தைப் பார்க்கிறவர்கள், கரைந்து போகிறவர்கள். ஆனால் தொலைந்து போகிறவர்கள் அல்ல.
அப்படியெல்லாம் வாழ்வை, செயல்களை இன்னொருத்தரிடம் ஒப்படைத்துவிட முடியாது. வெயில், நிழல், பாதுகாப்பு, பாதுகாப்பின்மை எல்லாம் தான் எனக்கு வேண்டும். ஒரேயடியாக நிழலிலும் ஒரேயடியாகப் பாதுகாப்பிலும் இருந்தால் அது வாழ்வாக இருக்கிறதில்லை. மனம் அனுபவங்களின் நாற்றங்கால். பசுமையுடன் இருக்கும்போதே செய்ய வேண்டிய காரியங்களை வைக்கோல் பழுப்புக்கு வந்த நேரத்தில் செய்வதில் அர்த்தமில்லை.
*****************************
இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு ஏற்றுவிக்கப்படுகிற இந்த ஒளி துலங்குகிற வரை எனக்கு முகம் பார்க்க அலுக்காது. ஒளி பெருகுக, ஒளி பெருக்குக.
நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
*****************************
கனிகிற காலத்தில் கனிந்து நிற்கிறவர்களைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாகத்தான் இருக்கிறது. போன தடவை வந்திருக்கும்போது பஸ் ஸ்டாண்ட் வரை வந்து அம்மா வழியனுப்பிய கருணையினால் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். யாராவது வழியனுப்பவும் துணையிருக்கவுமாக இருந்தால் இந்த வாழ்க்கை எவ்வளவு அடர்த்தியாகி விடுகிறது. உலகில் நல்லறங்களும் நல்லிசையும் நல்லியல்புகளும் நல்ல மனிதர்களும் போற்றப்படுகிறபோது ஒரு திருவிழாப் போல நிகழ வேண்டும். ஆரவாரமல்ல. நிறைவு, பெருமிதம், எல்லோர் முகங்களிலும் சுடர், ஒருவர் கையை ஒருவர் பற்றி ஒருவர் தோளை ஒருவர் அணைத்து, எல்லோர் கையாலும் சந்தனம், எல்லோர் கையாலும் ரோஜா இதழ்.
*****************************
தொடர்ந்து செயலாற்றுங்கள், எந்தக் கதவு எப்போது திறக்கும் என்று தெரியாத ரகசியத்தின் சுவாரசியத்தில் தான் இந்த வாழ்வின் பந்தயம் நிகழந்துகொண்டு இருக்கிறது. வீட்டில் எல்லோரும் அவரவர் உலகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியையும் சுற்றும்போது எல்லாக் கிரகங்களும் முக்கியமாகச் சூரியன் & நன்றாகத் தானே இருக்கும்.
*****************************
திட்டமிட்டு எல்லோரையும் அனுச்சரித்துக்கொண்டு உங்களுடைய இடத்தை விட்டுக் கொடுக்காமல் மேலும் தாமதமின்றி வெற்றி பெறுங்கள்.
மீட்சியில் தேடலாகவும் தேடலில் இருந்து துவங்கும் மீட்சியுமாகவே மிச்சமுள்ள வாழ்வு இருக்கும். உச்ச மகிழ்ச்சியில் கசிந்துகொண்டிருக்கிறது, இந்தக் காலத்தின் கண்ணீர்.
*****************************
அதிகபட்ச உண்மையோடும் அதிகபட்ச நேர்மையோடும் வாழவே, அனுமதிக்கப்பட்டிருக்கின்ற என் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நான் முயல்கிறேன். நான் யாரையும் சந்தேகிப்பதில்லை யாரையும் வெறுப்பதுவுமில்லை. உதாசீனங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட நான் நெருங்கி நெருங்கி ஒவ்வொருவரையும் புரிந்துகொள்ளவே முயல்கிறேன். இப்படியான நெருக்கங்கள் மத்தியில் நான் யாரைப் புரிந்துகொள்ள நெருங்குகிறேனோ, அவர்கள் என்னைப் புரிந்துகொள்வதும் பெரும்பாலும் நேர்ந்திருக்கிறது. பகுப்பையும் தொகுப்பையும் அறியாத பரசுரமாகவே நாளிருக்கிறேன். என் தந்தையின், தாயின், மனைவியின், நண்பர்களின், சிறகுகளிலிருந்து உதிர்ந்திருக்கிறது, என் எழுத்தின் ஒற்றைப் பீலி. ஒற்றைப் பீலி பறந்து வருமே தவிர பறக்கச் செய்யுமா!




Tuesday, December 6, 2016

மக்களால் நான் .........


மரணம் மனிதர்களின் மதிப்பை எப்போதும் குறைப்பதில்லை.  முடிந்த வரை அதிகப்படுத்திவிட்டுதான் செல்கிறது.   நம் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணமும் அவருடைய மதிப்பையும் புகழையும் பன்மடங்கு அதிகப் படுத்திவிட்டுச் சென்று இருக்கிறது.

நம்மைச் சுற்றி "ததாஸ்து" தேவதைகள் சுற்றிக் கொண்டு இருப்பதாக சொல்வார்கள்.   அதாவது நாம் ஏதாவது சொன்னால் அந்த தேவதைகள் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்வார்களாம்.  ஜெயலலிதாவுக்கு அப்படிப் பட்ட தேவதைகள்  அதிகம் போல இருக்கிறது.  அவர் சொன்ன பல விஷயங்கள் அப்படியே ஆகி  இருக்கின்றன.

அப்படித்தான்  "மக்களால் நான் மக்களுக்காக நான்" என்ற வார்த்தையும் அப்படியே நடந்திருக்கிறது.    அதிமுக தொண்டர்கள் அவருக்கு மிகப் பெரிய பலம்.  இன்றைய இறுதி ஊர்வலத்திலும் அதை அவர்கள் மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள்.  அதைப் போல தொண்டர்களுக்கும் அவர்தான் மிகப் பெரிய பலம்.   தன்னைச் சுற்றி ஆயிரம் எதிரிகள் இருந்தும் "என் கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே இல்லை" என்று சொல்லி தன் தொண்டர்களை உற்சாகப்படுத்தியவர்.  அதிமுக தொண்டன் ஒவ்வொருவனும் தன்னுடைய மிகப் பெரிய பலத்தை இன்று இழந்து நிற்கிறான்.  

ஜெயலலிதாவின் காலில் ஒவ்வொரு முறையும் நம் அமைச்சர்கள் மொத்தமாக பொத்தென்று விழும்போது எரிச்சலாக இருக்கும்.    ஆனால் இன்று ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் காலைத் தொட்டு முதல்வர் OPS கண்ணீர் விட்ட போது மனம் கனத்தது.  இன்று அவர் அழுததும் காலில் விழுந்து வணங்கியதும் உண்மையிலேயே out of gratitude தான். ஏனென்றால் ஜெயலலிதா இருக்கும் போது ஒப்பாரி வைத்த பலர் இன்று ஒப்புக்கு கூட அழுது பார்க்கவில்லை. 

ஜெயலலிதாவின் ஆளுமைக்கு அவர் தன் வாழ்வில் சில தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் அவர் இன்னும் மகத்தான உயரங்களை அடைந்து இருப்பார். அவர் தன்னுடைய தவறுகளால் கீழே அடிக்கடி சறுக்கி விழுந்தாலும் காலம் அவரை எப்போதும் தூக்கிப் பிடித்துத்தான் இருக்கிறது. இப்போது காலம் ஆன பின்னும்.

எம்ஜிஆர் மறைவின் போது சென்னையில் நடந்த வன்முறை சம்பவங்கள் வரலாற்றின் கறை.  அப்படி எந்த வன்முறையும் இல்லாமால் அமைதியாக நடந்தது இன்றைய ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம்.  உண்மையிலேயே காவல் துறையை மிகவும் பாராட்ட  வேண்டும்.  வீட்டில் sofa வில் வசதியாக உட்கார்ந்து ஒரு நாள் கண் விழித்து டிவி பார்த்தாலே மறுநாள் உடம்பு மிகவும் சோர்வாகி விடுகிறது.  ஆனால் கடந்த சில நாட்களாக சரியான உணவு தூக்கம் இல்லாமல் நின்று கொண்டோ அல்லது நடந்து கொண்டோ இருந்து தொண்டர்களை சமாளித்து VIP களுக்கு பாதுகாப்பு கொடுப்பது என்பது சாதாரண காரியம் இல்லை.  Hats Off to Tamil Nadu போலீஸ்.

ஜனவரி 21, 1999 ம் ஆண்டு NDTV நேர்காணலில் நிருபர் கேட்கிறார்.  உங்களுக்கு அரசியலை விட்டு விலகும் எண்ணம் இருக்கிறதா ? அதற்கு ஜெயலலிதா சொன்ன பதில்.  அதுதான் என் கனவு.  இன்று மரணம்தான்  அவரது கனவை மெய்ப்பித்து இருக்கிறது.  

எம்ஜிஆருக்கு பின் அதிமுகவுக்கு   ஜெயலலிதா இருந்தார்.  இப்போது ஜெயலலிதாவிற்கு பின் யார் ?  நல்லதே நடக்கட்டும். 


Tuesday, November 15, 2016

விடாத கறுப்பு


பத்து நாட்களுக்கு முன் வங்கியில் செலவுக்காக 10000 ரூபாய் எடுத்த போது ஒரு நூறு ரூபாய் கட்டை எடுத்து கொடுத்தார் வங்கி அதிகாரி.  500 அல்லது 1000 ரூபாயாக இருந்தால் கொடுங்கள் என்று சொல்ல நினைத்து, பரவாயில்லை அடிக்கடி 100 ரூபாயும் தேவைப் படுகிறது என்று வாங்கிக்   கொண்டேன். அன்று எனக்குத் தெரியாது - இன்னும் சில நாட்களில் இந்தியாவின் "மதிப்புமிக்க" பணக்காரர்களில் நானும் ஒருவனாக இருக்கப் போகிறேன் என்று.

இந்தப் பதிவை எழுதும் இந்த நேரம் வரை எந்த வங்கி வாசலிலும் நிற்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.  ஆனால் கையிருப்பு குறைந்து கொண்டே வருவதால் சீக்கிரம் நிற்க நேரிடலாம்.  அதற்குள் நிலைமை ஓரளவு சீராகும் என்று நம்புகிறேன்.

Demonetization எனப்படும் பணமதிப்பிறக்கம் (??) செய்வது இது முதல் முறை அல்ல.  மூன்றாவது முறை. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு வருடம் முன்பு அதாவது 1946 ம் ஆண்டில் முதல் முறையாக பணமதிப்பிறக்கம் செய்யப் பட்டது.  பிறகு 1978-ம் ஆண்டு ஜனதா ஆட்சிக் காலத்தில்  திரு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது இரண்டாவது முறையாக பணமதிப்பிறக்கம் செய்யப் பட்டது.  இப்போது மூன்றாவது முறையாக  நமது பிரதமர் மோடி அவர்களால் பணமதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 

As Indians we are good in planning but bad in implementation என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டோம்.  மிக நல்ல திட்டம் மிக மிக சொதப்பல் ஆகிக் கொண்டிருக்கிறது. 

1946-ம் ஆண்டிலும் 1978-ம் ஆண்டிலும் பணமதிப்பிறக்கம் செய்யப் பட்ட கரன்சிகள் ரூபாய் 1000, 5000 மற்றும் 10000. இப்போது 500 மற்றும் 1000 ரூபாய்கள்.  இதில் கவனிக்கப் வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் 1978-ம் ஆண்டில் 1000 ரூபாய் என்பது பொது மக்களிடம் புழக்கத்தில இல்லாத   பணம். அதனால் இந்த நடவடிக்கை பொது மக்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. ஆனால் இப்போது 500-ம் 1000-ம் சர்வ சாதாரணம். அதனால் திடீரென்று தகுந்த முன் ஏற்பாடுகள் ஏதுமின்றி இந்தக் கரன்சிகளை கழட்டி விட்டதால் பொது ஜனம் கால் கடுக்க கடுப்புடன் நின்று கொண்டிருக்கும் நிலை.

அதுவும் தவிர 500 மற்றும் 1000 ரூபாய் கறுப்பு பணம், சில வங்கி அதிகாரிகளின் துணையுடன் 2000 ரூபாய் கறுப்பு பணமாக மாறுவதாகத் தகவல்.  இப்படி நடப்பது நடந்து கொண்டே இருப்பதால் நிற்பவர்கள் நின்று கொண்டே இருக்கிறார்கள்.

நாங்க எல்லாம் வலது பக்கம் indicator  போட்டு இடது பக்கம் திரும்புவோம் என்று சொல்லி இடது பக்கம் திரும்பிய ஒருவன் முட்டு சந்தில் போய் முட்டிக்கொண்டானாம். அப்படி ஆகிவிடக் கூடாது கறுப்பு பண ஒழிப்பு திட்டம்.

அப்புறம் ஜோக்கர் படத்தில் வரும் "என்னங்க சார் உங்க திட்டம் என்னங்க சார் உங்க சட்டம்" என்ற யுக பாரதியின்  பாடல் வரிகளை போல ஆகிவிடக்கூடும். 

ஊழல் என்பது நாக்கில் ஊறும் உமிழ் நீர் போன்றது.  துப்பத் துப்ப ஊறிக் கொண்டேதான்  இருக்கும். மனிதனின் ஆசை இருக்கும் வரை ஊழல் ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் கண்ட இடங்களில் துப்பி அசிங்கம் செய்யாமல் இருந்தால் போதும்.

தவறுகளை மிக விரைவில் களைந்து ஊழலுக்கும் கறுப்பு பணத்துக்கும் எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்தால், மோடி Sir - You are going to be remembered forever in the Indian history.

Friday, October 28, 2016

வலி இல்லாத வாழ்த்துக்கள்


இனிய "தீபாவலி" நல்வாழ்த்துக்கள் என்று ஒரு நண்பரிடம் இருந்து குறுந்தகவல் வந்திருந்தது. பாவம் என்ன வலியோ ??.  அந்த வலியிலும் வாழ்த்தை அனுப்பி இருக்கிறார். 

உண்மையில் யாருக்குத்தான் வலியில்லை.  Selfie புகைப்படத்தில் உறைந்திருக்கும் ஒவ்வொரு புன்னகைக்கு பின்னும் உறையாத, உலராத வலிகள் எல்லோருக்கும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

வாழ்க்கை எப்போதும் நமக்கு எதையாவது சொல்லிக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது.  நாம்தான் கவனிக்க மறந்து விடுகிறோம் (அல்லது மறுத்து விடுகிறோம்).  

சென்ற வாரம் சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் போது விமானத்தில் கண்ட ஒரு காட்சி.

எனக்குப் பக்கத்தில் ஒருவர் தன் மகனுடன் அமர்ந்திருந்தார். அவர் மனைவியும் மகளும் ஒரு சில இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தார்கள்.

மகன் தோளுக்கு மேல் வளர்ந்திருந்தான் - உடல் அளவில் மட்டும்தான்   மனதளவில் இன்னும் ஒரு குழந்தையாகவே இருந்தான்.  அவன் ஒரு குழந்தையைப் போலவே அடம் செய்து கொண்டும், ஒருமாதிரி சத்தம் எழுப்பிக் கொண்டும் இருந்தான்.  

சுற்றி இருந்த பயணிகள் அனைவரின் கவனமும் அந்தப் பையன் மீதே இருந்தது.  அந்தத் தந்தையின் முகம் ஒருவித பதட்டத்துடன்  இறுகி இருந்தது. யாரவது ஏதாவது சொல்லி விடுவார்களோ அல்லது விமானப் பணிப்பெண் ஏதாவது complaint செய்து விடுவாரோ என்று.  அவரும் ஏதேதோ செய்து அவனை சமாதானப்படுத்திகொண்டு இருந்தார்.

விமானம் take off ஆகும் போதும் landing ஆகும் போதும் ஜன்னல் ஷட்டரை திறந்து வைக்க வேண்டும் என்பது ஒரு பாதுகாப்பு விதி. Lift the window shades, fold up the tables, straighten the seat and fasten the seat belt இவையெல்லாம் விமானத்தில் அடிக்கடி சொல்லப்படும் பாதுகாப்பு மந்திரங்கள்.  ஏனென்றால் எந்த ஒரு அவசரக் காலத்திலும் பயணிகள் தப்பிப்பதற்கு மிகக் குறைந்த கால அவகாசமே இருக்கும்.  அதற்க்காகத்தான் இத்தனை விதிகள் (ஆனால் நம் விதி முடிந்து விட்டால் இந்த விதிகள் எதுவும் பயன்படாது என்பது வேறு விஷயம்).

மனிதர்கள் பொதுவாக மிகவும் நல்லவர்கள்.  தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி பொதுவான பிரச்சினை என்று வரும்போது தங்களால் முடிந்த அன்பையும் நேசத்தையும் காட்டிவிடுகிறார்கள்.  சென்னையின் பெரு மழையின் போது அந்த அன்பைத்தான் பார்த்தோம்.

இப்போதும் அந்த ஒரு அன்பைத்தான் அங்கே கண்டேன்.  விமானப் பணிப்பெண் ஒவ்வொரு பயணியிடமும் மேற்சொன்ன பாதுகாப்பு விதிகளை சொல்லிக் கொண்டே வந்தாலும், அந்த பையனிடம் எதுவும் சொல்லவில்லை. தன்னுடைய சக பணிப்பெண்ணிடமும் "கண்டுகொள்ளாதே" என்று சாடை காட்டிவிட்டார்.  Rule என்று இருந்தால் exception என்று இருக்கும்தானே.  அதை சரியாகக் கடைபிடித்தார் அன்று அந்தப் பெண்.    ஏனென்றால் பயணிகளின் அமைதியான பயணமும் அவரின் கடமைதானே.  சுற்றியிருந்த பயணிகளும் அந்தத் தந்தை மகன் மீது ஒருவித பரிவுடன்தான் இருந்தார்கள்.

எனக்கும் அந்தத் தந்தையின் மீது ஒரு அளவு கடந்த நேசம் ஏற்பட்டது. மனவளர்ச்சி இல்லாத அந்தக் குழந்தையை எவ்வளவு பாதுகாப்பாக கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார்.  தாய் தந்தைக்குப் பிறகு அந்தக் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் ?  நமக்கே இந்தக் கேள்வி எழும்போது அந்தப் பெற்றவர்களுக்கு எண்ணம் எல்லாம் அதில்தானே இருக்கும். அவரின் கவனம் எல்லாம் அந்தப் பையன் மீதே இருந்தது. அந்த விமானப் பயணத்தைக் கொஞ்சமும் அவரால் அனுபவிக்க முடியவில்லை.

சாப்பாட்டில் காரம் இல்லை. அவர் என்னுடன் முன்பு போல அன்பு காட்டுவது இல்லை. நான் நம்பிக்கை வைப்பவர்கள் என்னை ஏமாற்றி விடுகிறார்கள்.  முடி அதிகம் உதிர்கிறது. எனக்கு colour கொஞ்சம் குறைவு. அவர் வைத்திருக்கும் car என்னிடம் இல்லை .......  இப்படி எத்தனை ஆயிரம் குறைகள் நம் மனதில் இருந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல்வோம். ஏனென்றால் அவர் நமக்கு உண்மையான பிரச்சினைகளை அளிக்கவில்லை என்று. அப்படி அவர் அளித்திருந்தால் நாம் இந்தக் குறைகளை எல்லாம் பெரிதாகவே நினைத்திருக்க மாட்டோம்.

எங்கோ படித்த சில வரிகள்.

உணவில் ருசி இல்லை என்று சொன்னேன். எனக்கு உணவே இல்லை என்று அவன் சொன்னான்.

என் உறவும் நட்பும் சரி இல்லை என்று சொன்னேன்.  நான் நட்பும் உறவும் எதுவும் இல்லாத அனாதை என்று அவன் சொன்னான்.

காலுக்கு சரியான செருப்பு இல்லை என்று சொன்னேன்.  எனக்கு காலே இல்லை என்று அவன் சொன்னான். 

எல்லாவற்றுக்கும் எதிர்ப்பாட்டு பாடுகிறாயே யார் நீ என்று கேட்டேன். வரங்களை சாபங்களாக மாற்றிக் கொள்ளும் சாதாரண மனிதன் நீ. சாபங்களை வரங்களாக மாற்றத் துடிக்கும் மாமனிதன் நான் என்று அவன் சொன்னான். 

உண்மையான பிரச்சினை இருப்பவர்கள் அதை தீர்க்க அல்லது சமாளிக்க முயல்கிறார்கள்.  அப்படி பிரச்சினை இல்லாத நாம், நாமாகவே பல பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு அல்லல் படுகிறோம்.

Blessing என்றால் என்ன என்று ஒரு குருவிடம் கேட்டார்கள்.  அவர் சொன்னார் "நாம் காலை கண் விழிப்பதே ஒரு blessing தான்.  ஏனென்றால் இரவு தூங்கச் சென்ற எத்தனையோ பேர் மறுநாள் காலை கண்விழிப்பதே இல்லை".

நாம் வாழும் ஒவ்வொரு நாளும் blessing தான் என்ற நினைவை கொஞ்சம் கொஞ்சமாக நம் எண்ணத்தில் பதிய வைப்போம்.  Then our life would be truly a  blessed one.

எல்லோருக்கும் வலி இல்லாத தீபாவளி நல்வாழ்த்துக்கள். 

Monday, October 10, 2016

பூட்ட ஒடச்சுடு


சென்ற வாரம் சாஸ்திரி பவன் செல்வதற்க்காக ஆட்டோவை எதிர்பார்த்து சூளைமேடு மேத்தா நகர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நேரத்தில் சாஸ்திரி பவன் செல்லும் bus காலியாக வந்தது.  மாநகரப் பேருந்தில் பயணம் செய்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் பஸ்சிலேயே சென்று விடுவோம் என்று ஏறி விட்டேன்.  கண்டக்டரிடம் 50 ரூபாயை எடுத்து நீட்டி ஒரு சாஸ்திரி பவன் என்று சொன்னேன்.  அவர் வெறும் 5 ரூபாய்க்கு எனக்கு சாஸ்திரி பவனை கொடுத்துவிட்டார்.  மீட்டருக்கு மேலே குறைந்தது 20 ரூபாயாவது கொடுத்து பழக்கப்பட்ட என் கைகளுக்கு வெறும் 5 ரூபாயில் இது ஆடம்பர பயணமாகப் பட்டது.

ஆனால் நான் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல.  டிக்கெட்டை வாங்கிக்கொண்டு கண்டக்டர் இருக்கைக்கு எதிர்புறம் சென்று அமர்ந்தேன். அப்போது எனக்குப் பின்னால் ஒரு பெண்மணி தன் மகனிடம் பேசிய பேச்சு என் காதில் வந்து விழுந்தது (நான் ஒட்டுக் கேட்கவில்லை.  அவர் பேசியது முன்னால் இருந்த driver இருக்கை வரை நன்றாக கேட்டிருக்கும் - அவ்வளவு சத்தமாக பேசினார்).  அவர் பேசியதை அவர் வார்த்தைகளிலேயே கொடுக்கிறேன்.

"நீ எப்ப வூட்டுக்கு வர ?
இன்னாது  ஒரு மணிக்கு வந்துடுவியா ? நான் வர்றதுக்கு 3 மணி ஆவுமே.
சாவி என்கிட்டேதான் இருக்கு.  
சரி, வந்தா வெய்யில்லயா நிப்ப.
ஒன்னு பண்ணு.  சீக்கிரம் வந்துட்டா பூட்ட ஒடச்சுடு.
அதுக்கு இன்னா பண்றது. வேற பூட்டு போட்டுக்கலாம்"

எனக்கு stun ஆகிவிட்டது.  ஒரு சில மணி நேரம் கூட தன் மகன் வீட்டிற்கு வெளியே காத்திருப்பதை விரும்பாத ஒரு தாயின் மனம்.  "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்பது இதுதானோ.

"We are living in a world where we love things and use people" என்று சொல்வார்கள். ஆனால் அப்படி இல்லை.  Still many people love people and use things.  அதனால்தான் அப்படி உடனடியாக பூட்டை உடைத்து விடு என்று சொல்ல வைத்தது.

எல்லோரும் அப்படி பூட்டை உடைப்பது நடைமுறையில் சாத்தியமா என்றால் இல்லைதான். நாம் அன்பை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.  இந்த அம்மா பூட்டை உடைத்துவிட்டார்.  அவ்வளவுதான்.

இந்த நேரத்தில் முல்லா கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.  அவர் எப்போதும் வெளியில் செல்லும்போது கதவை திறந்து விட்டு செல்வாராம். வீட்டுக்குள் இருக்கும்போது பூட்டிக் கொள்வாராம்.  ஏன் முல்லா இப்படி செய்கிறீர்கள் ? என்று கேட்டால் "என் வீட்டில் நான்தான் விலை மதிப்பு மிக்க பொருள்" அதனால் தான் என்று சொன்னாராம்.

பொருள் தேடும் வாழ்க்கையிலே, வாழ்க்கையின் பொருளையும் தேட வேண்டிய நேரமாகப் பட்டது எனக்கு.









Wednesday, September 21, 2016

நானும் இன்று எடிசன் ஆனேன்


தலைப்பைப் பார்த்துவிட்டு நானும் எதையோ கண்டுபிடித்து விட்டேன் என்று நினைத்துவிடாதீர்கள்.  

சில நாட்களுக்கு முன் என்னுடைய Laptop கொஞ்சம் மக்கர் செய்ய ஆரம்பித்தது.  சரி Service Engineer இடம் கொடுத்தால் சரியாகிவிடும் என்று கொடுத்துவிட்டேன்.  

அன்று இரவு ஒரு எண்ணம் மனதில் ஓடியது.  நம் கம்ப்யூட்டரில் இருக்கும் நம்முடைய  data எல்லாம் காலியாகிவிட்டால் என்ன செய்வது.  Office data வுக்கு back  up இருந்தது.  என்னுடைய personal data வுக்கு எந்த back up ம் இல்லை.  சரி நானும் இன்று எடிசன் ஆனேன் என்று blog எழுத வேண்டியதுதான் என்று கிண்டலாக நினைத்துக் கொண்டேன்.

மறுநாள் நான்  நினைத்தது போலவே நடந்தது.  Service Engineer என்னுடைய Laptop ஐ சுத்தமாக கொடுத்தார். அதாவது எந்த file ம் அதில் இல்லை.  கேட்டால் ஏதோ virus affect ஆகி விட்டது என்று casual ஆக சொல்லி விட்டார். நடந்து சென்று மருத்துவமனையில் admit ஆனவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மொத்தமாக அனுப்பி வைப்பது போல இருந்தது Service Engineer சொன்னது.

So கிண்டலாக முதல் நாள் நினைத்ததை இப்போது நிஜமாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அது சரி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு என்ன நடந்தது என்று உங்களில் சிலர் நினைக்கலாம்.

1914 ம் ஆண்டு டிசம்பர்  மாதம் 10 ம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் ஒரு பெரிய தீ விபத்து எடிசனின் தொழிற்சாலையில் ஏற்பட்டது.

எடிசனுக்கு அப்போது 67 வயது.  அவர் தன்னுடைய மகனை அழைத்து சொன்னார் "உன்னுடைய அம்மா மற்றும் அனைவரையும் உடனே அழைத்து வா.  அவர்கள் இப்படி ஒரு தீயை இதற்கு முன்னும் பின்பும் பார்க்கப் போவதில்லை. இந்தத் தீ தேவையில்லாத நிறைய விஷயங்களை எரித்து விட்டது".

இன்றைய தேதி மதிப்பில் எடிசன் இழந்தது சுமார் 15000 கோடி.  ஆனால் அவர் மிகவும் நம்பிக்கையுடன் சொன்னார் "Although I am over 67 years old, I'll start all over again tomorrow".

அந்த நம்பிக்கை பொய்யாகவில்லை.  அவர் விரைவில் அதில் இருந்து மீண்டு வந்தார்.  பல சாதனைகளை படைத்தார்.

உங்களுக்கு Stoic என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா ?

Someone who "transforms fear into prudence, pain into transformation, mistakes into initiation, and desire into undertaking".

எடிசன் ஒரு Stoic.  அப்படி நாமும் நம்முடைய வலிகளையும், வேதனைகளையும், தோல்விகளையும், சோதனைகளையும் கடந்து வெற்றி கண்டால் நாமும் ஒரு Stoic தான்.

எடிசன் போன்ற மேதைகளின் வாழ்க்கையை அறிந்து கொண்டு  கூடவே, எதை கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு என்ற கீதையின் சாரத்தையும் அவ்வப் போது நினைத்துக் கொண்டால், பெரிய இழப்பிற்கு மனம் பக்குவப்படாமல் இருந்தாலும் இப்படி சின்னச் சின்ன இழப்புக்கெல்லாம் மனம் சோர்ந்து விடாது.






Friday, September 9, 2016

நடந்தாய் வாழி காவேரி


மழை வந்தால் வெள்ளம் வெள்ளம் என்று கூப்பாடு போடுவதும் வெயில் அடித்தால் கர்நாடகா தண்ணீர் தர வில்லை. ஆந்திரா தண்ணீர் தரவில்லை என்று புலம்புவதும் நம் வாடிக்கையாகி விட்டது.

நம்மில் எத்தனை பேர் நம் வீட்டுக் குழாயில் பக்கத்துக்கு வீட்டுக்காரர் வந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்தால் "வாங்க சார் தண்ணீதானே எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று மனமுவந்து சொல்வோம். சென்னைக்கு வீராணம் ஏரி தண்ணீர் தருவதற்கே கடலூர் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

So, மொழியால் பிரிவினை பேசி தகராறு செய்வதில் எந்த அர்த்தமும் கிடையாது.

மழை வரும்போது கர்நாடக மாநிலம் நினைத்தாலும் தண்ணீரை அடைத்து வைக்க முடியாது.  திறந்து விட்டுத்தான் ஆக வேண்டும்.  வரும் தண்ணீரை நாம் என்ன செய்கிறோம்.  அப்படியே கடலில் கலக்க விட்டு விடுகிறோம்.  Save it for the rainy day என்று சொல்வார்கள்.  ஆனால் தண்ணீரை பொறுத்தவரை save it for the summer day தான்.

காவிரி, தாமிரபரணி, பாலாறு என்று எத்தனை ஆறுகள் தமிழ்நாட்டில் உள்ளது. கடலில் கலக்கும் முன்  இவை கடக்கும் தூரம் எவ்வளவு ? இதில் எத்தனை இடங்களில் at  least  தடுப்பணையாவது  கட்டி இருக்கிறோம்.  கரிகாலன் கட்டிய கல்லணை என்று பழம் பெருமை பேசியே காலத்தைக் கழிக்கிறோம்.

நம்முடைய அரசியல்வாதிகள் மக்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டு அறிவை மழுங்கடித்து விடுகிறார்கள்.

சென்ற வருட சென்னை வெள்ளத்தில் நாம் என்ன பாடம் கற்றுக் கொண்டோம்?  சென்ற ஒரு வருடத்தில் எந்த ஒரு நீர் நிலையாவது தூர் வாரப் பட்டிருக்கிறதா ?  அடுத்த மழைக்கும் இதே நிலைதான் தொடரும்.  ஒரு வாரம் அல்லல் படுவோம். சில பல உயிர்களை இழப்போம்.  பிறகு அரசாங்கம் தரும் 5000 (இந்த முறை கொஞ்சம் அதிகப் படுத்தலாம்) பிச்சைக் காசைப் பெற்றுக் கொண்டு அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுவோம்.

50 ஆண்டுகளுக்கு முன் தண்ணீரை பாட்டில் அல்லது கேனில் வைத்து குடிப்போம் என்று யாரவது சொல்லி இருந்தால் அவரைப் பார்த்து சிரித்து இருப்பார்கள்.  அதைப் போல இன்னும் 50 ஆண்டுகள் கழித்து நம் சந்ததியினர் குளிக்க மாட்டார்கள்.  துணிகளை dry cleaning செய்வது போல் தங்களையும் dry cleaning செய்து கொள்வார்கள் என்று யாராவது சொன்னால் சிரிக்க வேண்டாம்.  இது நடக்க chance மிக அதிகம்.

சரி நம்மால் என்ன செய்ய முடியும்.  நாமே அன்றாட பொருளாதார நெருக்கடியில் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்து சும்மா இருந்து விடலாமா ?

முன்பெல்லாம் துவைக்கும் தண்ணீர், குளிக்கும் தண்ணீர் பாத்திரம் கழுவும் தண்ணீர் என்று எல்லா நீரும் மீண்டும் மண்ணுக்கே செல்லும்.  இப்போது ஒருமுறை bath room  சென்று flush செய்தால் சில லிட்டர் என்று எவ்வளவு நீர் நம் ஒவ்வொருவராலும் waste செய்யப் படுகிறது.  இவை மண்ணுக்கு செல்வதில்லை.  கழிவு நீராய் சென்று கடலில் கலந்து விடுகிறது.  இதை  recycle செய்தாலே எவ்வளோவோ நீரை மிச்சம் செய்ய முடியும்.  

இப்படி எத்தனையோ விஷயங்களில் நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பிப்பதே ஒரு நல்ல ஆரம்பம்தான்.

ஒவ்வொரு எண்ணமும் ஒரு விதைதான்.  நாம் ஒவ்வொருவரும் ஒரு நல்ல எண்ணத்தை விதைப்போம். அறுவடையை நாம் செய்தால் என்ன நம் சந்ததி செய்தால் என்ன.




Tuesday, August 30, 2016

சித்திரச் சோலைகளே


சென்னை நகரின் நெரிசலில் தினமும் சிக்கித் தவிக்கும்போதெல்லாம் எப்போது இந்த மெட்ரோ ரயில் திட்டம் முடியும் என்று நினைக்கிறோமே தவிர அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களைப் பற்றி கவலைப் படுவதில்லை.

சில நாட்களுக்கு முன் ஹிந்து நாளிதழில் வந்த ஒரு செய்தியைப் படித்ததும் மனது கனத்தது.  சியாம் - பர்மா (தாய்லாந்து - மியான்மர் ) - மரண ரயில் பாதை என்ற தலைப்பில் R. குறிஞ்சிவேந்தன் என்பவர் எடுத்த ஒரு டாக்குமெண்டரி படத்தைப் பற்றிய செய்தி அது.

1940-42 ம் ஆண்டுகளில் தாய்லாந்திற்கும் பர்மாவிற்கும் இடையில் கிட்டத் தட்ட 415 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்க ஜப்பான் அரசால் பணியமர்த்தப் பட்ட தமிழர்களில்  சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்தக் குளிரிலும், பாம்பு மற்றும் இதர கொடிய விஷ ஜந்துக்கள் கடித்ததிலும் இறந்திருக்கிறார்கள்.   1.5 லட்சம் என்பது இப்போதே மிகப் பெரிய எண்ணிக்கை.  சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு பெரிய எண்ணிக்கையாக இருந்திருக்கும்.

ஐந்து வருடங்களில் முடிக்க வேண்டிய திட்டத்தை ஜப்பான் 15 மாதங்களில் முடித்திருக்கறது.  அப்படியென்றால் அந்தத் தொழிலாளர்கள் எப்படிப் பட்ட துயரங்களை அனுபவித்திருப்பார்கள் என்று யூகிக்க முடியும்.

வறுமை எத்தனை மனிதர்களின் வாழ்க்கையை மிக அனாசயமாக தூக்கி எறிந்து விடுகிறது.

உங்களுக்கு ஊட்டி பிறந்த கதை தெரியுமா ?

1820 ம் ஆண்டு கோவை கலெக்டராக இருந்த திரு. ஜான் சல்லிவன் என்ற ஆங்கிலேயர் ஊட்டி மலையைப் பற்றி கேள்விப் பட்டு ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் இங்கிலாந்து சீதோஷண நிலைக்கு ஏற்ப ஒரு இடம் ஊட்டி என்றும் அங்கு இரவில் ஊற்றி வைத்தால் காலையில் அந்த தண்ணீர் பனிக் கட்டியாக உறைந்து விடுகிறது.  அதனால் அந்த இடத்திற்கு செல்லவும் மக்கள் சென்று வர வசதியும் செய்வதற்க்கு அனுமதி வேண்டினார்.  முதலில் அனுமதி மறுக்கப் பட்டாலும் பிறகு அவருக்கு அனுமதி கிடைக்கிறது.

குதிரைகள், யானைகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் கோவையில் இருந்து ஊட்டிக்குப் புறப்பட்டார்.  பாதி வழியில் குதிரைகளாலும் யானைகளாலும் மலை ஏற முடியவில்லை.  பிறகு அந்த மலைக்கு பாதை அமைத்ததெல்லாம் ஏழைத் தொழிலாளர்கள்தான்.

ஊட்டிக்கு தேன் நிலவு சென்ற முதல் தம்பதி ஜான் சல்லிவனும் அவரது மனைவியுமாகத்தான் இருப்பார்கள்.  ஏனென்றால் 1820 ம் ஆண்டுதான் அவருக்கு திருமணம் நடந்ததாகத் தெரிகிறது.  இந்தத் தம்பதிக்கு 8 குழந்தைகள். ஜான் சல்லிவனின் மனைவியும் அவரது மூத்த மகனும் 1838 ம் ஆண்டு ஊட்டியில் ஏற்பட்ட தொற்று நோயால் இறந்துவிட ஜான் சல்லிவன் பிற குழந்தைகளை அழைத்துக் கொண்டு இங்கிலாந்து சென்றுவிட்டார்.

நாம் இன்று வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து வசதி வாய்ப்புக்களுக்கும் முகம் தெரியாத எத்தனையோ மனிதர்களின் தியாகம் என்றால் அது மிகையாகாது.

"சித்திரச் சோலைகளே 
உமை நன்கு திருத்த இப்பாரினிலே 
முன்னம் எத்தனை தோழர்கள் 
ரத்தம் சொரிந்தனரோ 
உங்கள் வேரினிலே" 

என்ற பாரதிதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

Wednesday, August 10, 2016

ஞானப் பல் தப்பிய கதை

"முப்பத்திரு பல் முனைவேல் காக்க" என்று கந்த சஷ்டி கவசத்தில் படிக்கும் போது பாலன் தேவராயன் ஸ்வாமிகள் ஏன் பல்லுக்கு கூட இவ்வளவு importance கொடுத்தார் என்று சிறுவயதில் புரியவில்லை - கிரிக்கெட் விளையாடும்போது என் நண்பன் கண்ணனுடன் மோதி முன் பல் damage ஆகும்வரை (அவன் முன் நெற்றியில் நாலு தையல் போட்டது வேறு விஷயம்). 

அதற்குப் பிறகு எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது.   சென்ற மாதத்தில் ஒரு  நாள் ஹோட்டலில் தோசை சாப்பிடும்போது கடைவாயில் இருந்து 'கடக்' என்று ஒரு சத்தம். இதற்குப் பெயர்தான் கல் தோசை போலும் என்று நினைத்து கல்லை வெளியில் எடுத்தால் அது கல் இல்லை, சாட்சாத் என் பல்லேதான். விண்ணில் இருந்து மண்ணில் விழும் எரி கல்லின் ஒரு சிதறல் போல ஒரு சின்ன piece தான்.  நாக்கைத் துழாவிப் பார்த்தால் மழைக்குப் பிந்தைய சென்னை நகரின் சாலையைப் போல ஒரு பெரிய பள்ளம் (அல்லது எனக்கு அப்படித் தோன்றியது).

வலியெல்லாம் ஒன்றுமில்லை.  ஆனாலும் என்ன சாப்பிட்டாலும் உணவுத் துகள்கள்  மாட்டிக் கொண்டு சாப்பிடுவதை விட அதை எடுப்பதற்கு அதிக நேரம் செலவு செய்ய வேண்டி இருந்தது (as a matter of hygienic also).

சரி பல் டாக்டரிடம் சென்று அடைத்து விடலாம் என்று நினைத்து casual ஆக தெரிந்த டாக்டரிடம் சென்று காண்பித்தேன் (தெரியாத doctor அனாவசியமாக பயமுறுத்திவிடலாம் என்பதால்).  ஆனால் தெரிந்த டாக்டரும் பயமுறுத்தலாம் என்று அன்று புரிந்து கொண்டேன்.

அவர் சொன்ன விஷயம் இதுதான்.  ஞானப் பல் என்று அழைக்கப் படும் wisdom tooth மற்ற பற்களைப் போல அல்ல. (Tooth  singular or plural ? - என்னைப் போல தமிழ் medium படித்த ஆட்களுக்கு  அடிக்கடி இப்படி basic doubts வந்து விடுகிறது. என்னைப் போலவே confuse ஆகிவிடும் ஆட்களுக்கு சொல்கிறேன்.  Tooth singular தான். ஆனாலும் திரும்பவும் அடுத்த வாரம் கேட்டால் மீண்டும் doubt வர chance அதிகம்). சரி மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன்.  இது தாடை எலும்போடு (jaw bone) ஒட்டியிருக்குமாம்.  அதனால் மற்றப் பற்களை போல சுலபமாக (??) பிடுங்கி விட முடியாதாம். இது கொஞ்சம் complicated.  கிட்டத் தட்ட ஒரு சின்ன surgery செய்துதான் எடுக்க முடியும் என்று சுலபமாக சொல்லிவிட்டார். சொத்தை எடுக்கப் போய் நம் சொத்தையே எடுத்துவிடுவாரோ என்று மனம் லேசாக கலங்கி விட்டது.  மீண்டும் பாலன் தேவராயன் ஸ்வாமிகள் நினைவுக்கு வந்து சென்றார். 

ஆனாலும் வேறு வழியில்லை.  மீண்டும் ஒரு நாள் appointment fix செய்து விட்டு சில நாட்களுக்கு முன் சென்று அவரைப் பார்த்தேன்.  முதலில் ஒரு Xray எடுத்துக் பார்த்துவிடலாம் என்று Xray எடுத்துப் பார்த்தவர் சொன்ன விஷயம் என் காதில் தேனாக விழுந்தது.  ஆமாம்.  ஞானப் பல் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.  குழி விழுந்த (??) இடத்தை fill செய்தால் போதும். பிரச்சினை ஏதும் வராது என்று.   அரை மணி நேரத்தில் treatment ஓவர். Complicated என்று நினைத்த விஷயம் மிகவும் easy ஆக முடிந்து விட்டது.

இந்தப் பதிவின் நோக்கம், என் ஞானப் பல் தப்பிய கதையை பீற்றிக் கொள்வதற்காக அல்ல.  நாம் பொதுவாக டாக்டர் நம் உடல்நிலை குறித்து ஏதாவது negative ஆக ஏதாவது சொன்னால் அதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு அதை நம்பி நம்பியே இல்லாத ஒன்றைக் கூட வரவழைத்துக் கொள்கிறோம்.  எனக்குப் பார்த்த ஒரே டாக்டர் ஒரே வாரத்தில் U turn அடித்து விட்டார்.  அதனால் உடல் நலன் குறித்து தேவையற்ற பயம் கொள்ளத் தேவை இல்லை.  டாக்டரும் நம்மைப் போல சக மனிதரே.  அவருக்கு கிடைக்கும் ரிப்போர்ட்டை வைத்து நம் உடல் நலனை கணிக்கிறார்.  Report எப்படி வேண்டுமானாலும் மாறும். இறைவன் மிகப் பெரியவன். அவனை நம்புவோம்.

பின்குறிப்பு : ஞானப் பல்லுக்கும் ஞானத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரே ஒரு ஒற்றுமை ஞானமும் ஞானப் பல்லும் கடைசியில்தான் வரும். 










Wednesday, July 27, 2016

வஞ்சம் இல்லாமல் லஞ்சம் வாங்கினால் .......


B.K. Bansal என்ற பெயர் company secretary வட்டத்தில் நல்ல பரிச்சயமான பெயர். இவர் Ministry  of Corporate  Affairs-ல் Regional  Director ஆக சென்னையில் இருந்தார். மனிதர் அதிகம் பேச மாட்டார்.  அவர் அலுவலகத்தில் இருந்து எந்த file நகர வேண்டும் என்றாலும் ஒரு சிறிய காகிதத்தில் ஒரு தொகையை குறிப்பிடுவார். அதற்க்கு OK என்றால் மேற்கொண்டு பேசலாம். காரியம் நடக்கும். சட்டபூர்வமாக செய்யும் காரியங்களுக்கே இப்படி என்றால் சட்டத்தை மீறி என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளலாம்.

இவர் சமீபத்தில் டெல்லிக்கு பதவி உயர்வு பெற்று சென்றார்.  சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி - Bansal ஒரு corporate நிறுவனத்திடம் இருந்து 9 லட்சம் லஞ்சம் பெற்ற போது CBI அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்ப பட்டார்.

அவருடைய வீட்டில் கோடிக்கணக்கான பணமும், சொத்து ஆவணங்களும்  60 க்கும் அதிகமான வங்கி கணக்குகளும் பறிமுதல் செய்யப் பட்டன.

அதைவிட அதிர்ச்சியான செய்தி. அவருடைய வீட்டில் CBI  raid நடத்தப் பட்ட மறுநாள் அவருடைய மனைவியும், 27 வயதான அவருடைய மகளும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர்.

இன்னும் 3 மாதத்தில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் அவருக்கு இப்படி ஒரு அவலம்.

இந்த செய்தியைப் படித்ததும் மகாகவி பாரதியின் "படிச்சவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்" என்ற வார்த்தைகள்தான் என் மனதில் தோன்றியது.

"அரசன் அன்று கொல்வான் - தெய்வம் நின்று கொல்லும்" என்று சொல்வார்கள்.  இப்போதெல்லாம் தெய்வத்திற்கும் பொறுமை இல்லை போலும்.

பொருள் ஈட்டுவதில் தவறில்லை.  ஆனால் அதை எந்த வகையில் ஈட்டுகிறோம் எனபதில்தான் பலர் தவறி விடுகின்றனர்.  நல்ல வழியில் சேர்க்கும் பொருள் நமக்கு வரமாக அமைகிறது என்றால் தவறான வழியில் சேர்க்கும் பொருள் சாபமாக அமைந்து விடுகிறது.  

Bansal தவறான வழியில் சேர்த்த பொருட்களை எல்லாம் திருப்பிக் கொடுத்தாலும் இழந்த அவருடைய மனைவியையும், மகளையும் திரும்ப பெற முடியுமா ?

இன்று அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள்.  அவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியே வந்த போது அவர் கொண்டு வந்தது அவர் உபயோகப் படுத்திய சில துணிமணிகளும் மற்ற சில பொருட்களும்தான். அவருக்கு முன்னாள் இருந்த பிரதிபா பாட்டில் வெளியேறும்போது சில லாரிகளில் அவருடைய பொருட்களை அள்ளிச் சென்றாராம்.

தன்னுடைய குடும்பத்தினர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து போன செலவையே திருப்பிக் கொடுத்தவர் அப்துல் கலாம் அவர்கள்.  அதனால்தான் அவர் மறைந்து ஒரு ஆண்டு ஆகியும் இந்தியாவே இன்னும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறது.

கலாம் போன்றவர்களின் வாழ்க்கையை நாம் அடிக்கடி நினைவு கொள்வது வாழ்க்கையின் வெற்றி என்பது வீண் ஆடம்பரத்திலும் வெறும் பகட்டு வாழ்க்கையிலும் இல்லை.  எத்தனை பேரின் இதயங்களை நாம் தொட்டிருக்கிறோம்  என்பதில்  உள்ளது என்று உணர்வதற்குத் தான்.

அப்துல் கலாம் அவரகளின் "Transcendence" என்ற புத்தகத்தில் இருந்து சில சிந்தனைகள்.

The senses are not always reliable. Infinite intelligence does not err. quiet time spent in reflection; a life of rigour and austerity; simple service done at any place to help the poor, the deprived, the disadvantaged and the disabled - and aiding animals and the environment - are methods by which infinite intelligence may be most readily contacted.

In the good of others lies our own 
In the progress of others lies our own 
In the joy of others lies our own.

Sunday, July 3, 2016

நம்மைச் சுற்றியும் நாம்தான்

"ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி" என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வெளிவரும் தொடரில் கட்டுரை ஆசிரியர் திரு. ம. செந்தமிழன் பின்வரும் அகநானுற்றுப் பாடல் காட்சி ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

காதலியைக் காம உணர்வுடன் தழுவுகிறான் காதலன்.  அவனைத் தடுத்து விலக்கும் அந்த இளம்பெண் கூறுகிறாள், "தலைவா, இதோ இந்தப் புன்னைமரம் என் சகோதரி. அவளுக்கு எதிரில் என்னால் உன்னைத் தழுவ இயலாது. ஆகவே வேறு இடம் செல்வோம்".

சமீபத்தில் கண்ட ஒரு காட்சி.  ஒரு இளம்பெண்ணும் ஒரு வாலிபனும் மக்கள் நடமாட்டம் அதிகம் ஒரு தெருவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். தன்னைச் சுற்றி மக்கள் கவனிக்கிறார்கள் என்ற எந்த உணர்வும் இல்லாமல் அந்தப் பையன் அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுப்பதும் அந்தப் பெண் அதை விலக்குவதுமாக இருந்தார்கள்.  அதைப் பார்த்த ஒரு பெரியவர் அவர்களிடம் ஏதோ கேட்கப் போனார்.  அதற்கு அந்தப் பெண் கோபத்தில் சொன்ன பதில் "This is our personal matter. Mind your business. 

இன்னொரு காட்சி.  ஒரு ஆட்டோவில் ஒரு காதல் ஜோடி வண்டியை ஓட்டும் ஓட்டுனரும் எல்லா உணர்வுகளும் உள்ள சராசரியான மனிதன் என்ற எந்த உணர்வும் இல்லாமல் காதல் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

மரங்களைக் கூட சக மனிதர்களாக கருதிய சமூகத்தில் வந்தவர்கள் நாம். அதே நாம்தான் இப்போது சக மனிதர்களை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் நமக்கென்று ஒரு தனியான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முன்பெல்லாம் நமக்கு தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்ற அச்ச உணர்வு காதலர்களுக்கு இருக்கும்.  ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் எல்லா ஊர்களில் இருந்தும் படிப்பதற்கும் வேலைக்கும் வருவதால் அந்த அச்ச உணர்வெல்லாம் இப்போது குறைந்து விட்டது.

காதலையும் காமத்தையும் சுமந்து கொண்டுதான் இளமையைக் கடக்க வேண்டும்.  ஆனால் அதில் ஒரு sensitivity இல்லாவிட்டால் அது சில சமயங்களில் நம் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடக் கூடும்.

முன்பெல்லாம் திருமணம் நிச்சயம் செய்யும் வரை பெண்ணின் புகைப் படத்தைக் கூட கொடுக்க மாட்டார்கள்.  அதை அவ்வளவு சென்சிட்டிவிட்டியான விஷயமாக நினைத்தார்கள்.

இன்று விதவிதமான போட்டோக்களை தினந்தோறும் whatsapp லும் facebook லும் upload செய்கிறோம்.  அது யார் யாரிடம் போய் சேருகிறது என்று கூட நமக்குத் தெரிவதில்லை.  Photoshop மூலம் நம் படத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும்.  இதில் பெண்கள்தான் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.  ஏனென்றால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களை நாம் மிகவும் கவனத்துடன் கையாளவேண்டும். இல்லையென்றால் ஸ்வாதிகளையும், வினுப் பிரியாக்களையும் நாம் அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஸ்வாதியின் குடும்பத்துக்காக அனுதாபப்படும் அதே நேரத்தில்,  ராம் குமாரின் குடும்பத்தை நினைத்தாலும் அதிக வேதனையாக இருக்கிறது.

வறுமையின் விளிம்பில் வாழும் ஒரு சாதாரண குடும்பம்.  தன் மகன் நன்றாக படித்து குடும்பத்தினை மேல் நிலைக்கு கொண்டு வருவான் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு இடி அவர்கள் வாழ்க்கையில் விழுந்திருக்கிறது. கொலைகாரன் குடும்பம் என்ற பழி வேறு.   அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் ராம் குமாரைப் பற்றியும் அவன் ஊரில் நல்லவிதமாகவே கூறுகிறார்கள்.

ஸ்வாதி நம்மில் ஒருவர் என்றால் ராம் குமாரும் நம்மில் ஒருவர்தான்.  ஆண் பெண் உறவு மிகவும் சிக்கலாக உள்ள காலக் கட்டம் இது.   ஆண் பெண் உறவை matured ஆக handle செய்ய நாமும் கற்றுக் கொண்டு நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  இதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் அதிகம்.

ராம்குமாரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை தருவதற்கு சட்டம் இருக்கிறது.  ஆனால் ராம்குமார்களை உருவாக்கும் இந்த சமூகத்தின் குற்றத்துக்கு யார் தண்டனை வழங்குவது ?

Monday, June 13, 2016

உங்கள் வாசனை என்ன ?


இன்று மதுரையில் இருந்து நண்பர் திரு. செந்தில் phone செய்திருந்தார்.  என்ன sir உங்கள் blog-இல் ஒரு மாதமாக புதிதாக எதுவும் பதிவு செய்யவில்லையே. அடிக்கடி உங்கள் வலைதளத்தை எட்டிப் பார்த்து ஏமாந்து விடுகிறேன் என்று சொன்னார்.  நம்முடைய வலைதளத்தையும் தினமும் சிலர் பார்க்கின்றனர் என்பதே ஒரு பெருமைதானே.

நீங்கள் சொல்லும் விஷயம் எல்லோருக்கும் தெரிந்த பொதுவான விஷயமாக இருந்தாலும் உங்கள் எழுத்து நடை படிக்கும் போது சுவாரசியமாக இருக்கிறது என்றும் சொன்னார்.  இது போதாதா  நமக்கு.  ஒரு எழுத்தாளனுக்கு தேவையான அனைத்து சாமுத்ரிகா லட்சணங்கலுள் ஒரு சில நமக்கும் இருக்கிறது போலும் என்ற ஒரு சின்ன சந்தோஷம் எனக்கு. 

அவருக்காகவே இன்று ஒரு பதிவு.  

திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "சிறிது வெளிச்சம்" என்ற நூலில் "வாசனையாக மாறுங்கள்" என்ற கட்டுரை ஞாபகம் வந்தது.  அதில் இருந்து சில வெளிச்சங்கள்.

"மனிதர்களின் தீராத வாசனையின் பெயர் சிரிப்பு.  குழந்தைகளின் சிரிப்பை பார்த்து இருக்கிறீர்களா ? காரணம் இல்லாத சிரிப்பு அது. குழந்தைக்கு நினைவுகள் இல்லை.  அது சிரிப்பை மட்டுமே தன் சந்தோஷத்தின் வெளிப்பாடாகக் கொண்டிருகிறது.

குழந்தைகள் சிரிக்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவில்லாதது. அப்படியான சிரிப்பு வளர வளரத் தேய்ந்து விடுகிறது.  பல நேரங்களில் சிரிப்பதற்காக இடம் தேடி, ஆள் தேடி அலைகிறோம்.  நடுத்தர வயதில் சிரிப்பை முழுமையாக கைவிட்டு விடுகிறோம்.

தீர்க்க  முடியாத நோய்களில் ஒன்று சிரிப்பை இழப்பது.  ஞானிகளும் குழந்தைகளும் சிரிப்பதற்கு காரணத்தை நாடுவதில்லை.   பனி உருகுவது போல சிரிப்பு அவர்களின் மனதில் இயல்பாக வெளிப்படுகிறது.

சிரிப்புக்கு ஒரு வாசனை இருக்கிறது.  அதை நுட்பமாக உணர்ந்தவர்கள் அறிந்து இருக்கிறார்கள்".   இப்படிப் போகிறது அந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரையை படித்ததும் கண்ணை மூடி கொஞ்சம் சிந்தித்தேன். உண்மைதான் நாம் வாசனை என்று நினைப்பது எல்லாம் பொதுவாக அத்தர் ஜவ்வாது மற்றும் பல வாசனைத் திரவியங்களைத்தான்.  அதனால்தான் TMS கூட அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசியும் அங்கம் மணக்கவில்லையே என்று மனம் உருகப் பாடினார்.

இத்தகைய வாசனைத் திரவியங்கள் நம்முடைய வியர்வை நாற்றத்தில் இருந்து வேண்டுமானால் நம்மை கொஞ்சம் பாதுகாக்கலாம்.

ஆனால் நம்முடைய வாசனை என்பது அதற்கும் சற்று மேலே.

சிலர் ஏதோ ஒரு வகையில் நம்மை ஈர்த்துக் கொண்டிருப்பார்கள்.  சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அருகில் சென்று பழகும்போது விலகி ஓடும்படி செய்து விடுவார்கள்.  

யோசித்துப் பார்த்தால் நம்முடைய எண்ணங்கள் நம்மைச் சுற்றி ஒரு வாசனையை உருவாக்கி விடுகிறது.  மூக்கினால் நுகர முடியாத அந்த வாசனை பிறரை நம்மை நோக்கி இழுக்கிறது அல்லது நம்மிடம் இருந்து விலக வைக்கிறது.

ரமண மகரிஷி போன்ற மகான்களின் புன்முறுவல் பூக்கும் அந்த முகங்களின் வாசனை இன்றும் நம்மை அவர்கள் இருந்த இடங்களை நோக்கி இழுக்கிறது.

நாமும் அப்படிப்பட்ட வாசனையைப் பெற கொஞ்சமாவது முயற்சி செய்வோம்.  அதற்கு பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம்.  யாரிடமும் நெஞ்சில் வஞ்சம் இல்லாமல் பழகத் தெரிந்தால் போதும்.  உங்கள் புன்னகை தந்திரப் புன்னகையாக இல்லாமல் இருந்தால் மந்திரப் புன்னகையாக மாறும். (அடப் பாவி அதுதானே கஷ்டம் என்று சொல்கிறிர்களா ? அதுவும் சரிதான்).  ஆனால் முயற்சி திருவினையாக்கும்.





Wednesday, May 18, 2016

நல்லாட்சி அமையட்டும்

தேர்தல் நாளன்று நம் விரலில் வைக்கப்பட்டு மிச்சம் இருக்கும் மை பின் வரும் நாட்களில் பெரும்பாலும் நம் முகத்தில் .பூசப்பட்டு விடுகிறது அரசியல்வாதிகளால் / ஆட்சி செய்பவர்களால்.

ஆனால் இனிமேல் யார் ஆட்சிக்கு வந்தாலும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க வேண்டியிருக்கும்.  ஏனென்றால் மக்களின் political awareness அதிகமாகிக்கொண்டே வருகிறது.  இது ஒரு நல்ல விஷயம்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மது விலக்கு என்று கூறியதற்கு மக்களின் இந்த awareness தான் காரணம்.  Social Media  கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் வைகோ விஜயகாந்த் என்று யாராக இருந்தாலும் மீம்ஸ் போட்டு நோகடித்து விடுகிறார்கள்.  மக்கள் நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே அரசியல்வாதிகளுக்கு ஒரு அச்சுறுத்தல்தான்.  

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தேனாறும் பாலாறும் ஓடப் போவதில்லை. நம் சோற்றுக்கு நாம்தான் உழைக்க வேண்டும்.  

நாம் எதிர்பார்ப்பது எல்லாம் ஊழலற்ற திறமையான நிர்வாகம்,  நீர்நிலை ஆதாரங்களைப் பெருக்கி சுத்தமான ஆரோக்கியமான நீர், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புக்கள் அல்லது சுய தொழில் வாய்ப்புக்கள், அமைதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் போன்றவைதான்.   இவற்றை ஒரு அரசாங்கத்தால்தான் கொடுக்க முடியும்.   இவற்றை அளிக்க முயன்றதால்தான் நாம் இன்னும் காமராஜர் ஆட்சியை நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

வரும் ஆட்சி இந்த அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று நம்புவோம்.

நம் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ஒரு like வைப்போம். இவ்வளவு பண பலம், அதிகார பலம் மிக்க அரசியல்வாதிகளுக்கு இடையில் முடிந்த வரையில் தன்னுடைய கடமையை ஒழுங்காகவே செயதிருக்கிறார். அதற்கு அமைதியாக நடந்து முடிந்த தேர்தலே சாட்சி.  சபாஷ் லக்கானி.

நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்கு அளித்திருக்கலாம். ஆனால்  மீண்டும் துளிர்க்கப் போவது இலையோ  அல்லது மீண்டும்  உதிக்கப் போவது சூரியனோதான் .

நாளை சூரிய உதயத்தில் தெரிந்து விடும்.  பொறுத்திருப்போம்.




Saturday, May 7, 2016

பறவையின் நிழல்


நேற்று (6/05/2016) மயிலாப்பூர் CIT காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் திரைப்பட இயக்குனரும் வசனகர்த்தாவுமான திரு. பிருந்தா சாரதியின் இரு கவிதை நூல்கள் (ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக்கூடம் மற்றும் பறவையின் நிழல்) வெளியீட்டு விழா Discovery Book Palace சார்பில் நடைபெற்றது.

பட்டிமன்ற பேச்சாளர் திரு கு. ஞானசம்பந்தன், எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன்,   இயக்குனர் திரு லிங்குசாமி, நடிகர் திரு நாசர், ஓவியர் ட்ராட்ஸ்கி திரு. மருது, இயக்குனர் திரு ராஜு முருகன், கவிஞர்கள் திரு அறிவுமதி, திரு யுக பாரதி மற்றும் பல கவிஞர்களும் அறிஞர்களும் கலந்து கொண்ட அறிவார்ந்த சபையாக இருந்தது.

விழா குறித்த நேரத்தில் துவங்கவில்லை என்ற குறையைத் தவிர (அதற்குக் தகுந்த காரணமும் இருந்தது) மற்ற எல்லா விஷயங்களும் மிகச் சிறப்பாக இருந்தன.  நிறைய பேர் பேசினாலும் வளவள என்று பேசாமல் சுவையாக பேசினார்கள்.  

சில சமயங்களில் (அல்லது பல சமயங்களில்) எதிர் பாராமல் நடக்கும் சில விஷயங்கள் மனதிற்கு மிகவும் திருப்தி அளிக்கும். அப்படி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்தி இருந்தது.  Discovery Book Palace திரு வேடியப்பனுக்கு நன்றி. அவர்தான் என்னை கட்டாயம் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்.

வேடியப்பன் பிருந்தா சாரதியை என்னிடம் அறிமுகம் செய்து வைத்த போது அவர் குறித்த எந்தத் தகவலும் என்னிடம் இல்லை.  அதனால் casual ஆக ஒரு ஹலோ சொல்லி அவரைக் கடந்து விட்டேன்.  ஆனால் அவரைக் குறித்து விழாவில் கலந்து கொண்ட எல்லா ஆளுமைகளும் உயர்வாக பேசியதும், அவரது கவிதைகளை புகழ்ந்ததும்  உடனே அவரது கவிதைகளைப் படிக்கத் தூண்டியது.

பறவையின் நிழல்  என்ற புத்தகத்திலிருந்துஅவரது ஒரு காதல் கவிதை :

என் எதிரி என்று ஒருவனைக் காட்டினார்கள் நண்பர்கள் 
புரியாமல் கேட்டேன் யார் அவன் என
உன்னைக் காதலிப்பவனாம்.
உன்னைக் காதலிப்பவன் எனக்கு எப்படி எதிரியாக முடியும் 
அவனிடம் அறிமுகம் செய்து கொண்டு 
அவனுக்கும் சேர்த்து நான் உன்னைக் காதலிப்பதாகக் கூறி 
விலகிக் கொள்ள வேண்டினேன் 
அவனும் அதையே கூறுகிறான் என்னிடம் 
எங்களிருவரில் நீ யாரைத் தேர்ந்தெடுத்தாலும் 
இருமடங்கு காதல் கிடைக்கும் உனக்கு.

இந்தக் கவிதையை விமர்சிக்கும் கவிஞர் ஜெயபாஸ்கரன் இப்படி சொல்கிறார்.  தனக்கு கிடைக்காத பெண் மீது ஆசிட் வீசும் கோட்பாடு நிலைபெற்று அது அவ்வப்போது ஆங்காங்கே கொடூரமாக நடக்கும் இந்தக் காலத்தில் அந்த இழிவு கலாசாரத்திற்கான ஓர் அறிவார்ந்த விடையாக இந்தக் கவிதையை நான் பார்க்கிறேன்  என்று.

உண்மைதான்.  நம் அன்பு பெரும்பாலும் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடங்கி விடுகிறது.  ஒருவர் மேல் நாம் கொள்ளும் அன்பு அவரின் மீதோ அல்லது தன்  மீதோ அல்லது அவரின் பொருட்டு வேறு ஒருவரின் மீதோ வெறுப்பை வளர்த்தால் அந்த அன்பினால் என்ன பயன் ?   கட்டிப் பிடித்துக் கொண்டு காறித் துப்பிக் கொள்வதற்குப் பதில், விலகி இருந்து நேசிப்பது உத்தமம்.

உடலைக் கொண்டாடும் காதல் கவிதைகளுக்கு இடையில் உள்ளங்களின் சிலிர்ப்பை கொண்டாடும் இத்தகைய காதல் கவிதைகள் மனதிற்கு இதமாக இருக்கின்றன.

வாழ்த்துக்கள் பிருந்தா சாரதி.  வேடியப்பன், இலக்கியத் தரமான இத்தகைய வெளியீடுகளை நம் Discovery Book Palace தொடர்ந்து செய்ய என் வாழ்த்துக்கள்.








Saturday, April 23, 2016

நம் ஓட்டு யாருக்கு ?


இன்று (23/04/2016) The Hindu நாளிதழில் திருச்சி லால்குடி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் திரு. ஜெயசீலன் அவர்களைப் பற்றிய ஒரு செய்தி வந்திருந்தது.

25 வருடங்களுக்கு மேல் கட்சியில் உறுப்பினராக இருக்கும் 49 வயதான திரு. ஜெயசீலன் வசிப்பது வெறும் 210 சதுர அடி வீடு. இது வரை அவரது பெயரில் வங்கிக் கணக்கு இல்லை.  அவரது 76 வயது தாயார் 100 நாள் தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் ஒரு சாதாரண தொழிலாளி.  மனைவி தனியார் பள்ளி ஆசிரியை.

இவரும் முதுகலை பட்டம்  பெற்று இருக்கிறார்.

இதுவரை லால்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறார்.

ஒரு கட்சியில் சேர்ந்து சில வருடங்களிலேயே சொகுசு கார், ஆடம்பர வீடு என்று ஊரை வளைத்து உலையில் போடும் "மாண்புமிகுக்கள்" மிகுதியாக இருக்கும் நம் ஊரில், இன்றும் கட்சி ஊதியமாக அளிக்கும் சில ஆயிரம் ரூபாயில் தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

25 வருடங்களுக்கு மேலாக மிகவும் simple ஆக வாழ்ந்த ஒருவர் கண்டிப்பாக தன்னுடைய பதவியையும் மக்கள் சேவைக்காகவே பயன்படுத்துவாரே தவிர கொள்ளை அடிக்கும் வியாபாரமாக நினைக்க மாட்டார்.

நாம் எந்த ஒரு கட்சியையும் சாராத நடு நிலை (??) வாக்காளராக இருந்தாலும், பொதுவாக நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கட்சியின் மீது அபிமானம் இருக்கும்.  அல்லது யார் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதை வைத்து அவருக்கு ஓட்டு போடுவோம். 

இந்த முறையாவது நம்முடைய தொகுதியில் நிற்கும் ஒவ்வொரு வேட்பாளரையும் அலசி ஆராய்ந்து யார் உண்மையில் தகுதியானவர் என்று நினைக்கிறோமோ அவர்களுக்கு நம் வாக்கை செலுத்துவோம்.  அவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் பரவாயில்லை அல்லது அவர்கள் வெற்றி அடைய வாய்ப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை. 

ஜெயசீலன் போன்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவது நாட்டுக்கும் நமக்கும் நல்லது.










Thursday, March 24, 2016

பாலில் விழுந்த பழங்களைப் போல

"பாலில் விழுந்த பழங்களைப் போல
பருவம் உருவம் நிறைந்தவள் நீயே
மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கல நாடகம் ஆடவந்தாயே"

தேன் நிலவு என்ற படத்தில் A.M. ராஜாவும் ஜானகியும் பாடிய இந்தக் காதல் பாடல் மிகவும் பிரபலம் (நீங்கள் 30 அல்லது 40 வயதைக் கடந்தவராக இருந்தால்).

ஆனால் சமீபமாக இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கலைஞரும் கேப்டனும்தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.

மயக்கும் விழிகளைக் (அல்லது மயங்கிய விழிகளை) கொண்ட கருப்புக் கன்னி விஜியை (அப்படித்தான் கலைஞர் கேப்டனை அழைப்பார்) பழம் நழுவி பாலில் விழுகிறது என்று கலைஞர் சொல்ல அந்தப் பழம் பாலில் விழுவதற்குப் பதில் காலில் விழுந்துவிட்டது. 

கலைஞர் விஜயகாந்த் காலில் விழாத குறையாக கெஞ்சியது ஒருபக்கம் இருக்க, தலைவரும் தொண்டரும் என்று சகலமும் தானே இருக்கும் சரத்குமார் பாஜகவில் தான் கூட்டணி சேர்ந்து விட்டதாக அறிவித்த பிறகும் அவரை மீண்டும் இரும்புத் தலைவி (?) ஜெயலலிதா சேர்த்துக் கொண்டதைப் பார்க்கும் போது திமுக அதிமுக இரண்டும் மீண்டும் முதல்வர் நாற்காலிக்காக இன்னும் என்னவெல்லாம் செய்வார்கள் என்று தெரியவில்லை.

உண்மையில்  பழம் நழுவி பாலில் விழுந்தது விஜயகாந்துக்குதான்.  இந்த முறை தனியாக அவர் நின்று இருந்தால் அவர் டப்பா டான்ஸ் ஆடியிருக்கும். நல்ல வேளை  கம்யூனிஸ்ட் தோழர்களும், வைகோவும், திருமாவும் அவருக்கு பல்லக்கு தூக்க தயாராகிவிட்டார்கள்.  

எனக்கு வைகோவை நினைத்துத்தான் வருத்தமாக இருக்கிறது.  மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், சிறந்த வழக்கறிஞர், என்று பல தகுதிகள் பெற்றவர். தமிழக அரசியலில் திமுக அதிமுக தலைமைகளைத் தவிர முதல்வர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளவர்.  அப்படிப் பட்டவர் தன்னை விட கொஞ்சம் கூட்டம் அதிகம் சேருகிறது என்பதற்காக விஜயகாந்த் காலில் விழுந்திருக்க வேண்டியதில்லை. 

இனி என்ன, பல்லக்கில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டு "த்தூ.... தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க" போன்ற கேப்டன் வசனத்தில் உருவான மீம்ஸ்களை அவரே ரசித்துக் கொண்டு ஊர் ஊராக  தேர்தல் சுற்றுப் பயணம் செய்யலாம்.

கேப்டன் என்ன பேசினார் என்று மறுநாள் செய்தித்தாளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இனி இல்லை.  வைகோவும் திருமாவும் நல்ல பேச்சாளர்கள்.  கேப்டன் தமிழில் பேசியதை அவர்கள் மீண்டும் தமிழில் மொழி பெயர்த்து (??) நமக்குச் சொல்லி விடுவார்கள்.

வாழ்க ஜனநாயகம்.