Tuesday, August 30, 2016

சித்திரச் சோலைகளே


சென்னை நகரின் நெரிசலில் தினமும் சிக்கித் தவிக்கும்போதெல்லாம் எப்போது இந்த மெட்ரோ ரயில் திட்டம் முடியும் என்று நினைக்கிறோமே தவிர அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களைப் பற்றி கவலைப் படுவதில்லை.

சில நாட்களுக்கு முன் ஹிந்து நாளிதழில் வந்த ஒரு செய்தியைப் படித்ததும் மனது கனத்தது.  சியாம் - பர்மா (தாய்லாந்து - மியான்மர் ) - மரண ரயில் பாதை என்ற தலைப்பில் R. குறிஞ்சிவேந்தன் என்பவர் எடுத்த ஒரு டாக்குமெண்டரி படத்தைப் பற்றிய செய்தி அது.

1940-42 ம் ஆண்டுகளில் தாய்லாந்திற்கும் பர்மாவிற்கும் இடையில் கிட்டத் தட்ட 415 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்க ஜப்பான் அரசால் பணியமர்த்தப் பட்ட தமிழர்களில்  சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்தக் குளிரிலும், பாம்பு மற்றும் இதர கொடிய விஷ ஜந்துக்கள் கடித்ததிலும் இறந்திருக்கிறார்கள்.   1.5 லட்சம் என்பது இப்போதே மிகப் பெரிய எண்ணிக்கை.  சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு பெரிய எண்ணிக்கையாக இருந்திருக்கும்.

ஐந்து வருடங்களில் முடிக்க வேண்டிய திட்டத்தை ஜப்பான் 15 மாதங்களில் முடித்திருக்கறது.  அப்படியென்றால் அந்தத் தொழிலாளர்கள் எப்படிப் பட்ட துயரங்களை அனுபவித்திருப்பார்கள் என்று யூகிக்க முடியும்.

வறுமை எத்தனை மனிதர்களின் வாழ்க்கையை மிக அனாசயமாக தூக்கி எறிந்து விடுகிறது.

உங்களுக்கு ஊட்டி பிறந்த கதை தெரியுமா ?

1820 ம் ஆண்டு கோவை கலெக்டராக இருந்த திரு. ஜான் சல்லிவன் என்ற ஆங்கிலேயர் ஊட்டி மலையைப் பற்றி கேள்விப் பட்டு ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் இங்கிலாந்து சீதோஷண நிலைக்கு ஏற்ப ஒரு இடம் ஊட்டி என்றும் அங்கு இரவில் ஊற்றி வைத்தால் காலையில் அந்த தண்ணீர் பனிக் கட்டியாக உறைந்து விடுகிறது.  அதனால் அந்த இடத்திற்கு செல்லவும் மக்கள் சென்று வர வசதியும் செய்வதற்க்கு அனுமதி வேண்டினார்.  முதலில் அனுமதி மறுக்கப் பட்டாலும் பிறகு அவருக்கு அனுமதி கிடைக்கிறது.

குதிரைகள், யானைகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் கோவையில் இருந்து ஊட்டிக்குப் புறப்பட்டார்.  பாதி வழியில் குதிரைகளாலும் யானைகளாலும் மலை ஏற முடியவில்லை.  பிறகு அந்த மலைக்கு பாதை அமைத்ததெல்லாம் ஏழைத் தொழிலாளர்கள்தான்.

ஊட்டிக்கு தேன் நிலவு சென்ற முதல் தம்பதி ஜான் சல்லிவனும் அவரது மனைவியுமாகத்தான் இருப்பார்கள்.  ஏனென்றால் 1820 ம் ஆண்டுதான் அவருக்கு திருமணம் நடந்ததாகத் தெரிகிறது.  இந்தத் தம்பதிக்கு 8 குழந்தைகள். ஜான் சல்லிவனின் மனைவியும் அவரது மூத்த மகனும் 1838 ம் ஆண்டு ஊட்டியில் ஏற்பட்ட தொற்று நோயால் இறந்துவிட ஜான் சல்லிவன் பிற குழந்தைகளை அழைத்துக் கொண்டு இங்கிலாந்து சென்றுவிட்டார்.

நாம் இன்று வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் அனைத்து வசதி வாய்ப்புக்களுக்கும் முகம் தெரியாத எத்தனையோ மனிதர்களின் தியாகம் என்றால் அது மிகையாகாது.

"சித்திரச் சோலைகளே 
உமை நன்கு திருத்த இப்பாரினிலே 
முன்னம் எத்தனை தோழர்கள் 
ரத்தம் சொரிந்தனரோ 
உங்கள் வேரினிலே" 

என்ற பாரதிதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

Wednesday, August 10, 2016

ஞானப் பல் தப்பிய கதை

"முப்பத்திரு பல் முனைவேல் காக்க" என்று கந்த சஷ்டி கவசத்தில் படிக்கும் போது பாலன் தேவராயன் ஸ்வாமிகள் ஏன் பல்லுக்கு கூட இவ்வளவு importance கொடுத்தார் என்று சிறுவயதில் புரியவில்லை - கிரிக்கெட் விளையாடும்போது என் நண்பன் கண்ணனுடன் மோதி முன் பல் damage ஆகும்வரை (அவன் முன் நெற்றியில் நாலு தையல் போட்டது வேறு விஷயம்). 

அதற்குப் பிறகு எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது.   சென்ற மாதத்தில் ஒரு  நாள் ஹோட்டலில் தோசை சாப்பிடும்போது கடைவாயில் இருந்து 'கடக்' என்று ஒரு சத்தம். இதற்குப் பெயர்தான் கல் தோசை போலும் என்று நினைத்து கல்லை வெளியில் எடுத்தால் அது கல் இல்லை, சாட்சாத் என் பல்லேதான். விண்ணில் இருந்து மண்ணில் விழும் எரி கல்லின் ஒரு சிதறல் போல ஒரு சின்ன piece தான்.  நாக்கைத் துழாவிப் பார்த்தால் மழைக்குப் பிந்தைய சென்னை நகரின் சாலையைப் போல ஒரு பெரிய பள்ளம் (அல்லது எனக்கு அப்படித் தோன்றியது).

வலியெல்லாம் ஒன்றுமில்லை.  ஆனாலும் என்ன சாப்பிட்டாலும் உணவுத் துகள்கள்  மாட்டிக் கொண்டு சாப்பிடுவதை விட அதை எடுப்பதற்கு அதிக நேரம் செலவு செய்ய வேண்டி இருந்தது (as a matter of hygienic also).

சரி பல் டாக்டரிடம் சென்று அடைத்து விடலாம் என்று நினைத்து casual ஆக தெரிந்த டாக்டரிடம் சென்று காண்பித்தேன் (தெரியாத doctor அனாவசியமாக பயமுறுத்திவிடலாம் என்பதால்).  ஆனால் தெரிந்த டாக்டரும் பயமுறுத்தலாம் என்று அன்று புரிந்து கொண்டேன்.

அவர் சொன்ன விஷயம் இதுதான்.  ஞானப் பல் என்று அழைக்கப் படும் wisdom tooth மற்ற பற்களைப் போல அல்ல. (Tooth  singular or plural ? - என்னைப் போல தமிழ் medium படித்த ஆட்களுக்கு  அடிக்கடி இப்படி basic doubts வந்து விடுகிறது. என்னைப் போலவே confuse ஆகிவிடும் ஆட்களுக்கு சொல்கிறேன்.  Tooth singular தான். ஆனாலும் திரும்பவும் அடுத்த வாரம் கேட்டால் மீண்டும் doubt வர chance அதிகம்). சரி மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன்.  இது தாடை எலும்போடு (jaw bone) ஒட்டியிருக்குமாம்.  அதனால் மற்றப் பற்களை போல சுலபமாக (??) பிடுங்கி விட முடியாதாம். இது கொஞ்சம் complicated.  கிட்டத் தட்ட ஒரு சின்ன surgery செய்துதான் எடுக்க முடியும் என்று சுலபமாக சொல்லிவிட்டார். சொத்தை எடுக்கப் போய் நம் சொத்தையே எடுத்துவிடுவாரோ என்று மனம் லேசாக கலங்கி விட்டது.  மீண்டும் பாலன் தேவராயன் ஸ்வாமிகள் நினைவுக்கு வந்து சென்றார். 

ஆனாலும் வேறு வழியில்லை.  மீண்டும் ஒரு நாள் appointment fix செய்து விட்டு சில நாட்களுக்கு முன் சென்று அவரைப் பார்த்தேன்.  முதலில் ஒரு Xray எடுத்துக் பார்த்துவிடலாம் என்று Xray எடுத்துப் பார்த்தவர் சொன்ன விஷயம் என் காதில் தேனாக விழுந்தது.  ஆமாம்.  ஞானப் பல் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.  குழி விழுந்த (??) இடத்தை fill செய்தால் போதும். பிரச்சினை ஏதும் வராது என்று.   அரை மணி நேரத்தில் treatment ஓவர். Complicated என்று நினைத்த விஷயம் மிகவும் easy ஆக முடிந்து விட்டது.

இந்தப் பதிவின் நோக்கம், என் ஞானப் பல் தப்பிய கதையை பீற்றிக் கொள்வதற்காக அல்ல.  நாம் பொதுவாக டாக்டர் நம் உடல்நிலை குறித்து ஏதாவது negative ஆக ஏதாவது சொன்னால் அதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு அதை நம்பி நம்பியே இல்லாத ஒன்றைக் கூட வரவழைத்துக் கொள்கிறோம்.  எனக்குப் பார்த்த ஒரே டாக்டர் ஒரே வாரத்தில் U turn அடித்து விட்டார்.  அதனால் உடல் நலன் குறித்து தேவையற்ற பயம் கொள்ளத் தேவை இல்லை.  டாக்டரும் நம்மைப் போல சக மனிதரே.  அவருக்கு கிடைக்கும் ரிப்போர்ட்டை வைத்து நம் உடல் நலனை கணிக்கிறார்.  Report எப்படி வேண்டுமானாலும் மாறும். இறைவன் மிகப் பெரியவன். அவனை நம்புவோம்.

பின்குறிப்பு : ஞானப் பல்லுக்கும் ஞானத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரே ஒரு ஒற்றுமை ஞானமும் ஞானப் பல்லும் கடைசியில்தான் வரும்.