Thursday, December 28, 2017

ஓடி ஓடி .......


சென்ற சனிக்கிழமை (23/12/2017) அன்று மாலை அண்ணாமலை பல்கலை கழக முன்னாள் மாணவா் சங்கத்தின் விழாவின் ஒரு பகுதியாக திரு. வெ. இறையன்பு IAS அவா்கள்  ”அறுபது வயதிற்குப் பின் வாழ்க்கை” (“Life after 60”) என்ற தலைப்பில் பேசினார்.  அவா் பேச்சின் மையக் கருத்தானது, பொதுவாக ஒரு மனிதன் 60 வயதிற்கு மேல் தனக்கு, தன் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இந்த தேசத்திற்கே பாரமாகிவிடுகிறார்.  சென்ற நுாற்றாண்டில் 40 அல்லது 50 வயதானாலேயே அவா்களை வயதானவா்கள் என்று சொல்லிவிடுவார்கள்.  60 வயதைக் கடந்து வாழ்ந்தவா்கள் சிலரே.  ஆனால் இப்போது 80 வயதைக் கடந்தும் ஆரோக்கியமாக இருக்கும் பலரை நாம் பார்க்கிறோம்.  அதிலும் அரசாங்கத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவா்கள் தாங்கள் சம்பளமாக வாங்கிய தொகையை விட கூடுதலாக ஓய்வூதியம் பெறுகிறார்கள்.  இது அரசாங்கத்திற்கு கூடுதல் நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது.  இதைத் தவிர ஒருவா் 60 வயதிற்கு மேல் தன்னுடைய வாழ்க்கையை முறையாக நிர்வகிக்க வேண்டியதின் அவசியத்தையும் இல்லையென்றால் அவருக்கு ஏற்படும் நிதி மற்றும் மன அழுத்தங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

திரு. இறையன்பு அவா்கள் கடைசியாக சொன்ன விஷயம் இதுதான்.  வயதாகிவிட்டது என்று சோர்ந்து விடாமல் யார் தங்களை புதுப்பித்து கொண்டே இருக்கிறார்களோ அவா்களுக்கு வயதாகலாம் ஆனால் வயோதிகம் வருத்தாது.  நம் மூளையில் சுரக்கும் சில செல்கள் (நியுரான்கள்) வயதாக வயதாக குறைந்து கொண்டே இருக்கும்.  அதனால்தான் வயதானவா்களுக்கு மறதி போன்ற நோய்கள் வருகின்றன.  ஆனால் வயதானாலும் சோர்ந்து விடாமல் படிப்பது, எழுதுவது, இசை, சமையல், அழகுக் கலை இப்படி தொடா்ந்து ஏதாவது ஒரு துறையில் இயங்கிக் கொண்டே இருப்பவா்களுக்கு மூளையில் சுரக்கும் நியுரான்கள் குறைவதே இல்லையாம்.  அதனால் நாம் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருப்போம் – வயோதிகத்தை வெல்வோம் என்றார்.

ஒரு நல்ல பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைப்பதற்கு காரணமாக இருந்த திரு. இளநகை (சங்கத்தின் தலைவா்) அவா்களுக்கு என் நன்றிகள்.

இறையன்பு அவா்களின் பேச்சு எனக்கு இது தொடா்பான வேறு சில சிந்தனைகளையும் கிளறிவிட்டது.

சில மாதங்களுக்கு முன் என் குடும்பத்துடன் கோவை அருகில் உள்ள ஆனைக்கட்டி என்ற சுற்றுலா தலத்திற்கு சென்றிருந்தேன்.  நாங்கள் தங்கிய ரிசார்ட்டில் ஒரு வயதான தம்பதியை சந்தித்தோம்.  கணவா் ஒரு டாக்டா்.  வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு வகையிலோ உலகம் சுற்றியவா்கள். அவா்களுடனான உரையாடல் எனக்கும் சில தெளிவுகளைத் தந்தது.

அந்த டாக்டா் தன்னுடைய தொழிலின் மூலம் நிறைய சம்பாதித்தவா். பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்துள்ளார்.  தன்னுடைய சேமிப்பின் மூலம் நிறைய நிலபுலன்களையும் வாங்கி வைத்துள்ளார்.  இப்போதைய அவரின் பிரச்சினை என்னவென்றால் அவருடைய மகனும் மகளும் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள்.  மீண்டும் இந்தியாவிற்கு இப்போதைக்கு வரும் எண்ணம் இல்லை. இவா்களுக்கோ வயதாகிக் கொண்டிருக்கிறது.  தங்களுடைய சொத்துக்களைப் பராமரிப்பது மிகவும் கடினமாக உள்ளது.  விற்பதாக இருந்தால்கூட அது அவ்வளவு சுலபமாக இல்லை.  அப்படியே நீண்ட நாட்களுக்கு இருந்தாலும் அதை யாராவது அபகரிக்க முயற்சி செய்வார்களோ என்ற பயம் உள்ளது.  அவா்களது பிள்ளைகளும் அதுகுறித்து கவலைப்படுவதாக இல்லை. 

இதற்கு இடையில் சில காலம் அவரும் அவா் மனைவியும் IAS ஆபிசா்களாக வெளிநாட்டில் வேலை பார்த்ததாக வேடிக்கையாகச் சொன்னார். அது வேறு ஒன்றும் இல்லை.  வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட பிள்ளைகள் அங்கேயே குழந்தை பெற்றுக் கொள்ளும்போது அவா்களுக்கு மிகவும் நம்பிக்கையான, ஊதியம் இல்லாத ”ஆயா” வேலை செய்பவா்கள் அவா்களது பெற்றோர்கள்தாம்.  இப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும் பெற்றவா்கள்தான் தங்களை ”பெருமையாக” (??) IAS (Indian Aaya Service) ஆபிசா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.

கடைசியாக அவா் சொன்ன விஷயம் இதுதான்.  நாம் நன்றாக இருக்கும்போது பிள்ளைகள் நம் கூடவே இருப்பார்கள் என்று நினைத்து அவா்களுக்குத் தேவைப்படும் என்று நிறைய அசையா சொத்துக்களை சோ்த்து விடுகிறோம்.  ஆனால் காலம் மாறிவிட்டது.  அந்தக் காலத்தின் கூட்டுக் குடும்ப கலாசாரம் மறைந்து விட்டது.  பிள்ளைகள் அவரவா் வாழ்க்கை என்று பறந்து விடுகின்றனா்.  நாம் Assets என்று நினைப்பது வயதாகும் போது உண்மையிலேயே Liability ஆகி விடுகிறது.  இன்னும் சில வருடங்கள் கழித்து எங்கள் உடல்நிலை வெளிநாடு சென்று எங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதற்கும் இடம் கொடுக்காது.  எங்களையே பார்த்துக்கொள்வது கடினமாக இருக்கும்போது இந்தச் சொத்துக்களை எப்படி பாதுகாப்பது ?.

இப்படி பல உதாரணங்களை நாம் தினமும் பார்க்கலாம்.

உண்மைதான்.  நாம் நம் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டியது நல்ல வருங்காலத்தைதான்.  அதை ஒழுங்காக கொடுத்துவிட்டால் நாம் சம்பாதித்தை விட பல மடங்கு அவா்கள் சம்பாதிப்பார்கள்.

நாம் நம் குடும்பத்தையும், இளமையையும் மறந்து ஓடிக்கொண்டே இருந்தால் ஓட்டம் நின்று திரும்பிப் பார்க்கும்போது நாம் மட்டும் தனியாகத்தான் நின்று கொண்டிருப்போம்.

அதற்காக நாம் சோம்பேறியாகவும் ஊதாரியாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை.  60 வயதுக்கு முன் மட்டுமல்ல அதற்குப் பிறகும் நாம் நம் சொந்தக் காலில் நிற்கக்கூடிய பொருளாதாரச் சுதந்திரம் நமக்கு இருக்க வேண்டும்.  அதற்காகக் கண்டிப்பாக ஓடத்தான் வேண்டும்.  ஆனால் அந்த ஓட்டம் யாரையும் முந்தியடித்துச் சென்று முதலிடம் பெற வேண்டும் என்ற ஓட்டமாக இல்லாமல், நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் வலு சேர்க்கும் ஆரோக்கிய ஓட்டமாக இருந்தால் போதும்.  ஓடி ஓடி களைக்க வேண்டாம். நான் கடவுளை வேண்டுவதும் அந்த ஓட்டம்தான்.

திரு. இறையன்பு அவா்கள் சொன்னது போல் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்கலாம் – இருக்கும்வரை….

Thursday, December 14, 2017

கொடுப்பது எல்லாம் கொடையல்ல ....


எனக்கு கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகளை மிகவும் பிடிக்கும்.  காரணம் நாம் மிகவும் சுலபமாகப் புாிந்துகொள்ளக்கூடிய வகையில் சிக்கல் இல்லாத வாா்த்தைப் பிரயோகம்தான்.  சிலருடைய கவிதைகளைப் படித்தால் அது ஒரு மாடா்ன் ஆா்ட் போல இருக்கும்.  நாமாக ஒன்றைப் புரிந்துகொண்டு ஆகா அபாரம் என்று சொல்ல வேண்டும்.  இல்லையென்றால் நம்மை கவிதை ரசனை இல்லாதவா் என்று சொல்லிவிடுவாா்கள். 

கீழே உள்ள இந்தக் கவி்தையைப் படித்துப் பாருங்கள்.  உங்களுக்கே புரியும்.  நாம் சக மனிதா்களுக்கு செய்யும் உதவியைப் பற்றிய கவிதை இது.  ஒரு tube light வாங்கிக் கொடுத்துவிட்டு அதன் ஒளியை மறைத்து, உபயம் இன்னாா் என்று எழுதி வைக்கும் இந்தக் காலத்தில், கொடுப்பது எல்லாம் கொடையல்ல என்று நம் பொட்டில் அறைந்தது போல சொல்லி இருக்கிறது இந்தக் கவிதை.  அதேபோல் கொடுப்பது என்றால் பணம் மட்டுமில்லை என்பதை அழகான கவிதை வரிகளில் நமக்கு சொல்லியிருக்கிறாா் கவிக்கோ.  

கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே
இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே
உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை
கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாயப்படுத்தும்.