Thursday, May 15, 2014

தேர்வு முடிவுகளும் தேர்தல் முடிவுகளும்


எல்லா சமயங்களிலும் தேர்வுக் காலமும் தேர்தல் காலமும் ஒன்றாக அமைவது இல்லை.  தேர்வு முடிவுகள் (CBSE தவிர) வந்து விட்டது. தேர்தல் முடிவுகள் on the way.  தூங்கி எழுந்தால் தெரிந்து விடும்.

எந்த விசயத்தில் அரசியல்வாதிகளை மாணவர்கள்  follow  பண்ண வேண்டுமோ இல்லையோ, தேர்தல் முடிவுகளை அவர்கள் எதிர்கொள்ளும் விசயத்தில்  கண்டிப்பாக அரசியல்வாதிகளை  மாணவர்கள் பின்பற்ற வேண்டும்..

தேர்தல் நாள் வரை நிச்சயம் நம்மால் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைப்பார்கள்.  தேர்தல் முடிவுக்கு முதல் நாள் வரை  கண்டிப்பாக வெற்றி எங்களுக்கே என்று  நம்பிக்கையுடன் பேசி வருவார்கள்.

ஆனால் தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் அதற்காக பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அதற்கு ஒரு காரணத்தினை சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

தேர்தல் தோல்விக்காக தீக்குளித்த தொண்டர்கள் உண்டு.  ஆனால் தீக்குளித்த எந்த தலைவரையாவது நாம் கண்டதுண்டா ?

ஆனால் சில மாணவர்கள் தேர்வில் தவறிவிட்டாலோ அல்லது மதிப்பெண் குறைந்துவிட்டாலோ வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.

தேர்தல் தோல்விகளால் தவறான முடிவுகளை எடுத்து இருந்தால் இன்று பல தலைவர்கள் நம்மிடையே இருக்க மாட்டார்கள் (நல்லாத்தான் இருந்திருக்கும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது !!!).

தேர்தலாவது ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதான் வருகிறது.   ஆனால் தேர்வோ ஒவ்வொரு வருடமும் (அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை) வருகிறது.

ஒரு தேர்வின் முடிவை வைத்து வாழ்கையை முடிவு செய்ய வேண்டாம். குறைவான மதிப்பெண்ணால்  நாம் எதிர்பார்த்த course  அல்லது college கிடைக்காமல் போகலாம்.  ஆனால் வாழ்க்கை மிகப் பெரியது.   சாதனையாளர்கள் பலரும் மதிபெண்ணில் கோட்டை விட்டவர்கள்தான்.

அதனால் மாணவர்கள் தேர்வு விசயத்தில் அரசியல்வாதிகளின் உழைப்பையும் நம்பிக்கையையும் பிறகு எந்தவிதமான முடிவையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கையும் கடைப்பிடித்தால் வாழ்கையில் வெற்றி பெறுவது உறுதி.







Thursday, May 8, 2014

Selamat Datang


நானும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சென்று வந்தேன் என்று எப்படி ஆரம்பிப்பது.  அதனால்தான் Welcome என்பதை "Selamat  Datang" என்று மலாய் மொழியில் தலைப்பு கொடுத்தேன்.

பணி நிமித்தமாக சென்றதால் ஊரைச் சுற்றி பார்க்க முடியவில்லை. ஆனாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் flavour-ஐ அறிந்து கொண்டு வந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் மும்பை, டெல்லி செல்வது போல் சில நாட்கள் மட்டும் சென்றதால் எனக்கு வெளிநாடு செல்லும் உணர்வு   தோன்றவில்லை.  ஆனால் விமான நிலையத்தில் மனைவி குழந்தைகள் பெற்றோர் மற்றும் பல சொந்தங்களையும் விட்டு விட்டு திரும்பி வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியாமல் செல்லும் பலரின் கண்களின் ஈரம் மனதை கொஞ்சம் பிசைந்தது.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சொன்ன தமிழனும் "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்று சொன்ன தமிழனும் வறுமைக்கு பயந்து மட்டும் வெளிநாடு சென்று இருப்பார்கள்  என்று தோன்றவில்லை. தன்னுடைய வளமையைப் பெருக்கிக்  கொள்ளத்தான் பெரும்பாலும் சென்றிருக்க வேண்டும்.

நம்முடைய  தமிழ்ச்  சமூகம்  உலகில் பெரும்பாலான நாடுகளில் வேருன்றி இருப்பது மகிழ்ச்சியான விசயமாக இருந்தாலும், பெரும்பாலும் மற்றவர்களுக்கு வேலை செய்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது.  நாம் மற்றவர்களிடம் வேலை தேடாமல் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் சமூகமாக மாறினால் நம்முடைய வளமை இன்னும் அதிகமாக பெருகும்.

ஆனால்  நம்ம ஆட்கள் எங்க போனாலும் நம்ம brand ஐ குத்தி விடுகிறார்கள். பொதுவாக எந்த நாட்டுக்கு சென்றாலும் நம்ம ஊர் முருகனுக்கோ, அம்மனக்கோ அல்லது பெருமாளுக்கோ கோவில் கட்டி விடுவார்கள்.   இது நல்ல விசயம்தான் (அல்லது தவறான விஷயம் அல்ல).  ஆனால் இப்போது சிங்கப்பூரில் "டாஸ்மாக்" கையும் ஆரம்பித்துவிட்டார்கள்.  இதுதான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.



இருந்தாலும் நம்ம ஊரை விட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள்  தமிழை அதிகம் வளர்க்கிறார்களோ என்று தோன்றுகிறது.  இருக்கும்போது அதன் அருமை தெரியாது என்பதை போல.

சிங்கப்பூரில் தற்போது வசிக்கும் திரு மா. அன்பழகன் அவர்கள் சீரிய முயற்சியால் தமிழ் அன்பர்கள் பலர் கூடி தமிழை வளர்க்க பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.  நான் சென்ற நாளும் அப்படி ஒரு விழா நடந்து கொண்டு இருந்தது.  அதில் நான் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


சிங்கப்பூர் மலேசியாவைப் பற்றி நல்லதாக நாலு விசயங்களைச் சொன்னால் "நீயும் ஆரம்பிச்சிட்டியா வெளிநாட்டு புராணம்" என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுந்துவிடும்.

ஆனால்  நான் சொல்ல நினைக்கும் செய்திகளை  பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதி கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் குரலில் நம்ம சூப்பர் ஸ்டார் ஏற்கனவே பாடிவிட்டார்.  ஜஸ்ட் rewind செய்து பாருங்கள். இதோ உங்களுக்காக அந்தப் பாடல்.

அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே

புதுமையிலே மயங்குகிறேன் 

பார்க்கப் பார்க்க ஆனந்தம் பறவை போல உல்லாசம் 

வேலை இன்றி யாருமில்லை எங்கும் சந்தோஷம் 

வெறும்பேச்சு வெட்டிக்கூட்டம் ஏதுமில்லை இந்த ஊரில் 

கள்ளம் கபடம் இன்றி கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன் 

வாழும் சிங்கப்பூர் 

சிட்டுப்போல பிள்ளைகள் தேனில் ஆடும் முல்லைகள் 

துள்ளித் துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம் 

தினம் தோறும் திருநாளே சுகம் கோடி மனம் போலே 

சீனர் தமிழர் மலேய மக்கள் உறவினர் போல 

அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர் 


மஞ்சள் மேனிப்பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள் 

காவியத்தில் வார்த்தை இல்லை உன்னைப் பாராட்ட 

நடைபார்த்து மயிலாடும் மொழிகேட்டு கிளி பேசும் 

கண்ணில் தவழும் புன்னகை கண்டேன் 

சொர்க்கம்போல இன்பமும் பெருமையும் 


வாழும் சிங்கப்பூர்.


Terima Kasih (நன்றி)

 



Saturday, April 19, 2014

Desiderata


The “Desiderata” (means something that is needed or wanted) poem was originally written by Max Ehrmann. It was used by Rev. Frederick Kates of St Paul´s Church in Baltimore in devotional materials he compiled for his congregation. On top of this material he had written "Old St Paul´s Church, Baltimore A.C. 1692". The year was the foundation year of the church.

Life is so precious and valuable. The advice given in this poem is valuable and worth some serious contemplation.   During my college days, my friend had sent this to me and now only I could fully understand and appreciate its relevance in life.  Surely, you will find this very useful.

Desiderata

Go placidly amid the noise and the haste, and remember what peace there may be in silence.
As far as possible, without surrender, be on good terms with all persons.

Speak your truth quietly and clearly; and listen to others,
even to the dull and the ignorant; they too have their story.

Avoid loud and aggressive persons; they are vexatious to the spirit.
If you compare yourself with others, you may become vain or bitter,
for always there will be greater and lesser persons than yourself.

Enjoy your achievements as well as your plans.
Keep interested in your own career, however humble;
it is a real possession in the changing fortunes of time.

Exercise caution in your business affairs, for the world is full of trickery.
But let this not blind you to what virtue there is;
many persons strive for high ideals, and everywhere life is full of heroism.
Be yourself. Especially do not feign affection.
Neither be cynical about love, for in the face of all aridity and disenchantment,
it is as perennial as the grass.

Take kindly the counsel of the years, gracefully surrendering the things of youth.
Nurture strength of spirit to shield you in sudden misfortune.
But do not distress yourself with dark imaginings. Many fears are born of fatigue and loneliness.

Beyond a wholesome discipline, be gentle with yourself.
You are a child of the universe - no less than the trees and the stars;
you have a right to be here. And whether or not it is clear to you,
no doubt the universe is unfolding as it should.

Therefore be at peace with God, whatever you conceive Him to be.
And whatever your labors and aspirations,
in the noisy confusion of life, keep peace in your soul.

With all its sham, drudgery, and broken dreams, it is still a beautiful world.
Be cheerful. Strive to be happy.

Monday, April 14, 2014

தீதும் நன்றும் பிறர் தர வாரா



விஜய வருடம் முடிந்து ஜய  வருடம் தொடங்கி விட்டது. எப்போதும் போல் சில நட்புக்களின் வாழ்த்துக்கள், சர்க்கரை பொங்கல், டிவியில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன மற்றும் திரைக்கே வராத படங்களில் எதைப் பார்ப்பது என்று தெரியாமல் எதையும் பார்க்காமல், காமெடி சேனலுக்கு பதிலாக கேப்டன் டிவியில் கேப்டனின் பேச்சை பார்த்துவிட்டு, கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் புது வருடத் தொடக்கம் பெரும்பாலும் முடிந்து விட்டது.

இன்று ஏதாவது ஒரு உபயோகமான தகவலை வலை தளத்தில் பதிவு செய்யா விட்டால் என் நூற்றுகணக்கான (ஆயிரக்கணக்கான, இலட்சகணக்கான என்று மிகைப் படுத்தி பொய் சொல்ல விரும்பவில்லை) வாசக நண்பர்கள்  ஏமாந்து விடுவார்கள் என்பதால் இந்த பதிவு.

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் எழுதிய "உலகால் அறியப்படாத ரகசியம்" என்ற புத்தகத்திலிருந்து சில செய்திகள்.

ஜேம்ஸ் ஆலன் என்ற தத்துவ ஞானி கூறுகிறார் "வாழ்வில் மறைந்து கிடக்கும் சில உண்மைகள்தான் நம்மை வழி நடத்திச் செல்கின்றன என்று".

தனி மனித வாழ்விலும் சரி, சமுதாய வாழ்விலும் சரி இது உண்மை.  நாம் விளைவுகளை கண்டு  அஞ்சுகிறோம் அல்லது தவிர்க்க முயல்கிறோம், ஆனால் ஏன் இந்த விளைவுகள் என்று யோசிப்பதில்லை.  எந்த விளைவும் தானே அல்லது தற்செயலாக நிகழ்வதில்லை.  எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

இதைத்தான் "வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை  விதைத்தவன் தினை அறுப்பான்" என்றும் கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் "cause and effect" என்று சொல்கிறோம்.

நமக்கு ஒரு துன்பம் நேரும்போது யாரும் நம் முன் வந்து நீ இந்த செயலை செய்ததால் இந்த துன்பம் வந்தது என்று கூறுவதில்லை.  நாமும் விளைவில் வருந்தும் அளவுக்கு காரணத்தை யோசிப்பதில்லை.

நம்மை அப்பழுக்கற்ற மனிதர்களாக நினைத்துகொண்டு "நமக்கு ஏன் இந்த சோதனை என்று புலம்புகிறோம்".  என்னுடைய எந்த தீய எண்ணங்களால் இந்த விளைவு என்று யோசித்தால் வாழ்வில் மறைந்து கிடக்கும் நியாயங்கள் புலனாகின்றன.

நமது எண்ணங்களுக்கு ஏற்பத்தான் நம்முடைய சூழ்நிலைகள் அமைகின்றன. தீக்குள் விரலை வைத்தால் சுடுவது போல தீய எண்ணங்களின் விளைவுகள் உடனுக்குடன் நிகழ்வதில்லை. அப்படி நிகழ்ந்தால் நமக்கு காரண காரியம் புலப்பட்டுவிடும். நாமும் தவறுகள் செய்ய மாட்டோம்.  ஆனால் வாழ்வில் அப்படி எண்ணங்களுக்கும் விளைவுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதில்லை.

எண்ணங்கள் ரகசியமானவை, அவற்றை மறைத்துவிடலாம் என்று நாம் நினைக்கிறோம்.  ஆனால் அவற்றை ஒரு நாளும் ஒளித்து வைக்க முடியாது.

நாம் எதை மற்றவர்களுக்கு நினைகிறோமோ அல்லது செய்கிறோமோ அது நமக்கே வந்து சேர்கிறது.

நமக்கு வந்த துன்பங்கள் எத்தகைய எண்ணங்களினால் உருவாயின என்று ஆழ்ந்து யோசிக்கும்போது நமக்கு காரண காரியம் புலப்படத் தொடங்கும்.

புத்தகத்தினை படித்தவுடன் அதில் உள்ள சில சிந்தனைகளை அசை போட்டு பார்த்தேன். மிகவும் சத்தியமான வார்த்தைகள் அவை.

காரண காரியங்களைப் பற்றி அறியாமல் அல்லது கவலைப்படாமல் வாழ்வின் நியதிகளுக்கு மாறாக செயல்கள் செய்த பலரும் இன்று அதற்கான பலனை அனுபவிப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

என் காரின் பின்னால் நான் எழுதியிருக்கும் வாசகம் "தீதும் நன்றும் பிறர் தர வாரா".  இந்த ஒரு சொற்றொடரின்  விளக்கம்தான் மேலே சொன்ன அத்தனை விசயங்களும்.

"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கத் தேவையில்லை" என்ற திருமூலரின் வார்தைகளை இங்கு நினைவில் கொள்வோம்.





Sunday, March 23, 2014

நம்பிக்கையில் நிம்மதி

நம்பிக்கையில் நிம்மதி

நான் அடிக்கடி படிக்கும் புத்தகங்களில் ஒன்று கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்.  இதன் ஆறாம் பாகம் 'நெஞ்சுக்கு நிம்மதி' என்ற புத்தகத்தை இன்று புரட்டிக் கொண்டு இருந்தபோது கண்ணில் பட்டது 'நம்பிக்கையில் நிம்மதி' என்ற தலைப்பு.  வாருங்கள் கவிஞரின் வார்த்தைகளை கொஞ்சம் உள் வாங்கலாம்.

எதன் மீது எனக்கு சந்தேகம் வந்தாலும் நிம்மதி தொலைகிறது.  எது பிடிக்கவில்லையோ அதில் இருந்து ஒதுங்கி  நில். ஆனால் தினமும் சந்தேகப்பட்டு உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொள்ளாதே.

சாப்பிட்டு முடித்த பின் எதை சாப்பிட்டோமோ என்று நினைத்தால் அடிவயிற்றை கலக்கும்.  சாப்பிடுவதற்கு முன்னாலேயே நன்றாகப் பார்.

யோசித்து செய்த முடிவுகளில் நம்பிக்கை வை.

திருப்பதிக்கு போவது என்று முடிவு கட்டினால் திரும்பி வரும்போது பலன் இருக்கும் என்று நம்பு.

நம்பிக்கையும் சந்தேகமும் மாறி மாறி இருந்தால் அப்போதும் நிம்மதி இருக்காது.  மீன் கூடைக்கு பக்கத்தில் பூக்கூடையை வைத்தால் மீன் வாசமும் தெரியாது பூ வாசமும் தெரியாது. கலப்படமான ஒரு அருவருப்பே தோன்றும்.

இன்றைய பொழுது நன்றாக இருக்கும் என்று நம்பு. நன்றாகவே இருக்கும்.

தண்ணீரில் விழுந்து விட்டால் நீந்தத்  தெரியும் என்று நம்பு. நீந்தத் தெரிந்து விடும்.  கடன் வந்துவிட்டால் கட்ட முடியம் என்று நம்பு. கட்டிவிட முடியும்.

திருநீறோ திருமண்ணோ இடும் போது கடனுக்கு இடாமல் நம்பிக்கையில் இடு. அவை இருக்கும்வரை மூளை பிரகாசிக்கும்.

நாளைக்குத்  திருச்சிக்கு போகிறோம் என்று Rockfort  எக்ஸ்ப்ரஸில் ஏறு.  அது திருச்சி போய்  சேர்ந்து விடும். இதுவா போகும் என்று சந்தேகப்படு.  அது புறப்படவே புறப்படாது.

நம்பினால் கை கொடுப்பது நம்பிக்கை.

என்ன நண்பர்களே எப்படி இருக்கிறது கவிஞரின் வார்த்தைகள். எப்போதாவது நமக்கு வாழ்க்கையில் அவநம்பிக்கை தோன்றினால் சற்று கவிஞரின் வார்த்தைகளை படிப்போம். நம்பிக்கை கொள்வோம்.

  










Saturday, March 8, 2014

பெண்மையை போற்றுவோம்


பெண்மையை போற்றுவோம் 

பத்து  மாதம் சுமந்த கடனுக்காக காலம் முழுவதும் ஆண்களை வட்டி கட்ட வைப்பவர்கள் பெண்கள்.  ஆண்களுக்கு சற்றும் சளைக்காமல் பப்பில் (PUB) உட்கார்ந்து "கப் கப்" என்று அடிப்பவர்கள் பெண்கள். உள்ளத்து அழகை  விட உடல் அழகை அதிகம் நம்புவர்கள் பெண்கள். மூக்கை சிந்தி சிந்தியே ஆண்களை சந்தி சிரிக்க வைப்பவர்கள் பெண்கள்.  சுற்றும் வரை சுற்றி விட்டு கடைசியில் "அண்ணா" என்று அல்வா கொடுப்பவர்கள் பெண்கள்.  (எல்லா இடத்திலும் இந்தக  காலத்து பெண்கள் என்று படிக்கவும், இல்லைஎன்றால் அந்தக் காலத்துப் பெண்கள் (ஆயாக்கள் என்ற பாட்டிகள்) கோபித்துக் கொள்வார்கள்).

மேலே கூறியதில் கூட குறைய இருந்தாலும் உண்மைதானே என்று நினைக்கும் ஆண்களா (அல்லது பெண்களா) நீங்கள்.

தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவும்.  விதி விலக்குகளை வாழ்வின் விதியாக எண்ணி விடாதீர்கள்.

பொதுவாக ஒரு பெண் தாயாக, சகோதிரியாக, மனைவியாக, மகளாக மற்றும் நட்பாக - ஏதாவது ஒரு உறவில் மற்றொரு ஆணை வழி நடத்துபவளாக இருந்து கொண்டுதான் இருக்கிறாள்.

என் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் (அப்படி என்ன பெரிய முன்னேற்றம் என்று கேட்டு விடாதீர்கள்) என் மனைவியின் பங்கு மிக அதிகம் என்று சொன்னால் அது மிகை இல்லை.  சின்ன சின்ன விசயங்களில் கூட என்னிடம் முரண்படும் என் மனைவி, நான் எடுக்கும் முக்கிய முடிவுகளில் எல்லாம் தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்ததால்தான் நான் இன்று வெளி உலகில் நம்பிக்கையுடன் நடை போட முடிகிறது.

இன்று உலகில் வெற்றிகரமாக உலவி வரும் பல ஆண்களின் பின்னால் சத்தமில்லாமல் தோள் கொடுப்பவர்கள் பெண்கள்தான்.

ஒவ்வொரு ஆணும் தன் வீட்டுப் பெண்களை (மனைவியோ, தாயோ, சகோதிரியோ, அல்லது மகளோ) முழுமையாக மதித்து அன்பு செலுத்தினாலே உலகில் பல தவறான உறவுகள் ஏற்படாது என்பது என் தாழ்மையான கருத்து.

தவறான உறவால் கேட்டுப் போன ஆண்களைவிட சரியான நட்பால் உயர்ந்த ஆண்கள் அதிகம்.  (பல சமயங்களில் சில ஆண்களின் சுயநலத்தால் தவறிய பெண்கள்தான் அதிகம்).

நீரின்றி அமையாது உலகு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை பெண் இன்றி அமையாது ஆணின்  வாழ்வு (இதற்கு முற்றும் துறந்த ஆதி சங்கருரும், ரமணருமே சாட்சி).

பெண்களை மதிப்போம்.  பெண்களை உயர்த்துவோம்.  பெண்களால் உயர்வோம்.





Saturday, March 1, 2014

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி

படுத்த பத்தாவது நொடியில் ஆழ் துயில் கொள்ளும் எனக்கு மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் முழிக்க வேண்டும் என்ற நினைவே மஹா அசதியை தந்தது.  என்றாலும் 'எண்ணிய முடிதல் வேண்டும்'  என்ற முடிவில் முழிக்க ஆரம்பித்தேன் (பரிட்சையில் கூட இப்படி முழித்தது இல்லை).

டிவியை ஆன் செய்து ஒவ்வொரு சேனலாக மாற்றினேன்.  நம்மை தூங்க விடக் கூடாது என்று ஒவ்வொரு சேனலும் வேலை செய்து கொண்டிருந்தது. ஈஷா யோகாவின் மஹா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிரந்த சேனலில் கவனத்தை செலுத்தினேன்.

சத்குரு அவர்களின் உரையும், மக்கள் கூட்டமும், இசையும், அந்த இடத்தில் ஒரு சிறந்த  அதிர்வலையை ஏற்படுத்தி இருந்ததை உணர முடிந்தது.  சத்குரு "ஷம்போ" மஹா மந்திரத்தை தியானம் செய்ய சொன்னதும் மொத்த கூட்டமும் அவர் சொன்னபடியே கைகளை வயிற்றுக்கும்  மார்புக்கும் இடையில்  வைத்து தியானம் செய்யத்  தொடங்கியது.

நானும் என் வீட்டில் இருந்தபடியே தியானம் செய்யத் தொடங்கினேன். கொஞ்ச நேரம்தான்.     "ஷம்போ"  "அம்போ" ஆகிவிட்டது. முழித்துப் பார்த்தால் ஒரு அரை மணி நேரம் ஆகிவிட்டிருந்தது.  நான் ஆழ் நிலை தூக்கத்தில் இருந்தேனா  அல்லது  ஆழ் நிலை தியானத்தில் இருந்தேனா  என்று தெரியவில்லை.  ஆனால் மனம் இப்போது நல்ல விழிப்புடன் இருந்தது.

என் விழிப்பைப் பற்றி கவலைப் படாமல் என் மனைவியும் குழந்தைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் - எங்கே யாரவது தூக்கத்தைப் பறித்துக் கொண்டு விடுவார்களோ என்பது போல போர்வையை இழுத்துப் போர்த்தியபடி இருந்தார்கள்.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் நாமும்  போர்வைக்குள் அடைக்கலம் ஆகி விடுவோம் என்ற பயத்தில் வெளியே வந்து,  பின்னிரவை புத்தகம் படித்துக்கொண்டும், டிவி பார்த்துக்கொண்டும், ஊஞ்சல் ஆடிக் கொண்டும் மெதுவாக கழித்தேன்.

பொதுவாக கண் முழிப்பவர்கள் கோவிலுக்கு சென்றோ அல்லது சத்சங்கத்திலோ நேரத்தைக்  கழிப்பார்கள்.  ஆனால்  நான் மட்டும் வள்ளலார் சொன்னபடி "தனித்து இருந்து விழித்து இருந்தேன்".

முடிந்தால் ஒரு இரவு தனித்து இருந்து விழித்துப் பாருங்கள். வாழ்கையின் மற்றொரு கோணம் புரிய ஆரம்பிக்கும்.