Friday, August 28, 2015

தவமின்றி கிடைத்த வரமே


Advocate  தொழிலில் இருப்பதால் இப்போதெல்லாம் நிறைய விவாகரத்து case- களும் வருகின்றன.  நாய் விற்ற காசு குரைக்காது என்று தெரியும். இருந்தாலும் பிரித்து வைத்து சம்பாதிக்க மனம் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால்  விவாகரத்து வழக்குகளை நடத்துவதில்லை என்று ஒரு பொதுவான விதியை வைத்து இருக்கிறோம். 

மிகவும் அரிதாக ஒன்றிரண்டு வழக்குகளைத்  தவிர விவாகரத்துக்கான காரணங்கள் பெரும்பாலும் மிகவும் silly ஆக இருக்கின்றன. இந்தக் காரணங்களுக்கெல்லாம்   விவாகரத்து செய்து இருந்தால் நம்முடைய பெற்றோரோ அல்லது ஏன் நாமோ கூட (I mean கல்யாணம் செய்து சண்டையும் சமாதானமுமாக இருக்கும் பெரும்பான்மையான தம்பதியர்) குறைந்தது சில நூறு தடவையாவது விவாகரத்து செய்து கொண்டிருக்க வேண்டி இருந்திருக்கும்.

விவாகரத்துக்கு  வரும்  சில  தம்பதியர் குறைந்தது 6 அல்லது 7 வருடங்கள் காதலித்து கரம் பிடித்தவர்கள் (காதலித்து இருக்கும் போதும் பிடித்து (??) இருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை) .  "என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" என்று ஆணும், "தவமின்றி கிடைத்த வரமே, இனி  வாழ்வில் எல்லாம் சுகமே" என்று பெண்ணும்  உருகி உருகி காதலித்தவர்கள்தான்.  ஆனால் கல்யாணம் ஆகி சில வருடங்களில் (அல்லது சில மாதங்களில்)  court படி ஏற வேண்டிய நிலை என்ன என்று யோசித்தால் சில விசயங்கள் புரிகிறது.

ஆங்கிலத்தில் juxtaposition என்று ஒரு வார்த்தை உள்ளது. இதன் ஆங்கிலப் பொருள் "place something closely alongside something else".  சுருக்கமாக சொல்வதென்றால் இரு துருவங்கள் இணையும் இடம் என்று பொருள் கொள்ளலாம்.  நாம் இப்போது கிட்டத் தட்ட அந்த காலக் கட்டத்தில் இருக்கிறோம்.

அதாவது "அடங்க மறு அத்து மீறு" என்று தொல் திருமா பாணியில் பெண்ணும், அதே கோஷத்துடன் ஆணும் புறப்பட்டு இருப்பதுதான் (விந்தையாக இருந்தாலும் அதுதான் உண்மை - atleast நடுத்தர வர்க்கங்களில்  அல்லது அதற்கும் மேலே).

ஆணும் பெண்ணும் சமமாக வளர்க்கப்படும் இந்த நாட்களில் இருவருக்குள்ளும் ego சரிசதவிகிதமாக இருக்கிறது. அடிப்படையில் ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் தான் இருக்கிறோம். ஆண் Hello FM என்றால் பெண் Big FM   (Hello அது என்ன ஆண் என்றால் Hello பெண் என்றால் Big என்று சண்டைக்கு வந்து விடாதீர்கள் - ஒரு எதுகை மோனைக்காக போட்டது. வேண்டுமானால் மாற்றிப் போட்டுக் கொள்ளுங்கள்). அதனால் இரண்டும் ஒரே அலைவரிசையில் இருக்க முடியாது.  அவரவர் நிலையில் இருந்துதான் ஒரே விஷயத்தை இருவரும் அணுகுவார்கள். அதனால் கருத்து வேறுபாடு தவிர்க்க முடியாதது.  அதே சமயத்தில் ஆணோ பெண்ணோ மற்றவரை சார்ந்து இருக்கும் சமயங்களில் அடங்கி இருப்பார்கள் (அல்லது அடங்கி இருப்பது போல இருப்பார்கள்).  இல்லாவிட்டால் அடங்க மறு அத்து மீறுதான்.


இதற்குதான் நம் முன்னோர்கள் "அர்த்தநாரி" தத்துவத்தை சொன்னார்கள். அதாவது ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். அதே போல ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள் என்று.   இதன் முக்கிய பொருள் எந்த ஒரு விஷயத்திலும் ஆண் இந்த விஷயத்தை எந்தக் கோணத்தில் அணுகுவான் என்று பெண்ணும் அதே போல பெண் இந்த விஷயத்தை எந்தக் கோணத்தில் அணுகுவாள் என்று ஆணும் சிந்திப்பதுதான்.  இப்படிச் செய்தாலே பல தகராறுகளை தவிர்த்து விட முடியும்.

ஆனால் இதற்குத் தேவை கொஞ்சம் சிந்திக்கும் திறனும், ஈகோவை மிஞ்சின கொஞ்சம் extra அன்பும்தான்.

அப்படி இருந்தால் சண்டையே வராதா என்று கேட்காதீர்கள்.  அப்பவும் நிறைய வரும்.  ஆனால் முதல் நாள் போட்ட சண்டையை மறந்து விட்டு மறுநாள் ஆனந்தமாக சிரித்துக் கொண்டு இருப்போம் - சிரிப்பின் முடிவில் மற்றொரு சண்டை ஆரம்பிக்கக்கூடும் என்று தெரியாமல்.

சண்டையே வேண்டாம் என்று நினைத்தால் சரணாகதி தத்துவம்தான் ஒரே வழி.   நான் ஏன் சரணாகதி அடைய வேண்டும் என்று இருவரும் நினைத்தால் அதற்கு இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம்.  அது வரை சந்தோஷமாக சண்டை போட்டுக் கொண்டிருப்போம்.



Sunday, August 16, 2015

நல்லாயிரு



சமீபத்தில்  படித்த ஒரு கதை.  நீங்களும் கேள்விப்பட்டு இருக்கலாம்.  இருந்தாலும் நல்ல விஷயங்களை மீண்டும் படிப்பதில் தவறில்லை என்பதால் இந்தப் பதிவு.

ஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான்.  எல்லோரையும் எப்போதும் வம்புக்கு இழுத்துக் கொண்டே இருப்பான். அதனால் அவனிடம் நெருங்குவதற்கே எல்லோரும் பயப்பட்டார்கள்.  ஆரம்பத்தில்  அவனுக்கு இதில் ஒருவித பெருமிதம் இருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல தன் மீதே அவனுக்கு ஒரு கோபம் தோன்றியது.  தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.   ஆனால் எப்படி என்று தெரியவில்லை. 

அந்த சமயத்தில் அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்தார். அவரிடம் சென்று அந்த முரடன் தானும் ஒரு சாதாரண ஒரு மனிதனாக எல்லோரையும் போல் வாழ வேண்டும் என்று ஆசைப் பாடுவதாகவும் அதற்கு அந்த ஞானி உதவ வேண்டும் என்றும் வேண்டினான். 

அந்த ஞானி சிரித்துக் கொண்டேஅவனிடம் இனி யாரைப் பார்த்தாலும் "நல்லாயிரு" என்று சொல்லிக் கொண்டே இரு. வேறு எதுவும் அவர்களிடம் பேசாதே என்று சொல்லி சென்று விட்டார்.

முரடனுக்கு இப்போது ஒரே குழப்பம் மற்றும் சந்தேகம்.  எப்படி நல்லாயிரு என்ற ஒரு வார்த்தை தன்னுடைய வாழ்க்கையை மாற்றிவிடும் என்று. இருந்தாலும் சொன்னது ஞானி ஆயிற்றே.  அதனால் முயற்சி செய்து பார்த்து விடுவோம் என்று முடிவு செய்தான். 

அன்றிலிருந்து அவன் யாரைப் பார்த்தாலும் நல்லாயிரு என்ற வார்த்தையை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.  அவனை இதுவரை முரடனாக பார்த்தவர்கள் எல்லாம் இப்போது அவனை வியப்புடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.  அவனைத் தெரியாத பக்கத்துக்கு ஊர்க்காரர்கள் அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நம்ப ஆரம்பித்தார்கள்.  

ஊர்க்காரர்கள் சிலருக்கு அவன் நல்லாயிரு என்று சொன்ன ராசி சில நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பித்ததும் அவனைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.  

இப்போது அந்த முரடன் யோசிக்க ஆரம்பித்தான்.  ஒரே ஒரு நல்ல வார்த்தை சொன்னதற்கே இவ்வளவு நல்லது நடக்க ஆரம்பித்தால் நம் வாழ்க்கை முழுவதும் நல்ல வார்த்தைகளை பேசினால் எப்படி இருக்கும் என்று.  

முன்பு சந்தித்த ஞானி இப்போது மறுபடியும் அந்த முரடன் இருந்த ஊருக்கு வந்தார்.  முரடன் அந்த ஞானியை வணங்கி தன்னுடைய வாழ்கை மாற்றத்தினை சொன்னான்.  

ஞானி சிரித்துக் கொண்டே சொன்னார் "நல்லாயிரு" என்று.


சமீபத்தில் படித்த இன்னொரு விஷயம்.

நம் ஊரில் திருக்குறள் முனுசாமி என்ற ஒரு பிரபல பேச்சாளர் இருந்தார்.  திருக்குறளை நாடு முழுவதும் கொண்டு சென்ற முன்னோடி இவர்.  திருக்குறளார் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் இவர்.

ஒரு முறை அவரிடம் ஒருவர் தன்னுடைய பிள்ளைகள் தன் பேச்சை கேட்பதில்லை என்று ஆதங்கப் பட்டார்.

அதற்கு திருக்குறளார் சொன்ன பதில் classic.

அவர் சொன்னார்.  நாம் பிறந்ததில் இருந்து நம் கூடவே இருக்கும் நம் கை கால்களே ஒரு காலத்தில் நம் பேச்சைக் கேட்பதில்லை.  அப்படி இருக்கும் போது நம் வாழ்வின் பாதியில் வந்த பிள்ளைகளோ மற்ற உறவுகளோ நம் பேச்சைக் கேட்பார்கள் என்று நினைப்பது எப்படி சரியாக இருக்க முடியும் என்று.

அப்போதுதான் யோசித்தேன். 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்து  நாம்  வைத்த அலாரத்தை நாமே கேட்பதில்லை.  பிறகு நம் பேச்சை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமானது.


அனந்தராமன் சார்

திருவல்லிக்கேணி அருணாச்சலம் தெரு எண் 36-இல் இருக்கும்  குடியிருப்பு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும்.  இந்தக் குடியிருப்பின் மாடியில் உள்ள வீட்டில்தான் அனந்தராமன் சார்  வசித்து வந்தார்.  வீட்டின் வாசலில் K S .Anantharaman, Advocate & Professor என்ற ஒரு board மட்டும் இருக்கும். ஆனாலும் இந்த விலாசம் ஊர் அறிந்த ஒன்று.

அந்த வீட்டின் ஹாலில் அதிக பட்சம் 15 பேர் அமர முடியும்.  ஆனால் இந்த ஹால் அனந்தராமன் சார் மூலமாக பல நூற்றுக்கணக்கான கம்பெனி செக்ரெட்டரிகளையும் (Company Secretaries) Aravind Dattar  உள்ளிட்ட பல வழக்கறிஞர்களையும் (Advocates) உருவாக்கியுள்ளது.

அவர் தன்னுடைய 87 வது வயதிலும் கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் கொண்டு இருந்ததால்  அவருக்கு 60 வயது முதல் 20 வயது வரை எல்லா வயதிலும் மாணவர்கள் உண்டு.   அவர்களில் பெரிய வழக்கறிஞர்களாகவும், அல்லது உயர்ந்த பதவிகளிலும் இருப்பவர் பலர்.   ஆனால் எவரிடமும் பர்சனல் ஆக எந்த உதவிக்கும் செல்லாதவர்.  

சில ஆண்டுகளுக்கு முன் நான்  நண்பர்கள் Prakash மற்றும் Sandeep உடன் சென்று அவரை சந்தித்து ஒரு shirt பரிசாக  அளித்து ஆசி பெற்று வந்தோம்.  அந்த shirt ஐ கொடுப்பதற்கே, ஏதாவது சொல்லி விடுவாரோ என்று கொஞ்சம் பயந்தோம்.  நல்ல வேளை எதுவும் சொல்லாமல் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

நானும் அவரிடம் Company Law கற்றுக் கொள்வதற்காக ஒரு மாணவனாக சேர்ந்தவன்தான். ஆனால் விரைவில் Teacher - Student என்ற நிலையில் இருந்து குரு சிஷ்யன் என்ற நிலைக்கு வந்தது. என்னைப் போலவோ அல்லது என்னை விட அதிக நெருக்கமாகவோ அவருக்கு பல சிஷ்யர்கள் உண்டு.  என்னைப் பொறுத்தவரை நான் அவரை மிகவும் நெருக்கமாக நினைத்தற்கு சில காரணங்கள் உண்டு.

நான் Company Secretaryship Course சேர்ந்த போது வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.  அதனால்  வேலை பளுவின் நடுவில் exam-ஐ சுலபமாக பாஸ் செய்வது எப்படி என்ற கோணத்தின் அடிப்படையில்தான் அவரிடம் சேர்ந்தேன்.   ஆனால் அவர் law subject எடுத்த விதம் என்னை  வெறும் மார்க்குக்காக படிக்காமல் subject-ஐ ஆழமாக படிக்கும் ஆர்வத்தினை உண்டாக்கியது.

அனந்தராமன் சார் மிகவும் கோபக்காரர்.  அவர் வீட்டில் வரிசையாக போட்டிருக்கும் chair-களை நம் இஷ்டத்திற்கு மாற்றினாலோ அல்லது உட்காரும் போதும் எழுந்திருக்கும் போதும் chair-களை நகர்த்தி சத்தம் உண்டாக்கினாலோ tension ஆகி விடுவார்.   கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப உடனே கோபம் தணிந்து cool ஆகி விடுவார்.

அவரின் கோபத்திற்கு இடையில் புகுந்து தப்பித்து அவரின் அன்பை மட்டும் பெற்ற பாக்கியவான்களில் நானும் ஒருவன்.

ஸ்ரீனிவாசன் உங்களுக்கு law subject நன்றாக வருகிறது.   Advocate தொழிலில்  உங்களால் நன்றாக shine ஆக முடியும் என்று சார் சொன்னதும் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி  பட்டம் வாங்கிய மகிழ்ச்சி எனக்கு.

அவருடைய Lectures on Company Law புத்தகத்தின் 7 வது பதிப்பின் போது என்னை பிழை திருத்தம் (proof reading)  செய்யச் சொன்னார். எனக்கு company law-வை ஓரளவு முழுமையாக அறிந்து கொள்ளும் ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக அது அமைந்தது.

அந்தப் பதிப்பில் என்னுடைய பெயரை போட்டு எனக்கு நன்றி கூறியதை highlight செய்து ஊருக்கெல்லாம் காட்டிக் கொண்டிருந்தேன்.  அது அவ்வளவு பெருமையான விஷயமாக இருந்தது.

அந்தப் பதிப்பின் ஒரு புத்தகத்தில் "With Blessings"  என்று தன் கைப்பட எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தாலும் கடந்த ஓராண்டாக அவரை சந்திக்கவில்லை.  அதற்கு ஒரு முக்கியமான காரணம் நான் "Professional Guide on Drafting, Appearances and Pleadings" என்ற தலைப்பில் ஒரு சிறிய புத்தகம் எழுதி இருந்தேன்.  அதை அவரிடம் காட்டி அவரின் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  ஏனென்றால் இந்தப் புத்தகம் எழுதுவதற்கான நம்பிக்கையையும்  அறிவையும் ஊட்டியது அவர்தான்.  ஆனாலும் அந்தப் புத்தகத்தை அவரிடம் நேரில் காட்டுவதற்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு உதறல்.  அதனால் அதை தள்ளி வைத்துக் கொண்டே இருந்தேன்.  வாழ்கையில் சில விஷயங்களை நினைத்தபோது செய்து விட வேண்டும்.   ஏனென்றால் மீண்டும் செய்வதற்கு அது வாய்க்காமல் போய் விடக் கூடும்.

அதனால் என்ன சார், உங்கள் "Blessings" இன்றும் என்னுடன் உள்ளது.  எப்போதும் அது என்னுடன் இருக்கும்.


Monday, July 27, 2015

அணைந்து விடாத அக்னிச் சிறகுகள்


நாம் வாழ்நாளில் ஒரு முறை கூட நேரில் பார்க்காத ஒரு மனிதரின் மரணம் நம்  இதயத்தில் ஒரு வலியை உருவாக்கி, நம்  கண்களில் ஒரு சொட்டு கண்ணீரையாவது வரவழைத்தால் அந்த ஆத்மாவிற்கு பெயர்தான் மகாத்மா. 

இந்தியாவின் ஒரு கோடியில் பிறந்து மறு கோடியில் இறந்தாலும், ஒவ்வொரு இந்தியரும் தனக்கு நெருக்கமானவர் இவர்  என்று நினைக்க வைத்தால் அவர் சாதாரண மனிதராக இருக்க முடியாது. ஒரு மகானாகத் தான் இருக்க முடியும்.

தூக்கத்தில் வருவது அல்ல கனவு.  உன்னை தூங்கவிடாமல் இருக்க வைப்பதுதான் கனவு என்று கனவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கிய மாமேதை கலாம் தன்னுடைய அக்னிச் சிறகுகளை விரித்து விண்ணோக்கிப் பறந்து விட்டார்.

நான் என்னுடைய வாழ்வின் இறுதியில்  குழந்தைகளுடன் நடுவில் இருக்க (இறக்க)  விரும்புகிறேன் என்ற தன்னுடைய கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நம் நன்றிகள்.

இப்படி ஓயாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறீர்களே - எப்போது ஓய்வு எடுப்பீர்கள் ? என்ற கேள்விக்கு கலாம் அளித்த பதில் "ஓய்வு என்பது என்ன. நமக்குப் பிடித்த வேலையை மகிழ்ச்சியாக செய்து கொண்டு இருப்பதுதான். அதனால் நான் எப்போதும் ஓய்வாகத் தான் இருக்கிறேன்".  மரணத்தின் கடைசி நொடி வரை உழைத்த மனிதனுக்கு இனி நிரந்தரமான ஓய்வு.

ஒருமுறை கலாமிடம் சிறந்த தலைவனுக்கான அடிப்படைத் தகுதிகள் (good leadership qualities)  என்ன என்று கேட்டபோது அவர் பட்டியலிட்ட ஆறு அடிப்படைத் தகுதிகள்:

1. உயரிய நோக்கம் ( Great Vision) 
2. புதிய பாதையில் பயனித்தல் (Able to travel the untravelled path)
3. தோல்விகளை எதிர்கொள்ளும் திறமை (Able  to manage failures)
4. முடிவெடுக்கும்  துணிவு (Courage to take decision)
5. நேர்மையான செயல் மூலமான வெற்றி (Work with integrity and succeed with it)
6. மனிதர்களுடன் பழகும் திறன் (Able  to mix with people)  

ஆறு அடிப்படைத் தகுதிகள் மட்டுமல்லாது, பல நூறு தகுதிகள் பெற்ற கலாம் உங்களுக்கு ஒவ்வொரு இந்தியனின் சார்பிலும் ஒரு சலாம். 

 
கலாமின் அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத்தில் இருந்து சில வைர வரிகள்.

ஒருவர் தன் வாழ்நாளில் தனக்குரிய இடத்தில் என்ன நிலையில் இருக்கிறாரோ, நல்லதோ கெட்டதோ எந்த நிலையை அவர் எட்டி இருந்தாலும் அது தெய்வ சங்கல்பம்.

உங்களுடைய குழந்தைகள் எல்லாம் உங்களுடைய குழந்தைகள்  அல்ல. அவர்கள் உங்கள் மூலமாக வந்தவர்கள்.  அவர்களிடம் நீங்கள் உங்கள் அன்பை வழங்கலாம். ஆனால் உங்களுடைய சிந்தனைகளை அல்ல. தங்களுக்கு என்ற  சிந்தனை கொண்டவர்கள் அவர்கள்.

நம்பிக்கை வைத்தால் உன் தலைவிதியை உன்னால் மாற்றி அமைக்க முடியும்.

எந்த சிக்கலான சூழ்நிலையிலும் பலனைப் பற்றி யோசிக்காமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இரு.  ஏனென்றால் சிக்கலான எல்லா விஷயங்களிலுமே இழப்பு என்பது தவிர்க்க முடியாது.

மற்றவர்களை அறிந்தவன் பண்டிதன். தன்னை அறிந்தவன்தான் உண்மையான கல்விமான்.  விவேகம் தராத கல்வி பயனற்றது.

எதிர்கால வாய்ப்புகள் பற்றி யாரும் கவலைப்படவே கூடாது.  மாறாக வலுவான அடித்தளம் அமைப்பது அது பற்றிய ஆர்வம், தேர்வு செய்துள்ள துறையில் தீவிரமான நாட்டத்தை வளர்த்துக் கொள்வது என்பதுதான் மிகவும் முக்கியம்.

கடவுள் உங்களுடைய நம்பிக்கையாகவும், ஜீவனாகவும் , வழிகாட்டியாகவும் இருந்து உங்களுடைய எதிர்காலத்தை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் ஒளி  வழங்கட்டும்.

எனக்கான வாய்ப்புக்களை நானேதான்  உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

சர்வ சக்தி கொண்ட எல்லைகள்தான் உன்னுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.  எவ்வளவு அதிக சுமையையும் உன்னால் மட்டுமே தூக்க முடியும்.  எவ்வளவு வேகமாகவும் உன்னால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும்.  எவ்வளவு கடுமையாகவும் உன்னால் மட்டுமே பாடுபட முடியும். எவ்வளவு தொலைவாக இருந்தாலும் உன்னால் மட்டுமே பயணப்பட முடியும்.  

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

சந்தேகத்தை அறவே விடுத்து அலட்டிக் கொள்ளாமல் இருக்கும்போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்.

பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொண்டு சமாளியுங்கள்.

வாட்டி வதைத்தாலும் கடுமையாகப் பாடுபட்டால்தான் பிரச்சனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு  காணமுடியும்.

பிரச்சனைகள்தான் உள்ளார்ந்த துணிச்சலையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகின்றன.

நான் என்றுமே தெய்வ நம்பிக்கை கொண்டவன்.  எனது பணியில் இறைவனையும்  பங்குதாரராக சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.  அபாரமான வேலைக்கு எனக்கிருக்கும் திறமையை விட  அதிகம் தேவை என்பதை அறிந்திருந்தேன்.  எனவே கடவுளால் மட்டுமே தரக் கூடிய உதவியை நாடினேன்.

உனது எல்லா நாள்களிலும் தயாராக இரு 
எவரையும் சம உணர்வோடு சந்தி 
நீ பட்டறைக் கல்லானால் அடிதாங்கு 
நீ சுத்தியானால் அடி.

உனது பயணத்தில் நடை போடுவதற்கு இறைவன் உனக்கு ஒளி  காட்டுவான்.

கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுமதிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

உங்கள் முன்னே  நடமாடித் திரிவதற்காக எந்த  தேவ தூதரையும் நாங்கள் அனுப்பவில்லை. ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக நடந்து கொள்வதை வைத்துதான் உங்களை சோதிக்கிறோம். அதற்குக் கூட உங்களிடம் பொறுமை இல்லையா ?

கவலைப் படாதே, முணுமுணுக்காதே 
மனம் தளராதே, இப்போதுதான் 
வாய்ப்புக்கள் வர ஆரம்பித்துள்ளன 
சிறந்த  பணி  இன்னும் ஆரம்பமாகவில்லை 
சிறந்த பணி இன்னும்  முடிக்கப் படவில்லை.

காலத்தின் மணல் பரப்பில் 
உன் காலடிச் சுவடுகளைப் 
பதிக்க விரும்பினால் 
உனது கால்களை 
இழுத்து இழுத்து நடக்காதே.

உங்களுடைய  கல்வியையும் திறமையையும் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அறிவாற்றல்தான் நிதர்சனமான நிலையான சொத்து என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

வெற்றி அடைந்த எல்லோரிடமும் காணப்படும் பொதுவான அம்சம் முழுமையான பொறுப்புணர்வு. 

வெற்றிகளால் மட்டுமே நாம் உயர்ந்துவிட முடியாது. தோல்விகளாலும் நாம் முன்னேறுவோம் என்பதை எப்போதுமே  மறந்துவிடக் கூடாது.

கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு எதிர்காலத்திற்காக மட்டும் வாழ்வது சாரமற்ற முழுமை அடையாத ஒரு வாழ்க்கை.  சிகரத்தை எட்டுவதற்காக மலையின் பல்வேறு பகுதிகளை அனுபவிக்காமல் மலை ஏறுவதைப் போன்றது அந்த வாழ்க்கை.  இந்தப் பகுதிகளில்தான் மலையின் ஜீவன் இருக்கிறது.  சிகரத்தில் அல்ல.

மற்றவர்களின் சிந்தனையில் விளைந்த ஆதாயங்களைப் பயன்படுத்திக் கொண்டு நான் என்றுமே வாழ்ந்தது இல்லை. எனது வாழ்க்கையை நிர்ணயம் செய்திருப்பது   எனது இயல்புதான்.

யாருக்கு பெருமை போய்ச் சேரும் என்பதைப் பொருட்படுத்தாமல் செயல் ஆற்றுபவர்கள் மூலம்தான் மகத்தான காரியங்களை இறைவனால் நிறைவேற்ற முடியும்.

அபாரமான சாதனைகளை நிகழ்த்துவதில் ஆழமான ஈடுபாடு கொள்ளுங்கள். உடனே கிடைக்கும் செயற்கையான சந்தோஷத்தைத் துரத்தி அலையாதீர்கள். 

Friday, July 17, 2015

மந்திரி எந்திரி


ஆனந்த விகடனில் கடந்த சில வாரங்களாக தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் "மந்திரி தந்திரி" என்ற தலைப்பில் காய்ச்சிக் கொண்டு இருக்கிறார்கள்.  நானும் at least ஒரு மந்திரியாவது ஆனந்த விகடன் சொன்ன தகவல் தவறு என்று சொல்வார்கள் என்று பார்க்கிறேன்.    ஆனால் ஒன்றையும் காணோம்.

அதனால் பாதிக்கப் பட்ட மந்திரிகளின் சார்பில் ஆனந்த விகடனுக்கு ஒரு கடிதம் (இதற்கு ஆனந்த விகடன் கட்டுரையே பரவாயில்லை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல).

இனி கடிதம் .....


ஐயா ஆனந்த விகடனாரே உங்களுக்கு எங்கள் மேல் ஏன் இவ்வளவு கோபம் ? இப்படி "அபாண்டமான" உண்மைகளை போட்டு உடைத்து மக்களுக்கு எங்கள் மேல் இருக்கும் கொஞ்ச நஞ்சம் மரியாதையையும் கெடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.  

நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்று தெரிந்த உங்களுக்கு மந்திரி மூலமும் பார்க்கக் கூடாது என்று தெரியாதா  ?

எங்களில் பலர் படிக்காமல் பட்டம் வாங்கியதாக பெரிதாக குற்றம் சொல்லும் உங்களுக்குத் தெரியாதா நாமெல்லாம் (??) சிறு வயதில் படிக்கும் போதே பட்டம் வாங்கி விட்டவர்கள் என்று.  அப்போது அத்தனை பட்டம் வாங்கிய எங்களுக்கு மந்திரியான பிறகு கேவலம் ஒரு பட்டத்தை வாங்கத் தெரியாதா. அப்படி என்ன நாங்கள் ஆசைப்பட்டா இந்த பட்டத்தினை வாங்கினோம். நாங்கள் தேர்தலில் நிற்பதற்கு அடிப்படைத்  தகுதி என்று சொன்னதால் வாங்கினோம்.  வேண்டாம் என்று சொல்லுங்கள்  வாங்கிய பட்டத்தை தூக்கி எறிந்து விட்டு எங்கள் உண்மையான "டிகிரியான" ஐந்தாவது அல்லது ஆறாவது என்று போட்டுக் கொள்கிறோம்.

நாங்கள் பலரையும் ஏறி மிதித்து இந்த இடத்தை அடைந்து இருக்கிறோம் என்றால் இன்றைய அரசியல்வாதிகளுக்குரிய அடிப்படை தகுதி எங்களுக்கு இருக்கிறது என்று அர்த்தம்.  உங்களுக்கு எங்களைப் பற்றிய அப்பட்டமான உண்மைகள் தெரிவதற்கு எங்களால் மிதிபட்டவர்கள்தான் காரணம் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.  மிதி பட்டவர்கள் எந்த நேரம் எங்களை மீண்டும் மிதித்து விடுவார்களோ என்று ஒவ்வொரு கணமும் நாங்கள் தவித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?

உங்கள் மீது அவதூறு வழக்கு போடலாம் என்று கூட நாங்கள் நினைத்திருந்தோம்.  ஆனால் அப்படி ஏதாவது வழக்குப் போட்டு மிச்சம் மீதி உண்மைகளும்  நீதி மன்றத்தில் சந்தி சிரித்துவிடுமோ என்று அடங்கி விட்டோம்.

இப்போதெல்லாம் எங்களைப் பார்த்து யாராவது உண்மையிலேயே சிரித்தாலும், இவர்கள் இதை  நினைத்து சிரிக்கிறார்களோ அல்லது அதை நினைத்து சிரிக்கிறார்களோ என்று நாங்களாகவே பலதையும் நினைத்துக் கொள்கிறோம். நீங்கள் எதிர்பார்த்தது இதைத்தானா ?

ஒவ்வொரு வாரமும் விகடனைப் படித்துவிட்டு எங்கள் மேலிடம் நாங்கள் காரில் ஏறும் போது மந்திரி இறங்கும் போது எந்திரி என்று சொல்லிவிடுவார்களோ என்று நாங்கள் பயந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?  நாங்கள் கோவில் கோவிலாக சென்று பூஜை செய்வதும் மொட்டை போட்டுக் கொள்வதும் எங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டும்தான் என்பதை எங்களால் வெளிப்படையாக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறோம். 

நடுநிலைப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பல பத்திரிகைகளுக்கும் விளம்பரம் என்ற பெயரில் சொந்தச் செலவிலும் அரசு செலவிலும் லட்சக் கணக்கில் பணம்  கொடுத்து அவர்கள் வாயை அடைத்து விட்டோம்.  உங்களைத்தான் எப்படி correct பண்ணுவது என்று தெரியவில்லை.

ஆனால்  ஒன்று ஒவ்வொரு வாரமும் எங்கள் பெயர் கட்டுரையில்  வந்த பிறகு ஆட்டத்தில் out ஆன  பிறகு மற்றவர் ஆட்டத்தை ரசிக்கும் மனநிலைக்கு இப்போது வந்து விட்டோம்.

ஏதோ மக்கள் புண்ணியத்தாலும்,  மேலிடத்தின் ஆசியாலும் மந்திரி ஆகிவிட்டோம்.  இனி உங்கள் புண்ணியத்தில் மேலும் ஒரு முறை மந்திரி ஆக விட மாட்டிர்கள் என்று நினைக்கிறோம். 

வாழ்க உங்கள் தொண்டு. 

இப்படிக்கு பாதிக்கப்பட்ட மந்திரிகள் 

Saturday, July 4, 2015

இணங்கி இருக்கும் கலை


சமீபத்தில் ஓஷோவின் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன்.  இணங்கி இருக்கும் கலை என்ற தலைப்பில் கொடுக்கப் பட்டிருந்த அவருடைய கருத்துக்கள் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் இருந்தது. 

நம்முடன் நாம் கொண்டிருக்கும் உறவுதான் அடுத்தவருடன் நாம் கொண்டிருக்கும் உறவுக்கும் அடிப்படை என்ற அவருடைய கருத்து மிகவும் சிந்திக்க வேண்டிய ஒன்று.  

இதோ ஓஷோவின் வார்த்தைகள்.....
  
அன்பு என்பது அடுத்தவருடன் இணங்கி இருக்கும் கலை. தியானம் என்பது நீ உன்னுடன் இணங்கி இருத்தல். அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தன்னுடன் எப்படி இருப்பது என்று தெரியாத ஒருவரால் மற்றவருடன் உண்மையாக தொடர்பு கொள்ள  முடியாது. அவரது உறவுகள் அருவெறுக்கதக்கதாக, அசிங்கமானதாக, விபத்து போல, இருக்கும். ஒரு நிமிடம் எல்லாமும் நன்றாக இருக்கும், மற்றொரு நிமிடம் எல்லாமும் தவறாகி விடும். அது எப்போதும் மேலும் கீழுமாக சென்று வரும். அதற்கு ஆழமிருக்காது. அது மிகவும் கூச்சலிடும். அது உன்னை ஆக்ரமித்திருக்கும். ஆனால் அதில் எந்த லயமும் இருக்காது, அது உன்னை இயற்கையின் உயரங்களுக்கோ, இருப்பின் ஆழங்களுக்கோ எடுத்துச் செல்லாது.
மற்றொரு வகையிலும் இது அப்படித்தான். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவருக்கு தன்னுடன் தொடர்பு கொள்வதும் மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் தொடர்பு கொள்ளும் கலை என்பது அதேதான். உன்னுடன் நீ தொடர்பு கொள்வதோ, அன்றி மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதோ ஒன்றேதான். அதில் எந்த வித்தியாசமும் இல்லை.
இவை ஒரே நேரத்தில் சேர்ந்தே கற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவற்றை பிரிக்க முடியாது. மக்களுடன் இரு. தன்னுணர்வின்றி இருப்பது போல இருக்காதே. உணர்வுடன் இரு. புல்லாங்குழல் வாசிப்பது போல, ஒரு பாடல் பாடுவது போல மக்களுடன் தொடர்பு கொள். ஒவ்வொருவரும் ஒரு இசைக் கருவி போல. மரியாதை கொடு, அன்பு செய், அவர்களை ஆராதனை செய். ஏனெனில் ஒவ்வொருவருக்குள்ளும் இறைமை ஒளிந்திருக்கிறது.
அதனால் மிகவும் கவனமாக இரு. மிகவும் ஈடுபாட்டுடன் இரு. நீ சொல்வது என்ன என்பதில் கவனமாக இரு. நீ என்ன செய்கிறாய் என்பதில் கவனமாக இரு. சிறிய விஷயங்கள் உறவை சிதைத்துவிடும். சிறிய விஷயங்கள் உறவை மிகவும் அழகாக்கிவிடும். சில நேரங்களில் ஒரு புன்னகை கூட அடுத்தவரின் இதயத்தை உனக்கு திறந்துவிடும். சில நேரங்களில் உன்னுடைய கண்களில் இருக்கும் ஒரு தவறான பார்வை கூட அடுத்தவரின் இதயத்தை மூடி விடும். இதுதான் மிக மென்மையான செயல்பாடு. இதை ஒரு கலை. ஒரு ஓவியன் வண்ணத்திரையில் எவ்வளவு கவனமாக வரைவானோ அதைப் போலத்தான் இதுவும். ஒரு கோடு கூட வித்தியாசத்தை உண்டாக்கி விடும். ஒரு உண்மையான ஓவியனால் ஒரு சிறிய கோட்டின் மூலம் மிகப் பெரிய வித்தியாசத்தை கொண்டு வர முடியும்.
வாழ்க்கையை மிகவும் கவனத்துடன், மிகவும் மென்மையாக நுணுக்கமாக கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் மற்றவர்களுடன் நாம் தொடர்பு கொள்வது என்பது ஒரு கண்ணாடி போல. நீ என்ன செய்கிறாய், அதை எப்படி செய்கிறாய், என்ன நிகழ்கிறது என்று பார். அடுத்தவர்களுக்கு என்ன நிகழ்கிறது, நீ அவர்களது வாழ்க்கையை துயரமானதாக மாற்றுகிறாயா, நீ அவர்களுக்கு வலி கொடுக்கிறாயா, நீ அவர்களுக்கு ஒரு நரகமாக மாறுகிறாயா, அப்படி என்றால் விலகிவிடு. உன் வழியை மாற்றிக் கொள். உன்னைச் சுற்றி வாழ்க்கையை அழகாக்கு. உன்னை சந்திக்கும் ஒவ்வொருவரும் அதை ஒரு பரிசாக உணர வேண்டும். உன்னுடன் இருப்பதாலேயே ஏதோ ஒன்று பொங்கி பெருக வேண்டும், ஏதோ ஒன்று வளர வேண்டும், இதயத்துள் பாடல் மலர வேண்டும், மலர்கள் மலர வேண்டும். தனிமையில் இருக்கும்போது மௌனத்தில் இரு, நிசப்ததில் இரு, உன்னை நீயே கவனி.
எப்படி பறவைக்கு இரண்டு சிறகுகள் இருக்கிறதோ அது போல அன்பும் தியானமும் உனது இரண்டு சிறகுகள் ஆகட்டும். அவை இரண்டிற்க்கும் ஒத்த லயத்தை உருவாக்கு. அப்போது அவை இரண்டும் ஒன்றுகொன்று பிளவுபடாது, ஒன்றையொன்று வளப்படுத்தும், ஒன்றுகொன்று ஊட்டப்படுத்தும், ஒன்றுக்கொன்று உதவும். இதுதான் உன் பாதை. அன்பும் தியானமும் ஒருங்கிணைந்தது.


Sunday, June 28, 2015

கட்டாய ஹெல்மெட்


ஜூலை 1 முதல் வசூல் வேட்டை தீவிரமாகும். அன்றிலிருந்து ஹெல்மெட் அணிவது மீண்டும் கட்டாயமாகிறது.  சில வருடங்களுக்கு முன்புதான் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.  எப்போது அதை வாபஸ் பெற்றார்கள், மீண்டும் கட்டாயமாக்குவதற்கு ?

நாட்டில் தினமும் நடக்கும் சாலை விபத்துக்களைப் பற்றி அறியும் போது தலைக் கவசத்தின் அவசியத்தை யாரும் மறுக்க முடியாது.   ஆனால் நமது அரசாங்கம் செய்துள்ள அறிவிப்பைப் பார்க்கும் போது மக்களின் உயிர் மேல் இருக்கும் அக்கறையை விட stock clearance  sale முனைப்போடு செயல்படுவது போல் உள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஹெல்மெட் அணிந்து சென்றும்  கிரிதரன் என்ற இளைஞர் விபத்து என்ற பெயரில் அநியாயமாக கொல்லப்பட்டார்.  ஒழுங்கான சாலை வசதிகள், விளக்கு வசதிகள் இல்லாமல் பல விபத்துக்கள் நடக்கின்றன.  இதைப் பற்றியெல்லாம் அரசாங்கம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.   ஆனால் வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறது. 

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் ஹெல்மெட் அணிய வேண்டும். சரி. மிகவும் நியாயமானது.  பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. இனிமேல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது கையிலேயே ஒரு ஹெல்மெட்டையும் கொண்டு செல்வது உசிதம்.  வழியில் அப்பா, அண்ணன்,  கணவன் , நண்பன் என்று யாரைப் பார்த்தாலும் அவர்களுடன் வண்டியில் ஏறி வருவதற்கு வசதியாக இருக்கும்.

இன்று சாலை விபத்துக்களின் மூல காரணமாக இருப்பது மது என்ற  அரக்கன். ஊரெங்கும் பார்களைத்  (bar)  திறந்து அரசாங்கமே ஊற்றிக் கொடுத்துவிட்டு கட்டாய ஹெல்மெட்  என்று சொல்வது காறித் துப்பிவிட்டு கன்னத்தை துடைத்துக் கொள் என்று சொல்வது போல் உள்ளது.

ஹெல்மெட் எல்லாம் விற்றுத் தீர்ந்த பிறகு கட்டாய ஹெல்மெட் கட்டாயம் பிசுபிசுத்துப் போகும்.  அதுவரை காந்தி சிரிக்கும் கரன்சி நோட்டுக்கள் கொஞ்சம் கைவசம் இருக்கட்டும்.