Thursday, January 14, 2016

கலங்காதிரு மனமே


Positive-ஆன விஷயங்களை அவ்வளவு சுலபத்தில் ஏற்க மறுக்கும் நம் மனம் negative-ஆன விஷயங்களை மட்டும் உடனே உடும்புப் பிடியாய் பிடித்துக் கொள்கிறது.  யாரவது நம்மைப் பார்த்து "என்ன இன்றைக்கு smart-ஆக  இருக்கீங்க" என்றால், நம் மனம் அதை நம்ப மறுத்து, "நம்மை கலாய்க்கிறாங்களோ" என்று எண்ண வைக்கும் (சில நேரங்களில் அது உண்மையாகக் கூட இருக்கும் அது வேறு விஷயம்).  ஆனால் அதே நேரத்தில் நல்லா இருக்கும் நம்மைப் பார்த்து யாராவது என்ன dull-ஆ இருக்கீங்க என்று சொன்னால் உடனே ஆமாம் என்று அதற்கு ஒரு காரணம்  சொல்லி   நல்லா இருந்த நாம் dull-ஆக செல்வோம். 

நேற்று ஒரு வாரப் பத்திரிகையில் பெண்களுக்கு வரக் கூடிய ஒரு நோய் குறித்த ஒரு கட்டுரையைப் படித்தேன்.  அந்தக் கட்டுரையில் இந்த நோய் வரக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ள பெண்கள் என்று அவர்கள் குறிப்பிட்டது பின் வரும் பெண்கள்:

1.  உடல் பருமனாக இருப்பவர்கள்
2. 30 வயதைக் கடந்த பெண்கள்
3. மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லாதவர்கள்
4. மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள்
5. குடும்ப நபர்களில் யாருக்கேனும் இந்த நோய் இருந்தால்

யோசித்துப் பார்த்தால் - 10-ல் குறைந்தது 8 பேருக்காவது மேற்குறிப்பிட்ட 5 காரணங்களில் ஒன்றாவது இருக்க வாய்ப்புண்டு.  நாம் சும்மாவே பயந்து சாகிறவர்கள்.  இப்படி பிரபல பத்திரிகையில் வேறு வந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.  நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாகவே நம் மனம் நம்ப ஆரம்பித்து விடும்.  Awareness என்ற பெயரில் இப்போது பத்திரிகைகளும் டாக்டர்களும் நிறைய பயமுறுத்தி விடுகிறார்கள்.

சரி எதற்கும் ஒரு டெஸ்ட் எடுத்துப் பார்த்து விடலாம் என்று hospital போனால் அவ்வளவுதான்.  இல்லாத நோயை வரவழைத்து இருக்கும் நிம்மதியை பறித்துக் கொள்வார்கள்.  நம் உடல் நலனிலும் மன நலனிலும் அக்கறை செலுத்துவது என்பது வேறு.  இது வந்து விடுமோ அது வந்து விடுமோ என்று பயந்து கொண்டே இருப்பது வேறு. 

இந்த நோய் வந்து விடுமா அல்லது அந்த நோய் வந்து விடுமா அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வதாலேயே எந்த நோயையும் தடுத்து விட முடியாது.  எனக்குத் தெரிந்த சிலர் சீக்கிரம் hospital போகாமல் இருந்திருந்தால் கொஞ்சம் late ஆக late ஆகி இருப்பார்கள்.

நாம் மருத்துவத்தின் முக்கியதுவத்தை மறுக்கவும் வேண்டாம். அதே நேரத்தில்   நோயைக் கொண்டாடவும்  வேண்டாம்.  சிலர்  எப்போதும் "எனக்கு இரண்டு நாளா  தலை வலி.  நான்கு நாளா கழுத்து சுளுக்கு, கை பிசகு என்று ஏதாவது ஒரு உடல் உபாதையை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதுவும் ஒரு வகையில் attention seeking தான்.  ஆனால் அப்படி சொல்லி சொல்லி கண்டிப்பாக அந்த நோயை வரவழைத்துக் கொள்வார்கள்.

நாம்  எதை அதிகம் எதிர்பார்க்கிறோமோ அதை நாம் ஈர்க்கிறோம் - அது நல்லதோ அல்லது கெட்டதோ. நம் வீட்டில் உள்ள குழந்தை  நடக்க ஆரம்பிக்கும்போதே "ஓடாதே, விழுந்துடுவே" என்றால் குழந்தை   விழுவதற்கான chance மிக மிக அதிகம்.   அதற்குப் பதில் "பார்த்து ஓடு" என்று சொல்லலாம். 

நான் பணி புரிந்த அலுவலகத்தில் ஒரு உயர் அதிகாரி இருந்தார்.  அவரிடம் சென்று sir நாளை திருப்பதிக்கு போகிறேன் என்று சொன்னால், பார்த்து போய் வாருங்கள்.  போன வாரம் கூட மலையில் ஒரு bus accident ஆகி விட்டது என்று சொல்வார்.  ஏண்டா இவரிடம் சொன்னோம்  என்று நினைக்க வைத்து விடுவார்.  திருப்பதி மலையின் ஒவ்வொரு  திருப்பத்திலும் "கோவிந்தா கோவிந்தா" என்று பக்தர்கள்  சொல்லும்போது அந்த உயர் அதிகாரி நம் கண் முன்னால் வந்து வந்து செல்வார்.  நாம் வேண்ட இருந்த எல்லா விஷயங்களும் மறந்து போய், ஒழுங்கா வீடு வந்து சேர்ந்தா போதும் சாமி என்று நினைக்க வைத்து விடுவார்.  அவர் சொன்ன ஒரு negative விஷயமே  நம் மனதில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால், நாம் தினமும் படிக்கும், பார்க்கும் அல்லது கேட்கும் negative விஷயங்கள் நம் மனதை எவ்வளவு பாதிக்கும்.   அதனால் முடிந்த வரை negative விஷயங்களை avoid செய்வோம்.

"துன்பப் பறவைகள் நம் தலைக்கு மேல் பறப்பதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அவை நம் தலைக்கு மேல் கூடு கட்டுவதை தவிர்க்க முடியும்" என்று ஒரு பழமொழி உள்ளது.  அதனால் நாம்  தினமும் negative-ஆன பல விஷயங்களை கடக்க வேண்டி இருந்தாலும், எதையும்  நம் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் நம் வேலையைப் பார்ப்போம்.

Again, பாரதி சொன்னதுதான் "தின்று விளையாடி இன்புற்று வாழ்வீர்" (தின்பதில் பிரச்சினை இல்லை - ஓடி ஆடி விளையாடமல் இருப்பதுதான் நம் பெரும்பாலோருடைய பிரச்சினை) .

அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள். 





Thursday, December 31, 2015

நல்ல காலம் பொறக்குது


மார்கழி மாதத்தின் அதிகாலை பொழுதில் குடுகுடுப்பைக்காரன் குரலைக் கேட்டது பழங்கனவாகி விட்டது.  சிறு வயதில் அவனது குரலும் உருவமும் சற்று அச்சமூட்டுபவையாக இருந்தாலும், இப்போது யோசித்துப் பார்த்தால் அவன் பொதுவாக நம்பிக்கை ஊட்டுபவனாகத்தான் இருந்திருக்கிறான். ஏனென்றால் அவனை நினைத்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது "நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது" என்ற வாக்கியங்கள்தான்.

பாரதியாருக்கும் அவனைப் பிடித்திருக்கிறது போல் இருக்கிறது. அதனால்தான் புதிய கோணங்கி என்ற தலைப்பில் குறி சொல்லி இருக்கிறான் (அவனது முண்டாசும், மீசையும்கூட ஓரளவு  குடுகுடுப்பைக்காரனைத்தான் நினைவு படுத்துகிறது).

குடுகுடுப்பைக்காரன் வாயில் இருந்து வரும் நல்ல வார்த்தைகள் எப்படி நம் மனதுக்கு நம்பிக்கை அளிக்கிறதோ அதேபோல அவன் தவறாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்ற பயமும் இருக்கும்.  பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போதும் அந்த உணர்வுதான்  வருகிறது.

அதனால்தான் "தரித்திரம் போகுது; செல்வம் வருகுது; படிப்பு வளருது; பாவம் தொலையுது" என்று அவன் சொல்லும்போது நம்பிக்கையாக இருந்தாலும், "படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோவென்று போவான்" என்று சொல்லும்போது "ஐயோ நாமும் படித்திருக்கிறோமே, ஏதாவது தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருக்கிறோமா அல்லது செய்துவிடுவோமோ" என்று  மனம் பதைபதைக்கிறது.  ஏனென்றால் சூது அல்லது பாவம் என்பதின் முழுமையான   விளக்கமே நமக்கு சரியாகப் புரிவதில்லை.  இதற்கும் பாரதியே நமக்கு வழி காட்டுகிறான்.  அவன் சொல்கிறான் -

பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன் றுமுதல்
நீயாய்  ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தருமமென யான் குறிப்பதிலும்
ஓயாதே நின்றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால். 

"தருமமென யான் குறிப்பதிலும்", இந்த வார்த்தைகளுக்கு நான் கொண்ட பொருள் நம்முடைய மனசாட்சிப்படி நடப்பதுதான்.   மற்றது எது குறித்தும் கவலை கொள்ளத் தேவை இல்லை. சூது வாது அல்லது பாபம் எதுவும் இல்லாமல் அது பார்த்துக் கொள்ளும் (சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லியவண்ணம் செயல் - அதனால் என்ன கஷ்டம் என்பதற்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறோமா என்ன ? - முடிந்தவரை மனசாட்சியின்படி வாழ்ந்துதான் பார்ப்போமே).

2015-ன் துன்ப நினைவுகளை 2015-லேயே விட்டுவிட்டு, சந்தோஷ நினைவுகளை மட்டும் 2016-ம் ஆண்டுக்கு கொண்டு சென்று அதை மேலும் பல மடங்கு பெருக்குவோம்.

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.  Again  எனக்குப் பிடித்த பாரதியின் கவிதையுடனேயே முடிக்கிறேன் (அவர்  சென்றதினி மீளாது மூடரே என்று சொன்னார், நான் நண்பரே என்று சொல்லி இருக்கிறேன். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. எனக்கு இல்லை).

சென்றதினி மீளாது, நண்பரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

புதிய கோணங்கி

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரந் தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான்.

வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்;
சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது,வளருது,

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடீ சொல்லடி,மலையாள பகவதீ!
அந்திரி,வீரி,சண்டிகை சூலி!
குடுகுடு குடுகுடு.

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது;சுறுசுறுப்பு விளையுது;
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
பயந் தொலையுது,பாவந் தொலையுது,
சாத்திரம் வளருது, சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தௌயுது;
வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;
சொல்லடீ சக்தி,மலையாள பகவதீ!
தர்மம் பெருகுத,தர்மம் பெருகுது


Friday, December 25, 2015

பிரளயம்


இயற்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவுமே எப்போதோ எங்கோ நடைபெற்ற சம்பவம்தான்.  நமக்குத்தான் புதிது.  வரலாறு காணாத மழை என்று நாம் சொன்ன மழையும் வரலாறு கண்டதுதான்.  நமக்கு வரலாற்றுக் குறிப்புக்கள் இல்லை  அவ்வளவுதான்.

நேற்று ஜெயகாந்தனின்  பிரளயம் என்ற குறுநாவலை படித்தேன்.  1965-ல் வெளிவந்த இந்தக்  கதையும் சென்னையின் வெள்ளம் பற்றியதுதான்.  50 வருடங்களுக்குப் பிறகும் அதே வெள்ளம், மக்கள் மழைக்கு பள்ளிக்கு ஒதுங்குதல், உணவுப் பொட்டலங்கள் மற்றும் பிற அவதிகள்.  இந்த வெள்ளத்தின் நடுவில் கதை செல்கிறது. கதையின் நடுவில் அவரின் சில வரிகள்: 

"சென்னை நகரின் பல பகுதியிலுள்ள சேரிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல பிரதான ரஸ்தாக்களில் கூட மரங்கள் வீழ்ந்தும், முழங்காலுக்கு மேல் ஆறாக மழை நீர் பாய்ந்தும் போக்குவரத்துக்கள் ஸ்தம்பித்து இருந்தன.  தினசரிப் பத்திரிகைகள் எல்லாம் அந்தக் காட்சியைப் படம் பிடித்துப் போட்டுப் பிரசுரித்தும், பேய் மழை என்று தலைப்பிட்டும், புயல் உருவாகி வருகிறது என்று எச்சரித்தும் மழையால் விளைந்த நாசங்கள் குறித்துச் செய்திகள் வெளியிட்டன.  இவை எல்லாவற்றுக்கும் சிகரம்போல் உதவிக்கு ஓடோடி வரும் நகரப் பிரமுகர்களின் வள்ளண்மையைக் குறித்து அவை புகழ் பாடின. பள்ளிகளுக்குக் குடியேறியுள்ள சேரிவாசிகளுக்கு சில பெரிய மனிதர்கள் ஆயிரக்கணக்கான உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தார்கள்"

"எப்படியோ கஷ்டப்பட்டு, மானத்தோடு கஞ்சி குடித்து நேற்றுவரை வாழ்ந்திருந்த இவர்கள், இன்று மழையின் காரணமாக வீடிழந்து நிற்கிறார்கள்.... எதன் காரணமாக இப்போது   மானத்தை இழந்தனர் ?..."

2015-ல் நாம் கண்ட இந்த வெள்ளத்துக்கும், அந்த வெள்ளத்துக்கும் உள்ள முக்கிய வித்தியாசம். 1965 கதையில் வந்த வெள்ளம் அடித்தட்டு மக்களை மட்டும் பாதித்தது. இந்த வெள்ளம் அடித்தட்டு, நடுத்தட்டு, மேல்தட்டு என்று எல்லா தட்டு மக்களையும் ஒரு தட்டு தட்டி விட்டது (வேட்டியை மடித்து பல பேரை சினிமாவில் புரட்டிய ராஜ்கிரண் கழுத்தளவு வெள்ளத்தில் புரண்டு பரிதாபமாக படகில் காப்பாற்றப் பட்டது முதல் கோடிகளின் அதிபர் அஸ்வின் முத்தையா லுங்கியோடு படகில் சென்றது வரை - மழை எல்லோரையும் சமப்படுத்திவிட்டது).

இந்த மழையினால் விளைந்த மனித நேயத்தைப் பற்றி எல்லோரும் பேசியாகிவிட்டது.  நம்மில் பலர் சில ஆயிரம் அல்லது சில இலட்சம் ரூபாய் கொடுத்தது முதல், உணவு, உடை, உறைவிடம் வழங்கியது முதல் பல உதவிகளை செய்திருக்கலாம்.  நாம் எவ்வளவு கொடுத்தாலும் அது  வாழ்க்கையில் நாம் பெறுவதைக் காட்டிலும் குறைவுதான். ஆனால் உண்மையில் அதிகம் கொடுத்தவர்கள் என்று சிலரை மழை அடையாளம் காட்டி இருக்கிறது.

சென்னையின் பல பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய பலரைக் காப்பாற்றி தன்னுடைய இன்னுயிரை இழந்த பல இளைஞர்கள் இருக்கிறார்கள். பெயர் தெரிந்தவர் சிலர், பெயர் தெரியாதவர் பலர். 

நாட்டைக் காப்பாற்ற தன்னுடைய உயிரைத்  தியாகம் செய்யும் வீரர்களை அரசாங்கம் கௌரவித்து அவர்களின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை செய்கிறது. 

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் போராட்டத்தில் தன்னுடைய உயிரை இழந்த இந்த இளைஞர்களும் அத்தகைய வீரர்கள்தான். இந்த விஷயத்தில் அரசாங்கம் எந்த அரசியலும் பார்க்காமல் அவர்களை கௌரவித்தால் அது நமக்குப் பெருமை.  இதைப் பற்றி யாரேனும் ஏற்கனேவே பதிவு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. 

ஜெயகாந்தன் பிரளயம் கதையை இப்படி முடித்திருந்தார்.

"ஒரு பிரளயமே வந்து இந்த உலகை அழித்தாலும் அது மீண்டும் புதிதாய்ப் பிறக்கும்.  கேவலம் இந்த மழையா வந்து மனிதர்களின் வாழ்வுக்கு முடிவு கட்டிவிடும்".


Saturday, December 5, 2015

இதுவும் கடந்து போகும்


Nightmare என்று சொல்வார்கள். அதற்கு சரியான பொருள் தமிழில் என்னவென்று இனிமேல் தேட வேண்டாம். "2015 சென்னை மழை" என்று சொன்னால் போதும்.   போன மழையோடு ஆபத்து நீங்கியது என்று நினைத்து இருந்தவர்களுக்கு மீண்டும் சென்ற செவ்வாய் கிழமையில்  (1-12-2015) இருந்து பெய்ய ஆரம்பித்த மழை சென்னையை முழுவதுமாக புரட்டிப் போட்டுவிட்டது.

ஏற்கனவே சென்ற மழையின் traffic jam -இல்  மாட்டிய அனுபவம் இருந்ததால் செவ்வாய் கிழமை பெய்ய ஆரம்பித்த மழையின் வீரியத்தைப் பார்த்து மதியமே அலுவலகத்துக்கு leave declare செய்து விட்டு எல்லோரையும் வீட்டுக்கு கிளம்ப சொல்லி விட்டோம்.

மாலை நேரம் செல்லச் செல்ல மழை வெளுத்து வாங்கியதும் அடுத்து வரும் நாட்கள் எப்போதும் போல இருக்கப் போவதில்லை என்று உள்மனது சொல்லியது.  அதற்கேற்றார்போல அடுத்த சில நிமிடங்களில் power cut ஆகிவிட்டது.   Peak hour traffic-ன் நெரிசலுக்கும் இரைச்சலுக்கும் பழகிப் போயிருந்த எங்கள் தெருவுக்கும், காதுகளுக்கும் அந்த இருட்டும் மழையின் சத்தமும் ஒரு அமானுஷ்ய சூழ்நிழையை  உருவாக்கி இருந்தது. இப்போதும் மழை கொட்டிக் கொண்டுதான் இருந்தது.  எந்த நேரத்தில் என்னுடைய முந்தைய "மாமழை போற்றுதும்" என்ற பதிவை செய்தேனோ தெரியவில்லை, உண்மையிலேயே மாமழை கொட்டிக் கொண்டிருந்தது.

நான் என் நண்பர்களுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினேன். அதன் சாராம்சம் இதுதான் "இந்த மழை இயற்கையின் முன்  நாம் ஒன்றுமேயில்லை என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறது.  நம் பாதுகாப்பை அந்த இயற்கையின்  பேராற்றலிடமே விட்டு விட்டு நாம் அனைவரும் நமக்காக பிரார்த்தனை செய்வோம்" என்பதுதான். 

வீட்டில் invertor இருந்ததால் மின் தடை பாதிப்பு அதிகம் தெரியவில்லை.  நீண்ட நாட்களுக்குப் பிறகு டிவியில்  யாரோ பேசுவதைக் கேட்டுக் கொண்டு சாப்பிடாமல் எங்கள் பேச்சை  நாங்களே கேட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

வெளியில் எட்டிப் பாத்தால் மழை இன்னும் வெளுத்து வாங்கி கொண்டிருந்தது.  Torch அடித்துப் பார்த்த போது தெருவில் கணுக்காலை நனைத்தபடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது.  எங்கள் தெருவில் எப்போதும் தண்ணீர் தேங்காது. மழை விட்ட சில நிமிடங்களில் தெரு பளிச்சென்று ஆகிவிடும். அப்படியே இன்றும் ஆகிவிடும் என்று நினைத்து கதவை மூடி அன்று  கொஞ்சம்  சீக்கிரமே படுத்துவிட்டோம்.  பொதுவாக படுத்தவுடன் தூங்கிவிடும் எனக்கு அன்று mind மிகவும்  disturb ஆகவே இருந்தது.

நள்ளிரவுக்கு மேல் வெளியில் அக்கம் பக்கத்துக்கு மனிதர்களின் பேச்சுக் குரல் கேட்டு வெளியில் எட்டிப் பார்த்தேன். தண்ணீர் ஆறாக பெருகி ஓடிக் கொண்டிருந்தது.  எங்கள் தெருவில் இப்படி ஒரு காட்சியை இதுவரை கண்டதில்லை.  எங்கள் Flat -ன் 2-வது மாடியில் இருந்து கீழே வந்து பார்த்தேன். மாலையில் கணுக்காலை நனைத்த தண்ணீர்   இப்போது parking area-வில் ஏறி காரின் டயர்களை நனைக்கத் தொடங்கி இருந்தது.  எங்கள் ground floor-க்கு  இன்னும் இரண்டு  படிகள்தான் பாக்கி.  

எங்கள் பகுதி அமைந்திருக்கும் சூளைமேடு area வில் வெள்ளம் வந்தால் சென்னையின் (தென் சென்னை) பெரும்பாலான பகுதிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்று அர்த்தம்.  ஏரிகளை திறந்து விட்டார்கள் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. எனக்கு உடனே Tambaram Mudichur போன்ற பகுதிகளின் நிலைமையை நினைத்துதான் கொஞ்சம் concern-ஆக இருந்தது.

மீதி இரவை படுப்பதும் எட்டிப் பார்ப்பதுமாக கழித்தேன்.  காலை மீண்டும் ஒரு சோதனை.  எங்கள் நெருங்கிய உறவினரின் மரணச் செய்தி.  வெளியே இப்போது இடுப்பளவு தண்ணீர்.  நாங்கள் செல்ல வேண்டிய இடமோ மாதவரம். காரை வெளியில் எடுக்க முடியாது .  எந்த cab க்கு phone செய்தாலும் not reachable. பிள்ளைகளை அழைத்து செல்லவும் முடியாது. தனியே  விட்டுச் செல்லவும் பயம்.  கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு நானும் என் மனைவியும் இடுப்பளவு தண்ணீரில் வெளியே வந்து மெயின் ரோட்டுக்கு வந்து எப்படியோ மாதவரம் சென்று safe ஆக திரும்பி விட்டோம்.  

நல்ல வேளை செவ்வாய் கிழமை இரவுக்குப்  பிறகு  அவ்வளவு மழை இல்லை. அந்த மழை மீண்டும் ஒரு நாள் தொடர்ந்திருந்தால் ..... சென்னை என்னவாக  ஆகி  இருக்கும்  என்பதை  உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இப்போது அரசாங்கத்தையோ அல்லது யாரையுமோ குறை சொல்லி புண்ணியம் இல்லை.   இயற்கையின் பேராற்றலுக்கு முன் நாம் ஒரு தூசுக்கு கூட சமம் இல்லை என்பதை மீண்டும் நினைவு படுத்தி இருக்கிறது இந்த மழை.  அதே சமயம் நாம் தனி மனிதராகவோ அல்லது அரசாங்கமாகவோ செய்யும் தவறுகள்தான் இயற்கையால் ஏற்படும் ஆபத்தினை பேராபத்தாக ஆக்கி விடுகிறது.

இயற்கை இன்னமும் நம் மீது கருணையோடு இருப்பதால்தான் இந்த அளவோடு நிறுத்தி இருக்கிறது.   இயற்கையை வணங்கி இயற்கையோடு இணைந்து தன்னுடைய வாழ்வை நடத்திய  நம்முடைய முப்பாட்டனின் அறிவு, படித்த நமக்கும் வந்தால் நன்றாக இருக்கும். 

பீனிக்ஸ் பறவை நெருப்பில் இருந்து உயிர்தெழுமாம். சென்னை நகர மக்களும் அப்படிதான். 



Tuesday, November 17, 2015

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்


கடந்த வாரம் வரை வெயிலில் வெண்ணையாக உருகிக் கொண்டிருந்த சென்னை திடீரென்று நடுக்கடலில் கப்பலை இறங்கித்  தள்ள முடியுமா என்று சோக கீதம் பாட ஆரம்பித்து விட்டது.  Thanks to the unprecedented rain.

ஆனால் இடுக்கண் வரும்போதும் நகும் நக்கல் நம் மக்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே உண்டு.  அதனால்தான் தண்ணீர் இல்லாதபோது கழுதைக்கு கல்யாணம் பண்ணி வைத்தவர்கள் இப்போது மழையை நிறுத்த அந்த கழுதையை தேடிக் கொண்டிருக்கிறார்கள் - divorce செய்து வைக்க.

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுவாய் இயற்கை அன்னை மடை திறந்த வெள்ளம் போல மழையை நமக்கு கொடுத்தும் நாம் ஓட்டை குடங்களை வைத்துக் கொண்டிருந்தால் கோடைக் காலத்தில் காலி குடங்களைத்தான் வைத்துக் கொண்டு தண்ணீருக்கு அலைந்து கொண்டிருப்போம்.

There is enough available for everyone's need, but there is never available for anyone's greed என்று சொல்வார்கள். ஒவ்வொரு கோடைக் காலத்திலும் நாம் தண்ணீருக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்று அண்டை மாநிலங்களுடன் மல்லுக் கட்ட வேண்டிய தேவையே இல்லை - ஒழுங்காக மழை பெய்யும் போதே சேமித்து வைத்தால்.

நுங்கம்பாக்கம் lake view ரோடு இருக்கிறது.  Lake எங்கே ?
மொகப்பேர் ஏரி Scheme இருக்கிறது.  ஏரி எங்கே ?

இப்படி சென்னையிலும் சென்னையை சுற்றியும் உள்ள நூற்றுக் கணக்கான ஏரிகளையும் குளங்களையும் தூர்த்து பிளாட் போட்டு விட்டால் (விற்றால்) மழைக்கு தண்ணீர் வராமல் தயிரா வரும் (கோபத்தில் வேறு வார்த்தை வந்தது.  ஆனால் நாகரீகம் கருதி சொல்லவில்லை).

அரசாங்கத்தை Jaya டிவி யைத் தவிர எல்லோரும் திட்டித் தீர்த்தாகி விட்டது. அரசாங்கத்தை மட்டுமே குறை சொல்வதால் நம் கோபம் கொஞ்சம் குறையலாம்.  அவ்வளவுதான். இந்த அரசாங்கம் மட்டும் அல்ல எந்த அரசாங்கமும் தும்பை விட்டு விட்டு வாலைத் தான் பிடித்துக் கொண்டிருகிறது.  மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.  அல்லது மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி.

நாம் மட்டும் என்ன செய்கிறோம்.  அண்ணாந்து பார்த்து காரி உமிழ்வது போல plastic குப்பைகளை கண்ட இடத்திலும் வீசி எறிகிறோம்.  மழைக் காலத்தில் தண்ணீர் வேகமாக வெளியேற முடியாமல் அடைத்துக் கொண்டு நம் மீதே துப்புகிறது.

சில விஷயங்களை அரசாங்கம்தான் செய்ய முடியும்.  ஏரி மராமத்து, அணையை பலப்படுத்துதல், புதிய நீர்நிலையை உருவாக்குதல் அல்லது இருக்கும் நீர் நிலையை ஒழுங்காக பராமரித்தல், இவை எல்லாம் அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியும்.  

அதே நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் செய்யக் கூடிய சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக செய்தாலே நமக்கு ஏற்படும் பாதிப்பை பெருமளவு குறைக்க முடியும்.  நம் வீட்டில் மழை நீர் சேகரிப்புத் திட்டம், குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல் இருத்தல், வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க முடியாவிட்டாலும் ஒரு செடியாவது வளர்த்தல், இப்படி ஒவ்வொருவரும் செய்யக் கூடிய எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. 

இப்போது சில நாட்களுக்கு கஷ்டப்பட்டாலும் இரண்டு வருடங்களுக்குத் தேவையான தண்ணீர் இருப்பு வந்து விட்டதால் கண்டிப்பாக இந்த மாமழையை போற்றுவோம்.

Thursday, November 12, 2015

லா.ச.ரா.


கடந்த வாரம் எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் (சுருக்கமாக லா.ச.ரா.) அவர்களின் நூற்றாண்டு விழா ஆழ்வார்பேட்டை Russian Cultural மையத்தில் நடைபெற்றது. Discovery Book Palace-ம் வேறு சிலரும் இணைந்து இந்த விழாவை நடத்தினார்கள்.

லா.ச.ரா.வின் "சிந்தா நதி"  என்ற புத்தகத்தை என் கல்லூரி நாட்களில் படித்த போது எனக்கு பெரிதாக ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் பெரிய எழுத்தாளர்களின் புத்தகத்தைப் படித்தால்தான் நம்மை 'அறிவு ஜீவி' வட்டத்துக்குள் சேர்ப்பார்கள் என்ற எண்ணத்தில் (தவறான என்று சேர்த்துக் கொள்ளவும்) படித்தேன்.  படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது அல்லது இல்லை - இந்த இரண்டுமே உண்மைதான் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டேன்.

அவருடைய எழுத்துக்கள் புரியவில்லை என்பது குறித்த என்னுடைய புரிதல் சரியானதுதான் என்று அந்த விழாவில் எனக்குப் புரிந்தது (உங்களுக்கு என் எழுத்துக்கள் புரிந்ததா ?).  லா.ச.ரா.- தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்ற தலைப்பில் அவருடை மகன் சப்தரிஷி தொகுத்த நூலில் லா.ச.ரா.வே இப்படி குறிப்பிடுகிறார் "என்னுடைய எழுத்துக்கள் புரியவில்லை என்று சொல்கிறார்கள்.  இன்று புரியாவிட்டால் என்ன நாளை புரிகிறது. நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள். அட அப்படியே புரியாவிட்டால் என்ன ? எழுதுபவனுக்கே சில நேரங்களில் புரிவது இல்லை".

இதை மேம்போக்காக படிக்கும் போது சாதாரணமாகத் தெரிகிறது.  ஆனால் அதில் ஒரு ஆழ்ந்த உண்மை எனக்குப் புரிந்தது.  நாம் எந்த மன நிலையில் இருந்து ஒன்றை சொல்கிறோமோ அல்லது செய்கிறோமோ அந்த எண்ண அலையின் நேர்கோட்டில் இருப்பவர்களால்தான் நாம் சொல்வதை அல்லது செய்வதை சரியானபடி புரிந்து கொள்ள முடியும்.

சித்தர்கள் சொன்ன பல விஷயங்கள் நமக்கு புரியாததின் காரணம் இதுதான். இன்று புரியாவிட்டால் என்ன நாளை புரிகிறது என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளை வேண்டியதுதான்.

லா.ச.ரா.என்ற எழுத்தாளர் கொஞ்சம் கடினமானவராக இருக்கலாம்.   ஆனால் அவர் மிகவும் எளிய மனிதராக வாழ்ந்தவர்  என்று அந்த விழாவில் பலரும் பேசியதில் இருந்து தெரியவந்தது.

அவர் சொல்கிறார் "நாம் யாரும் கெட்டவர்கள் இல்லை.  ஆனால் நமக்கு கெட்ட எண்ணங்கள் தோன்றாமல் இருக்கிறதா என்ன ?"  அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதுதானே வாழ்க்கை.  பொதுவாக மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைக்கும் அல்லது வெளிப்படுத்த தயங்கும் எண்ணங்களை தன்னுடைய கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்துவதில் திறமையானவர் லா.ச.ரா.

எழுத்தாளர் சாரு நிவேதிதா. திருப்பூர் கிருஷ்ணன் மற்றும் பலர் பேசினாலும். 90 வயதினை கடந்த லா.ச.ரா-வின் மனைவி ஹைமவதி அவர்களின் பேச்சு மிகவும் இயல்பாக இருந்தது.  நடையில் தள்ளாட்டம் இருந்தாலும் பேச்சில் தெளிவு இருந்தது.  அவர் சொன்னார் "என் கணவர் எழுதுவதை main ஆகவும் வைத்துக் கொள்ளவில்லை side  ஆகவும் வைத்துக் கொள்ளவில்லை. இயல்பாக தோன்றும்போது எழுதினார்.  சில கதைகளை எழுத அவர் வருடக் கணக்கில் எடுத்துக் கொண்டார்.  அவருடைய கதைகளுக்கு அவர் ஒரு கருவியாகத்தான் தன்னை நினைத்துக் கொண்டார்.

அவருடைய எழுத்தில் கனம் அதிகம். எழுத்தில் கனம் இருந்தும் அதை தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிய மனிதர் லா.ச.ரா.  

அவருடைய அபிதா என்ற நாவலில் இருந்து ஒரு sample :

"புது இடத்தைக் காணும் வியப்பைக் காட்டிலும் பழைய இடம், பழகின இடம் திரும்பும் உள்ளக் கிளர்ச்சி தாங்க முடியவில்லை.  தேங்கிவிட்ட நினைவுகள் கொந்தளிப்பு கண்டு உணர்சிகள் ஒருங்கே அழுத்தும் நிலை முற்றிலும் இன்பம் என்று  சொல்வதற்கில்லை.  திரும்பியே வந்திருக்க வேண்டாமோ ? என்று கூட சித்தம் சலிக்கிறது.  ஆயினும் ஒரு எண்ணம். ஒரே எண்ணம் - நீர்த்துப் போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருக்கிறது ஒரு பொறி. நினைவின் காற்றுவாக்கில் பற்றிக் கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலையாக்கி என்னைத்  தன்முன் உந்தித் தள்ளிச் செல்கிறது.  நானும் பற்றி எரிகிறேன்.  ஒன்று கண்டேன்.  எதுவுமே மறப்பதற்கில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே".


Thursday, October 22, 2015

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் ....

என்னுடைய Blog-இல் இது 50-வது பதிவு. இன்று விஜயதசமி என்பதால் 50-வது பதிவை இன்றே எழுதி விடலாம் என்று முடிவெடுத்தேன். 


உண்மையில் சொல்வதென்றால் blog எழுதுவதை விளையாட்டாகத்தான் ஆரம்பித்தேன்.  ஆனால் விளையாட்டு வினையாகிவிட்டது (வினை என்பதை செயல் என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளவும்).  


இந்த நேரத்தில் இருவரை நான் நினைத்துக் கொள்ளவேண்டும்.  ஒன்று என் மகன் கோகுல். அவன்தான் ஒருமுறை சொன்னான். "அப்பா நீங்கள் இவ்வளவு புத்தகங்களை படிக்கிறீங்களே.  ஏன் உங்கள் புத்தகம் ஒன்று கூட இல்லை". வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத சிறுவனாக இருந்தாலும், தந்தைக்கு உபதேசித்த மந்திரமாக அந்த வார்த்தைகள் எனக்குப் பட்டது. அப்போதுதான் என்னுடைய எண்ணங்களை ஏதோ ஒரு வகையில் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

இரண்டாவது, நண்பர் மோகன்குமார். Blog-ல் எழுதுவது குறித்த சில அடிப்படை விஷயங்களை ஆரம்பத்தில் சொன்னது அவர்தான். .   


எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் Discovery Book Palace திரு வேதியப்பன் மூலமாக எனக்கு நன்கு அறிமுகம் ஆனவர்.  ஒருமுறை பேசும் போது அவர் சொன்னது. எழுத்தாளன் என்பவன் லட்சக் கணக்கான வாசகர்களை கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை.  சில நூறு பேராவது உங்கள் எழுத்தை விரும்பினால், உங்கள் எழுத்துக்கள் அவர்களை எதோ ஒருவகையில் பாதித்தால் நீங்களும் ஒரு எழுத்தாளர்தான் என்று.  


என்னுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் என் நண்பர்கள் என்னுடைய எழுத்து நடை நன்றாக இருப்பதாக சொன்னபோது ஒரு திருப்தி இருந்தாலும் அவர்களுக்கு என்னைப் பிடிக்கும், அதனால் என்னுடைய எழுத்தைப் பிடித்திருகிறது என்ற அளவில்தான் அவர்களுடைய feedback-ஐ எடுத்துக் கொண்டேன்.


ஆனால் எனக்கு அறிமுகம் இல்லாத பல நண்பர்களும் என்னுடைய பதிவுகளைப் பாராட்டிய போது, ஓகே நானும் rowdy தான் என்று காலரைத்  தூக்கிவிட்டுக் கொண்டேன். ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும். நான் செல்ல வேண்டிய தூரம் மிக மிக அதிகம் என்பது. அதனால் என்ன இது ஓடிக் கடக்கும் ஓட்டப்பந்தயமா என்ன ? என்னுடைய கால் தடங்களை அழுத்தமாக பதித்து மெதுவாகவே செல்ல விரும்புகிறேன்.  எவ்வளவு அதிகம் எழுதுகிறேன் என்பதில் என் கவனம் இல்லை. எவ்வளவு அழுத்தமாக எழுதுகிறேன் என்பதில்தான்  என் கவனம் எல்லாம். 

என்னுடைய பதிவுகளின் நோக்கம் "இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்" என்பதல்ல.  பொருளாதாரத் தேவைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்  இந்த அவசர வாழ்வில், காலையில் செய்த தவற்றை நினைத்து மாலையில் மனம் வருந்தி மீண்டும் மறு நாள் காலையில் அதே தவற்றைச் செய்யும் நம்முடைய சராசரி மனித வாழ்வில் எப்படியாவது ஒரு படி மேலே வர வேண்டும் என்ற நம்முடைய இடையறாத போராட்டத்தில் கிடைக்கும் சில அனுபவங்களை குறித்து வைத்துக் கொள்ளும் ஒரு டைரிக் குறிப்பாகத்தான் இதை நினைத்துக் கொள்கிறேன்.  அதற்காக மாதத்தில் சில மணி நேரங்களை செலவிடுவது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. 

சுற்றமும் நட்பும் சூழ இருப்பது ஒரு காலம்.  சுற்றமும் நட்பும் சூழ இருந்த நாட்களை நினைத்துக் கொண்டு தனிமையில் இருப்பது ஒரு காலம்.  எல்லாக் காலங்களிலும் யாரையாவது நாம் காயப் படுத்திக் கொண்டோ அல்லது யாராலோ நாம் காயம் அடைந்து கொண்டோ தான் இருக்கிறோம்.

எந்தக் காலமாக இருந்தாலும் யாரையும் காயப்படுத்தாமலும் யாராலும் காயப்படமாலும் நம்மால் சந்தோஷமாக வாழ முடிந்தால் நாம் வாழ்கையில் வென்று விட்டோம் என்று அர்த்தம்.  அந்த அர்த்தத்திற்கு இந்த டைரிக் குறிப்புக்கள் உதவும் என்று நம்புகிறேன்.  

ரமண மகரிஷி சொல்வது போல் "பிறர்க்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்". அந்த வகையில் இந்தப் பதிவுகள் பிறருக்கு என்று சொல்வதை விட முதலில் எனக்கு. 

நம்மால் முடியும் போதே நமக்குப் பிடித்த சில நல்ல விஷயங்களை செய்து விட வேண்டும். பிறகு முடியாத போது அப்போதே செய்திருக்கலாமே என்று புலம்புவதால் எந்தப் பயனும் இல்லை.

பெரியாழ்வார் திருமொழியில் ரங்கநாதனை நினைத்துச் சொல்கிறார். எனக்கு மூப்பு வந்து நான் நலியும் போது உன்னை நினைக்க முடியுமா என்று தெரியவில்லை.  அதனால் இப்போது நான் நன்றாக இருக்கும்போது உன் நாமத்தைச் சொல்லி விடுகிறேன்.  இப்போது நான் சொல்வதையே என்னுடைய கடைசிக் காலத்தில் சொல்வதாக நினைத்து என்னை கரையேற்றுவயாக என்று, அந்தப் பாடல் இதுதான்.

துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் 
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன் 

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே

என்னுடைய பதிவுகளும் கிட்டத்தட்ட அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் category தான்.

இந்த 50-வது பதிவை எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் கவிதையோடு முடிக்கிறேன் (கண்டிப்பாக இதற்கு translation தேவை இல்லை என்று நினைக்கிறன்).

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...