Wednesday, April 19, 2017

மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்


நாம் செய்யாத தவறுகளுக்குக் கூட வாழ்க்கை நமக்கு சில சமயங்களில் பெரும் வலியைத் தரும்போது வலி நிவாரணியாய் அமைவதும் அல்லது செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யாதிருக்கும் மனவலிமையை நமக்குத் தருவதும் புத்தகங்கள்தான். 

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சாதளையாளரும் தன்னுடைய வெற்றிக்குக் காரணமாக அல்லது தன்னுடைய வாழ்வின் திருப்புமுனையாக அமைந்ததற்கு ஏதோ ஒரு புத்தகத்தினைத்தான் பெரும்பாலும் காரணமாகக் கூறுவார்கள்.

சில மணித்துளிகள் நம்மை மகிழ்விக்கும் திரைக் கலைஞா்கள் பலர் இலட்சங்களிலும், கோடிகளிலும் புரளும்போது நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும் மகத்தான எழுத்தாளா்கள் பலர் பெரும்பாலும் வறுமையில் வாழும் நிலையில்தான் எப்போதும் உள்ளனா்.  கடந்த காலங்களில் நாம் சில மகத்தான எழுத்தாளா்கள் சிலரை வறுமையிலும் நோயிலும் பறிகொடுக்காமல் இருந்திருந்தால் தமிழ் இன்னும் வளமை பெற்றிருக்கும்.

பிரபஞ்சன்.  இந்தப் பெயா் தமிழ் வாசக உலகிற்கு மிகவும் பரிச்யமான பெயா். 1961-ல் பிரபஞ்சன் எழுதிய முதற்கதை வெளியானது.  அதிலிருந்து கடந்த 55 ஆண்டுகளாக இலக்கியத் தளத்தில் சீராக இயங்கி தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்து வருகிறார்.

சாகித்ய அகாடமி போன்ற பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்ற பிரபஞ்சன் முழுநேர எழுத்தாளர்களுக்கே உண்டான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் மற்றுமொரு மகத்தான எழுத்தாளா்.

பிரபஞ்சனின் இலக்கிய பங்களிப்பினை தமிழ் வாசகா்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுகூறும்விதமாக ஒரு சிறப்பு நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்த ஏப்ரல் மாதம் 29-ம் நாள் சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது.

இந்த விழாவை ஒருங்கிணைப்பவா்கள் எழுத்தாளா் எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளா் பவா செல்லத்துரை மற்றும் பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்கள்.

பிரபஞ்சன் அவர்களின் பொருளாரதாரத் தேவையை ஓரளவுக்கு நிறைவேற்றும் வகையில் அவருக்கு பத்து இலட்சம் சிறப்பு நிதியாக அளிப்பதும் இந்த விழாவின் ஒரு முக்கியமான அம்சம்.

நான் வேடியப்பனிடம் பேசும்போது வேடிக்கையாகக் கேட்டேன்.  இலட்சக்கணக்கான தமிழ் வாசகா்கள் உலகம் முழுவதும் இருக்கும்போது ஒரு ஆயிரம் போ் தலா ஆயிரம் ரூபாய் அளித்தால்கூட சுலபமாக பத்து இலட்சம் சோ்ந்துவிடுமே என்று சொன்னேன்.  அவா் சொன்னார்  ”நீங்கள் சொல்வது மிகவும் சரி.  ஆனால் பிரச்சனை என்னவென்றால் எல்லோரும் மற்ற யாராவது உதவுவார்கள் என்று நினைத்து விட்டுவிடுகிறார்கள். பலருக்கு தங்களால் முடிந்த தொகையை தருவதற்கு மனம் இருந்தும் தினசரி அலுவல்களில் மறந்து விடுகிறார்கள். 

அதனால் நண்பர்களே இந்தப் பதிவின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இதைப் படிக்கும் உங்களில் யாராவது பிரபஞ்சனின் வாசகராகவோ அல்லது அவரை அறிந்தவராகவோ இருந்தால் மற்றவா்கள் உதவுவதைப் பற்றி கவலைப்படாமல் சில நூறு அல்லது சில ஆயிரம் ரூபாயை பிரபஞ்சனின் வங்கிக் கணக்குக்கு நேரிடையாகவோ அல்லது அவர் பெயரில் வரைவோலை (டிடி) அல்லது காசோலை எடுத்து அனுப்பலாம்.

வங்கி ஆன்லைன் மூலம் பணம் செலுத்த விரும்புவா்கள் கீழ்க்கண்ட அக்கவுண்டில் செலுத்தலாம்.

A/c Name: Prapanchan (Mobile No.98945 83715)
A/c No. 403441392, Indian Bank, Peters Road Branch, Royapettah, Chennai
IFSC Code: IDIB000R047

வரைவோலை (டிடி) அல்லது காசோலை அனுப்ப வேண்டிய முகவரி

டிஸ்கவரி புக் பேலஸ்
6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனிசாமி சாலை
கே.கே. நகர் மேற்கு, சென்னை – 600 078
போன் 044-6515 7525

”சித்தன் போக்கு” என்ற சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் எழுத்தாளா் பெருமாள்முருகன் இப்படி குறிப்பிடுகிறார் –

”பிரபஞ்சனைப் பொருத்தவரை மனிதர்கள் மகத்தானவர்கள்.  அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவா்.  அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம்.  பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார்.  அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம் முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்”.


இப்போதும் பிரபஞ்சன் அவர்கள் அப்படியான ஒரு சூழலைத் தான் நமக்கு அமைத்துத் தருகிறார்.  அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம் முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்.

பத்து இலட்சம் என்பது இந்த மகத்தான எழுத்தாளனுக்கு பெரிய தொகை அல்ல.  ஏன் தமிழ் வாசகர்களுக்குக் கூடத்தான்.

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.


Saturday, April 8, 2017

மகிழ்ச்சியின் மந்திரம்


சில வாரங்களாக என்னுடைய வலைதளத்தில் எந்தப் பதிவையும் செய்ய முடியவில்லை.  கொஞ்சம் busy. நாட்கள் போல் வாரங்கள் ஓடுகின்றன. 

இன்று என்னுடைய வலைதளத்தினை திறந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, நான் பார்க்கவில்லை என்றாலும்கூட என்னுடைய வலைதளத்தினை தினமும் ஒரு பத்து பேராவது படித்துவிட்டு (அல்லது எட்டிப் பார்த்துவிட்டு) செல்கிறார்கள் என்பது.  உண்மையிலேயே மனதுக்கு கொஞ்சம் நிறைவாக இருந்தது. அதிலும் பார்வையாளா்கள் (அல்லது வாசகர்கள்) நம் ஊரில் மட்டுமோ அல்லது சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற தமிழர்கள் அதிகம் உள்ள நாடுகளில் மட்டுமோ அல்லாது  உக்ரைன், போலந்து இன்னும் பல நாடுகளில் இருந்தும் பார்க்கிறார்கள் என்று நினைக்கும் போது உண்மையில் நம் வலைதளத்தினை பார்க்க வந்தார்களா அல்லது தவறி நம் வலையில் விழுந்தவர்களா என்றுகூட கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஆனால் ஒரு விஷயம் உறுதியாகத் தெரிந்தது.  தமிழா்கள் உலக நாடுகளில் பரவிக் கிடப்பதுபோல வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று.

என்னுடைய நண்பர்கள் சிலர் என்னுடைய பதிவுகளை பார்த்துவிட்டு பாராட்டும்போது அது அவா்களின் அன்பின் மிகுதி என்ற அளவில் மட்டுமே எடுத்துக் கொள்வேனே தவிர என்னை நான் ஒரு படைப்பாளியாக என்னை இதுவரை நினைத்துக் கொண்டதில்லை.

ஒரு வாசகனாக நான் படித்த அறிந்த விஷயங்களை மற்றவா்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். அவ்வளவுதான்.  என்னுடைய எழுத்திற்கும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதால் இனி பகிர்வதை at least வாரத்திற்கு ஒருமுறை என்று முறைப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

என்னுடைய ”கண்கவர் கயிலாய மலையும் மாசற்ற மானசரோவர் ஏரியும்” என்ற புத்தகத்திற்கு பிறகு ஆழ்நிலைத் தியானம் குறித்து ”மகிழ்ச்சியின் மந்திரம் ஆழ்நிலை தியானம்” என்ற புத்தகத்தினை எழுதியுள்ளேன். 

கயிலாய மலை யாத்திரை அனுபவத்தினைப் போலவே இதுவும் தியானம் குறித்த என்னுடைய அனுபவம்தான்.  ஆழ்நிலை தியானத்தினை உலகுக்கு வழங்கிய மகரிஷி மகேஷ் யோகியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ஜனவரி மாதம் 12-ம் நாள் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. 

(என்னுடைய இந்தப் புத்தகத்திற்கும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தமிழக முன்னாள் முதல்வா் திரு. பன்னீர்செல்வம் அவா்கள் பெரினாவில் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் ????).


மீண்டும் சந்திப்போம்.


Saturday, February 18, 2017

வாழ்க ஜனநாயகம்


மீண்டும் ஒரு முறை நாம் ஓட்டு போடும் போது நம் விரலில் வைக்கப்படும் மையை நம் முகத்தில் பூசி விட்டாா்கள் நமது மாண்பு மிகுக்கள்.

இதைப் போன்ற சட்டசபை நிகழ்வுகள் நமக்குப் புதிதல்ல.  அண்ணா மறைவுக்குப் பின்பும், எம்ஜிஆா் மறைவுக்கு பின்பும் ஏற்பட்ட கலாட்டாக்களின் மறு ஒளிபரப்புதான் இன்று நடந்தது. The dust will settle soon.  

செல்வி ஜெயலலிதாவும் அரசியலில் நிறைய  நாடகங்களை அரங்கேற்றியவா்தான். ஆனால் அதை மிகக் கச்சிதமாக நிறைவேற்றி அவருக்கான ஆதரவை திரட்டிவிடுவாா்.  நாடகம் என்று தெரிந்தே நம்பும் மக்கள் நாம். கலைஞரும் அதில் ஜித்தா்.   ஆனால் திரு. ஸ்டாலினுக்கு அந்த ”ஓரங்க நாடகம்” சாியாக கைவரவில்லை.  சேலை கலைந்து ஜெயலலிதா சட்டசபையில் இருந்து வெளிவந்தபோது கிடைத்த அனுதாபம் சட்டை கிழிந்து பனியன் தெரிய சட்டசபையில் இருந்து இன்று வெளிவந்த ஸ்டாலினுக்கு கண்டிப்பாக கிடைக்காது.   அவருக்கு இருந்த Gentleman என்ற பிம்பத்தையும் கொஞ்சம் குறைத்துக் கொண்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

தளபதியின் தளபதிகள் இன்று சட்டசபையில் போட்ட ”குத்தாட்டம்” எடப்பாடி கும்பலின் தகிடுதத்தங்களை மறைக்கும் அளவிற்கு அதிகமாகிவிட்டது.

இன்றைய சட்டசபை நிகழ்வுகளில் எனக்கு ஆறுதலாக இருந்த ஒரே விஷயம் ஓபிஎஸ் அணியினர் மிகவும் கண்ணியமான முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தவிதம்.  ஒவ்வொரு பிரிவாக சபாநாயகா் வாக்கு எடுக்கும் போது ஒவ்வொரு பிரிவிலும் ஒன்று அல்லது இரண்டு போ் மட்டுமே ஓபிஎஸ் அணியில் இருந்தாலும் தைரியமாக எழுந்து நின்று தங்கள் எதிா்ப்பை பதிவு செய்த துணிவை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

எடப்பாடி திரு. பழனிசாமி அவா்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் இன்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  முதலில் அவருக்கு வாழ்த்துக்கள்.  ஆனால் இந்த வெற்றி அவருக்கு நிலையும் இல்லை அதற்கு அவருக்கு தகுதியும் இல்லை. எடப்பாடியாா் என்ற தனி நபா் மிகவும் நல்ல நபராகக்கூட இருக்கலாம். ஆனால் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்ட ஒருவரின் ஆசியோடும் ஆலோசனைப்படியும் ஒருவா் நம்மை ஆளவேண்டி இருந்தால் அது நம் தமிழக மக்கள் எல்லோருக்கும் கேவலம்.

மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவாா் - தம் மக்கள் நலம் ஒன்றேதான் கருத்தில் கொள்ளுவார் என்று கலைஞரையும் குடும்ப அரசியலையும் எதிர்த்தே கட்சியை வளர்த்தவா்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும். ஆனால் எடப்பாடி முதல்வரானது உறுதியான உடனே திருவாளர் தினகரன் அவா்கள் பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டார்.  இனி சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் மீண்டும் தமிழகத்தை வளைக்க ஆரம்பிக்கும்.

இனி நம் முதல்வா் வாரத்திற்கு ஒருமுறை பெங்களுரு சென்று சின்னம்மாவிடமிருந்து ஆசியையும் ஆலோசனையையும் பெற்று வந்து நம்மை பரிபாலிப்பாா்.

கடவுளை நம்புவோம்.  நல்லதே நடக்கும். 

ஓம் ஸ்ரீ ஆளுநர் வித்யாசாகராய நமஹ. 


Sunday, January 22, 2017

போதும் இந்தப் போராட்டம் (இப்போதைக்கு)


ஆங்கிலத்தில் Timing என்று சொல்வார்கள்.  அதாவது எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கும் அல்லது முடிப்பதற்கும் சரியான நேரம் என்று ஒன்று உண்டு.  இதற்கும் நாம் நல்லநேரம் பார்ப்பதற்கும் சம்மந்தமில்லை.  சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படும் செயல் எப்படி வெற்றிகரமாக முடியுமோ அப்படித்தான் ஒரு செயலை சரியான நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவதும்.

ஜல்லிக்கட்டு விஷயமும் அப்படித்தான் எனக்குப் படுகிறது.  இந்தப் போராட்டம் ஆரம்பித்ததும் அது மிகப் பெரிய தன்னெழுச்சியான போராட்டமுமாக மாறியதும் வரலாறு.  தமிழா் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.  ஆனால் அந்தப் போராட்டத்தினை முடிக்க இப்போது அந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தவா்கள் தாமதப்படுத்தும் ஒவ்வொரு கணமும் அந்தப் போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்வது மட்டுமல்லாமல், விஷமிகள் அல்லது புல்லுருவிகள் இந்த மக்கள் சக்தியை தங்களுடைய சுயநலத்துக்காக மாற்றக் கூடிய அபாயம் பெருமளவில் இருக்கிறது.  அதற்கு நம் இளைஞா்கள் பகடைக் காய்களாகிவிடக் கூடாது.

என்னைப் பொறுத்த வரையில் தமிழக அரசின் இந்த அவசரச் சட்டம் இப்போது நிரந்தரத் தீர்வு இல்லையென்றாலும் கண்டிப்பாக நிரந்தரத் தீா்வுக்கான முயற்சியாக கண்டிப்பாக அமையும்.  இந்த சட்டம் (Ordinance) ஆறுமாத காலத்திற்கு மட்டும்தான் செல்லுபடியாகும் என்றாலும் அதற்குள் கண்டிப்பாக அரசாங்கம் இதை நிரந்தரமாக்க எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.  இத்தகைய போராட்டத்தினை பார்த்த பிறகு எந்த அரசாங்கமும் இந்தச் சட்டத்தினை நிரந்தரமாக்கத்தான் கண்டிப்பாக முயற்சி செய்யும்.  அப்படி செய்யாத பட்சத்தில் மீண்டும் மக்கள் தங்களுடைய சக்தியை இதற்கு மேலாகக் காட்டலாம்.

ஆனால் இப்போது போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர தாமதிக்கும் நேரத்தில் இந்தப் போராட்டம் திசை மாறிப் போவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் மட்டுமல்ல, அதற்கான விஷயங்களும் நடக்க ஆரம்பித்திருக்கின்றன.

இப்போது Social Media வில் சில செய்திகள் வருகின்றன.  அதாவது நாம் தமிழா் என்பது உண்மையாக இருந்தால் குடியரசு தினத்தினை கொண்டாடக் கூடாது.  நம் தேசியக் கொடியை அன்று அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்பது போன்ற செய்திகள்தான் அவை.

நாம் தமிழா் என்று பெருமைப்படும் ஒரு விஷயத்தினை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகளுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ இரையாகி விடக்கூடாது.
நாம் தமிழா் என்பதற்கு பெருமைப்படும் அதே நேரத்தில் நாம் இந்தியர்  என்பதற்காகவும் பெருமைப்படும் மக்கள்தான் இங்கு அதிகம்.  அதனால் நாம் மிகவும் கவனமாக இருந்து இத்தகைய களைகளை முதலிலேயெ பிடுங்கி எறிந்துவிட வேண்டும்.


ஏனென்றால் நம் வெற்றியை வாழ்த்தும் வாய்கள் இங்கே குறைவுதான்.  ஆனால் நாம் தவறுதலாக தடுக்கி விழுந்தாலும் கை கொட்டி சிரிக்க இங்கே ஆயிரக்கணக்கான கைகள் தயாராக இருக்கின்றன.  ஏனென்றால் தமிழரின் இந்த மாபெரும் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாமல் எத்தனையோ வயிறுகள் எரிந்துகொண்டு இருக்கின்றன. நாம்தான் கவனமுடன் இருக்க வேண்டும்.


Friday, January 20, 2017

வாடி வாசலில் இனி ஆடிக் கொண்டாட்டம்


At last நம் இளைஞா்கள் சாதித்து காட்டிவிட்டார்கள்.  வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட்டார்கள்.  இனி வெற்றிக் கோப்பையை வாங்க வேண்டிய சம்பிரதாயம் மட்டும்தான் பாக்கி. அதுவும் அநேகமாக இந்த ஞாயிற்றுக் கிழமையே கூட இருக்கலாம்.

சென்னைவாசியான என்னைப் போன்றவா்களுக்கும் இன்னும் பலருக்கும் இந்த வருடம் வரை ஜல்லிக்கட்டைப் பற்றி பெரிதாக ஒன்றும் நினைக்கக் கூடிய அளவில் இருந்தது இல்லை. கிராமப் புறங்களில் பொங்கல் சமயத்தில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு என்ற அளவில் மட்டுமே அது இருந்தது.  ஆனால் இந்த விளையாட்டுக்கு பின்னனியில் இருக்கும் நுணுக்கமான அரசியலைப் பார்க்கும்போதுதான் இந்த இளைஞா்களின் தன்னெழுச்சியான போராட்டத்தின் அழுத்தமான காரணம் புரிந்தது.

இப்போது கூட நிறையப் போ் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாக மட்டும் இதை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  அப்படி இருந்தால் ஜல்லிக்கட்டுப் பற்றி அதிகம் தெரியாத அல்லது அந்த விளையாட்டு குறித்த அதிக அக்கறை இல்லாத பல லட்சக்கணக்கான மக்கள் இதை தங்கள் போராட்டமாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.   இது உண்மையில், நாம் நம்பும் நம் தலைவா்கள் நம்மை வார்த்தை ஜாலம் செய்து ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை ஏமாற்றுகிறார்களே என்ற கோபத்தின் வெளிப்பாடுதான்.  இனி இவா்களை நம்பியது போதும்.  நாமே நமக்கானதை போராடிப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார்கள்.  அதில் முதல் வெற்றியும் பெற்று விட்டார்கள். 

அரசியல், மதம், இனம் என்று பல அணிகளாக இருந்த தமிழ் மக்கள் இன்று Team தமிழ்நாடு என்ற ஒரே அணியாக மாறி சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.  இந்த விழிப்புணர்வு தொடா்ந்தால் வருங்காலத்தில் இந்தியா கண்டிப்பாக வல்லரசாகும். 

சென்னை மெரினாவில் நடக்கும் இந்தப் போராட்டத்தின் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.  அதில் தமிழனாகவும், சென்னைவாசியாகவும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சியில் ஜல்லிக்கட்டு குறித்த சில Tit Bits.

நாடா ? மாடா ? என்ன தேவை உங்களுக்கு.  எங்களுக்குத் தேவை நாட்டு மாடு.

இன்று ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால் நாளை ”ஜல்லிக்கட்டு இதிகாசம்” என்ற புத்தகத்தை வருங்கால வைரமுத்து எவராவது எழுத வேண்டியிருக்கும்.

மாடு முட்டி செத்த மனிதா் உண்டு, மனிதர் முட்டி செத்த மாடு உண்டா ?

இது காளைக்கான போராட்டம் மட்டுமல்ல, நமது நாளைக்கான போராட்டமும் கூட.

அரசியல்வாதிகளே நீங்கள் குனிந்து குனிந்து எங்களையும் உலக அரங்கில் குனிய வைத்தீர்கள். காளையரே, கன்னியரே  நீங்கள் நெஞ்சம் நிமிர்த்தி எங்களையும் நிமிர வைத்து விட்டீர்கள்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் வழித்தோன்றல்கள் நாங்கள். மிருகவதை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்காதீா்கள்.

வாடி வாசலில் இனி ஆடிக் கொண்டாட்டம்.

Wednesday, January 18, 2017

தும்பை விட்டு விட்டு ......


சட்டக் கல்லூரியில் படிக்கும் எனது மகள் நிவாஷினி இன்று காலை கல்லூரி சென்றவுடன் போன் செய்தாள் .  "அப்பா இன்று எங்கள் college strike. எல்லோரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக "மெரினா" செல்கிறார்கள். நானும் செல்லட்டுமா?" என்று கேட்டாள்.  ஒரு அப்பாவாக ஒரு சின்ன தயக்கம் எனக்குத் தோன்றியது.  அங்கே சென்று ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்று.  

உடனே இன்னொரு எண்ணமும் தோன்றியது.  அங்கே போராடும் மாணவ மாணவிகள் எல்லோருக்கும் பெற்றோர்கள் இருப்பார்களே.  அந்த மாணவர்கள் எல்லாம் தங்களுடைய சுயநலத்துக்காகவா போராடுகிறார்கள். இப்படி பொது நலத்துக்காக போராடும்போது, "நீ மட்டும் போகாதே. பத்திரமாக வீடு வந்து விடு" என்று சொல்வது எவ்வளவு சுயநலமாக இருக்கும் என்று தோன்றியது. "பத்திரமாக போய் விட்டு வா" வாழ்த்திச் சொல்லி அனுப்பினேன். எனது மனைவியும் என் மனநிலையில்தான் இருந்தார்.

எனக்கு நினைவு தெரிந்து தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக ஒரு போராட்டத்தில் இறங்கி இருப்பது இப்போதுதான்.  ஒரு பலமான அரசியல் தலைமை இல்லை என்பதும் ஒரு காரணம் என்றாலும்,  நம்முடைய இளைஞர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களில் மிகுந்த கோபம் கொண்டு அதை எதிர்ப்பதற்கு ஒரு காரணியாக ஜல்லிக்கட்டை கையில் எடுத்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.  அது உண்மையாக இருந்தால் ஜல்லிக்கட்டு is just the beginning.

தற்போதைய நம்முடைய இளைஞர்கள் பொதுவாக நாட்டு நலனைப் பற்றி அவ்வளவு கவலைப் படாமல்  தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார்கள் என்ற  பொதுவான குற்றச்ச்சாட்டை இந்தப் போராட்டம் தகர்த்து ஏறிந்து இருக்கிறது.

முன்பெல்லாம் corporate media சொல்வதுதான் நியூஸ்.  இப்போது social media எல்லா விஷயங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக பிடுங்கி விடுகிறார்கள். மக்களை முட்டாளாக்க நினைக்கும் அரசியல்வாதிகளை மக்கள் முட்டாளாக்கி விடுவார்கள்.  அதனால்தான் போஸ்டர்  அடித்து அது காய்வதற்குள் சாணி அடித்து விடுகிறார்கள்.  

இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் இந்த இரண்டு மூன்று நாட்களாக நடக்கும் இந்தப் போராட்டம் மிக மிக பொறுமையுடனும் பொறுப்பாகவும் நடந்து கொண்டிருக்கிறது.  இத்தனை லட்சம் இளைஞர்கள் திரண்டிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு எவ்வளவு போலீஸ் போட்டாலும் பத்தாது.

இந்தப் போராட்டத்தை சீக்கிரம்  நல்ல முறையில் முடிவுக்கு கொண்டு வருவது அரசாங்கத்தின் கையில் இருக்கிறது.  ஏனென்றால் எதற்கும் ஒரு boiling point இருக்கிறது.  நிலைமை கைமீறாமல் தடுப்பது அரசாங்கத்தின் முதல் கடமை.  ஜல்லிக்கட்டு போராட்டம் என்பதால் இந்த உதாரணம் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறன்.  "தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க வேண்டாம்".

இளைஞர்களின் அடுத்தப் போராட்டம் டாஸ்மாக்கை மூடுவதற்கும், மணல் கொள்ளைகளை தடுத்து நீர்நிலைகளை காப்பதற்குமாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.  வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களாய் நம் இயற்கை அன்னை வெள்ளமாய் 2015 ல் மழை பொழிந்தும் இப்போது அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கிறோம்.  இதை வெட்கக் கேடு என்று சொல்வதா அல்லது சாபக் கேடு என்று சொல்வதா ?  இன்னொரு நல்ல மழை வந்தாவது நம் பிரச்சினை குறையட்டும் என்று இயற்கையிடம் பிரார்த்திப்பதைத் தவிர இப்போது நமக்கு வேறு வழியில்லை. 

எண்ணங்களை விதைத்து வைப்போம்.  சீக்கிரம் துளிர்க்கட்டும்..

Friday, December 23, 2016

வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜிக்கு வாழ்த்துக்கள்


கவிதைகளில் கல்யாண்ஜியாகவும் கதைகளில் வண்ணதாசனாகவும் அறியப்படும் எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது  2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்காக வண்ணதாசனின் “ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது. 

ராவ் ரெட்டிகளின் வருமான வரி சோதனைகளும், சின்னம்மா அதிமுக பொதுக்ககுழுவில் பெரியம்மா ஆவாரா என்ற கேள்விகளும் நிறைந்திருக்கும் இந்த நாட்களில் சில நல்ல மனிதர்களுக்கு கிடைக்கும் உண்மையான மரியாதையை miss செய்துவிடக் கூடாது என்பதற்க்காகத்தான் இந்தப் பதிவு.


"வண்ணதாசன் கடிதங்களில் வாழ்வின் வண்ணங்கள்" என்ற தலைப்பில் திருமதி .தி.சுபாஷிணி என்பவரது பதிவை வண்ணதாசனின் வலைதளத்திலேயே  படிக்க நேர்ந்தது.  மிகவும் அருமையாக இருந்தது. 

இனி வண்ணதாசனின் வண்ணங்கள் உங்கள் எண்ணங்களை நிறைக்கட்டும்.  

வாழ்க்கை எப்போதும் ஆதாரமற்றுப் போய்விடுவதில்லை. ஆதாரத்தின் புள்ளியும் அவ்வப்போது மாறிச் சமன் செய்துகொண்டிருக்கின்றன.
வாழ்வின் மர்மமும் புன்னகையும் ஒளியும் நிறைந்தது. தனிமை நிரம்பியது. உங்களின் முகத்தில் ஜீவனைத் தரிசிக்க முடிந்தது. நீங்கள் எவ்வளவு அழகு.
*****************************
திட்டமிட முடியாத வாழ்வின் எல்லைக் குறைவால் ஆசைகளின் பழுப்பு இலைகள் உதிர்ந்துகொண்டே இருக்கும். எதையாவது தொடர்ந்தும், அதனாலேயே தொடரப்பட்டும் கடைசி வரை செய்வினை, செயப்பாட்டு வினை ஆகிவிட்டது. வாழ்க்கையில் விருப்பமில்லாத திருப்பங்கள் எத்தனையோ. அவை தவிர்க்க முடியாதவை. காதலினால் அல்ல. கருணையினால் என்றும் “கருணையினால் அல்ல காதலினால்” என்றும் ஒவ்வொன்றும் வெவ்வேறு அறியாத சதவீதங்களுடன் நிகழ்கின்றன. இன்றும் பௌர்ணமி நிலா, நிலா மாதிரியே இருந்தது.
*****************************
இந்த மழைக்கால இருட்டில் இந்தப் படிக்கட்டுகள் போல வாழ்வும் இந்த மண்விளக்குகள் போல நானும் இருந்து விடலாம். யாராவது ஏற்றுவார்கள். யாருக்காவது வெளிச்சம் தெரியும், ஈரப் புல்லில் ஓரமாவது ஒரு தரம் மினுக்கும் நடுங்குகிற ஒளியில். எல்லாவற்றையும் நீருக்கும் நெருப்புக்கும் காற்றுக்கும் வெளிச்சத்திற்கும் உண்மையாக இருக்க அனுமதியுங்கள். இயல்பு நம்மை வழி நடத்தும், புல்லை யாரும் தருவதில்லை தானாகவே வளர்கிறது.
*****************************
சிக்கல்களின் நெரிசல்களுக்குக்கு இடையில் மனிதர்கள் சதா நோம்பிருப்பது அன்பெனும் சிறு வரத்திற்கு. பந்தியில் போட்ட வாழை இலையின் குருத்துப் பச்சையை ரசித்துப் புற விரல்களால் நீவிக் கொடுத்த நமக்குத்தான் சரியான இடத்தில் விழுந்து போகிறோம். மருகியுருகித் தவிப்பவர்களின் மேல்தான் மெழுகுவர்த்திச் சொட்டாக எல்லாம் விழுந்து இறுக அடிக்கின்றன. என்றாலும் நாம் இதையெல்லாம் தாண்டிப் போகிறோம்.
*****************************
நல்லவையாக எழுதியவையெல்லாம் உடலும் மனமும் உயரப் பறந்து, ஓய்ந்த காலத்தில் தான். ஒரு முழு நாளில் சிறகடிப்பிற்க்கு முன் கோபுரத்தில் உட்கார்கிற அந்த மயங்கும் நேரத்தில் தான். இது போன்ற சமயங்களில் குழுந்தையைவிட மனைவி பெரிய ஆறுதல். எல்லாம் அறிவது இம்சை போதும்.
*****************************
வாசிக்கிறவனை வீணை மீட்டத் தொடங்குகிற நேரம் அபூர்வமானது. இசையின் கொடுமுடிகளைத் தொடரப் பிரயாசைப்பட்டு, அடையும் போது இடையே இன்னும் சில சிகரங்களுக்கும் பாடகனை நகர்த்தும்.
*****************************
குளிப்பதற்கு முந்தைய ஆறும் குளித்த பிறகான ஆறும் மட்டும் வேறு வேறு அல்ல, நீங்கள் பார்க்கிற ஆறும் நான் பார்க்கின்ற ஆறுமே வேறு வேறு. எதுவும் ஒன்றல்ல. எதுவும் வேறு வேறும் அல்ல.
*****************************
அன்போ, காதலையோ கல்வியையோ தன்னை மறந்து அல்லது தன்னை மறக்கச் செய்கிறபடி எப்போதாவது வாய்க்கிறது. மனைவியுடன் சினேகிதினுடன், குழந்தைகளுடன், எந்தச் சலனமுமற்ற நிறைந்த நதி நகர்வது போல, கரை தொட்டு கரை அற்றுக் கலந்திருப்பதால் தனித்த நீண்ட அருமையான இரவுகளும் அப்படித்தான். சுற்றிப் பிரகாரத்தில் கடைசியில் தெரிகிற கருணைச் சுடர் போல் தெரிகிறது. ஒரு பந்து மல்லிகையைவிடக் கிள்ளித் தலைமையில் செருகிய ஒரு இணுக்குப் பூ படுத்துகின்ற பாடு ஜாஸ்திதான். அலை அலையான ஆண் பொண்ணுமில்லாவிட்டால் திருவிழா ‘நிரம்பாது’. ரோடு என்ஜின் மாதிரிக் தேர் அளந்து போகமுடியாது. வாழ்க்கை முதல் மரியாதைகள் நிரம்பியது.
*****************************
பாசாங்குகளற்ற, வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும் எந்தக் காதலும், எந்தக் காமமும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும்.
எல்லா மனிதனும் எல்லா மனுஷியும் அழகாக இருக்கும் போது, இந்த வாழ்வும் இந்த உலகும் மேலும் அழகுறும். உண்மையும் பாசாங்கு அற்றதும் ஆன என் முகமும் என் வரிகளும் அங்கீகரிக்கப்படுவதுதான். இதே முகத்துடன் இதே வரியுடனும்தான் எங்கும் இருக்கிறேன். ஆனால் தமிழ் இலக்கியச் சூழலில் இந்த ஆரோக்கியம் இல்லை, இந்த சினேகிதம் இல்லை. நான் மற்றவர்களுக்கும், மற்றவர்கள் எனக்கும் என்றாகிவிட்டது என் மார்புக் காம்பிலிருந்து நான் பாலருந்த முடியாது. வளர்வதும், வளர்வதைக் கண்டு மகிழ்வதும்தான் வாழ்வாக இருக்க வேண்டும். ஒன்றுமில்லை என்று உணர்வது போல் உன்னதம் வேறு உண்டோ!
*****************************
சில பேரை நிஜமாகத் தொட முடிந்திருக்கிறது. நிஜம் தொட்டால் நன்றாகத்தானே இருக்கும். தற்செயல்கள் எல்லாம் எவ்வளவு அழகாகப் பூவைப் போல மலர்ந்துவிடுகின்றன.
*****************************
நான் எதையும் சுருதி பாடவில்லை. எதையும் எதிர்த்துத் தர்க்கமிடவில்லை. நான் இதுவுமில்லை, அதுவுமில்லை, எதுவுமில்லை. எதுவாகவேனும் நான் நிர்ப்பந்தமாக என்னைச் சொல்லிக்கொள்ள வேண்டுமெனில் என்னைப் புல் என்று சொல்லுங்கள். புல்லாக இருக்க எனக்கு முற்றும் சம்மதம்.
*****************************
இனிப்போ, கசப்போ எதிர்கொள்ளுங்கள். கசப்பைப் போல் ருசியில்லை. காலம் போல் அமுதில்லை. விழுங்குங்கள். செரித்துக்கொள்ள முடிந்ததெனில் செய்யுங்கள். விழுங்கவும் முடியவில்லை, அப்போதும் தோன்றவில்லை எனில் நீலகண்டனாக நிறுத்துங்கள். மனிதர்களைச் சம்பாதிப்பதற்காக, முதலில் ஒடுங்கள். சம்பாதிப்பதற்காக அப்புறம் ஒடுங்கள். ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுகின்ற புள்ளிமான் சூட்சுமம் பிடிபடுகிறபோது, நீங்கள் வெற்றிபெற ஆரம்பிக்கிறீர்கள்.
*****************************
மனிதர்கள் தான் சூழல். சூழல்தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது முன்னே செல்வது. முன்னே செல்வது உழைப்புச் சார்ந்தது. உழைப்பு என்பது உள்ளிருந்து எழுவது. உள் என்பது வெளி.
*****************************
மண்ணை அறிவது மனிதர்களை அறிவது மாதிரிதான். ஒரு விதை முளைத்தலை மீறிய உன்னதக் கவிதையை என்னால் ஒருக்காலும் எழுதி விட முடியுமா என்ன! நிகழக் கூடியதுதான் என்பதற்காக நிகழ அனுமதித்து விடமுடியுமா?
*****************************
உலகம் முழுவதும் ஆயிரம் நடந்து கொண்டிருக்க அவரவர் வாழ்விலேயே பெரிதும் சிறிதுமாக நிறைய தூரம் வந்துவிட்டோம். செய்யத் தோன்றியதே மிகக் கொஞ்சம். அதையும் செய்துவிட்ட பாடில்லை. போய்க்கொண்டே இருக்கிறோம். அன்றன்றே சரியாகிப் போகிறது. மலையும் வனமும் நதியும் சதா அழைத்துக்கொண்டிருக்கின்றன. அந்த அழைப்புக்கு உடன்படாத ஹிம்சை இருக்கிறதே தவிர, இந்த அழைப்பின் குரல் ஒருபோதும் இம்சையாகிவிடாது இருக்கிறது.
*****************************
என்னைப் பொறுத்தவரை குரல்கள் எனக்கு முக்கியமானவை. அவரவர்களைக் காட்டுகிற அவரவர் குரல்கள், முகம் மாதிரி, முகத்தை விடவும் எல்லாம் காட்டவல்லவை.
*****************************
அம்மாவுக்குப் பேச்சு வேண்டும். சத்தம் வேண்டும். சலசலப்பு வேண்டும். சிலபேர் அன்பை அப்படி வெளிப்படுத்துகிறார்கள். யாருக்கு எழுதினேன் என்பதும் என்ன எழுதினேன் என்பதும் ஞாபகம் இருப்பதில்லை தற்போது. வாழ்தல் இருத்தலாகிவிடும்போது இதுபோன்று ஆகும். மறுபடியும் ஒன்றுக்கொன்று இடம் மாறிச் சமன் செய்துகொள்ளும். அதனதனை அதுவே கவனித்துக் கொள்ளும். மிக உள்ளடங்கி, மிகத் தொலைவில், மிக அடர்த்தியுடன் பூக்கும் மரங்களும் எங்கெங்கோ இருக்கின்றன. உடனடி வாழ்வில் எங்கெங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
*****************************
வாழ்க்கைக்கு எது எல்லாம் தேவையோ, அல்லது போதுமோ அது அவற்றுக்கும் பொருந்தும். ஒன்றின் ஜீவன் மற்றொன்றில் இருக்கிறது. எதுவும் வேறு வேறில்லை. எல்லாம் புரியும் தினம் வரும். எல்லாம் தானாகப் புரியவும் செய்யும். அந்த நேரம் முன் & பின் எனினும் அருமையானதாக இருக்கும். எனக்கு எதிர்த்தாற் போல உன்னதமான மனிதர்கள் தட்டுப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். என்னால்தான் எதையும் திருப்பித் தர முடியவில்லை.
*****************************
மனிதர்கள் நம் கையைப் பற்றுகிற நேரம் எவ்வளவு உன்னதமானது. அவர்களின் கண்களில் திரள்கிறதும் கசிகிறதும் எவ்வளவு ஒப்பற்றது.

உங்களுடைய துணைவியாருக்கும் சற்று நெருக்கமான நேரம் ஒதுக்குங்கள். ஸ்தாபனமோ, இலக்கியமோ அந்தப் பெண்களை அவர்களுடைய இடத்திலேயே விட்டுவிட்டு நீங்கள் மட்டும் எங்களுடைய காரியங்களைப் பார் என்று சொல்லவில்லை. நமக்கு வாய்த்திருப்பதெல்லாம் அருமையான மனுஷிகள், பூமி உருண்டையைப் புரட்டி விடுகிற நெம்புகோல்களுக்கு அடியில் அவர்கள்தான் செங்கா மட்டை. நசுங்கிக்கொண்டு கிடக்கிறார்கள். என்னையும் உங்களையும் அப்படியெல்லாம் அனுசரணையாயும் பத்திரமாகவும் வைத்திருக்கிற பெண்களுக்கு நாம் அப்படியொன்றும் அதிகம் செய்துவிடவில்லை.
*****************************
யாரையும் பயன்படுத்திக்கொள்ள எனக்குத் தெரியவில்லை. மனிதன் பயன்படுத்திக் கொள்ளப்படுவதற்கு உண்டானவனாக எனக்குப் படவில்லை, அதிகபட்சம் இந்த வாழ்க்கைக்கும் மனிதனுக்கும் உண்மையாக இருப்பதையே முயல்கிறேன். விட்டுக் கொடுத்துக்கொண்டே செய்கிற உறவு நிலையில் எந்த இழப்பும் இல்லை எனத் தோன்றுகிறது. குடும்பத்திலும் அலுவலகத்திலும் என்னைக் காயப்படுத்த, சிறுமைப்படுத்த முனைந்த மனிதர்களை இன்னும் நெருங்கியிருக்க என்னால் முடிகிறது.
*****************************
மண் புழுக்களை நேசிக்கிற மனம் இன்றும் இருக்கிறது. அதனதன் காரியங்களை அவை யாவையும் அவரவர் காரியங்களை அவரவர்களும் செய்து விடுகிறோம். இதில் ஒப்பிட ஒன்றுமில்லை. ஒரு கூழாங்கல் போல் இன்னொன்றில்லை. ஒரு குன்னி முத்துப்போல் மற்றொன்றில்லை. ஒரு வேப்பங்கன்றின் காற்றை இன்னொன்று தருவித்து விடாது. இன்றைய சூரியன், நேற்றைய சூரியன் அல்ல. நாளைய கல்யாணி, இன்றினுடையவன் அல்ல. எதன் எதன் நீட்சியாகவோ, எல்லாம். அடிக் கணு இனிப்பு நுனிக் கரும்புக்கு அகப்படவில்லை. இதற்கிடையில் ஆரக்கானை நொந்துகொள்ள கடையாணிக்குத் துப்பில்லை. எல்லாம் உருண்டு உருண்டு நடந்து நடந்து கடந்து கடந்து.
*****************************
நான் சிப்பியைப் போல ஒதுங்கிக் கொண்டிருப்பேன். சிறு கீரையைப் போல என் பாத்தியில் தழைத்துக் கொண்டிருப்பேன். அவரவர் வாழ்க்கை அவரவர்களுக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குற்ற உணர்வு. அசைபோட அசைபோட அத்தனையும் பிரம்படி. வேண்டும் என்று யாரும் கிழிப்பார்களா தலைவாழை இலையை! ஒரு பூட்டில் அஞ்சு இலை என்ற கணக்கு இன்னும் மாறவில்லை. ஆண்டாள் தோளில் தொங்கினால் மாலையும் அழகு. கிளியும் அழகு. இடைச்சி கடைந்தாலும் மோர் சிலும்பாமல் இருக்குமா? தெறிக்கத் தெறிக்கத் திரளும் வாழ்வு.
*****************************
ஒரு ஸ்டில் லைஃப் ஓவியத்தின் பழக்கிண்ணத்தில் நிறையத் திராட்சைத் தொங்குவது போல. சில சமயம் நெரிசல் அழகு. நெரிசல் ஜீவன்.
யார் நம்முடைய அறிவைத் தூண்டுகிறார்களோ, அந்தச் சுடர்க் கடவுளின் மேலான ஒளியை நாம் தியானிப்போமாக! எப்போதுமே சற்று முந்தைய பருவங்கள் அழகானவை. அப்பழுக்கற்றவை. உண்மையை ஏந்தி நிற்பவை. காலைக்கு முன் விடியற்காலை, வேனிலுக்கு முன் இளவேனில், பூப்பதற்கு முந்தைய பூ, பேறுக்கு முந்தைய இளம் தாய், கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு மண்டபம், யோசிக்க யோசிக்க இன்னமும் நிறைய இப்படி…
*****************************
வீடு அதில் உள்ள மனிதர்களால் நிறைகிறது. அழுந்துகிறது. ஒன்றுமே இல்லை என்று ஞானமும் தர்க்கமும் அறுதியிடுகிறவற்றிலிருந்து எல்லாச் சந்தோஷமும் பெருகி வழிவது போல் இருக்கிறது. கொட்டின ஆரத்தியில் கிள்ளின வெற்றிலையை அப்பியிருக்கிற வாசல் மாதிரி, ஏற்றினால் இன்னொன்று அழகாகி… காலத்தின் சிறகுகள் அகன்றவை. வீச்சு நிறைந்தவை.
*****************************
நீரைப் போன்ற அற்புதமில்லை. அதுவும் வனாந்திரங்களில் மீன் மொய்த்துக் கிடக்க, சதுர கூழாங்கல்லுக்கு வேதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டும், காற்றின் பாடல்களுக்கு இசைந்து கொண்டுமிருக்கிற நீரைப் போன்ற உயிருள்ள திரவம் வேறில்லை.
*****************************
உள்ளங்கைகள் மிக அழகாக இருப்பது, அப்படி ஒரு சேர அந்தத் தண்ணீரை அள்ளும்போதுதான். சில பதிலற்ற கேள்விகள், தொடர்ந்து நம்மிடம் இருந்துகொண்டே இருக்கின்றன. போன தலைமுறையில் இருந்து இந்தத் தலைமுறைக்கு வம்சாவளியாக அந்தக் கேள்விகளையும் அங்கீகரித்து விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஓடுகிற ஆறு, கூழாங்கற்களைத் தராது இருக்காது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எவ்வளவுதான் ஒருத்தி எழுந்திருக்க முடியாமல் இம்சைப்படுவது என்று உன்னைப் போல் ஒரு மனுஷிக்குத் தோன்றிவிடக் கூடாது. கைப்பிள்ளையோடு வேனா வெயிலில் லொங்கு லொங்கு என்று ஓடுகிற கிராமத்துப் பெண்பிள்ளைகளுக்கு ஆதரவு சொல்ல முடியாதபடி ரஸ்தாக்கள் நீளக் கிடக்கின்றன.
*****************************
பேசினதைவிட என் வீட்டு கேட் வரை வந்து விட்டுப் போனீர்களே அது அல்லவா பெரிய பேச்சு. மனது சூடுற்றும் புடைத்துப் பரபரப்புக் கொள்ளும்போது எழுத்து சரியான வடிகாலாக இருக்கும்.
*****************************
இந்தத் தாளின் கசங்கலைப் பொறுத்துக்கொள்வீர்கள்தானே. மனித குணாம்சங்களின் கசங்கல்ளைப் புரிந்துகொள்ளவும் அனுமதிக்கவும், அனுசரிக்கவும் விலகி நின்று ரசிக்கவுமான பக்குவமும் வாழ்வனுபவமும் உடைய புத்தகக் கூர்மை உடைய மனிதனாக நீங்கள் இல்லாவிட்டால், இந்த இரண்டு கதைகளையும் இதற்கு முந்தைய கதைகளையும் எப்படி எழுதியிருப்பீர்கள். கசங்குவது கசக்கப்பட்ட வஸ்துவின் குற்றமாகாது என்பதும் இன்னொரு நிஜம்.
*****************************
தெரிவதுதான் உண்மை. உண்மை சுடுவது மட்டுமல்ல, உண்மை தன்னைக் காட்டிக்கொள்ளவும் செய்யும். சுட்டிக்கொள்ளவும் செய்யலாம், செய்யக்கூடும்.
*****************************
ஊற்றுகிற எண்ணெய்க்கும் ஏற்றுகிற திரிக்கும் ஏற்ப, ஒளிரும் சுடர். வெளிச்சம் விளக்குக்கு அப்பாலிருந்தும் வருகிறது, அல்லது அப்பால் இருந்துதான். அதிர்ச்சிகளைத் தருகிற வாழ்க்கையே அதிர்ச்சித் தாங்கிகளையும் தரத்தானே செய்யும். பாதையிடுக்குகளில் புல் தானாக வளர்கிறது. மழைத் தண்ணீரில் தானே வாய்க்கால் வகுத்துக்கொள்கிறது. திடமான தாயின் கர்ப்பம் தானாகவே தலை பிறக்கிறது. நானாக உணராதது எல்லாம் தானாக.
*****************************
சாவு எனக்கு மரண பயம் தரவில்லை. சாகச் சம்மதம். அமைதியும் நிறைவுமான ஒரு விடுதலை இது. வாழ்க்கை அழைக்கிறது போல, சாவும் சதா அழைத்துக்கொண்டிருக்கிறது. இரண்டிற்கும் இடையில் நாம் தீவிரமாக முத்தமிட்டுக்கொண்டு இருக்கிறோம். வியர்வை ஒழுகிக்கொண்டிருக்கின்றது. கடைக்கண்ணில் நீர் பெருகி, காதோரம் சிகை கலைகிறது. அகலாது அணுகாது எரிகிறது தீ. தான் எவ்வளவு குரூபி எனினும் கண்ணாடி பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? எல்லோரும் அவரவர்களைத் தெரிந்துதானே இருக்கிறோம். நல்ல பட்டியலின் நீட்சிக்கு மத்தியில் என் பெயர் விட்டுப் போகிறதை எதிர்கொள்கிற எத்தனையோ இடங்களில் இதுவும் ஒன்று. உண்மை எதிர்கொள்ள வேண்டிய வகையிலேயே மிகவும் உறுதியுடன் தன்னை வைத்துக்கொள்கிறது. காலம் காலமாக இழந்த காதல்தானே கொண்டாடப்படுகிறது.
*****************************
நெல் வயலில் ரோஜா கூட ஒரு களைதான். நான் நெல்வயல் ரோஜாவாக இருக்கக் கூடாது இல்லையா? ஒரு நேரத்தில் ஒன்றை மாத்திரம் கவனியுங்கள். இலக்கியத்தில் திளைக்கும்போது எதற்கு இலக்கியவாதிகள் ஞாபகம். விதை பரவுதல் என்று சின்ன வயது சயன்ஸ் பாடத்தில், நீரால், காற்றால், பறவைகளால், மனிதர்களால் விதைகள் பரவுவது பற்றி வரும். நம்முடைய பிள்ளைகள் மனிதர்களையும் பறவைகளையும் அன்றி இந்தக் காற்றால் பரவுகிற எருக்கலஞ்செடி, இலவம் பஞ்சு, வாரியப்புல் வகைத் தாவரங்கள் ஆகிப் போனார்கள். முகவரியற்றுப் போவது ஒரு துன்பம் எனில் அப்படி முகவரியற்றுப் போனதை உணர முடியாதவர்கள் ஆனார்கள் என்பது இன்னும் ஒரு பெரிய துன்பம். வலியை உணர்வது அதிக வலி.
*****************************
நாம் உணர்வுபூர்வமானவர்கள். மனத்தைப் பார்க்கிறவர்கள், கரைந்து போகிறவர்கள். ஆனால் தொலைந்து போகிறவர்கள் அல்ல.
அப்படியெல்லாம் வாழ்வை, செயல்களை இன்னொருத்தரிடம் ஒப்படைத்துவிட முடியாது. வெயில், நிழல், பாதுகாப்பு, பாதுகாப்பின்மை எல்லாம் தான் எனக்கு வேண்டும். ஒரேயடியாக நிழலிலும் ஒரேயடியாகப் பாதுகாப்பிலும் இருந்தால் அது வாழ்வாக இருக்கிறதில்லை. மனம் அனுபவங்களின் நாற்றங்கால். பசுமையுடன் இருக்கும்போதே செய்ய வேண்டிய காரியங்களை வைக்கோல் பழுப்புக்கு வந்த நேரத்தில் செய்வதில் அர்த்தமில்லை.
*****************************
இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு ஏற்றுவிக்கப்படுகிற இந்த ஒளி துலங்குகிற வரை எனக்கு முகம் பார்க்க அலுக்காது. ஒளி பெருகுக, ஒளி பெருக்குக.
நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
*****************************
கனிகிற காலத்தில் கனிந்து நிற்கிறவர்களைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாகத்தான் இருக்கிறது. போன தடவை வந்திருக்கும்போது பஸ் ஸ்டாண்ட் வரை வந்து அம்மா வழியனுப்பிய கருணையினால் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். யாராவது வழியனுப்பவும் துணையிருக்கவுமாக இருந்தால் இந்த வாழ்க்கை எவ்வளவு அடர்த்தியாகி விடுகிறது. உலகில் நல்லறங்களும் நல்லிசையும் நல்லியல்புகளும் நல்ல மனிதர்களும் போற்றப்படுகிறபோது ஒரு திருவிழாப் போல நிகழ வேண்டும். ஆரவாரமல்ல. நிறைவு, பெருமிதம், எல்லோர் முகங்களிலும் சுடர், ஒருவர் கையை ஒருவர் பற்றி ஒருவர் தோளை ஒருவர் அணைத்து, எல்லோர் கையாலும் சந்தனம், எல்லோர் கையாலும் ரோஜா இதழ்.
*****************************
தொடர்ந்து செயலாற்றுங்கள், எந்தக் கதவு எப்போது திறக்கும் என்று தெரியாத ரகசியத்தின் சுவாரசியத்தில் தான் இந்த வாழ்வின் பந்தயம் நிகழந்துகொண்டு இருக்கிறது. வீட்டில் எல்லோரும் அவரவர் உலகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு பூமியையும் சுற்றும்போது எல்லாக் கிரகங்களும் முக்கியமாகச் சூரியன் & நன்றாகத் தானே இருக்கும்.
*****************************
திட்டமிட்டு எல்லோரையும் அனுச்சரித்துக்கொண்டு உங்களுடைய இடத்தை விட்டுக் கொடுக்காமல் மேலும் தாமதமின்றி வெற்றி பெறுங்கள்.
மீட்சியில் தேடலாகவும் தேடலில் இருந்து துவங்கும் மீட்சியுமாகவே மிச்சமுள்ள வாழ்வு இருக்கும். உச்ச மகிழ்ச்சியில் கசிந்துகொண்டிருக்கிறது, இந்தக் காலத்தின் கண்ணீர்.
*****************************
அதிகபட்ச உண்மையோடும் அதிகபட்ச நேர்மையோடும் வாழவே, அனுமதிக்கப்பட்டிருக்கின்ற என் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நான் முயல்கிறேன். நான் யாரையும் சந்தேகிப்பதில்லை யாரையும் வெறுப்பதுவுமில்லை. உதாசீனங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட நான் நெருங்கி நெருங்கி ஒவ்வொருவரையும் புரிந்துகொள்ளவே முயல்கிறேன். இப்படியான நெருக்கங்கள் மத்தியில் நான் யாரைப் புரிந்துகொள்ள நெருங்குகிறேனோ, அவர்கள் என்னைப் புரிந்துகொள்வதும் பெரும்பாலும் நேர்ந்திருக்கிறது. பகுப்பையும் தொகுப்பையும் அறியாத பரசுரமாகவே நாளிருக்கிறேன். என் தந்தையின், தாயின், மனைவியின், நண்பர்களின், சிறகுகளிலிருந்து உதிர்ந்திருக்கிறது, என் எழுத்தின் ஒற்றைப் பீலி. ஒற்றைப் பீலி பறந்து வருமே தவிர பறக்கச் செய்யுமா!