Monday, April 27, 2020

Man is Master of his own Destiny



The full meaning of the proverb "Man is master of his own destiny" is beautifully explained by Maharishi Mahesh Yogi in the following words:

The bad influence of the past Karma is something beyond the control of the doer.  The best the doer can do in the present in order to neutralise the influence of past Karma is to engage in the practice of Transcendental Meditation, which will readily raise the consciousness of the doer and produce favourable influence in the surroundings; when the consciousness is raised, energy and intelligence are increased.  Then, whatever is the influence of the past, that influence will not be able to nullify present action.  Certainly the influence of the past Karma will be there, but it may not completely guide the destiny of the present action.

If a businessman loses five hundred dollars, the loss is a loss for all times.  Although this loss will always remain a loss, if two thousand dollars are earned the next day, the gain overshadows the loss.

This is how, by due amount of performance of Transcendental Meditation, supplemented with the power of charity and virtuous deeds of helping others, the negative influences of the past Karma can be counteracted in order to smooth the path of the present Karma.  And then the action will be performed without resistance or obstacles, yielding maximum results.

Excerpts from Maharishi's Science of Being and Art of Living

"மனிதன் தன்னுடைய சொந்த விதிக்கு தானே எஜமானன்"  என்ற பழமொழிக்கான விளக்கத்தை மஹரிஷி அவர்கள் மிகவும் அருமையாக பின்வருமாறு விளக்கியுள்ளார்:

தன்னுடைய பழைய கர்மாவின் விளைவுகளில் அல்லது பாதிப்புக்களில் இருந்து விடுபடுவது என்பது மனிதனின் சக்திக்கு மீறிய செயலாகும்.  அதிகபட்சம் நம்மால் செய்யக்கூடியதெல்லாம் பழைய கர்மாவின் பாதிப்புக்களில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் செயலை இப்போது செய்வதுதான்.    அப்படியான ஒரு பாதுகாப்புக் கவசம்தான் "ஆழ்நிலைத் தியானம்".  ஆழ்நிலைத் தியானம் செய்யும் போது நம்முடைய விழிப்புணர்வு நிலை  மேலோங்கி நமக்கு ஒரு சாதகமான சூழ்நிலை நம்மைச் சுற்றி உருவாகும்.   அப்படி நம்முடைய  விழிப்புணர்வு நிலை  மேலோங்கும்போது நம்முடைய அறிவும், ஆற்றலும் அதிகரிக்கும்.  அந்த நிலையில் நமது பழைய கர்மாவின் பாதிப்புக்கள் அல்லது விளைவுகள் இன்றும் தொடர்ந்தாலும் கண்டிப்பாக அதனால் நாம் பாதிக்கப்படுவது பெருமளவு குறைந்து விடும் அல்லது  பழைய கர்மாவின் விளைவுகள் நம்முடைய இன்றைய வாழ்க்கையை பாதிக்காத அளவில் நம்மால்  செயலாற்ற முடியும்.

உதாரணமாக, ஒருவருக்கு தன்னுடைய தொழிலில் 50,000 ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம்.  அந்த நஷ்டம் நஷ்டம்தான்.  அதை மாற்ற முடியாது.  ஆனால் நஷ்டம் ஏற்பட்ட மறுநாளே அவருக்கு அவருடைய தொழிலில் இரண்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அப்போது அவருக்கு அந்த 50,000 ரூபாய் நஷ்டம் எந்தவகைகளிலும் பெரிதாக பாதிக்காது.   அதாவது பழைய நஷ்டத்தை விட இன்றைய லாபம் பலமடங்கு என்பதால் நாம் அந்த பழைய நஷடம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டோம்.

எனவே, நாம் தொடர்ந்த ஆழ்நிலைத் தியான பயிற்சி மூலமும், நம்முடைய தான தரும காரியங்கள் மற்றும் மற்றவர்களுக்கு உதவும் நம்முடைய நற்செயல்கள் மூலமும் பழைய கர்மாவின் எதிர்மறை பாதிப்புக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதோடு மட்டும் இல்லாமல், அதன் பாதிப்புக்கள் நாம் தற்போது செய்யும் செயல்களுக்கு எந்தவிதத்திலும் இடையூறு ஏற்படுத்தாமல் நமக்கு அதிகபட்ச வெற்றியைப் பெற்றுத் தரும்.

மகரிஷி "by due amount of performance of Transcendental Meditation, supplemented with the power of charity and virtuous deeds of helping others" என்று சொல்வதின் பொருள் - மருத்துவர் நம் நோய் சீக்கிரம் தீர மருந்து மாத்திரைகள் கொடுப்பதுடன் சில வைட்டமின் மாத்திரைகளையும், சில குறிப்பிட்ட உணவுகளையும் பரிந்துரைப்பார்.  நம்முடைய பழைய வினை என்னும் நோய் சீக்கிரம் தீர மகரிஷி பரிந்துரைக்கும் மருந்துதான் "ஆழ்நிலைத் தியான பயிற்சி".  தான தரும காரியங்கள் மற்றும் மற்றவர்களுக்கு உதவும் நற்செயல்கள் என்பது மகரிஷி நமக்கு பரிந்துரைக்கும் வைட்டமின் மாத்திரைகளும், சில குறிப்பிட்ட உணவுகளும்.

ஆனால் நம்முடைய பிரச்சனை என்னவென்றால், நாம் இழந்ததை நினைத்தே அதிகம் கவலைப் பட்டுக்கொண்டிருப்போம்.  நமக்கு கிடைத்த நல்ல விஷயங்களை நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்ல மாட்டோம்.  அதனால்தான் பழைய "கருமங்களிலேயே" விழுந்து கிடக்கிறோம். 

Let us count our blessings and become the Master of our own Destiny.






Monday, April 6, 2020

கொரோனா (கருணா) மூர்த்தி


கொரோனா (கருணா) மூர்த்தி 

என்னுடைய முன்றில் வலைத்தளத்தின் Tag Line ஆக "ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க" என்று எந்த சுபயோக சுபதினத்தில் வைத்தேன் என்று தெரியவில்லை - இப்படி ஒரு நீண்ட ஓய்வு கிடைக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.   

வாழ்க்கையின் அழகே அடுத்த நொடி நம் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்க்க முடியாத புதிர்தானே.  அப்படி ஒரு புதிராக நம் வாழ்வில் இப்போது வந்திருப்பது "கொரோனா வைரஸ்" என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. 

"கொரோனா வைரஸ்" பற்றி இன்று உலகமே பேசிக் கொண்டிருக்கிறது. உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் உயிர் பலிகளைத் தாண்டி இந்த வைரஸ் பல நல்ல விஷயங்களை இந்த உலகத்திற்கு தந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. 

காற்றின் மாசைக் குறைக்க எத்தனை எத்தனை திட்டங்கள். வருடக் கணக்கில் குறையாத காற்றின் மாசு ஒரு சில வாரங்களில் கணிசமாக குறைந்துள்ளது. 5 ஆண்டுகளில் படிப்படியாக மது விலக்கை கொண்டு வருவோம் என்ற வெற்றுக் கூச்சலை ஓரம் தள்ளி பூரண மது விலக்கை ஒரு சில நாட்களில் கொண்டுவந்தது.  விபத்துகளினால் ஏற்பட்ட மரணங்களைவிட  இந்த சில மாதங்களில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்கள் இந்தியாவில் மிகக் குறைவு (இதுவரை).

நமக்குதான் கொரோனா ஒரு வைரஸ். இந்த பிரபஞ்சத்தின் பார்வையில் கொரோனாவிற்கு நாம் ஒரு வைரஸ் - அவ்வளவுதான். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தின் பேருண்மையை எத்தனையோ மகான்களும் ஞானிகளும் காலம்தோறும் போதித்துக் கொண்டிருந்தாலும் அதையெல்லாம்  மனதில் கொள்ளாமல்,  தான் என்ற மமதையில் ஆணவத்தின் உச்சத்தில் இருந்து கொண்டு சர்வ வல்லமை பெற்றவன் நான் என்று கொக்கரித்துக் கொண்டிருந்த மனிதனின் உச்சந்தலையில் சம்மட்டியால் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறது இந்த கொரோனா.

குண்டு துளைக்காத கார், கறுப்புப்  பூனை காவல் படை, கண்ணசைவிற்கு காத்திருக்கும் ஆயிரம் வேலையாட்கள், ஒரு கைப்பொத்தானை அழுத்தி உலகையே கபளீகரம் செய்துவிடுவேன் என்று கர்ஜித்த வல்லரசுத் தலைவர்கள் எல்லாம்  இன்று நிலைமை எங்கள் கட்டுக்குள் இல்லை, எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியிடம்  மண்டியிட்டு புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

வல்லரசு நாட்டின் தலைவர்களின் ஆணவத்துக்கு கொஞ்சமும் சளைக்காதது நம் தனி மனித அகங்காரம்.  அதிகபட்சம் ஒரு 80 அல்லது 90 ஆண்டுகள் கூட இந்த உலகத்தில் இருக்கப் போவதில்லை என்று தெரிந்தும், காலம் காலமாக வாழப் போவது போன்று இயற்கையை அழித்து, மனிதர்களை வெறுத்து, என்னை யார் என்ன கேட்க முடியும் என்று சிலம்பாட்டம் ஆடிய கால்களை இன்று வீட்டுக்குள் முடக்கி இருக்கிறது இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ்.

இந்த அழகில் "Save the Planet" என்ற வெற்றுக் கூச்சல் வேறு.  விளம்பரங்களுக்கும், சுய விளம்பரங்களுக்கும் மனிதர்கள் வேண்டுமானால் மயங்கலாம்.  பிரபஞ்சம் மயங்காது.  "நீ யார் என்னைக் காப்பாற்ற - என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும் உன்னை முதலில் காப்பாற்றி கொள்" என்று நம் கன்னத்தில் அறைந்து சொல்லி விட்டது.

காற்றையும் நெருப்பையும் கடவுளாகவும், மரங்களை காவல் தெய்வங்களாகவும், காகம் போன்ற பறவைகளை தம் முன்னோர்களாகவும்  வணங்கிய நம் பாட்டனும் முப்பாட்டனும் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.  

இன்றையச் சூழலுக்கு பொருந்தும்படியாக சுந்தர ராமசாமி எழுதிய "காகங்கள்" என்ற சிறுகதை 1991-ம் ஆண்டு காலச் சுவடு ஆண்டு மலரில் வெளிவந்துள்ளது.

அந்தக் கதையின் சுருக்கம் இதுதான்.

ஒரு மனிதர் தன்னுடைய சிறு வயது முதல் தொடர்ந்து 40-50 ஆண்டுகள் காகங்களை கவனித்து வரும் பழக்கம் உள்ளவர்.  அது ஒரு நெடுஞ்சாலை.  அந்தச் சாலையில் ஒரு காலத்தில் மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வார்கள்.  அந்த நெல் மூட்டைகளில் இருந்து சிந்தும் நெல்மணிகளை கொத்தி தின்பதற்கு தினமும் விடியலில் காகங்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும்.  பிறகு மாட்டு வண்டிகள் மாறி லாரிகளானது.  ஆனாலும் நெல் மணிகள் சாலையில் சிந்துவது குறையவில்லை.  அதனால் காகங்கள் வருவதும் குறையவில்லை.  ஆனாலும் மாட்டு வண்டிக் காலத்தில் இருந்தது போல் காகங்களால் நின்று நிதானித்து சாப்பிட முடியவில்லை.  நெடுஞ்சாலையில் வேகமெடுக்கும் வண்டிகளில் சிக்காமல் தப்பித்து சாப்பிட காகங்கள் விடியலில் சீக்கிரமே அந்தச் சாலைக்கு வந்து விடுகின்றன.

ஒருநாள் அந்த ஊருக்கு வரும் கலெக்டர், வாகனப் போக்குவரத்தினை சீர் செய்யும் விதமாக அந்தச் சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றி உத்தரவிடுவார்.  அதனால் அந்தப் பக்ககமாக செல்ல வேண்டிய நெல் மூட்டை ஏற்றிய லாரிகள் வேறு வழியில் செல்ல ஆரம்பித்து விடும்.  காலம் காலமாக அந்தச் சாலையில் நெல் மணிகளை சாப்பிட்டு வந்த அந்த நூற்றுக் கணக்கான காகங்கள் பெருத்த ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் அங்கிருந்து செல்லும்.

அந்தக் காகங்களுக்காக அந்த கலெக்டரிடம் முறையிடும் அந்த மனிதருக்கு கிடைக்கும் பட்டம் "மனநலம் குன்றியவர்".

இந்தக் கதையின் highlight அந்த மனிதர் காகங்களுக்காக கலெக்டரிடம் முறையிடுவதை சுந்தர ராமசாமி சொல்லும் விதம்.  அந்தக் கலெக்டர் அதிகார வர்கத்தின் குறியீடு.

இனி சுந்தர ராமசாமியின் வார்த்தைகள் :

"பின் விளைவுகளை யோசிக்கத் தெரியாதவர்களுக்குக் கையெழுத்திட அதிகாரம் இல்லை.  இப்போது வணிகர்கள் அல்ல - காகங்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன.  கூடும் செலவுகளை வணிகர்கள் விலையில் ஏற்றி விடுவார்கள்.  காகங்களுக்கோ உணவில்லை.  மனித குலத்திற்கு அவை ஆற்றியுள்ள பங்கை நினைக்கும்போது மனம் விம்முகிறது.  அவற்றின் உன்னதங்கள் காற்றில் கலந்து கிடக்கின்றன.  உங்களது செத்த வரலாறு, செத்த நாகரிகம் எல்லாம் உங்களை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றன. 

இருகால் பிராணிகள் மட்டுமே உருவாக்கிய எந்த உன்னதமும் இந்த உலகத்தில் இல்லை. இருகால் பிராணிகள் உருவாக்கித் தந்திருப்பவை திமிர், கடைந்தெடுத்த அதிகாரம், ஆக்கமும் அழிவும் தங்கள் கைகளில்தான் என்ற அஞ்ஞான அகங்காரம். இந்தத் திமிரில் இருந்தான் சகல நோயுற்ற முடிவுகளும் உருவாகி வருகின்றன. புல்லும், பூண்டும், செடிகளும், கொடிகளும், புழுவும், பூச்சிகளும், காற்றும், ஒலியும், பறவைகளும், மிருகங்களும் இந்த நாகரிகத்தை உருவாக்க மனிதனுக்கு நிகரான பங்கை ஆற்றியுள்ளன.  தனக்கான உலகத்தை உருவாக்கும் திமிரில் உலகத்தை உருவாக்கப் பங்காற்றியுள்ள அனைத்துச் சக்திகளையும் ஈவிரக்கமின்றி மனிதன் அழித்துக் கொண்டிருக்கிறான். இந்த நன்றி கெட்டதனத்திற்கு தண்டனை வழங்க இந்த உலகத்தில் நீதிமன்றம் எதுவும் இல்லை.

காகங்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள எந்த நாகரிகமும் இல்லை.  பறவைகளில் அவை அதிக சங்கடம் அடைந்தன  எனில் பறவைகளில் அவைதாம் உங்களுடன் அதிகம் உறவாட விரும்பின.  ஆயிரக்கணக்கான கைக்குழந்தைகள் ஒரு பாதையில் கிடந்தது பசியால் துடித்துக் கதறினால் என்ன செய்வீர்கள் ?  

அழுகையின் குரலைப் புரிந்து கொள்ள முடியாத அதிகாரம் ஒருபோதும் நன்மையை விளைவித்தது இல்லை. இன்று ஒரு நொண்டிக் காகம் கூட உங்களை நம்பத் தயாராக இல்லை. இதனால் நீங்கள் காகங்களை அழித்துவிட முடியும் என்பதல்ல. ஒருக்காலும் உங்களால் அவற்றை அழிக்க முடியாது. தனக்காக மட்டுமே இந்த உலகம் படைக்கப்பட்டு இருக்கிறது என்ற அஞ்ஞான அகந்தை  அவற்றுக்கு இல்லை.  மேலும் அவற்றில் அலகுகள் திட்பமானவை.  சிறகுகள் வலிமையானவை.  பார்வை கூர்மையானது. இவற்றால் அவை வாழ்ந்து கொண்டிருக்கும்.  அவை பெரும் சக்தியாக திரண்டு ஒன்றாகப் பறக்கத் தொடங்கும்போது வானம் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போகக் கூடும். அவற்றின் ஆற்றலை அன்று உணர்ந்து கொள்வீர்கள்.  ஆனால் அன்று உங்களைத் திருத்திக் கொள்ள உங்களுக்கு அவகாசம் இருக்காது.

இந்த வைரஸ் ஒரு சாம்பிள்தான். இப்போதாவது மனிதன் தன்னை திருத்திக் கொள்ளாவிட்டால் இயற்கை முற்றாக நம்மைத் துடைத்தெறிந்துவிட்டு தன்னை மீண்டும்   அழகாக புதுப்பித்துக்கொள்ளும்.  

இப்போது நம்மால் செய்யக் கூடியதெல்லாம் அந்தக் கொரோனா மூர்த்தியிடமே மண்டியிட்டு பிரார்த்தனை செய்வதுதான். நாங்கள் செய்த பிழைகளை பொறுத்து எங்களை காப்பாற்றுவீராக. 

நாம் இயற்கைக்கு நம்மால் செய்யக் கூடிய கைம்மாறு ஏதாவது உண்டெனில் அது நம்மால் முடிந்தவரை இயற்கைக்கு விரோதமாக எதுவும் செய்யாமல் இருப்பதுதான்.


Thursday, March 12, 2020

ஆன்மீக அரசியல்

ஆன்மீக அரசியல்


திரு. ரஜினிகாந்த் அவர்களின் ஆன்மீக அரசியல் உதயத்திற்கு முன்பே அஸ்தமனமாகிவிட்டதா என்று நினைக்க வைத்தது அவரின் இன்றைய (12/03/2020) பிரஸ் மீட்.  பத்திரிகையாளர்களை அழைத்து தன்னுடைய ரசிகர்   மன்ற நிர்வாகிகளிடம்  பேசுவது போல பேசியதற்கு பிரஸ் மீட் என்பதற்கு பதில் பிரஸ் டாக் என்று பெயர் வைக்கலாம் (Press என்பதற்கு  அழுத்தம் என்றும் அர்த்தம் என்பது  நமக்குத் தெரியும். பாவம் அவருக்கு என்ன அழுத்தமோ ?).

நான் ரஜினியின் தீவிர ரசிகன் கிடையாது.  ஆனால் பஸ் கண்டக்டர் போன்ற சராசரி மனிதர்கள்கூட வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதற்கு என்னைப் போல பலருக்கும் மிகப் பெரிய inspiration ஆக இருந்தவர் - இருப்பவர்.

அவர் அரசியலில் முழுமையாக இறங்கி மக்களுக்கு சேவை செய்வார் என்று கனவிலும் நினைக்காத லட்சக்கணக்கான (அல்லது ஆயிரக்கணக்கான) மக்களில் நானும் ஒருவன்.

ரஜினிீ அவர்கள் தன்னுடைய ஆன்மீக அரசியலைத் தானே ஒழுங்காக புரிந்து வைத்துள்ளாரா என்பதே மிகப் பெரிய சந்தேகம் உள்ளது. நம்முடைய மக்கள் ஆன்மிகம் என்ற வார்த்தைக்கே ஆத்திகம், பக்தி, மதம் என்று பலவாறு குழப்பிக் கொள்கின்றனர்.  

"நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"

என்று சொன்ன சிவவாக்கிய சித்தர் நாத்திகரா ஆத்திகரா ?

உண்மையான ஆன்மீகம் என்பது  தன் உள் இருக்கும் இறைவனே எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறான் என்று உணர்ந்து உள்ளத்தை விரிவடையச் செய்வதே என்று பல அருளாளர்கள் சொல்லி இருக்கின்றனர்.  அதனால்தான் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரை மிகப் பெரிய ஆன்மீக வாதியாக நாம் கொண்டாடுகிறோம்.  

இந்த ஆன்மீகத்தை கொஞ்சம் அப்படியே அரசியலுக்கு மடை மாற்றுவோம்.  அரசியலில் ஆன்மீகத்தை கலக்க முடியுமா ?  கண்டிப்பாக முடியும்.  அதற்கு அடிப்படை மூன்று விஷயங்கள்தான் - 1) தனிமனித வாழ்வில் எளிமை 2) பொது வாழ்வில் தூய்மை 3) மக்களிடம் மாறாத அன்பு.

தமிழக அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் இந்த மூன்று அம்சங்களையும் கொண்டிருந்த தலைவர்களாக நான் நினைப்பது. காமராஜர் மற்றும் அண்ணா அவர்களைத்தான். அண்ணா கூட ஆட்சி அதிகாரத்தில் அதிக காலம் இல்லை.  அதனால் காமராஜர் அவர்களைத்தான் முழுமையான ஆன்மீக அரசியல் செய்தவர் என்று சொல்வேன்.  

சரி ரஜினியும் இப்படிப் பட்ட சில விஷயங்களைத்தானே முன் வைக்கிறார் என்று சிலர் நினைக்கலாம்.  ஆனால் சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.  நாம் சொல்லும் அல்லது நினைக்கும் எத்தனை கருத்துக்களை நம் வாழ்வில் கடைபிடிக்கிறோம் என்பதில்தான் சராசரி வாழ்விற்கும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குமான வித்தியாசம் இருக்கிறது.

இந்த நேரத்தில் காமராஜர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும் ரஜினி அவர்களின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகிறது.

காமராஜர் திருமணமாகாதவர்.  அவர் முதல்வரான பிறகு அவருடைய தாயார் தன் மகனுடன் இருந்து அவருக்குத் தேவையானதை சமைத்துப் போடலாம் என்று ஆசைப்பட்டார்.  அதற்கு காமராஜர் சொன்ன பதில் "நீங்கள் வந்தால் உங்களைத் தேடி நாலு பேர் வருவார்கள்.  அவர்களில் சிலர் என்னுடைய முதல்வர் பதவியை தவறாகப் பயன்படுத்தலாம்.  எதற்கு அதெற்கெல்லாம் இடம் கொடுக்க வேண்டும்.  தேவைப் படும்போது நானே வந்து உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டார்.

அவர்தான் தமிழகம் எங்கும் பல தொழிற்சாலைகளை உருவாக்கி தொழிற்துறையில் தமிழகத்தை முன்னணியில் கொண்டு வந்தவர்.  அதில் கொஞ்சம் கமிஷன் வாங்கியிருந்தாலும் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்திருப்பார்.   ஆனால் அவர் இறந்த பொது அவரிடம்  இருந்தது ஒரு சில ஆயிரங்கள்கூட கிடையாது. 

அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான் பாரதி.   ஆனால் அன்னத்தையும் அளித்து பல ஏழைகளுக்கு கல்வியையும் இலவசமாக அளித்து ஒரு அறிவார்ந்த சமூகத்தினை உருவாக்கியவர் காமராஜர்.

அந்த மாமனிதர் தேர்தலில் தோற்றபோது சொன்ன வார்த்தைகள் "காமராஜரும் தோற்பதுதான் ஜனநாயகம்".   

காமராஜருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா என்பது தெரியாது.  ஆனால் அவர் செய்ததுதான் உண்மையான ஆன்மீக அரசியல்.  அவர்  தேர்தலில் தோற்றும் இருக்கலாம்.  ஆனால் தனி மனித வாழ்வில் எளிமை, பொது வாழ்வில் தூய்மை, சக மனிதர்களிடம் மாறாத அன்பு என்று வாழ்ந்து காட்டியதின்  மூலம் இன்றும் அத்தகைய ஆன்மீக அரசியல் சாத்தியம்தான் என்று நமக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருப்பவர்.

ஆனால் திரு ரஜினி அவர்களால் அத்தகைய ஆன்மீக அரசியலை முன்னெடுக்க முடியாது.  அதற்கு அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களே உதாரணம்.

ரஜினியின் மனைவி தன்னுடைய வியபாரத்திற்கு வாடகை எடுத்திருந்த மாநகராட்சி கட்டிடத்தின் வாடகை பல வருடங்களுக்குப் பிறகு சில ஆயிரங்கள் உயர்த்தப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அதற்கு அவர் சொன்ன காரணம் தொழில் நலிவுற்ற நிலையில் உள்ளதால் அவரால் அந்த சில ஆயிரம் உயர்வைக் கூட தாங்க முடியவில்லையாம்.  பாவம்.  உயர்நீதிமன்றம் அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது. 

அதைப் போலவே அவரது பள்ளி நடக்கும் கட்டடத்திற்கு வாடகை சரியாக கொடுக்காமல் அந்த வழக்கும் நீதிமன்றம் சென்றது (இந்தப் பள்ளியில் சேர்வதற்கான கட்டணம் சில ஆயிரங்கள் அல்ல.  பல லட்சங்கள்).

பொது வாழ்வில் இருக்கும் ரஜினி அவர்கள் தன்னுடைய மனைவிக்கு சரியான அறிவுரை வழங்கி இதை தடுத்து இருக்க முடியாதா ?   

திரு சூர்யா போன்ற இளம் நடிகரே "அகரம் பவுண்டேஷன்" என்ற தொண்டு நிறுவனத்தினைத் தொடங்கி ஆயிரக்கணக்கான ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருக்கும்போது, உங்கள் ஒவ்வொரு துளி வியர்வைக்கும் தங்க காசுகளை கொடுத்த தமிழ் மக்களுக்கு நீங்கள் இதுவரை என்ன கொடுத்தீர்கள் ?

சிஸ்டம் சரியில்லை என்று சொல்லும் நீங்கள் உங்கள் வருமானத்திற்கு இதுவரை சரியான வரியை செலுத்தியுள்ளீர்கள் என்று மனசாட்சியுடன் பதில் சொல்ல முடியுமா ?  அப்படி இருந்தால் ஏன் வருமான வரித்துறை உங்கள் மேல் வழக்கு போட வேண்டும் ?   அல்லது நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் உங்கள் சொத்து விவரங்களை ஒளிவு மறைவு இன்றி சொல்ல முடியுமா ?

இப்போதும் உங்கள் பேச்சில் உங்கள் ரசிகர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் வார்த்தைகள்தான் அதிகம் தெரிகிறது.  உங்கள் தொண்டன் என்பவன் கல்யாண வைபவத்தில் வேலை செய்யும் சமையல்காரர்கள் மற்றும் வேலைக்காரர்கள் போன்று தேர்தலுக்கு வேலை செய்துவிட்டு நீங்கள் பதவியில் அமர்ந்ததும் விலகிவிட வேண்டும்  என்ற ரீதியில் உதாரணம் சொல்லி இருக்கிறீர்கள்.  அதை நீங்கள் உதாரணத்திற்கே சொல்லி இருந்தாலும் அதில் உங்கள் ஆதிக்க மனப்பான்மையை அம்பலப்படுத்திவிட்டிர்கள்.

நான் உங்களின் ஒரு படத்தைக் கூட பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்த ரசிகன் இல்லை. அதனால் என்னைப் போன்றவர்களுக்கு  நீங்கள் இப்படிச் சொன்னதில் எந்த வருத்தமும் இல்லை.  ஆனால் உங்களை தெய்வமாக நினைக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை நீங்கள் அவமரியாதை செய்து விட்டீர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

நீங்களே சொன்னது போல உங்களால் சராசரி அரசியல்வாதியாக இருக்க முடியாது.  ஆன்மீக அரசியல் செய்வதற்கு உங்களுக்கு இன்னமும் அதிக தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.  அந்த தூரத்தைக் கடக்க உங்கள் ஆன்மீக குருக்களின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்.

அதுவரை ஊடகங்களின் "Breaking News" க்கு மட்டும் வந்து செல்லுங்கள்.

Tuesday, February 25, 2020

முன்றில்



சில விஷயங்களை ஆயிரம் முறை யோசித்து செய்தாலும் எங்கோ முட்டிக் கொண்டு நிற்கும்.  ஆனால் சில விஷயங்கள் அதிக மெனக்கெடல் இல்லாமல் மிகச் சரியாக தானாகவே அமைந்துவிடும்.

அப்படி அமைந்ததுதான் என்னுடைய இந்த "முன்றில்" வலைதளம்.  "எண்ணமே வண்ணமாய்" என்ற என்னுடைய வலைதளத்தை (Blog) இன்னும் சற்று மேம்படுத்தலாம் என்று நினைத்தபோது, அந்த வலைதளத்தின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராகவும்,  சிறியதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.   அப்படி நினைத்தவுடன் என் நினைவுக்கு வந்த பெயர்களில் ஒன்றுதான் இந்த முன்றில்.

முன்றில் நினைவில் பதிந்த பெயராக இருந்தாலும் அதிகம் பரிச்சியப்பட்டது கவிஞர் நா.முத்துக்குமாரின் "அணிலாடும் முன்றில்" புத்தகத்தை வாசித்தபிறகுதான்.

அடுக்கு மாடி குடியிருப்புக்கள் அதிகம் இருக்கும் இந்தக் காலத்தில் முன்றில், முற்றம், தாழ்வாரம் போன்ற வார்த்தைகள் நம்முடைய புழக்கத்தில் இருந்து விலகிச் சென்று விட்டன.  முன்றில் என்றால் வீட்டின் முன்பக்கம் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

முன்றில் என்ற பெயரை வலைதளமாக பதிவு செய்த நினைத்தவுடன் இந்தப் பெயரில் ஏற்கனவே யாராவது பதிவு செய்திருக்கிறார்களா என்று நண்பர் Innoweb பாரதியிடம் கேட்டேன்.  அவரும் இந்தப் பெயரில் எந்த வலைதளமும் பதிவு செய்யப்படவில்லை  என்று சொல்லி முன்றில் வலைதளத்தை உடனே பதிவு செய்து கொடுத்ததுடன், ஏற்கனவே என்னுடைய 'எண்ணமே வண்ணமாய்'  வலைதளத்தில் இருந்த எல்லா பதிவுகளையும் இந்த முன்றில் தளத்தில் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைத்து பதிவிறக்கம் செய்து கொடுத்துவிட்டார்.  அவருக்கு என் நன்றிகள் பல.

வலைதளத்தில் என்னுடைய நூறாவது பதிவு இந்த புதிய முன்றில் வலைதளத்தில் முதல் பதிவாக வருவது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியே.  நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல என்னுடைய பதிவுகளின் நோக்கம் “இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்” என்பதல்ல. பொருளாதாரத் தேவைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இந்த அவசர வாழ்வில், காலையில் செய்த தவற்றை நினைத்து மாலையில் மனம் வருந்தி மீண்டும் மறு நாள் காலையில் அதே தவற்றைச் செய்யும் நம்முடைய சராசரி மனித வாழ்வில் எப்படியாவது ஒரு படி மேலே வர வேண்டும் என்ற நம்முடைய இடையறாத போராட்டத்தில் கிடைக்கும் சில அனுபவங்களை குறித்து வைத்துக் கொள்ளும் ஒரு டைரிக் குறிப்பாகத்தான் இதை நினைத்துக் கொள்கிறேன்.

"பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்" இது ரமண மகரிஷியின் வார்த்தைகள்.  இந்த வார்த்தைகள் நாம் சொல்லும் எல்லா சொற்களுக்கும் நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் பொருந்தும் - என்னுடைய இந்த வலைதளப் பதிவுகள் உட்பட.

இந்த முன்றில் குறித்து  வலைதளத்தில் கொஞ்சம் துழாவிக் கொண்டிருந்த போது மறைந்த எழுத்தாளர் திரு மா. அரங்கநாதன் அவர்கள்  முன்றில் என்ற பெயரில் ஒரு இதழ் நடத்தி வந்துள்ளார் என்பது தெரிய வந்தது.  இந்தப் பெயரில் இப்போதும் இந்த இதழ் வருகிறதா என்று தெரியவில்லை.

கல்யாண்ஜியின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது

தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் உங்களுடையது
என எழுதும் கவிதைக்கு
முன்பே  வரிகள் இருந்தன.

நீங்கள் அமிழ்கின்ற ஆறு
ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிறது.
நீங்கள் பார்க்கிற சூரியன்
பார்த்திருக்கிறது எண்ணற்றவர்களை.

உங்களுடைய சாப்பாட்டுத்
தட்டில் இருக்கிற பருக்கைகளில்
நேற்றின் எச்சில்.

உங்களுக்குத் பின்னாலும்
வர இருக்கிறார்கள்
நிறைய பேர்கள்
அடித்தல் திருத்தல் அற்று.

நாம் நம்முடைய வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு காரியமும் யாராலோ எப்போதோ செய்யப்பட்டவைதான். நேற்றின் தொடர்ச்சி நாம்.   நம்மைவிட சிறப்பாக செய்ய இன்னும் நிறைய பேர் வருவார்கள்.  அவர்களுக்கு இந்தப் பதிவுகள் ஒரு சிறு அகல் விளக்காக பயன்படலாம்.

"அணிலாடும் முன்றில்" கவிஞர் முத்துக்குமார் அவர்கள் ஒவ்வொரு உறவையும் பற்றி மிகவும் அழகாக எழுதி இருப்பார்.  அதில் நான் மிகவும் அதிகம் விரும்பியது அவர் தனது மகனுக்கு எழுதிய கடிதம்.  இந்த வார்த்தைகள் அவர் மகனுக்கு மட்டுமல்ல - எல்லா மனிதர்களுக்குமானது.

இதோ அவரது வீரியமான வார்த்தைகள்: 

கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்து தெரிந்து கொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக் கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இது தான், கற்றுப் பார். உடலைவிட்டு வெளியேறி, உன்னை நீயே உற்றுப் பார். எங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. 


உன் தாத்தா, ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்த்தார். அவரது 57-வது வயதில் தான் அதில் அமர்ந்து பார்த்தார். உன் தகப்பனுக்கு 27-வது வயதில் விமானத்தின் கதவுகள் திறந்தன. ஆறு மாதக் குழந்தைப் பருவத்திலேயே நீ ஆகாயத்தில் மிதந்தாய். நாளை உன் மகன் ராக்கெட்டில் பிறக்கலாம். இந்த மாற்றம் ஒரு தலைமுறையில் வந்தது அல்ல. இதற்குப் பின்னால் நெடியதொரு உழைப்பு இருக்கிறது. என் முப்பாட்டன் காடு திருத்தினான். என் பாட்டன் கழனி அமைத்தான். என் தகப்பன் விதை விதைத்தான். உன் தகப்பன் நீர் ஊற்றினான். நீ அறுவடை செய்து கொண்டு இருக்கிறாய். என் தங்கமே! உன் பிள்ளைக்கான விதையும் உன் உள்ளங்கையில் வைத்திரு. உழைக்கத் தயங்காதே. உழைக்கும் வரை உயர்ந்து கொண்டு இருப்பாய்.


நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறந்து வைக்கின்றன. புத்தகங்களை நேசி. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்தக் காகித நதி ஓடிக் கொண்டே இருக்கட்டும்.


கிடைத்த வேலையைவிட, பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறம் தொடங்கு.  உறவுகளிடம் நெருங்கியும் இரு. விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.

என்னுடைய இந்த முன்றில் வலைதளத்தின் முதல் பதிவை எழுத்தாளர் திரு மா. அரங்கநாதன் அவர்களுக்கும் கவிஞர் திரு நா. முத்துக்குமார் அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.




Monday, December 30, 2019

முதல் மொழி



"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே" - திருமூலர் 

தன்னை நன்றாகத்  தமிழ் செய்வதற்க்கு இறைவன் தன்னை வணங்கிய அடியவர்களுக்கு அருள் செய்திருக்கலாம்.  ஆனால் தமிழை நன்றாகச் செய்வதற்க்கு இறைவன் தன்னை நம்பாதவர்களுக்கும் அருள் செய்து வருகிறான்.  அதனால்தான் காலம்தோறும் ஆத்திக, நாத்திக, சாதி மத  வித்தியாசம் இல்லாமல் தமிழ் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது தமிழ் என்னும் தேரின் வடம் பிடிக்க இன்னொரு கை சேர்த்திருக்கிறது.  

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் (Alumni) திரு. சிவ இளநகை அவர்களின் முன்முயற்சியில் "முதல் மொழி" என்ற தமிழ் வளர்ச்சிக்கான  அமைப்பை  உருவாக்கி இருக்கிறார்கள்.  முதல் மொழியின் தொடக்க விழா 28/12/2019 சனிக் கிழமை அன்று  அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் திரு வே. முருகேசன் தொடங்கி வைக்க, சிறப்பு விருந்தினராக IAS அதிகாரி திரு த. உதயசந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்.

திரு. முருகேசன் அவர்கள் தாய் மொழியில் நம் குழந்தைகளின் அடிப்படை கல்வி இருக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறித்திப் பேசினார்கள்.  

இதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.  தாய் மொழியில் ஆரம்பக் கல்வி கற்கும் குழந்தைகளின் சிந்திக்கும் திறன் கண்டிப்பாக அதிக அளவில் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.  இன்று 40 வயது முதல் 60 வயது வரை உள்ள தமிழர்களில் பெரும்பாலோனோர் பத்தாவது அல்லது பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களாகத்தான் இருப்பார்கள். திரு அப்துல் கலாம் தொடங்கி  ISRO திரு மயில்சாமி அண்ணாதுரை. திரு சிவன் உள்ளிட்டவர்களாக இருக்கட்டும் அல்லது மிகப் பெரிய மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்ட வல்லுநர்கள் அல்லது சுய தொழில் செய்து பெரிய அளவில் சாதித்தவர்கள் என்று யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் ஆரம்பக் கல்வி தங்கள் தாய் மொழியில்தான் இருந்திருக்கும்.

நம் குழந்தைகள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும். ஆனால் ஆரம்பம் தமிழாக இருக்கட்டும்.

சிறப்புரை ஆற்றிய திரு உதயசந்திரன் அவர்களது பேச்சும் சிறப்பாக அமைந்திருந்தது.  

தமிழக அரசின் உயர்பள்ளிக் கல்வி செயலராக இருந்த போது கல்வித் துறையில் இவர் முயற்சியால் கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம்.  கல்வித் துறைக்கு போதாத காலம் இவரை அங்கிருந்து மாற்றி விட்டார்கள்.  கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல இவர் வந்து சேர்ந்த இடம் கீழடி.  இவர் வராமல் இருந்திருந்தால் ஒருவேளை கீழடியை கீழேயே போட்டு அமுக்கி இருப்பார்கள்.  நல்ல வேளை.  இப்போது தமிழர்களின் தொன்மைக்கு ஆதாரம், சேதாரம் இல்லாமல் கிடைத்திருக்கிறது.

இவரது பேச்சில் கிடைத்த முக்கிய தகவல், இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் 52% தமிழில்தான் இருக்கிறது.  அவற்றையெல்லாம் தற்காலத் தமிழில் மொழிபெயர்க்கவே இன்னும் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆகுமாம்.  இது தவிர இந்த வேலையைச்  செய்வதற்கு தகுதியான ஆட்களும் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.  இதனால் இதனை தொழில்நுட்ப உதவியுடன் மொழி பெயர்க்க முயற்சி செய்து வருகிறார்கள்.

திரு உதயசந்திரன் சொன்ன இன்னொரு விஷயம் - பிற மொழிச் சொற்களை தமிழில் எளிய நடையில் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும்.  அப்போதுதான் அது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.  உதாரணமாக bi-cycle என்பதை ஈருருளி என்று மொழி பெயர்த்திருந்தார்கள்.   ஆனால் யாரோ ஒரு சாமானியன் பயன்படுத்திய மிதிவண்டி மக்களிடம் சென்று சேர்ந்து விட்டது.

எனக்கும் இதில் முழு  உடன்பாடுதான்.  கார் என்ற வார்த்தையை கார் என்றே பயன்படுத்தலாம்.  மகிழ்வுந்து என்பது திணிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாக இருக்கிறது.  திணிப்பு எந்த வகையில் இருந்தாலும் நம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  அதுவும் தவிர மகிழ்வுந்து மரத்தில் மோதி நான்கு பேர் மரணம் என்று படிக்கும்போது அந்த வார்த்தை பொருத்தமாகவே இல்லை.

மகாகவி பாரதியே Member என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் பதம் கிடைக்காமல் உறுப்பாளி என்று மொழி பெயர்த்து பின்னால் சரியான பதம் கிடைத்தால் மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தாராம்.  இப்போது நாம் உறுப்பினர் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறோம்.  ஆங்கிலம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் அது பிரெஞ்சு இத்தாலி லத்தின் போன்ற பிற மொழிச் சொற்களை தாராளமாக உள்வாங்கிக் கொண்டதுதான்.  In fact ஆங்கிலத்தில் நிறைய தமிழ்ச் சொற்களும் இருக்கின்றன.

நாம்தான் அழகான அம்மா என்ற வார்த்தைக்குகூட பதப்படுத்திய பிணங்களின் பெயரான "மம்மி" என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.   தேவைப்படும் நேரங்களில் நம் குழந்தைகள் நன்றாக ஆங்கிலம் பேசட்டும் - வெறும் மம்மி டாடியில் ஆங்கிலம் இல்லை. 

தமிழக அரசு நிர்வாகத் துறையிலும் மற்றும் வேறு பல துறைகளிலும் மற்ற மாநிலங்களைவிட முன்னணியில் இருப்பதற்கு இத்தகைய அரசு அதிகாரிகளும் முக்கிய காரணம் என்பது மறுக்கவோ அல்லது மறைக்கவோ இயலாத உண்மை.   ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் தெளிவானவர்களாக தொலைநோக்கு பார்வையுடன் இருந்து இத்தகைய அதிகாரிகளை இன்னும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால்  தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும்.  நம்முடைய இப்போதைய சாதனைகள் எல்லாம் யானை படுத்தால் குதிரை மட்டம் என்ற அளவில்தான் உள்ளது.

முதல் மொழியின் தொடக்க விழா சில சிந்தனைக் கீற்றுகளை எல்லோர் மனதிலும் விதைத்திருக்கிறது.  

தமிழ் என்னும் தேர் நாம் இல்லாமலும் நகர்ந்து கொண்டேதான் இருக்கும்.  நாமும் வடம் பிடித்தோம் என்பதில் நமக்குத்தான் பெருமை. 

தன்னை நன்றாகத்  தமிழ் செய்வதற்க்கும் தமிழை நன்றாகச் செய்வதற்கும்  இறைவன் எப்போதும் அருளிக் கொண்டே இருப்பான். 

முதல் மொழி அமைப்பு சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.


Wednesday, December 18, 2019

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்


"நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்
எந்தன் முன்னைத் தீவினைப் பயன்கள்
இன்னும் மூளாது அழிந்திடல் வேண்டும்
என்னைப் புத்துயிராக்கி
எனக்கேதும் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்
செய்வாய்
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்
செய்வாய்".

நான் மகாகவி பாரதியிடம் எப்போதும் வியக்கும் விஷயமே அவர் வார்த்தைகளில் உள்ள sharpness தான்.  இந்தக் கவிதையில் அவர் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளுக்கு அதே பொருள் கொண்ட வேறு வார்த்தைகளைப் போட்டுப் பாருங்கள் - கவிதையின் வீரியம் குறைந்துவிடும்.

எந்த மொழியாக இருந்தாலும் மந்திரம் என்று நாம் சொல்வது என்ன ? வார்த்தைகள்தான். ஆனால் அந்த வார்த்தைகள் யாரிடம் இருந்து வருகின்றன என்பதைப் பொறுத்து அவை சாதாரண வார்த்தைகளாகவோ அல்லது வீரியம் மிக்க மந்திர வார்த்தைகளாகவோ மாறி விடுகின்றன.  ("மகிழ்ச்சியின் மந்திரம்" என்ற தலைப்பில் நான் ஆழ்நிலைத் தியானம் குறித்து எழுதிய புத்தகத்தில் இது குறித்து சற்று விளக்கமாக எழுதி இருக்கிறேன்). இப்போது இந்தக் கவிதைக்கு வருவோம்.

மகாகவி பராசக்தியிடம் சில வரங்களை கேட்கிறார்.  ஆனால் அதை அவருக்காக கேட்கவில்லை நமக்காக கேட்கிறார்.  அவருக்குத் தெரியும். தன்னைவிட தன எழுத்துக்கள் அதிக காலம் வாழும் என்று.  "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பது திருமூலர் வாக்கு.  ஆனால் தான் பெறாத இன்பத்தையும் இந்த உலகம் பெற வேண்டும் என்பது பாரதியின் நோக்கம். வாழ்க்கை முழுவதும் வறுமையை அனுபவித்தாலும் அவர் தன்னுடைய மனதிற்குள் வறுமையை விடவில்லை என்பது அவருடைய ஒவ்வொரு வரியிலும் தெரியும்.

மீண்டும் தலைப்புக்கு வருவோம்.  மந்திரம் என்பது ஒரு சக்தி மிக்க வார்த்தை. அந்த வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லும்போது அந்த வார்த்தைகள் நம் வாழ்க்கையையே மாற்றக்கூடிய வல்லமை பொருந்தியதாக இருக்கும். அது எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம்.  "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்" என்று அவ்வையார் சொல்வது போல வார்த்தைகள் நீண்டு அலங்காரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த வார்த்தைகள் அணுவைத் துளைத்து அதற்குள் ஏழு கடலையும் அடக்கக் கூடிய அளவிற்கு வல்லமை பெற்றதாக இருக்க வேண்டும். அதைத்தான் பாரதியின் சில வரிகளும் செய்கின்றன.

இப்போது பாரதியின் இந்தக் கவிதையைப்  பார்க்கலாம்.


நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்

பராசக்தியிடம் பாரதி சில வரங்களைக் கேட்கிறார். அதை தன்னிடம் நேரிடையாக இன்றே அளிக்க வேண்டும் என்று சொல்கிறார்.   தான் கேட்கும் வரங்கள் உடனே கிடைக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அதைத் தருவதற்கு "இடைத் தரகர்கள்" யாரும் தேவை இல்லை. இறைவனுக்கும் தனக்கும் இடையில் மூன்றாவது மனிதரின் தலையீட்டை அவர் விரும்பவில்லை.   தகுதியற்ற மனிதர்களை கடவளாக நினைத்து தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் நம்மில் பலரும் பாரதியின் இந்த வரிகளைப் படித்தாவது திருந்தினால் நல்லது.


எந்தன் முன்னைத் தீவினைப் பயன்கள்
இன்னும் மூளாது அழிந்திடல் வேண்டும்


தான் செய்த பாவத்தின் விளைவுகள் தொடராது முற்றிலுமாக அழிந்து விட வேண்டும் என்று வேண்டுகிறார்.  இதில் "மூளாது அழிந்திடல்" என்ற வார்த்தைகள் மிகவும் முக்கியமானது.  தீ பற்றிய இடத்தில முழுவதுமாக அணைக்கவில்லை என்றால் மீண்டும் அந்தத் தீ மூண்டு விடும் அபாயம் உள்ளது. அதனால்தான் ஒரு சிறு பொறி கூட மிச்சம் இல்லாமல் அழிந்துவிட வேண்டும் என்று வேண்டுகிறார்.

என்னைப் புத்துயிராக்கி
எனக்கேதும் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச்
செய்வாய்


"ஒரே நதியில் இரண்டு முறை குளிக்க முடியாது" என்ற ஜென் பழமொழி ஒன்று உண்டு.   அதாவது நதி ஓடிக்கொண்டே இருப்பதால் நாம் ஒரு முறை தொட்ட நீரை மறுபடியும் தொட முடியாது.  நம் வாழ்க்கையும் அப்படிதான்.  ஒவ்வொரு கணமும் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது.  நம்முடைய பழைய கவலைகளையும் தோல்விகளையும் துன்பங்களையும் குப்பைகளாக மனதில் தேக்கி வைத்துக் கொண்டிருக்காமல்   தன்னை புதிய உயிராக்கி தன்னுடைய மதியை மிகவும் தெளிவு செய்து தன்னுடைய கவலைகளை எல்லாம் நீக்கி என்றும் மகிழ்ச்சியாக இருக்க. தனக்காக இல்லாமல் நமக்காக இறைவனிடம் பாரதி வேண்டுகிறார்.

இதுதான் மகிழ்ச்சியின் மந்திரம்.    பாரதி சொன்ன இந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொன்னாலே நமக்குள் மகிழ்ச்சி தோன்றுவதை உணர முடியும்.


Sunday, August 18, 2019

அப்பா – சில நினைவுகள் ……..




”ஆகாறு அளவிட்டதாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை”

பொருள் – வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை.  தேவையற்ற செலவுகளை குறைத்தாலே நிறைவாக வாழலாம்.

இந்தத் திருக்குறளை நினைக்கும் போதெல்லாம் என் அப்பாவின் நினைவு வரும் அல்லது அப்பாவை நினைக்கும்போதெல்லாம் இந்தத் திருக்குறளும் நினைவுக்கு வரும்.

என் தந்தை சில நுாறு ரூபாய் வருமானத்தில் தன்னுடைய பணியைத் தொடங்கி சில ஆயிரம் ரூபாய் வருமானத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.  இந்த சில ஆயிரம் மாத வருமானத்தில் தன்னுடைய ஆண் பெண் பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தவர்.  ஆனால் எனக்கு நினைவு தெரிந்து அவர் காசுக்கு கஷ்டப்பட்டு நான் பார்த்ததில்லை. யாரிடமும் கடன் பெற்றும் தன் வாழ்க்கையை நடத்தவில்லை.  அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தன் கைகளில் சில ஆயிரங்களும், தன் வங்கிக் கணக்கில் சில இலட்சங்களும் இருக்கும்படி பார்த்துக் கொண்டவர்.

கடந்த 30-07-2019 அன்று அவர் காலமான சமயத்தில்தான் ஃகாபி டே சித்தார்த் தற்கொலை செய்து கொண்ட செய்தியும் வந்தது.  நன்கு படித்த தொழிலதிபர். கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி, அரசியல் பின்புலமுள்ள மிகவும் செல்வாக்கான மனிதர் – ஆனால் வங்கிக் கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்.   

ஆனால் வெறும் ஆறாவது வரை மட்டுமே படித்த, ஒரு தனியார் நிறுவனத்தில் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்ற ஒரு மனிதர் ஒரு பெரிய குடும்பத்தினை நன்கு நிர்வகித்து தன் பிள்ளைகளுக்கு எந்தக் கடனும் வைக்காமல் கொஞ்சம் சொத்தினையும் சேரத்து வைத்து தன்னுடைய 86-வது வயதில் முழுமையான வாழ்க்கை வாழ்ந்து இயற்கையான மரணம் அடைகிறார் என்றால் அதுதான் வெற்றிகரமான வாழ்க்கை.  

என் தந்தைக்கு Financial Management (நிதி மேலாண்மை) என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதைச் செயலில் முழுமையாக நடைமுறைப் படுத்தியவர்.

என்னுடைய தந்தைக்கு தினமும் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. ஒவ்வொரு நாளும் அன்றைய முக்கிய நிகழ்வுகளை எழுதிவிட்டு அந்தப் பக்கத்தில் அவருடைய கையெழுத்தினை இடுவார். இதில் இரண்டு நன்மைகள்.  ஒன்று அவருடைய நினைவாற்றலுக்கும், தேவைப்படும்போது refer செய்வதற்கும் அது மிகவும் உதவியாக இருந்தது.  இரண்டாவது அவருடைய கையெழுத்து பல வருடங்களாக மாறாமல் ஒரே மாதிரி இருந்தது.  பொதுவாக நாம் போடும் கையெழுத்து சில வருடங்களில் கொஞ்சமாவது மாறியிருக்கும். ஆனால் அவர் கையெழுத்து மாறாமல் இருந்ததற்கு  தினமும் அவர் டைரியில் போட்ட கையெழுத்துக்கூட ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கக் கூடும்.

அடுத்து என் அப்பாவிடம் நான் வியந்த விஷயம் அவரிடம் இருந்த ஒரு ஒழுங்குத் தன்மை. காபி, சாப்பாடு என்று எல்லாவற்றிலும் ஒரு குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட அளவு என்று இருந்தவர்.  தேவைக்கு அதிகமாக எதையும் இழுத்துப் போட்டுக்கொள்வதில்லை - கடவுள் உட்பட. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற திருமூலரின் சொல்லை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்ற அண்ணாவின் சீடர் அவர்.  அதனால் கடவுளை கும்பிடுவதில்கூட அவர் ஒரே கடவுளைத்தான் கும்பிட்டுக் கொண்டிருந்தார். வருடம் தவறாமல் திருப்பதி திருமலைக்கும், வாரம் தவறாமல் தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.  இதைத் தவிர எந்த கோவிலுக்கும் அவராகக் சென்றதில்லை (அவருக்கு வயதான பிறகு நாங்கள் அழைத்துச் சென்றதால் வேறு சில கோவில்களுக்கு வந்திருக்கிறார் அவ்வளவுதான்).

என் அப்பா ஒரு மிகச் சிறந்த Carpenter (தச்சர்).  அவர் வேலை செய்த டிவிஎஸ் நிறுவனத்தில் அந்த நிறுவனத்தின் முதலாளிகள் பலரின் வீட்டு பூஜையறையில் இன்றும் அவர் செய்த கலைநயம் மிக்க பூஜை மண்டபம் இருக்கும்.  ஆனாலும் அவர் தன்னுடைய வீட்டுக்காக ஒரு மனையைகூட செய்ததில்லை என்று என் அம்மா வருத்தப்பட்டாலும் எங்கள் வீட்டு மனையையே அவர் கட்டியவர் என்பதால் எங்களுக்கு எந்த வருத்தமுமில்லை.

அதைப்போலவே டிவிஎஸ் நிறுவனத்தின்மீது அவரது விசுவாசம் மிக அதிகம்.  அவரைப் பொருத்தவரையில் டிவிஎஸ் நிறுவனம்தான் மிகச் சிறந்த நிறுவனம்.  தன்னுடைய ரிட்டையர்மெண்ட் சேவிங்ஸ் மற்றும் இதர வருமானத்தினைகூட அவர் வேலை செய்த வீல்ஸ் இந்தியா நிறுவனத்தில்தான் முதலீடு செய்திருந்தார்.  ஏன் என்று கேட்டால்  அங்கு போடும் பணம்தான் மிகவும் பாதுகாப்பானது.  நான் எடுக்கவில்லை என்றால்கூட என்னைக் கூப்பிட்டுக் கொடுப்பார்கள்.  ஏனென்றால் நான் 35 வருடங்களுக்கு மேல் வேலை செய்த இடம் அது என்பார்.  அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.   சரியாக அவர் இறந்த நாளன்று எனக்கு வீல்ஸ் இந்தியா நிறுவனத்தில் இருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.  அவர்கள் சொன்ன விஷயம் இதுதான்.  என் அப்பா டெபாசிட் செய்திருந்த ஒரு FD முதிர்ந்து விட்டதாகவும், உரிய ஆவணங்களை கொண்டு வந்து பணத்தினை பெற்றுக் கொண்டு செல்லும்படி கூறினார்கள்.

அதைப்போலவே என் அப்பா மறைந்த சில நாட்களில் டிவிஎஸ் நிறுவன இயக்குநர் திரு. எச். லஷ்மணன் அவர்கள் எனக்கு போன் செய்து என் அப்பாவின் பெருமைகளைச் சொன்னபோது, ஒரு சாதாரணத் தொழிலாளியைப் புகழ்ந்த அந்த இயக்குநரின் பெருந்தன்மையும், உயர் பதவியில் இருக்கும் ஒரு மனிதரின் இதயத்தில் இடம் பிடித்திருந்த என் தந்தையின் பண்பும் ஒரு சேர வெளிபட்டது.

இதையெல்லாம்விட நான் அதிகம் என் அப்பாவிடம் வியந்திருந்தது அவரின் பொறுப்பு (responsibility). என் தந்தை வாழ்க்கையில் சந்தித்த சில சோதனைகளை வேறு பலர் சந்தித்திருந்தால் மது போன்ற சில விஷயங்களில் தங்களை மூழ்கடித்துகொண்டிருப்பார்கள்.   ஆனால் தன் ஒருவனுடைய தவறான முடிவு தன்னுடைய மொத்த குடும்பத்தினையே பாதிக்கும் என்று உணர்ந்து தன்னுடைய குடும்பத்தினை நிலை நிறுத்தியவர்   இந்தப் பொறுப்புணர்வு நம் ஒவ்வொருக்குள்ளும் இருந்தால் பல தவறான முடிவுகளையும் தவறான பழக்கங்களையும் தவிர்க்க முடியும் என்பது என் ஆழமான கருத்து.

அதேபோல அவர் charity என்று தனியாக எதுவும் செய்ததில்லை.  ஆனால் தன்னை நாடி உதவி என்று வருபவர்களுக்கு வேலை வாங்கித் தருவது, தன்னால் இயன்ற நிதியுதவி என்று எப்போதும் செய்திருக்கிறார். அவரால் பலன் அடைந்த குடும்பங்கள் பல இன்றும் அவரை நன்றியோடு நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தன்னுடைய பேரப் பிள்ளைகள் வரும்போதெல்லாம் அவர்களுக்கு சில நுாறு ரூபாய்கள் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தவர்.  அதனால்தான் அவர் போட்டோவிற்கு மாலை போட்டு கும்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பேரன் ”தாத்தா ஏன் இன்றைக்கு காசு தரவில்லை” என்று சொன்னபோது எல்லோர் கண்களும் கலங்கியது.

தனிப்பட்ட முறையில் அவர் உலகம் என்பது அவரது குடும்பம், பேரப்பிள்ளைகள், குறிப்பிட்ட நட்பு வட்டம் இவற்றைச் சுற்றியே இயங்கி வந்தது.  பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் ஒன்றாகக்கூடும் எல்லா நாட்களுமே அவருக்கு விஷேச நாட்கள்தான்.

எனக்கும் என் அப்பாவிற்குமான உறவு பொதுவாக எல்லா அப்பா பிள்ளைகளுக்குமான உறவாக இருந்தாலும், என் குடும்பத்தில் நன்கு படித்து ஒரு நல்ல நிலையில் வாழ்க்கையில் உயர்ந்ததால் என் மீது என் அப்பாவிற்கு கொஞ்சம் பிடிப்பு அதிகம்.  அதுவும் தவிர அவர் தன்னுடைய ஒரு மகனை 5 வயதில் இழந்த சோகத்தில் இருந்த சில மாதங்களில் நான் பிறந்ததால் நான் அவருக்கு அந்த நேரத்தில் மிகப்பெரிய ஆறுதலாக இருந்ததும் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கும்.

ஒரு தந்தைக்கும் மகனுக்குமான சில உரசல்களில் நான்கூட அவரிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் என்னிடம் ஒருமுறைகூட கடுமையாக நடந்துகொண்டதில்லை.

என் அப்பாவிடம் எனக்கு இருக்கும் அன்பைவிட வெளிப்படுத்தியது கொஞ்சம்தான்.  அதற்கு ஆயிரம் காரணங்கள்.  ஆனால் அவர் தன்னுடைய அன்பை எப்போதும் ஏதாவது ஒரு வகையில் என்னிடம் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்திருக்கிறார்.  அன்பை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகள் மட்டுமே தேவையில்லையே.

நான் எட்டாவது முடித்தபோது எனக்கு மிதிவண்டி வாங்கிக் கொடுத்தார். 3500 விலையுள்ள அந்த சைக்கிள் அப்போது மிகப்பெரிய தொகை. ஆனால் வாங்கிய முதல் நாளே எதிர்வீட்டு நண்பன் ஒரு ரவுண்ட் அடித்து தருகிறேன் என்று சொல்லி எடுத்துச் சென்று சுவற்றில் முட்டி சைக்கிளை் முன்பக்க டயரை வளைத்துவிட்டான். எதிர்வீட்டுப் பையன் வண்டியை இடித்துவிட்டான் என்று சொல்வதற்கு பயந்து அந்தப் பழியை நானே எடுத்துக் கொண்டேன்.  என்னை அப்பா திட்டுவாரோ என்று பயந்து கொண்டு அவர் வீட்டுக்கு மாலை வரும்வரை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தேன்.  வீட்டுக்கு வந்து விஷயத்தினை கேள்விப்பட்டு என் அப்பா என்னிடம் சொன்ன வார்த்தைகள் ”உனக்கு ஒன்றும் ஆகவில்லையே, சரி விடு சைக்கிளை சரி செய்து விடலாம்”.  இந்த மாதிரியான ஒரு சம்பவத்தில் நான்கூட என் மகனை திட்டாமல் இருந்திருப்பேனா என்று தெரியவில்லை.

நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது என் உடம்பெல்லாம் திடீரென்று வீங்கிவிட்டது.  பயந்துபோய் என்னை விஜயா மருத்துவனையில் சேர்த்து வைத்தியம் பார்த்தீர்கள். நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்த செலவு 5000-க்கும் அதிகம்.  30 வருடங்களுக்கு முன்பு இந்தத் தொகை உங்கள் சக்திக்கு மீறிய மிகப்பெரிய தொகை. ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு எப்போதுமே நீங்கள் உங்கள் சக்திக்கு அதிகமாகவே செய்திருக்கிறீர்கள்.

நீங்கள் உடல் நலமிலலாமல் உங்களை விஜயா மருத்துவமனையிலும் காவிரி மருத்துவமனையிலும் சேர்த்து செலவு செய்தபோது நான் என் சக்திக்கு மீறி எதுவும் செய்துவிடவில்லை. 

கடைசியாக இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு உங்கள் உடல் நலிவடைந்து மருத்துவமனையில் சேர்த்தபோது நீங்கள் என்னிடம் சொன்ன வார்த்தைகள் ”நான் இந்த மருத்துவமனையில் நோயாளியாக உணர்கிறேன்.  என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடு”  நீங்கள் ஒவ்வொரு செங்கல்லாக எடுத்துக் கட்டிய வீடுதான் உங்களுக்கு சொர்கம்.  யார் வீட்டிலும் இரவு தங்குவதை விரும்பமாட்டீர்கள். வீட்டிற்கு வந்து விடுவீர்கள். இப்போதும் நீங்கள் உங்கள் கடைசி நாட்களை உணர்ந்து விட்டதால் வீட்டில் இருப்பதையே விரும்பியுள்ளீர்கள்.  

இருக்கும்போது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இருப்பது நம் கையில் உள்ளது.  ஆனால் இறக்கும்போது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இறப்பது என்பது ஒரு கொடுப்பினை.  அந்தக் கொடுப்பினை உங்களுக்கு வாய்த்தது.  ஒரு பழுத்த இலை மரத்தில் இருந்து உதிர்வதைப் போல இந்த உலகத்தில் இருந்து உதிர்ந்து விட்டீர்கள்.

ஒரு அப்பாவாக நீங்கள் நான் ஆசைபட்டதையெல்லாம் எனக்கு செய்யாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் எனக்குத் தேவையானதை எப்போதும் செய்திருக்கிறீர்கள்.  அதைப்போலவே ஒரு மகனாக நீங்கள் ஆசைப்பட்டதையெல்லாம் நான் செய்யாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் உங்களுக்கு தேவையானதை கடைசிவரை உங்கள் அருகிலேயே இருந்து நான் செய்திருக்கிறேன்.  அந்தத் திருப்தி எனக்கு எப்போதும் இருக்கிறது.

நான் உங்களிமிருந்து பெற்றுக் கொண்ட பாடங்கள் நிறைய.  அதில் முக்கியமானது நன்றியுணர்வு.  நீங்கள் உங்கள் குடும்பம், வேலை பார்த்த இடம், நட்பு என்று எல்லா இடங்களிலும் மிகுந்த நன்றியுணர்வோடு இருந்தீர்கள்.  அதனால்தானோ என்னவோ உங்களைப் பற்றி நான் நினைக்க நினைக்க எனக்கு துக்கத்தால் கண்கள் பனிக்கவில்லை.  ஆனால் உங்கள் மீதுள்ள நன்றியுணர்வில் என் கண்கள் பனிக்கின்றன. 

You lived your life well.  Thank you so much அப்பா.