Sunday, June 28, 2015

கட்டாய ஹெல்மெட்


ஜூலை 1 முதல் வசூல் வேட்டை தீவிரமாகும். அன்றிலிருந்து ஹெல்மெட் அணிவது மீண்டும் கட்டாயமாகிறது.  சில வருடங்களுக்கு முன்புதான் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.  எப்போது அதை வாபஸ் பெற்றார்கள், மீண்டும் கட்டாயமாக்குவதற்கு ?

நாட்டில் தினமும் நடக்கும் சாலை விபத்துக்களைப் பற்றி அறியும் போது தலைக் கவசத்தின் அவசியத்தை யாரும் மறுக்க முடியாது.   ஆனால் நமது அரசாங்கம் செய்துள்ள அறிவிப்பைப் பார்க்கும் போது மக்களின் உயிர் மேல் இருக்கும் அக்கறையை விட stock clearance  sale முனைப்போடு செயல்படுவது போல் உள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஹெல்மெட் அணிந்து சென்றும்  கிரிதரன் என்ற இளைஞர் விபத்து என்ற பெயரில் அநியாயமாக கொல்லப்பட்டார்.  ஒழுங்கான சாலை வசதிகள், விளக்கு வசதிகள் இல்லாமல் பல விபத்துக்கள் நடக்கின்றன.  இதைப் பற்றியெல்லாம் அரசாங்கம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.   ஆனால் வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறது. 

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் ஹெல்மெட் அணிய வேண்டும். சரி. மிகவும் நியாயமானது.  பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. இனிமேல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது கையிலேயே ஒரு ஹெல்மெட்டையும் கொண்டு செல்வது உசிதம்.  வழியில் அப்பா, அண்ணன்,  கணவன் , நண்பன் என்று யாரைப் பார்த்தாலும் அவர்களுடன் வண்டியில் ஏறி வருவதற்கு வசதியாக இருக்கும்.

இன்று சாலை விபத்துக்களின் மூல காரணமாக இருப்பது மது என்ற  அரக்கன். ஊரெங்கும் பார்களைத்  (bar)  திறந்து அரசாங்கமே ஊற்றிக் கொடுத்துவிட்டு கட்டாய ஹெல்மெட்  என்று சொல்வது காறித் துப்பிவிட்டு கன்னத்தை துடைத்துக் கொள் என்று சொல்வது போல் உள்ளது.

ஹெல்மெட் எல்லாம் விற்றுத் தீர்ந்த பிறகு கட்டாய ஹெல்மெட் கட்டாயம் பிசுபிசுத்துப் போகும்.  அதுவரை காந்தி சிரிக்கும் கரன்சி நோட்டுக்கள் கொஞ்சம் கைவசம் இருக்கட்டும்.

Saturday, June 6, 2015

நூடுல்ஸ் நொந்த கதை

நமக்கு ஏதாவது ஏமாற்றம், வேதனை  அல்லது விரக்தி ஏற்பட்டால் நொந்து நூலாகிவிட்டேன் அல்லது நூடுல்ஸ் ஆகிவிட்டேன் என்று  சொல்வது வழக்கம்.  ஆனால்  இப்போது அந்த நூடுல்ஸ்சே நொந்து போய் இருக்கிறது.

நம்ம ஊரில் எப்போதும் உள்ள ஒரு பழக்கம் ஒரு ஆளையோ அல்லது பொருளையோ தூக்கிவிடும் போதும் தகுதிக்கு மேல் தூக்கி விடுவோம், அதே போல் கீழே விழும்போதும் சகட்டுமேனிக்கு மிதித்து துவைத்து விடுவோம். இப்போது Nestle வின் Maggi நூடுல்ஸுக்கு நேரம் சரியில்லை.

இன்று 20 முதல் 30 வயதுள்ள அனைவரும் Maggi நூடுல்ஸ் சாப்பிட்டு வளர்ந்த குழந்தைகளாகத்தான் இருப்பார்கள்.  மம்மி கையால் நூடுல்ஸ் சாப்பிடாதவர்கள் கூட மனைவி கையால் சாப்பிட்டு இருப்பார்கள்.

ஏதோ போன மாதம் அறிமுகப்படுத்தி இந்த மாதம் தடை செய்யப் பட்டதைப் போல, குழந்தைகளுக்கு கறிவேப்பிலை சாற்றைக் கொடுங்கள் கொத்துமல்லி சாற்றைக் கொடுங்கள்  என்றெல்லாம் வைத்தியம் சொல்கிறார்கள்.  எவ்வளோவோ junk foods பார்த்த நம் உடம்பு இதைப் பார்க்காதா என்ன ?

நான் நூடுல்ஸுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைத்து விடாதீர்கள்.     நம்ம சுகாதாரத் துறை அதிகாரிகள் முடிவு எடுத்த பிறகு தீர்ப்பு எழுதும் குமாரசாமிக்களாகவே இருக்கிறார்கள்.   இத்தனை வருடங்களாக Maggi நூடுல்ஸ் ஆய்வில் உடல் நலனுக்கு எந்த கெடும் விளைவிக்காத அளவுக்கு மிகச் சரியாக இருந்ததா ?  அல்லது Coke, Pepsi, Lays, Kurkure இன்னும் பல junk foods உடலுக்கு மிகவும் நன்மை தரக் கூடியதா?  உண்மையான சோதனைக்கு உட்படுத்தினால் அவை Maggi நூடுல்ஸ்ஐ விட மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும்.

இப்போது Maggi நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அமிதாப் முதல் நூடுல்ஸ் செய்த ஆயா வரை எல்லோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது காவல்துறை, குளிர் பான விளம்பரங்களில் நடிக்கும் விக்ரம், விஜய், தனுஷ், இன்னும் பிறரும் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.  சீனாவில் பலாப் பழம் சாப்பிட்டு விட்டு உடனே Coke அருந்திய ஒருவர் இறந்து விட்டாராம்.   நல்ல வேளை நம்ம ஊரில் பிரியாணி Coke combinationதான் பெரும்பாலும் என்பதால் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை (இதுவரை).

Maggi நூடுல்ஸ் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இரண்டு நிமிடத்தில் உணவு என்ற concept ஐ இனி யாராலும் மாற்ற முடியாது.  இனி Maggi நூடுல்ஸுக்கு பதில் எதாவது ஸாகி நூடுல்ஸ் வரலாம். இப்போதெல்லாம் நாம் மிகவும் health conscious ஆகிவிட்டோம்.  சம்பா, வரகு, திணை, என்று எந்தப் பெயரில்  பாக்கெட் உணவு வந்தாலும் அது எவ்வளவு விலை என்றாலும் வாங்கி வாயில் (அல்லது வயிற்றில்) போட்டுக் கொள்வோம் (கொல்வோம்).

Junk Foods எதுவும் சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் அது வாயை மூடிக் கொண்டு பேசவும் என்பது போல இருக்கும்.  முடிந்த வரை avoid  செய்வோம்.