Sunday, July 2, 2023

பாபிலோனின் செல்வந்தன்

 

சமீபத்தில் படித்த புத்தகம் ஜார்ஜ் எஸ் கிளாசன் (George S. Clason) என்பவர் எழுதிய “The Richest Man in Babylon” (பாபிலோனின் செல்வந்தன்) என்ற புத்தகம்.

பாபிலோனின் தொங்கும் தோட்டம் (Hanging Garden of Babylon) என்று பாடப்புத்தகத்தில் படித்திருப்போம்.  அதே பாபிலோன்தான்.  தற்போதைய ஈராக் நாடுதான் அந்த பாபிலோன். ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் இருந்திருக்கிறது.  அந்தத் தடயம் அந்த மனிதர்களிடம் இப்போதும் இருப்பதை காண முடியும்.   போரினால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் இப்போதும் ஈராக் ஒரு செழிப்பான நாடாகத்தான் இருந்திருக்கும்.

அந்த நகரில் ஆர்கட் என்ற ஒரு பெரும் செல்வந்தன் இருந்தான்.  அந்த நாட்டின் மன்னன் எப்படி ஆர்கட்டால் இந்த அளவுக்கு செல்வம் ஈட்ட முடிந்தது என்ற காரணங்களை அந்த ஊரில் இருக்கும் மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  அதற்கு இணங்க ”எப்படி ஒரு மனிதன் வளமாக வாழலாம்” என்பதற்கான அடிப்படை காரணங்களை ஆர்கட் விவரிப்பதுதான் இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்திலிருந்து சில முக்கியமான கருத்துக்களை நாமும் உள்வாங்கிக் கொண்டால் அது நமக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

இப்போது புத்தகத்திற்குள் செல்லாம்.

”இந்த உலகத்தில் பணத்தை வைத்துத்தான் ஒரு மனிதனின் வெற்றி கணக்கிடப்படுகிறது.  பணத்தைக் கொண்டுதான் இந்த உலகில் அனைத்து வசதி வாய்ப்புக்களையும் அனுபவிக்க முடியும்.  பணத்தை எப்படி சம்பாதிப்பது என்ற அடிப்படை விஷயத்தை புரிந்து கொண்டால் ஒருவருக்கு பணம் எப்போதும் தேவைக்கு அதிகமாகவே இருக்கும்.  ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாபிலோனில் வாழ்ந்த செல்வந்தர்கள் பணத்தை எவ்வாறு பெருக்கினார்களோ அதே வழிமுறைகள் இன்றைக்கும் பொருந்தும்.

எந்த ஒரு மனிதனும், தன்னுடைய அதிர்ஷ்டம் முழுவதையும் மற்றவருக்கு கொடுத்து விட முடியாது. 

ஒரு மனிதனின் செல்வம் என்பது அவன் வைத்திருக்கும் பணப்பையிலோ அல்லது பெட்டியிலோ மட்டும் இல்லை.  அதில் எவ்வளவு இருந்தாலும் அது மிக விரைவாக கரைந்துவிடும், அதை நிரப்பிக் கொண்டே இருக்கும் வழி தெரியாவிட்டால்.

வயதான நாக்கு எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டேதான் இருக்கும்.   ஆனால் ஒரு இளைஞன் வயதானவரிடம் வந்து ஆலோசனை கேட்கும்போது அவனுக்கு பல வருடங்களின் அனுபவப் பாடம் கிடைக்கக்கூடும்.  பல நேரங்களில் இளமைக்கு முதுமையின் அனுபவங்கள் புரிவதில்லை.  அதெல்லாம் அந்தக் காலம் என்று புறந்தள்ளிவிடுகின்றனர்.  அதனால் எந்தப் பயனும் இல்லை என்று நினைக்கின்றனர்.  ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.  இன்று பிரகாசமாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் இதே கதிரவன்தான் நம் முப்பாட்டன் இருந்தபோதும் ஒளிவீசிக் கொண்டிருந்தது.  நம்முடைய கொள்ளுப்பேரனோ அல்லது எள்ளுப்பேரனோ வாழும் காலத்திலும் வீசிக் கொண்டிருக்கப் போகிறது.

நீங்கள் செல்வந்தராக விரும்பினால், நீங்கள் எதை சேமிக்கின்றீர்களோ அந்தச் சேமிப்பும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான வழிமுறையை நீங்கள் செய்தால்தான் நீங்கள் விரும்பிய வசதியை அடைய முடியும்.

செல்வம் என்பது ஒரு சிறிய விதையிலிருந்து ஒரு பெரிய மரம் வளர்வதைப் போல.  நீங்கள் அந்தச் சிறிய விதையை எவ்வளவு பொறுப்பாக நீர் ஊற்றி வளர்த்து மரமாக்குகிறீர்களோ அந்த அளவுக்கு அந்த மரத்தில் இருந்து பலன் பெற்று அந்த மரத்தின் நிழலில் இளைப்பாற முடியும்.

சந்தர்ப்பம் என்பது ஒரு திமிர் பிடித்த தேவதை (haughty goddess) – அவள் வாழ்க்கயில் முன்னேறத் தயாராக இல்லாதவர்களிடம் தன்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை.

செல்வம் ஈட்டுவதில் ஒருவன் எந்த அளவுக்கு தன்னுடைய சக்தியை பயன்படுத்துகின்றானோ அந்த அளவுக்கு செல்வம் சேரும்.  அப்படி உழைக்கும்போது, செல்வம் நாம் நினைப்பதைவிட பலமடங்கு நம்மிடம் வந்து சேரும். 

நான் ஈட்டும் பொருளின் ஒரு பகுதி எனக்கானது.  இதை காலை, மதியம், இரவு என்று முப்போதும் சொல்லுங்கள்.  இதன் பொருள் – நாம் ஈட்டும் பொருளை எல்லாம் செலவழித்துவிடாமல், நமக்காக கொஞ்சம் சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான்.

வாழ்க்கையை நன்றாக அனுபவியுங்கள்.  உங்களை அதிகம் வருத்திக் கொண்டு பொருள் சேர்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.  அதே நேரத்தில் பத்தில் ஒரு பகுதி வருவாயை உங்களால் கஷ்டப்படாமல் சேமிக்க முடியும் என்றால், அதை திருப்தியோடு செய்யுங்கள். 

வாழ்க்கையை இன்றும் நன்றாக அனுபவிக்க வேண்டும், எதிர்காலத்திற்குத் தேவையான செல்வத்தையும் சேர்க்க வேண்டும்.

நம்முடைய செல்வம் பெருக, கன்றாத வளமையுடன் வாழ, ஒரு ஏழு  வழிகளை ஆர்கட் கூறுவதாக இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 Start the purse fattening – உங்கள் பணப்பையை பெருக்கும் வழிகளை கண்டறிந்து கொண்டே இருங்கள்.

2. செலவுகளைக் குறைக்கவும் (Control the expenditures) – நம்முடைய அவசியமான செலவுகள் என்பது நமது வருமானத்திற்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே வருவதை உணர்ந்திருப்பீர்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல.  நம்முடைய பல ஆசைகளையும் அவசியமான செலவுப் பட்டியலில் சேர்த்து விடுகிறோம்.  அதனால் அவதியும் படுகிறோம்.  நம்மால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குள் நம்முடைய செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. Differentiate cherished desires from casual wishes என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.  அதாவது நாம் வாழ்க்கையில் அடைய விரும்பும் மிகவும் ஆசைப்படும் நியாயமான ஆசைகளுக்கும்  எல்லோரும் செய்வதை நாமும் செய்வோம் என்ற ஆசைகளுக்குமான வித்தியாசத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

3.     செல்வத்தை பெருக்கிக் கொண்டே இருக்கவும் – நம்முடைய செல்வம் என்பது இப்போது நம் கையில் இருக்கும் அல்லது வங்கியில் இருக்கும் பணம் மட்டுமல்ல.  எப்போதும் தொடர்ந்த வருமானம் இருக்கும்படியாக அதை சரியான வகையில் முதலீடு செய்வதும் முக்கியமானது.  அதைத்தான் நாம் துாங்கும் போதும் நம் பணம் வளர வேண்டும் என்று சொல்வார்கள்.

4.     ஈட்டிய செல்வத்தை அழிந்துவிடாமல் காத்தல் – நாம் உழைத்து ஈட்டிய பொருளை அழியாமல் காப்பது மிகவும் முக்கியம்.  எந்த வகையில் முதலீடு செய்தாலும், அசலாவது (principal) நமக்கு வரும்வகையில் நம் முதலீடு இருக்க வேண்டும்.  பேராசையால் அதிக லாபம் கிடைக்கும் என்று கடன் வாங்கியாவது முதலீடு செய்து, அசலும் இழந்து வருந்தும் பலரை நம் வாழ்க்கையில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

 5.     உங்கள் சேமிப்பை அசையா சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள்.  சொந்தமாக உங்களுக்கு ஒரு வீடோ அல்லது வேறுவகையில் அசையா சொத்துக்கள் இருந்தால், அதைக் கொண்டு வருவாயை பெருக்க முயற்சிக்க வேண்டும்.

 6.     வாழ்க்கையின் எதிர்காலத்திற்கு திட்டமிடுங்கள் – நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பது தெரியாது.  ஆனால் வாழும் காலம் வரையில் நம் சொந்த வருமானத்தில் வாழும்படி நம்முடைய வாழ்க்கையை திட்டமிடுவது மிகவும் முக்கியம்.

 7.     வருவாயை பெருக்கும் வழிகளை சிந்தித்து செயல்படுத்த வேண்டும் – நீங்கள் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும்.  நீங்கள் இருக்கும் துறையில் நிபுணராக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கான வாய்ப்புக்கள் வந்து கொண்டே இருக்கும்.  உங்கள் கடனை எல்லாம் முடிந்தவரையில் சரியான நேரத்தில் திரும்பச் செலுத்திவிடுங்கள்.  திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் கடன் வாங்காதீர்கள்.

எதையும் தள்ளிப்போடும் பழக்கம் (procrastination) இருந்தால் நம்மால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.  நம் எல்லோருக்கும் நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.  ஆனால் அதற்காக எத்தனை பேர் உழைக்கத் தயாராக இருக்கிறோம்.  நமக்கான எத்தனையோ வாய்ப்புக்களை நம்முடைய சோம்பல்தனத்தால் இழந்து கொண்டே இருக்கிறோம்.  அப்படி இழப்பதின் மூலம் நமக்கான எதிரியாக நாமே மாறிவிடுகிறோம்.

அதிர்ஷ்டம் என்பது நமக்கான வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்துவது. யார் அப்படி தனக்கான வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறார்களோ அவர்களிடம் அதிர்ஷ்ட தேவதை தானாக நெருங்கி வருவாள். தன்னை திருப்தியடைச் செய்யும் அத்தகைய மனிதர்களுக்கு எப்போதும் உதவ அந்த அதிர்ஷ்ட தேவதை தயாராகவே இருக்கிறாள்.  தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு, சலியாமல் உழைப்பவர்களிடம் அந்த அதிரஷ்ட தேவதை எப்போதும் வாசம் செய்வாள்.

நம் எல்லோருக்குமான வளம் இந்த உலகத்தில் நிறையவே இருக்கிறது.  அதை அனுபவிப்பதற்குத் தேவை நமது திறமையும், உழைப்பும்தான். 

இந்தப் புத்தகத்தை படித்தவுடன் என் நினைவுக்கு வந்த சில திருக்குறள்கள்:

”ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை  

போகாறு அகலாக் கடை” 

”வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது பெருகாதிருந்தால் அவனுக்குக் கேடில்லை”.

 ”நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்”.

”எதையும் காலம் கடந்து செய்யும் குணம், ஞாபக மறதி, சோம்பல், மிதமிஞ்சிய உறக்கம் ஆகிய நான்கும் கெட்டொழியும் இயல்புடையார் விரும்பி ஏறும் மரக்கலமாகும்”.

”இயற்றலும், ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லதரசு”.

”பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்” (இந்தக் குறள் நாட்டின் தலைவனுக்கு மட்டுமல்லாமல், குடும்பத் தலைவர்களுக்கும் பொருந்தும்).

Monday, May 15, 2023

பந்தயம்

 

ஆண்டன் செகாவ் எழுதிய The Bet என்ற கதையின் தமிழாக்கம்தான் இந்த பந்தயம் என்ற கதை.  இந்தக் கதை எழுத்ப்பட்ட ஆண்டு 1898.  கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு பின்பும், இந்தக் கதை இன்னமும் உயிரோட்டமாக இருப்பதற்கு முக்கிய காரணம், புறஉலகில் ஆயிரம் மாற்றங்கள் ஏற்பட்டாலும் மனித மனமும் அதன் உள் உணர்வுகளும் கால வெளிகளுக்கு அப்பாற்பட்டு, தேசங்களைக் கடந்து எப்போதும் மாறாமல் இருப்பதுதான்.   கதையின் ஆசிரியர் ஆண்டன் செகாவும் ஒரு மனவியல் நிபுணர் என்பதால், மனித மனங்களின் இயல்புகளை மிகவும் துல்லியமாகவும், வாழ்க்கையின் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எப்படி மனிதனின் விருப்பு வெறுப்புகள் மாறுகின்றன, எதை நோக்கி மனிதன் ஓடிக் கொண்டிருக்கிறான், அதன் அர்த்தம் என்ன என்று  பல விஷயங்களை கற்பனைத் திறம் கொண்டு விவரித்திருக்கிறார் ஆசிரியர்.

கதைக்குள் செல்வோம் இப்போது.

அது ஒரு இலையுதிர் காலத்தின் இருண்ட இரவு.  வயதான அந்த செல்வந்தர் அந்தத் தோட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே 15 வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தார்.  அதுவும் ஒரு இலையுதிர் காலம்.  அங்கு பல மனிதர்கள் ஒன்றுகூடி சுவையான விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.   அப்படி அவர்கள் பேசிய விஷயங்களில் ஒன்று – மரண தண்டனை குறித்தது.  அங்கிருந்த பெரும்பாலனவர்கள் மரண தண்டனைக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.  மரண தண்டனை என்பது காலத்திற்கு ஒவ்வாதது, மனித குலத்திற்கு எதிரானது என்பது அவர்கள் கருத்து.  அதில் சிலர், மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனை வழங்கலாம் என்றனர். 

உங்களுடைய இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்றார் அந்த செல்வந்தர்.  மரண தண்டனையா, ஆயுள் தண்டனையா என்று கேட்டால் நான் மரண தண்டனையே பரவாயில்லை என்பேன்.  மரண தண்டனை உடனடியாக மனிதனைக் கொன்று விடுகிறது.  ஆனால் ஆயுள் தண்டனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது.  ஒரு சில நொடிகளில் போக வேண்டிய உயிர் வருடக் கணக்கில் போகிறது என்று சொன்னார்.

என்னைப் பொருத்தவரை இரண்டுமே தவறுதான் என்று இன்னொருவர் சொன்னார்.  இரண்டுமே மனிதனின் உயிரை எடுக்கிறது.  அரசாங்கம் ஒன்றும் கடவுள் இல்லை.  வேண்டும்போது திருப்பிக் கொடுக்க முடியாத ஒன்றை எடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்று அவர் கூறினார்.

அப்போது அங்கிருந்த சுமார் 25 வயதுடைய ஒரு இளம் வழக்கறிஞரிடம் இது குறித்த கருத்து கேட்கப்பட்டது.  அந்த இளைஞன் சொன்னான்.

மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை இரண்டுமே தவறுதான், ஆனால் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் நான் இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுப்பேன்.   இல்லாமல் போவதைவிட எப்படியாவது வாழ்வது எவ்வளவோ மேல்.

இப்படி இந்த விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியபோது, அந்த செல்வந்தர் – அப்போது இளமையும் துடிப்பும் அதிகம் இருந்த காலம் – அங்கிருந்த மேஜையைத் தட்டி அந்த இளைஞனைப் பார்த்து கத்தினார்.  நீ சொல்வது உண்மையில்லை, உனக்கு சவால் விடுகிறேன்.  இரண்டு மில்லியன் தருகிறேன் – உன்னால் தனிமையாக 5 வருடங்கள்கூட இருக்க முடியாது.

நீங்கள் சொன்ன பந்தயம் உண்மையென்றால், அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.  5 வருடம் இல்லை 15 வருடம் தனிமையில் இருக்கிறேன் என்று அந்த இளைஞன் சொன்னான்.

15 வருடத்திற்கு நீ தயார் என்றால், 2 மில்லியன் தருவதற்கு நானும் தயார் என்றார் அந்த செல்வந்தர்.

உங்கள் 2 மில்லியனுக்கு என்னுடைய சுதந்திரத்தை பணயம் வைக்கிறேன் என்றான் அந்த இளைஞன்.

அன்று இரவு அந்த செல்வந்தர் அந்த இளைஞனிடம் மீண்டும் பேசினார்.   இளைஞனே, நன்றாக யோசித்துச் சொல்.  எனக்கு 2 மில்லியன் என்பது பெரிய தொகை அல்ல.  ஆனால் உன்னுடைய வாழ்க்கையில் ஒரு சில முக்கியமான வருடங்களை நீ இழந்துவிடுவாய்.  நான் ஏன் ஒரு சில வருடங்கள் என்று சொல்கிறேன் என்றால் உன்னால் அதற்கு மேல் கண்டிப்பாக இருக்க முடியாது. அதுவும் நாமாக விரும்பி தனிமையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியே வந்து சுதந்திரக் காற்றை அனுபவிக்கலாம் என்று இருக்கும்போது அந்த எண்ணமே உன்னை நீண்ட நாள் தனிமையில் இருக்கவிடாது என்பதை நினைவில் கொள்.  உனக்காக நான் வருத்தப்படுகிறேன். 

15 வருடங்கள் கழித்து இதையெல்லாம் நினைத்துப் பார்த்த போது, அந்த செல்வந்தர் தனக்குள் கேட்டுக் கொண்டார் – எதற்காக இந்தப் பந்தயம்.  இதனால் யாருக்கு என்ன பயன்.  அந்த இளைஞனின் 15 இனிமையான வருடங்கள் பாழாகிவிட்டது.  எனது 2 மில்லியன் வீணாகப் போகிறது.  இதனால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை இதில் எது மோசமானது என்று தெரிந்து விடப் போகிறதா.  என்னிடம் இருந்த பணத் திமிரும் அந்த இளைஞனிடம் இருந்த பேராசையும்தான் இதற்கு காரணமா ?

மீண்டும் 15 வருடங்களுக்கு முன் அந்த இளைஞனை தன்னுடைய தோட்டத்தில் உள்ள அறையில் அடைத்தது நினைவுக்கு வந்தது.   அந்தப் பந்தயத்தின் நிபந்தனைகள் – 15 வருடங்கள் அந்த அறையில் இருந்து வெளியே வரக்கூடாது. எந்த மனிதரையும் பார்க்கக் கூடாது. மனிதர்களின் சத்தத்தைக்கூட கேட்கக் கூடாது. யாரிடம் இருந்தும் கடிதமோ, செய்தித் தாள்களோ அனுமதி இல்லை.  ஒரு இசைக் கருவியை வைத்திருக்கலாம். வேண்டிய புத்தகங்கள் படிக்கலாம்.  மது அருந்தலாம்.  புகை பிடிக்கலாம்.  அந்த அறையில் இருக்கும் ஒரே ஜன்னல் வழியாக மட்டும் தனக்கு வேண்டிய இவை அனைத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் – தனக்கு என்ன வேண்டுமோ அதை அல்லது அவன் சொல்ல நினைப்பதை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி அந்த ஜன்னல் வழியாக அனுப்ப வேண்டும்.   எல்லா விஷயங்களும் துல்லியமாக திட்டமிடப்பட்டது.  மிகச் சரியாக 15 வருடங்கள் – நவம்பர் 14, 1870 ம் ஆண்டு 12 மணி முதல் நவம்பர் 14, 1885 ம் ஆண்டு 12 மணி வரை அந்த தனியறையில் இருக்க வேண்டும்.  ஒரு சில நிமிடங்கள் முன்பாக வெளியே வந்தால்கூட பந்தயத்தில் தோற்றதாகக் கருதி, 2 மில்லியன் பந்தயத் தொகையை இழக்க வேண்டிவரும் என்ற ஒப்பந்தத்துடன் பந்தயம் தொடங்கியது.

பந்தயத்தின் முதல் வருடம், அந்த இளைஞன் தனிமை தாங்காது மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆட்பட்டான்.  அந்த அறையில் இருந்து பியானோ கருவியின் இசை இரவு பகலாகக் கேட்டுக் கொண்டே இருந்தது.  அவன் மதுவையும், சிகரெட்டையும் மறுத்தான்.  மது ஆசைகளைத் துாண்டிவிடுவாதகவும், அந்த ஆசைகள் தனிமைக்கு பெரிய எதிரியாக இருப்பதாகவும், எழுதியிருந்தான்.  மேலும் மனிதர்கள் அருகில் இல்லாமல் நல்ல மதுவை அருந்துவதைவிடக் கொடுமை ஒன்றுமில்லை என்றும் கூறியிருந்தான்.   தவிர புகை பிடிப்பதால் அந்த அறையின் காற்று கெட்டுவிடுவதால் புகைபிடிக்க விரும்பவில்லை என்றும் எழுதியிருந்தான்.  சில நாவல்களையும், படிப்பதற்கு சுலபமான சில புத்தகங்களையும் கேட்டிருந்தான்.

இரண்டாவது வருடம், பியானோ இசைக் கருவியில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.  இப்போது இலக்கிய புத்தகங்களை கேட்டிருந்தான்.

5 வது வருடம்  மீண்டும் பியானோ இசைக்கத் துவங்கியது.  இப்போது மதுவைக் கேட்டிருந்தான்.  அந்த ஜன்னல் வழியாக பார்த்தபோது, அவன் சாப்பிடுவதும், குடிப்பதும், அந்த கட்டிலில் படுப்பதுமாக இருந்தான்.  அவ்வப் போது கொட்டாவி விட்டுக் கொண்டும், தனக்குள் கோபமாக ஏதோ பேசிக் கொண்டும் இருந்தான்.  இப்போது அவன் புத்தகங்களை படிக்கவில்லை.  இரவு முழுவதும் ஏதோ எழுதிக் கொண்டும், காலையில் எழுதியதை எல்லாம் கிழித்துப் போட்டுக் கொண்டும் இருந்தான்.  அடிக்கடி அந்த அறையில் இருந்து அவனது அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது.

ஆறாவது வருடத்தின் பிற்பகுதியில், அந்த இளைஞன் மீண்டும் ஆர்வமாக படிக்க ஆரம்பித்தான்.  இப்போது அவன் படித்தது – பல மொழிகள், தத்துவம், வரலாறு போன்றவை.  சுமார் நான்கு வருடங்களில் கிட்டத்தட்ட 600 க்கும் அதிகமான புத்தகங்களை அந்த செல்வந்தர் அனுப்பியிருந்தார்.  இப்போது அந்த செல்வந்தருக்கு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதில் எழுதியிருந்தது

எனதருமை ஜெயிலருக்கு, நான் இந்தக் கடிதத்தை ஆறு மொழிகளில் எழுதியிருக்கிறேன்.    இந்த மொழிகள் தெரிந்தவரிடம் இந்தக் கடிதத்தைக் காட்டுங்கள்.  அவர்கள் அதில் ஒரு தவறும் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்கள் துப்பாக்கியால் வானில் சுட்டு எனக்குத் தெரியப் படுத்துங்கள்.  அதில் இருந்து என்னுடைய முயற்சி எதுவும் வீணாகவில்லை என்று தெரிந்து கொள்வேன்.  எல்லாக் காலங்களிலும், எல்லா நாடுகளிலும் அறிஞர்கள் வெவ்வேறு மொழிகள் பேசினாலும், அதில் எரியும் அறிவுச்சுடர் ஒன்றுதான். அந்த செல்வந்தர் தன் தோட்டத்தில் இரண்டு முறை சுட்டு  அந்த இளைஞன் சொன்னது சரியென்று அவனுக்கு வெளிப்படுத்தினார்.

பத்தாவது வருடத்திற்குப் பிறகு, அந்த இளைஞன் அவனுடைய மேஜை நாற்காலியில் அசையாமல் அமர்ந்து பைபிளை மட்டும் படித்துக் கொண்டிருந்தான்.  அந்த செல்வந்தருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது – நான்கு வருடங்களில் 600 க்கும் அதிகமான புத்தகங்களைப் படித்தவன் இப்போது ஒரு வருடம் முழுவதும் ஒரே சின்ன புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறானே என்று.

கடைசி இரண்டு வருடங்களில் அந்த இளைஞன் மீண்டும் பலவகையான புத்தகங்களைப் படித்தான்.  ஒருமுறை இயற்கை அறிவியலைப் படித்தால் இன்னொரு முறை பைரன், ஷேக்ஸ்பியர் என்று படித்தான். மற்றுமொரு முறை, வேதியியல், மருத்துவம், தத்துவம் என்று படித்தான்.  அவன் அப்படி படித்தது, கடலில் உடைந்த கப்பலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவன் கையில் கிடைக்கும் எதையாவது பற்றி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது போல இருந்தது. 

15 வருடங்களுக்குப் பிறகு கடந்த கால சம்பவங்கள் ஒவ்வொன்றாய் அந்த செல்வந்தருக்கு நினைவில் வந்தது. 

நாளை 12 மணிக்கு அந்த இளைஞனுக்கு விடுதலை கிடைத்துவிடும்.  ஒப்பந்தப்படி நான் அவனுக்கு 2 மில்லியன் பணத்தை கொடுக்க வேண்டும். அப்படி நான் கொடுத்தால், என்னிடம் மிச்சம் ஒன்றுமிருக்காது. என்னுடைய வாழ்க்கை சூன்யமாகிவிடும்.

15 வருடங்களுக்கு முன் இந்தப் பணமெல்லாம் எனக்கு ஒன்றுமேயில்லை. ஆனால் இப்போது என்னுடைய சொத்து அதிகமா அல்லது கடன் அதிகமா என்று யோசிப்பதற்கே பயமாக இருக்கிறது.  பங்குச் சந்தை சூதாட்டம், நிதானமில்லாத கணக்கு வழக்கில்லாத செலவுகள் என்று என்னுடைய செல்வம் எல்லாம் இன்று ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது.  ஏன் இந்த சபிக்கப்பட்ட ஒப்பந்தத்தை போட்டேன் என்று தனக்குள் முனகிக் கொண்டிருந்தார் அந்த மனிதர்.  ஏன் அந்த இளைஞன் இத்தனை ஆண்டுகளில் இறந்திருக்கக் கூடாது.  அவனுக்கு இப்போது 40 வயதுதான் ஆகியிருக்கிறது. என்னிடம் மிச்சம் இருக்கும் பணத்தையும் எடுத்துக் கொள்வான்.  திருமணம் செய்து கொள்வான், வாழ்க்கையை முழுவதும் அனுபவிப்பான்.  ஆனால் நான் ஒரு பிச்சைக்காரனைப் போல் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.  அவனோ என்னைப் பார்த்து ”உங்களுக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன், உங்களுக்கு நான் உதவுகிறேன்” என்று சொல்வான்.  அதை என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது.  அந்த இளைஞன் இறந்தால்தான் நான் திவால் ஆகாமல் இருக்க முடியும்.

அப்போது கடிகாரத்தில் 3 மணி அடித்தது.  அந்த நேரத்தில் எல்லோரும் துாங்கிக் கொண்டிருந்தார்கள்.  வெளியில் காற்றில் அசையும் மரங்களின் ஓசையைத் தவிர வேறு ஒரு சத்தமும் இல்லை.  மெதுவாக பெட்டியில் இருந்து, 15 வருடங்களாக திறக்கப்படாமல் இருந்த அந்த இளைஞன் இருக்கும் அறையின் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தார் அந்த செல்வந்தர். 

அந்த தோட்டம் மிகவும் இருட்டாகவும், குளிராகவும் இருந்தது.  மழையும் லேசாக பெய்து கொண்டிருந்தது.  வீசிக் கொண்டிருந்த குளிர் காற்று, மரங்களுக்கு ஓய்வு கொடுக்காமல் இருந்தது.  செல்வந்தருக்கு அந்த இருட்டில் எதுவும் தெரியவில்லை.  அவர் அங்கிருந்தபடியே, காவலாளியை இரண்டு முறை அழைத்தார்.  எந்த பதிலும் வரவில்லை.  குளிருக்கு அடக்கமாக காவலாளி எங்கோ ஒரு மூலையில் துாங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

நான் நினைத்த காரியம் நடந்தால், முதலில் காவலாளி மீதுதான் எல்லோருடைய சந்தேகமும் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார் அந்த செல்வந்தர்.

அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அந்த அறைக்கு அருகில் சென்று ஒரு சின்ன விளக்கை ஏற்றினார்.  அந்த சிறிய வெளிச்சத்தின் மூலமாக அந்த அறையைப் பார்த்த போது சீலிடப்பட்ட அந்த அறையின் பூட்டு அப்படியே இருந்தது. 

ஒருவித நடுக்கத்துடன் அந்த ஜன்னல் வழியாக அந்த அறையை எட்டிப் பார்த்தார் அந்த மனிதர்.  அந்த அறையில் ஒரு சிறிய மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது.  அங்கிருந்த மேஜையின் மீது சாய்ந்தபடி அந்த இளைஞன் இருந்தான்.  படித்து முடிக்கப்படாமல் திறந்தபடி பல புத்தகங்கள் எல்லா இடங்களிலும் சிதறி இருந்தது.

கொஞ்சம்கூட அசையாமல் அந்த இளைஞன் அப்படியே இருந்தான்.  15 வருட தனிமை அதற்கு அவனைப் பழக்கப்படுத்தி இருந்தது.  அந்த ஜன்னலை லேசாக தட்டிப் பார்த்தார் அந்த மனிதர்.  ஆனாலும் அந்த இளைஞனிடம் இருந்து எந்தவிதமான அசைவும் இல்லை.  இப்போது மெதுவாக அந்தப் பூட்டிலிருந்த சீலை உடைத்து கதவைத் திறந்து உள்ளே சென்றார்.  கதவு கிறீச்சிடும் ஒலியைக் கேட்டு அந்த அறையில் இருந்து ஏதோ ஒரு சலனத்தை எதிர்பார்த்தவருக்கு அப்படி எதுவும் இல்லாமல் அந்த அறை அமைதியாகவே இருந்தது.  இப்போது இன்னும் அருகில் அந்த இளைஞனுக்கு அருகில் சென்றார்.

அந்த இளைஞன் எந்த சலனமுமின்றி அந்த மேஜையில் அமர்ந்திருந்தான்.  கிட்டத்தட்ட அந்த இளைஞன் எலும்பும் தோலுமாக ஒரு எலும்புக்கூடு மாதிரி இருந்தான்.  தலைமுடியும் தாடியும் பெண்களின் கூந்தல் போன்று நீண்டு வளர்ந்திருந்தது  வெளிரி இருந்த அவனது முகமும், ஒல்லியான கைகளும் பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருந்தது.  அவனைப் பார்ப்பவர்களுக்கு அவனுக்கு 40 வயதுதான் இருக்கும் என்று சொல்ல மாட்டார்கள்.  அவன் நன்றாகத் துாங்கிக் கொண்டிருந்தான்.  அந்த மேஜையின் மீது அவனது அழகான கையெழுத்தில் ஒரு கடிதம் இருந்தது.

பாவப்பட்ட ஜென்மம் இந்த இளைஞன் என்று எண்ணிக் கொண்டார் அந்த மனிதர்.   இரண்டு மில்லியன் பணத்தைப் பற்றி கனவு கண்டு கொண்டிருப்பான்.  இந்த இளைஞன் ஏற்கனவே பாதி மரணத்தில் இருக்கிறான்.  அவன் மீது ஒரு தலையணையை வைத்து லேசாக அழுத்தினாலே எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவன் உயிர் பிரிந்து விடும்.  எந்த நிபுணரும் அதை சந்தேகக் கண் கொண்டு பார்க்க மாட்டார்கள்.  அதற்கு முன் அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம்.

அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தது.

”நாளை 12 மணிக்கு எனக்கான சுதந்திரம் மறுபடியும் கிடைத்து மற்ற மனிதர்களுடன் உறவாட முடியும்.  ஆனால் இந்த அறையில் இருந்து வெளியே சென்று சூரிய ஒளியை காண்பதற்கு முன் சில வார்த்தைகளை கூற வேண்டியிருக்கிறது.  என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன் – எனக்கு இந்த சுதந்திரமும், வாழ்க்கையும் வெறுப்பாக இருக்கிறது.

நான் இந்த 15 வருடங்களில் இந்த உலகத்தைப் பற்றி மிகவும் ஆழமாக படித்து வந்துள்ளேன்.  நான் இந்தக் காலத்தில் இந்த உலகத்தையும், மனிதர்களையும் பார்க்கவில்லை என்பது உண்மைதான்.  ஆனால் இந்த புத்தகங்களின் மூலமாக நான் நறுமணம் மிக்க மதுவை சுவைத்திருக்கிறேன். பாடல்கள் பாடியிருக்கிறேன்.  காட்டில் மான்களையும் மற்ற மிருகங்களையும் வேட்டையாடி இருக்கிறேன். பெண்களை காதலித்து இருக்கிறேன்.  அழகை ஆராதித்து இருக்கிறேன்.  கவிஞர்களும் அறிஞர்களும் இரவில் என்னைத் தேடி வந்து என் காதில் அருமையான கதைகளைச் சொல்லி என் சித்தத்தை கலங்கடித்திருக்கிறார்கள்.   இந்த புத்தகங்களின் மூலமாக மலையுச்சிகளையும் பள்ளத்தாக்குகளையும் தரிசித்து இருக்கிறேன். அந்த மலையுச்சியில் இருந்து வானத்தையும், கடலையும், தகதகக்கும் சூரியனின் கதிர்கள் பட்டு ஜொலிக்கும் மேகங்களையும் தரிசித்து இருக்கிறேன்.  மலைகளை, காடுகளை, நதிகளை, ஏரிகளை, மனிதர்கள் வசிக்கும் பிரதேசங்களை, இப்படி எல்லாவற்றையும் தரிசித்து உள்ளேன்.

நீங்கள் கொடுத்த புத்தகங்கள் எனக்கு அறிவைக் கொடுத்திருக்கிறது.  காலம் காலமாக மனிதர்கள் இடைவிடாமல் யோசித்துக் கொண்டிருந்த எண்ணங்கள் என் மூளையில் பதிந்திருக்கின்றன.   உங்கள் அனைவரையும் விட இப்போது நான் அதிக ஞானமும் அறிவும் கொண்டவன்.

ஆனால் இப்போது உங்கள் புத்தகங்களையும், அறிவையும், இந்த உலகத்தின் அத்தனை ஆசிர்வாதங்களையும் வெறுக்கிறேன்.  இவையெல்லாம் ஒன்றுக்கும் உதவாத, பயனற்ற, கானல் நீர் போன்று ஏமாற்றக் கூடியது.   நீங்கள் உங்களைக் குறித்து பெருமை கொள்ளலாம், அறிவாளி என்று நினைத்துக் கொள்ளலாம்.  ஆனால் மரணம் எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு சென்றுவிடும்.  உங்கள் வரலாறு, அறிவு எல்லாம் இந்த உலகத்தின் சுழற்சியில் எரிந்துவிடும் அல்லது உறைந்துவிடும்.


நீங்கள் இந்த உலகத்திற்கு எதற்காக வந்தீர்களோ அதை மறந்து தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டீர்கள்.  உண்மைக்கு பதில் பொய்மையை எடுத்துக் கொண்டீர்கள்.  அழகான வாழ்க்யைத் தேர்ந்தெடுப்பதற்கு பதில் அருவருப்பை தேர்ந்தெடுக்கிறீர்கள்.  நீங்கள் அதிசயிக்கக்கூடும் – சில விசித்திரமான சம்பவங்கள் மூலம், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு மரங்களில் பழங்களுக்கு பதில் தவளைகளும், பல்லிகளும் வளரலாம்.  ரோஜா மலரின் நறுமணம்  குதிரையின் வியர்வை போல நாற்றமடிக்கலாம். அதைப் போன்றுதான் நீங்களும் வாழ்வின் சொர்கத்தினை அனுபவிப்பதற்கு பதில் ஒன்றுமில்லாத சுவையற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களை நான் புரிந்து கொள்ள விரும்பவில்லை.

உங்களது இந்த அர்த்தமற்ற வாழ்க்கையை நான் விரும்பவில்லை என்பதை உங்களுக்கு நிருபிக்கும்விதமாக, ஒரு காலத்தில் எந்த இரண்டு மில்லியன் பணத்திற்காக கனவு கண்டேனோ அந்தப் பணத்தை துறக்க முடிவு செய்துவிட்டேன்.  அதற்கு சாட்சியாக இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதற்கு சில மணிநேரம் முன்பாகவே இங்கிருந்து வெளியேறி இந்த ஒப்பந்தத்தினை மீறுகிறேன்”.

கடிதத்தைப் படித்து முடித்ததும் அந்த செல்வந்தர் அந்த இளைஞனின் தலையில் மெதுவாக முத்தமிட்டு கண்ணீருடன் அந்த அறையைவிட்டு வெளியேறினார்.   சூதாட்டத்திலும், வேறு பல வழிகளிலும் அவர் தன்னுடைய பெரும் சொத்தை இழந்தபோதுகூட இந்த அளவுக்கு மனதில் பாரமும், குற்ற உணர்ச்சியும் ஏற்பட்டதில்லை.  தன்னுடைய அறைக்கு சென்று கட்டிலில் படுத்தாலும், அவருடைய கண்ணீரும், துயர உணர்வுகளும் அவரைத் துாங்கவிடாமல் செய்தது.

மறுநாள் காலை அந்தத் தோட்டத்து காவலாளி வெளிரிய முகத்துடன் பதட்டத்துடன் ஓடி வந்து தயங்கியபடியே அந்த செல்வந்தரிடம் சொன்னார் – அந்த இளைஞன் ஜன்னல் வழியாக தப்பித்துச் சென்றுவிட்டதாக. அந்தக் காவலாளியுடன் சென்று அந்த அறைக்குச் சென்று அந்த இளைஞன் சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டார் அந்த செல்வந்தர்.  யாருக்கும் தேவையில்லாத சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க அந்த இளைஞன் எழுதியிருந்த மில்லியன் பணத்தைத் துறக்கும் கடிதத்ததை தன் இரும்புப் பெட்டியில் பத்திரப்படுத்திக் கொண்டார்.

--------

இந்தக் கதையை படித்தவுடன் எனக்குத் தோன்றியது இதுதான்.  மனிதன் மனிதர்களுடன் பழகியே பழக்கப்பட்டவன்.  மனிதர்களுடன் பழகாமலேயே இருந்துவிட்டால், அவனால் இயல்பாக வாழ முடியாது.  எல்லா வகைப்பட்ட மனிதர்களுடன் வாழ்ந்து கொண்டே, நமக்கான தனிமையை தேவைப்படும்போது ஏற்படுத்திக் கொண்டு வாழ முடிந்தால், அந்த வாழ்வு கண்டிப்பாக ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வாகத்தான் இருக்கும்.  அத்தகைய வாழ்வு நம் எல்லோருக்கும் அமையட்டும்.

Wednesday, August 3, 2022

யானை

 

என்னுடைய முதல் சிறுகதை முயற்சி       

யானை

 

டேய் பேசாம திரும்பிப் போயிடலாம்டா.  மேலே போய்ச் சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்னே தெரியல.  இப்பவே மணி 12 ஆகப் போகுது. இருட்ரதுக்குள்ளே திரும்பலேன்னா ரிஸ்க்குன்னு வேற பயமுறுத்தி இருக்காங்க.  சிவா சொன்னதைக் கேட்டதும் எங்களுக்கும் கொஞ்சம் யோசனையாகத்தான் இருந்தது.

நானும் எனது நண்பர்கள் சிலரும் அடிக்கடி ஏதாவது ஒரு மலைப்பயணம் கிளம்பிவிடுவோம்.  அப்படி இந்த முறை வந்திருக்கும் மலை, ஆரணி -  சந்தவாசலுக்கு அருகில் இருக்கும் ஒரு மலை.   இந்த மலையின்மீது ஒரு கோவில் இருக்கிறது.  அந்தக் கோவில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் திறந்து இருக்குமாம்.  இன்று மூடியிருக்கும் என்று சொன்னார்கள்.  மலையில் நடக்கும் அனுபவத்திற்கு கோவில் திறந்திருந்தால் என்ன மூடியிருந்தால் என்ன என்று கிளம்பிவிட்டோம்.

ஆனால் இன்னும் எவ்வளவு துாரம் செல்ல வேண்டும் என்பதே தெரியாமல் இருந்ததால்தான் இந்த யோசனை.  காட்டு வழியில் நடப்பதின் மிகப் பெரிய ஆபத்தே, வழி தவறி போய்விடாமல் இருப்பதுதான்.  எந்த ஒற்றையடி பாதை எங்கே கொண்டு செல்லும் என்று தெரியாது. மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நுழையாத இடங்கள் இந்த உலகில் நமக்கு அருகிலேயே இன்னும் நிறைய இருக்கின்றன.

இப்படி யோசித்துக் கொண்டிருந்தபோது, நல்ல வேளையாக எதிரில் ஒருவர் காய்ந்த மரச்சுள்ளிகளை தலையில் சுமந்துகொண்டு வந்து கொண்டிருந்தார்.  மலை உச்சியை அடைய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று அவரிடம் கேட்டோம்.  ”முக்கால்வாசி துாரம் வந்துட்டீங்க.  இன்னும் கொஞ்சம் துாரம்தான்.  பாதையில் கவனம் வச்சு போனா, சீக்கிரமா போயிடலாம்” என்று சொன்னார்.  அவர் வார்த்தைகள் தந்த நம்பிக்கையில் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்.

ஒரு பத்து நிமிடம் நடந்திருப்போம்.  திடீரென்று மேகக்கூட்டங்கள் சேர்ந்து சடசட வென்று மழை பெய்ய ஆரம்பித்து விட்டது.  உண்மையில் அந்த மழை உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தாலும், ஈரமான அந்த மண் பாதை இப்போது வழுக்க ஆரம்பித்துவிட்டது.  செருப்பை போட்டுக் கொண்டு நடக்க முடியவில்லை.  எல்லோரும் செருப்பை கழட்டி விட்டு வெறுங்காலில் நடக்க ஆரம்பித்தோம்.

கொஞ்ச துாரம்தான் நடந்திருப்போம்.  திடீரென்று என் காலில் சரக்கென்று ஏதோ ஒன்று குத்தியதுபோல இருந்தது.  குனிந்து பார்த்தால் ஒரு கண்ணாடித் துண்டு காலை நன்றாக பதம் பார்த்திருந்தது. யாரோ எப்போதோ குடித்து போட்டிருந்த மது பாட்டிலின் உடைந்த சில்லு அது.

காலில் இருந்து வழிந்த இரத்தத்தைப் பார்த்த தருணத்தில்தான் மூளைக்குள் வலி உணர்வை நரம்பு கடத்தியிருந்தது.  வலி தாங்காமல் அப்படியே அந்த மழை பெய்து கொண்டிருந்த ஈரமண் சாலையில் உட்கார்ந்து விட்டேன்.

காடு மலைகளில் நடக்கும் யாராக இருந்தாலும் சில முதலுதவிப் பொருட்களை கைவசம் வைத்திருக்க வேண்டும்.  நல்ல வேளையாக இப்போது அது மிகவும் உதவியாக இருந்தது.  கையில் இருந்த குடிதண்ணீரால் காலை லேசாக கழுவிவிட்டு, துணியால் நன்றாக காலை சுற்றி கட்டிவிட்டேன்.  இரத்தம் வருவது நின்றுவிட்டது போல் இருந்தது.    ஆனால் எழுந்து ஒரு அடி வைப்பதற்குள் வலி உச்சந்தலையை தொட்டது.

நிஜத்தைவிட நம்முடைய கற்பனையான எண்ணங்கள் நம்மை அதிகம் பாதிக்கும் என்பார்கள்.  இப்போது வழியெங்கும் கண்ணாடி சில்லுகள்  சிதறியிருப்பது போன்ற பிரமையில் அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கே மிகவும் தயக்கமாக இருந்தது.  வழுக்கினாலும் பரவாயில்லை என்று செருப்பை போட்டுக் கொண்டே நண்பர்கள் உதவியுடன் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்.

நல்ல வேளையாக மழை விட்டு காற்று கொஞ்சம் இதமாக வீசியதால் காலின் வலி குறைந்தது போல இருந்தது.  மதியம் ஒரு மணிக்குள் மலை உச்சியை அடைந்துவிட்டோம். 

கோயில் மூடியிருந்ததால் எங்களைத் தவிர யாரும் அங்கு இல்லை.  இங்கு ஒரு சாமியார் மட்டும் தங்கியிருப்பதாக கேள்விப்பட்டிருந்தோம்.   ஆனால் அவரையும் அங்கு காணவில்லை. 

நடந்த களைப்பில், பசியும், தாகமும் அதிகரித்திருந்தது.   கோவிலின் மூலவர் சந்நிதிக்கு அருகில் ஒரு சின்ன குவளையில் தண்ணீர் இருந்தது.  அந்த நேரத்துக்கு அது அமிர்தமாக இருந்தது. 

தண்ணீரைக் குடித்துக்கொண்டு இருந்தபோதே, ”எங்கே இருந்து வரீங்க  எல்லாரும்” என்று பின்னால் இருந்து ஒரு குரல்.  திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தால், இடுப்பில் ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு, ஒல்லியான தேகத்தில் அந்த சாமியார் நின்று கொண்டிருந்தார்.  ஒரு மனிதரின் ஆன்ம பலம் அவர் கண்களில் தெரியும் என்று சொல்வார்கள்.  அந்தக் கண்கள் நெருப்புப் பழம் போல பிரகாசித்துக் கொண்டிரு்நதது.

எப்படி இந்த மனிதரால் தனியாக இப்படி இருக்க முடிகிறது ? இந்த வனாந்திரத்தில் எப்போது எந்த விலங்கு வரும் என்றுகூடத் தெரியாதே.  மனதில் இருந்த கேள்வியை அவரிடமே கேட்டுவிட்டேன்.

சாமி, உங்களுக்கு இங்கே தனியாக இருப்பது பயமாக இல்லையா ?  அவர் சிரித்துக் கொண்டே சொன்னார் ”மனிதர்களிடம் இருந்ததை விட இங்கே மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன்.  தண்ணீர் குடிக்க இங்கு இருக்கும் சுனைக்கு பல விலங்குகள் வந்து செல்லும்.  நாம் அவற்றை தொந்தரவு செய்யாத வரை அவை நம்மை ஒன்றும் செய்வது இல்லை”. 

”மனிதன் நகரத்தின் இரைச்சலுக்குப் பழகியவன்.   அவன் மனது அமைதிக்குப் பழகும்வரை இந்த வனாந்திரத்தின் ஏகாந்தம் அவனை பயமுறுத்திக் கொண்டே இருக்கும்.  காற்றில் அசையும் இலைகளின் சலசலப்பும், சருகுகளின் ஓசையும்கூட உங்கள் மனதில் ஒருவித அச்சத்தினை ஏற்படுத்தும்.”

”அது சரி.  ரொம்ப துாரம் நடந்து வந்திருக்கீங்களே. ஏதாவது சாப்பிட்டீங்களா. என்று கேட்டார் அந்தச் சாமியார்.  நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.  காலையில் சாப்பிட்டதுதான்.  நடந்து வந்த களைப்பில் பசியும் வயிற்றைக் கிள்ளியது.  இல்லை சாமி.  கொஞ்சம் பிஸ்கட், ரொட்டி கைவசம் இருக்கிறது.  அதை வைத்து சமாளித்துக் கொள்கிறோம் என்றோம்.

எங்களைப் பார்த்து சிரித்தவர், அதை வைத்துக் கொள்ளுங்கள்.  இறங்கும்போது தேவைப்படும்.  கொஞ்சம்  கஞ்சி வச்சிக் கொடுக்கிறேன். சாப்பிடலாம் என்றார்.  அவரிடம் இருந்தது ஒரு சில பாத்திரங்கள்தான்.  அதில் கஞ்சி தயார் செய்ய ஆரம்பித்தார்.

”கஞ்சி கொதிக்கட்டும்.  வாங்க இந்த இடத்தை சுத்திப் பாக்கலாம்” என்று அந்தக் கோவிலின் மண்டபத்துக்கு வெளியே எங்களை அழைத்துச் சென்றார்.   அங்கிருந்து எந்தப் பக்கம் பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பசுமை போர்த்திய மலைகள் தான் தெரிந்தன. 

தம்பி இந்த மலைகளுக்குள்ள பல கிராமங்கள் இருக்கு.   இன்னும் வெளியுலக வாசனை அதிகம் இல்லாத பல மனிதர்கள் அந்தக் கிராமங்கள்ள இருக்காங்க. பார்ப்பதற்கு பக்கத்தில் இருப்பது போல இருக்கும் அந்த மலைகளுக்குப் போக ரெண்டு மூணு நாட்கள்கூட ஆகும்.  ஆனா தம்பி மனுசங்க எங்க அதிகம் வர ஆரம்பிக்கிறாங்களோ அங்க காடுகள் தொலைய ஆரம்பிக்கின்றன. 

காடுகள் தொலையத் தொலைய அங்க வாழுற எல்லா உயிரும் தொலைய ஆரம்பிக்கிது.  மலைக்கு வர மனுசங்க அந்த அழகை ரசிக்காம, வாழ்க்கைய அனுபவிக்கிறோம்னு நல்லா குடிச்சுட்டு அந்த மது பாட்டில்களை இந்தக் காட்டுலேயே  வீசிட்டுப் போயிடறாங்க. 

ஒருமுறை ஒடஞ்ச மது பாட்டில் ஒன்னு யானையின் காலில் நன்றாக சொருகிவிட்டது.  அவ்வளவு பெரிய உடம்ப வச்சுக்கிட்டு அந்த யானையால் எப்படி நடக்க முடியும்.  ஒரு யானை கொறஞ்சது 50 அல்லது 60 மைல் ஒரு நாளைக்கு நடக்கும்.  அப்படி நடந்தால்தான் அதுக்கான உணவும் கிடைக்கும்.  நடக்க முடியாமல் வலியாலும், பசியாலும் துடித்து இறந்த அந்த யானையை பாக்குறப்போ சுயநலமான இந்த மனிதர்கள் மீது அளவில்லாத கோபம் வருகிறது. 

அவர் சொல்ல சொல்ல எனக்குள் மறந்திருந்த கால்வலி மீண்டும் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.  ஒரு சின்ன பாட்டில் துண்டு குத்தியதற்கே உயிர் போகும் அளவிற்கு வலி.   இத்தனைக்கும் குத்திய அந்த துண்டு வெளியில் வந்து விட்டது.  அதற்கு மருந்தும் இட்டு கட்டும் கட்டியாகிவிட்டது.  ஊருக்கு போய் ஒரு டிடி போட்டுக் கொண்டால் சில நாட்களில் சரியாகிவிடும்.   ஆனால் அந்த யானையைப் போல எத்தனை விலங்குகள் நம்முடைய அகங்காரமான செயல்களால் பாதிக்கப்படுகின்றன.   சில நாட்கள் முன்புகூட செய்தித் தாள்களில் படித்தது ஞாபகத்திற்கு வந்தது.  ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் குடித்து எறிந்த ஆயிரக்கணக்கான டன் மது பாட்டில்கள் மலைகளின் பள்ளத்தாக்குகளில் சேர்ந்திருக்கின்றன என்று. 

இந்த மலைக்கு வாகனங்களில் வருவதற்கு சரியான  பாதைகள் இல்லை.  அப்படி இருந்துமே, யாரோ எப்போதோ குடித்துப் போட்ட மது பாட்டிலின் உடைந்த சில்லு என் காலை பதம் பார்த்திருந்தது.  இன்னும் வாகன வசதி இருந்தால் இந்த மலையிலும் எத்தனை டன் குப்பை சேருமோ தெரியவில்லை.

”சாமி மனிதன் இப்படி இயற்கையை அழித்துக் கொண்டே சென்றால் இதற்கு முடிவுதான் என்ன ? 

”என்ன தம்பி இயற்கையை அவ்வளவு சாதாரணமா எடைபோட்டுட்டே.  இது நம்மள மாதிரி கோடிக்கணக்கான பேரை, காலம் காலமா பாத்திக்கிட்டிருக்கு.  மனிதனின் ஆட்டத்தை அது பார்த்துக் கொண்டே இருக்கும்.   கொஞ்சம் அதிகமாகிவிட்டது என்று தெரியும்போது மொத்தமாக வாரிச் சுருட்டி போட்டுக் கொண்டு போய்க் கொண்டே இருக்கும்.  முடிஞ்சா நம்மள காப்பாத்திக்க முயற்சி பண்ணலாம்.

சொல்லிவிட்டு அந்தச் சாமியார்  சிரித்த சிரிப்பும், ஆமாம் என்பது போல அந்த மலை அதை எதிரொலித்ததும் ஒருவித அச்சத்தை தருவதாக இருந்தது.

அந்த அச்சத்தினை போக்கும் விதமாக அவரே ”சரி வாங்க தம்பீங்களா, கஞ்சி கொதிச்சிருக்கும்” என்று உள்ளே அழைத்தார்.

Sunday, October 3, 2021

அப்பத்தா – பாரதி கிருஷ்ணகுமார்

 

”வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய வள்ளலார் பிறந்த ஊரில், பயிர் வாடிய உடனே அந்த நிலத்தினை வீட்டு மனைகளாக்கி, அதற்கு வள்ளலார் நகர் என்று பெயரும் வைக்கும் ஊர் இது என்ற திரு. பாரதி கிருஷ்ணகுமாரின் வரிகளை மேற்கோள் காட்டி ”ரியல் எஸ்டேட்” தொடர்பான அடிப்படை சட்ட விளக்கங்கள் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.   நண்பர் திரு. வேடியப்பன் (டிஸ்கவரி புக் பேலஸ்) அவர்கள் அந்தக் கட்டுரையை பாரதி கிருஷ்ணகுமார் அவர்களிடம் ஒரு சந்திப்பில் காட்ட, பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் உடனே என்னை அலைபேசியில் அழைத்து ”யார் யார் சொன்ன கருத்தையோ தன் கருத்தாகவே சொல்லிக் கொள்ளும் மனிதர்கள் இருக்கும் உலகில், என்னுடைய வார்த்தைகளை என் பெயரிலேயே சொல்லி இருக்கும் உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன்” என்று சொல்லி அந்தக் கட்டுரையை மனதாரப் பாராட்டினார்.   முன்பின் தெரியாதவர்களைக்கூட மனதாரப் பாராட்டும் பண்பு கொண்டவர்தான் பாரதி கிருஷ்ணகுமார்.   அவரிடம் இருந்து சில நாட்கள் முன்பு ஒரு செய்தி வந்திருந்தது.  அந்த செய்தி இதுதான்.  கொரோனா தீநுண்மிகளின் கொடுங்காலம் உண்டாக்கிய பேரிழப்பை ஈடு செய்யும் முயற்சியாக தன்னுடைய புத்தகங்களை வாங்கி படிப்பதற்கும் பரிசளிப்பதற்கும் வேண்டி அந்தப் புத்தகங்கள் குறித்த விவரங்களை அனுப்பியிருந்தார்.

செய்தியைப் படித்ததும் அவரிடமிருந்து சில புத்தகத் தொகுதிகளைப் பெற்று நண்பர்களுக்கு பரிசளித்தேன்.  அவரின் பாரதி குறித்த ”அருந்தவப்பன்றி” என்ற புத்தகத்தினை ஏற்கனவே படித்து அது குறித்து என்னுடைய வலைதளத்தில் 2014-ம் ஆண்டு பதிவு செய்துள்ளேன்.

ஆனால் ”அப்பத்தா” என்ற அவரின் சிறுகதை தொகுப்பை இப்போதுதான் படித்தேன்.

பாரதி கிருஷ்ணகுமாரின் நாவன்மையை பலரும் அறிந்திருக்கக் கூடும்.  தனது கரகரப்பான காந்தக் குரலால் அவர் பேசும் போது கேட்பவர்களின் கவனம் சிதறுவது மிகவும் குறைவாகவே இருக்கும்.  அவரது பேச்சின் இடையில் உங்களது உதடுகளில் புன்னகையும், கண்களில் நீரும் வந்து போவது ஒரு அனிச்சை செயலாக இருக்கும்.  அந்த அளவு மனம் உருகும் அளவு பேசுவார்.

பாரதி கிருஷ்ணகுமாரின் பேச்சுக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல அவரது எழுத்துக்கள்.   அவரது ஒரு பத்து சிறுகதைகளைத் தொகுத்து ”அப்பத்தா” என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார்.  பத்துக் கதைகளும் முத்துக் கதைகள்.  அவரது நண்பர் திரு. சுதா. இளங்கோவன் குறிப்பிடுவது போல ”அன்னைத்தமிழ் தன்னிடம் உள்ள வசீகர வார்த்தைகளை எல்லாம் இவருக்கு தாராளமாக அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறாள்”.

ஏன் மிகச் சிறந்த எழுத்தாளர்களை படிக்க வேண்டும் என்றால். அவர்கள்தான் நாம் படிக்காத பல புத்தகங்களைப் படித்து, கற்ற அந்த அறிவையும், தங்கள் அனுபவங்கள் மூலம் பெற்ற அறிவையும் கலந்து நமக்கு சுவையாக பரிமாறக் கூடியவர்கள்.  ஒரு புத்தகத்தினை படித்ததும் ஒரு அங்குலமாவது நம்மை மேம்படுத்த அந்தப் புத்தகம் உதவி புரிந்தால் அந்த எழுத்தும் எழுத்தாளனும் அந்தப் புத்தகத்தின் பயனை அடைந்து விட்டதாகத்தான் அர்த்தம்.  அப்பத்தாவைப் படிப்பவர்கள் அந்த அனுபவத்தினை உணர்வார்கள். 

எனக்கு எப்போதும் வாசிக்கும்போது எனக்குப் பிடித்த வரிகளை குறித்து வைத்துக் கொள்வது வழக்கம்.  அப்படி பிடித்த வரிகளை அடிக்கோடிடுவது என்பது அந்த எழுத்தாளனைப் பாராட்டி கைகுலுக்குவது போன்றது என்று கவிஞர் நா. முத்துக்குமார் அவர்கள் தனது தந்தை சொல்வதாக குறிப்பிட்டு இருப்பார்.

அப்படி நான் பாரதி கிருஷ்ணகுமாரோடு கைகுலுக்கிய சில வரிகள் உங்கள் பார்வைக்கு -

”வலி என்பது வலியைப் பற்றிய ஒரு உயிர்த்துடிப்புள்ள எண்ணமே ஆகும்.  மனவலிமையின் துணை கொண்டு அந்த எண்ணத்தை விட்டொழித்தால் வலி மறைந்து போகும்” என்று அறிந்து உணர்ந்த டாக்டர் ஆந்திரேய் எபிமிச்சும்….

”பெண்ணுடம்பின் நுட்பங்களை ஆணால் எப்போதும் அறிந்து கொள்ளவே இயலாது.  அவளுள் நிகழும் மாற்றத்தின் வேகத்திற்கு ஓடிவரும் ஓர் ஆண் இன்றுவரை பிறப்பிக்கப்படவேயில்லை”

”எல்லாக் காயங்களையும் மருந்தின்றி குணப்படுத்தும் மருத்துவம் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எப்போதும் இருக்கிறது”

”உயிரின் சுழற்சியைத் தன் வாலால் உணர்த்தியபடி, கனத்த மரப் பல்லியொன்று பட்டுவை மென்று விழுங்கியது.  உயிர் உருவாவதும், விடுபடுவதும் நொடிகளுக்கும் குறைவான நேரம்தான் போலும்”

”தன் வஞ்சகமெல்லாம் சாதுர்யமென்றும், பொய்களெல்லாம் உபாயங்களென்றும் பொருத்திக் கொண்டார் அப்பா.  அப்பாவின் மூர்க்கங்களுக்குப் பின்னே ஒரு குழந்தைத்தனமும் நிதானங்களுக்குப் பின்னே ஒரு பசித்த விலங்கும் இருந்தது”.

நீ சம்பாதிச்சு என்னைக் காப்பாத்த வேணாம்.  உன்னக் காப்பாத்திக்கிட்டா போதும் என்று எல்லா அப்பாக்களும் சொல்லும் வார்த்தையைக் கடைசியாகக் கண் கலங்கச் சொல்லிவிட்டு ஊருக்குப் போனார்.

ஒரு கை மணல் அள்ளினாலும் அதை ஆற்றில் எடுத்த இடத்திலேயே போடணும் என்பாள்.  மணல் ஆற்றுத்தாயின் மேலாடை என்றும் ஆற்றில் தண்ணீர் வருகிறபோது அவள் மேலாடை விலக்கி நமக்கு அமுதுாட்டுகிறாள் என்றும் அம்மா சொல்வாள்.

இப்படி இன்னும் நிறைய கைகுலுக்கிக் கொண்டே இருக்கலாம்.  கொரோனா காலம் என்பதால் அதிகம் கைகுலுக்குவதைத் தவிர்க்கிறேன் :)

நண்பர் பாரதி கிருஷ்ணகுமாருக்கு என்னுடைய ஒரு வேண்டுகோள்.   உங்கள் பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல மாட்டேன்.  ஆனால் உங்கள் எழுத்தை அதிகமாக்குங்கள்.  உங்களிடமிருந்து மிகச் சிறந்த நாவலையும் மேலும் பல சிறுகதைகளையும் எதிர்பார்க்கிறேன்.  நீங்கள் அடைய வேண்டிய உயரம் இன்னும் நிறைய இருக்கிறது.

வார்த்தைகளில் அலங்காரமான அறத்தினை போதித்துவிட்டு வாழ்க்கையில் பொய்களுக்கு சாமரம் வீசி பணத்துக்கு பஞ்சமில்லாமல் வாழும் பல எழுத்துப் பிழைப்பாளிகளுக்கு மத்தியில் தன் வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் பாசாங்கு இல்லாமல் வாழும் பாரதி கிருஷ்ணகுமார் போன்றவர்கள் போற்றப் பட வேண்டியவர்கள் மட்டுமல்ல பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள.

பாரதி வாழ்ந்த காலத்தில் தமிழ்ச் சமூகம் பொருளாதார ரீதியாக அந்தக் கவிஞனுக்கு அதிகம் உதவவில்லை. அந்தக் காலத்தில் நிலவிய சூழலும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.   ஆனால் பாரதி கிருஷ்ணகுமார் வாழும் இந்தக் காலத்தில் தமிழ்ச் சமூகம் கண்டிப்பாக எல்லா வகையிலும் திரு. பாரதி கிருஷ்ணகுமாருக்கான அங்கீகாரத்தினை அளிக்கும் என்ற பெருநம்பிக்கை எனக்கு இருக்கிறது.


Friday, January 1, 2021

மனம் உணர்தல்

 

 

 

 

கடந்த வெள்ளியன்று (25.12.2020) டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் படைப்புக்களின் பதிப்பு உரிமையை Discovery Book Palace பெறும் விழா எளிமையாக நடைபெற்றது.  திரை இயக்குநர்கள் திரு விஜய், திரு அஜயன் பாலா, வழக்கறிஞர் திருமதி சுமதி, மற்றும் Discovery Book Palace திரு வேடியப்பன் இவர்களுடன்  இணைந்து பதிப்பு உரிமைக்கான ஒப்பந்தத்தினை நா.முத்துக்குமாரின் மனைவி திருமதி ஜீவலஷ்மி முத்துக்குமார், அவரது குழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் பெற்றுக் கொண்டது மிகவும் மனநிறைவான நிகழ்வாக எனக்கு அமைந்தது.

காரணம் நா. முத்துக்குமார் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கவிஞர்.  அவரது வாழ்க்கையைப் போலவே அவரது எழுத்திலும் பாசாங்கு இருக்காது.  இன்னும் ஒரு பத்து பதினைந்து வருடங்கள் அவர் வாழ்ந்திருந்தால் இன்னும் பல இனிமையான பாடல்களும் கவிதைகளும் நமக்கு கிடைத்திருக்கும். 

மற்றவர்களுக்காக இல்லையென்றாலும் அவரது மனைவி குழந்தைகளுக்காவது அவர் இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருக்கலாம்.  ஆனால் ஒரு கதவு மூடப்படும்போது வேறு பல கதவுகள் திறக்கத்தான் செய்கிறது.  முத்துக்குமாரின் மகன் ஆதவன் இன்னொரு சிறந்த கவிஞனாக வருவதற்கான எல்லா அம்சங்களும் அவன் தன் தந்தை குறித்து வாசித்த கவிதையில் தெரிந்தது.  வாழ்த்துக்கள் ஆதவன்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்.  முத்துக்குமார் போன்ற கவிஞர்களும் அப்படித்தான்.  கண்டிப்பாக அவரது குடும்பத்திற்கும் அவரது குழந்தைகளின் படிப்புக்கும் தேவையான வருமானத்தினை அவரது எழுத்துக்கள் பெற்றுத் தரும்.

நான் இந்தப் பதிவை எழுதும் இன்று (1.01.2021), நா. முத்துக்குமாரின் 11 புத்தகங்களின் முதல் பதிப்பு வந்து விட்டது.  மொத்த விலை ரூ.1500/-.  சிறப்பு தள்ளுபடி போக ரூ.1100/- மட்டும் தான்.  தனித்தனியாகவும் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.  www.discoverybookpalace.com என்ற வலைதளத்தில் உங்களுக்குத் தேவையான புத்தகங்களை தனித்தனியாகவோ அல்லது மொத்தமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

ஆயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்க வேண்டுமா என்று கூட சிலர் நினைக்கலாம்.  ஆனால் ஒரு வேளை lunch அல்லது dinner-க்கே ஆயிரக்கணக்கில் செலவு செய்யத் தயங்காத நாம், கையில் எடுக்கும் போதெல்லாம் நம் அறிவுப் பசியைத் தீர்க்கும் புத்தகங்களுக்கு செலவு செய்ய தயங்கக் கூடாது என்பது என் எண்ணம்.   புத்தகங்களுக்கு நாம் செலவு செய்யும் பணம் expense அல்ல அதுவும் ஒரு investment தான்.  நாம் வாசிக்கும் புத்தகத்தின் ஏதோ ஒரு வரிகூட நம் வாழ்க்கையை மாற்றலாம் அல்லது சோர்ந்திருக்கும் நேரத்தில் நமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கலாம்.  தொடர்ந்த வாசிக்கும் பழக்கம் நம்முடைய மன அழுத்தத்தை குறைத்து வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலைத் தரும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

நா. முத்துக்குமாரின் புத்தகங்களை வாங்குவது நமக்காக மட்டுமல்ல அவரின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் சேர்த்து என்பதால் இந்தப் பதிவை படிக்கும் அன்பர்கள் தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கு பரிசாக கொடுப்பதற்கோ நா. முத்துக்குமாரின் புத்தகங்களை வாங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சரி இப்போது முத்துக்குமாரின் ஒரு கவிதையைப் பார்க்கலாம்.  இந்தக் கவிதையின் தலைப்பே கிட்டத்தட்ட ஒரு சென் கவிதையைப் போல இருக்கிறது.

 

மனம் உணர்தல்

 

பாறையில் மோதும் மேகங்கள்

நீர்த்துளியாகச் சிதறி

சூன்யத்திற்குள் பயணிக்கும்

மலைக்குடில் ஒன்றில்

சீடர்கள் மூவர்

குருவிடம் கேட்டனர்

கடவுளுக்கு அருகில்

செல்வது எப்படி ?

 

உள்ளிழுத்த காற்றை

லயமாக வெளியனுப்பி

சீடர்களின் கேள்விக்கு

குரு பதில் சொன்னார் –

உங்கள் மனதின் எண்ணங்களை

ஒரு சில நொடிகள் உற்றுப்

பார்த்து

தோன்றியவற்றை

எழுதிக் கொண்டு வாருங்கள்.

 

நொடிகள் கடந்தன.

முதல் சீடன் எழுதினான்

பலா மரத்திலிருந்து

உதிரும் இலைகள்

வருத்தம் எதுவிமில்லை.

 

இரண்டாம் சீடன் எழுதினான்

கதவு திறந்தபின்

அறையின் இருட்டிடம்

வெளிச்சம் பேசும் ஓசை.

 

மூன்றாம் சீடன் எழுதினான்

குளிர், தேநீர்

எதிர் வீட்டுப் பெண்

எப்போதோ குடித்த மது

தற்கொலை

மலைப்பாதை நாய்

குருவுக்கு ஒற்றைக்கண்

கூர் தீட்டாத பென்சில்.

 

மூன்றையும் படித்த குரு

புன்னகையுடன் சொன்னார்.

முதலிரண்டு சீடர்களுடையது

ஒழுங்குபடுத்தப்பட்டதாய்

காட்டிக்கொள்ளும் மனம்

நான் என்னும் அடையாளம்

அதில் இன்னும் அழியவில்லை.

மூன்றாம் சீடனின் மனமே

கடவுளின் பாதைக்கு ஏற்றது

மனம் என்பது

பைத்திய எண்ணங்களின்

தொகுப்பு.

காற்றில் மிதக்கும் துாசிகளுக்கு

திசை என்பது இல்லை.

 

இந்தக் கவிதையில் நான் மிகவும் ரசித்தது - காற்றில் மிதக்கும் துாசிகளுக்கு

திசை என்பது இல்லை என்ற வரிகளை.   நமது மனதின் எண்ணங்களும் அது போலத்தான்.  லா.ச.ரா. சொல்லுவார் மனம் என்பது சதா எண்ணங்களை உற்பத்தி செய்யும் எந்திரம் என்று.  அதில் நல்ல எண்ணங்கள் மட்டுமல்லாமல்  கேடுகெட்ட எண்ணங்களும் தோன்றிக் கொண்டே இருக்கும்.  நமது எண்ணங்களை பிற மனிதர்களிடமிருந்து மறைக்கலாம்.  ஆனால் கடவுளை நெருங்க நினைத்தால் நாம் நமக்கு உண்மையாக இருக்க வேண்டும்.  அங்கு எந்த பாசாங்கும் எடுபடாது என்பதை மிகச் சாதாரண வார்த்தைகளில் மிக அழகாக சொல்லி விடுகிறார் இந்தக் கவிஞர்.

இப்படி எத்தனையொ நல்ல கவிதைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.  வாங்கிப் படியுங்கள்.  நீங்களே நிறையப் பேருக்கு சொல்வீர்கள்.

2020-ன் பயங்கள் நீங்கிய இனிய ஆண்டாக 2021-ம் ஆண்டு அமையட்டும்.  அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

 


Wednesday, July 15, 2020

காக்க காக்க




கந்த சஷ்டி பாடல் வரிகளை தரம் குறைந்து விமரிசித்து ஒருவர் பேச அது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக ஆகியிருக்கிறது.

கந்த சஷ்டி கவசம் குறித்த அடிப்படை புரிதல் இன்றி அதன் பாடல் வரிகள் விமர்சிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழின் இலக்கிய அறிவு தேவைப்படாத சாதாரண மொழி அறிவு கொண்டவர் கூட ஒப்புக்கொள்வர்.

கந்த சஷ்டி கவசத்தை தொடர்ந்து படித்து வரும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அதனால்  பலன் அடைந்து இருப்பார்கள்.  இது தனிப்பட்ட ஒருவரின் நம்பிக்கை சார்ந்த விஷயம்.

கடந்த பல  ஆண்டுகளாக கந்த சஷ்டி கவசத்தை தொடர்ந்து படித்து பலன் பெற்றவன் என்ற வகையில் என் பார்வையில் கந்த சஷ்டி கவசம்  என்பது ஒரு மிகச் சிறந்த தன்னம்பிக்கை நூல்.

நான் பள்ளியில் படிக்கும் போது என் நண்பன் ஒருவன் "உனக்கு பயமாக இருக்கும்போது இதைப் படி" என்று என் கையில் ஒரு சிறிய கந்த சஷ்டி புத்தகத்தினை கொடுத்தான் (அவனுக்கு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை).  அந்த வயதில் ஏதோ ஒரு காணத்திற்க்காக அடிக்கடி பயந்து அடிக்கடி கந்த சஷ்டி கவசம் படிக்க ஆரம்பித்தவன் இன்று பயப்படுவதற்கு ஒரு காரணம் இல்லை என்றாலும் தொடர்ந்து படித்து கொண்டிருக்கிறேன்.

நான் வளர்ந்து கந்த சஷ்டி கவசத்தினை முழுமையாக புரிந்து கொண்ட போதுதான் அது நம்பிக்கையுடன் படிப்பவர்களுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை கொடுக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.

கந்த சஷ்டி கவசத்தின் ஆரம்ப வரிகளை கவனித்தாலே அதன் நம்பிக்கை வார்த்தைகள் விளங்கும்.

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதங்களை எல்லாம் கடந்து நம்மில் பெரும்பாலோனர் நாம் செய்யும் நல்வினைகளும் தீவினைகளும் நம்மையும் நம் சந்ததியையும் பாதிக்கும் என்று அழுத்தமாக நம்புவர்கள் நாம்.  So ஆரம்ப வரிகளே நமக்கு நம்பிக்கை கொடுக்கிறது.  கந்த சஷ்டி கவசத்தை நாம் தொடர்ந்து சொன்னால் நம்முடைய வல்வினைகள் தீர்ந்து போய் விடும். நமக்கு செல்வம் கிடைக்கும்.  கண்ணை மூடி உட்கார்ந்தால் தியானம் சுலபமாக நமக்கு கை கூடும் என்று படிக்கும்போது உணமையில் நமக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று ஆழ்ந்து அனுபவித்து சொன்னவர்கள் நம் முன்னோர்.  அந்த நோயற்ற வாழ்வை பிரார்த்திக்கும் வரிகள்தான் இந்த கந்த  சஷ்டி கவசத்தில் பெரும்பாலும் இருக்கும்.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியாக காக்க வேண்டும் என்று வேண்டும் வரிகள் இதில் அதிகம். உதாரணத்திற்கு :

"நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க" 

சரி இப்படி ஒவ்வொரு உடலின் ஒவ்வொரு உறுப்பையும் காக்க காக்க என்று சொல்ல வேண்டுமா என்று கேட்கலாம்.

யோகாசன பயிற்சியின் கடைசியில் சாந்தி ஆசனம் செய்யும் போது கண்ணை மூடிக் கொண்டு உடலின் ஒவ்வொரு பாகமும் அமைதியும் ஓய்வும் அடைவது போல நினைக்கச் சொல்வார்கள்.  அதைத்தான் இந்த கந்த சஷ்டி படிக்கும் போதும் செய்கிறோம்.  

நாம் தொடர்ந்து எண்ணும் எண்ணங்கள் நமது ஆழ்மனதில் பதிந்து நமது உடலையும் நமது புறச்சூழலையம் மாற்றுகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமாக  பல விளக்கங்கள் உள்ளன.   கந்த சஷ்டி கவசம் அத்தகைய நேர்மறை எண்ணங்களைத்தான் நமக்குள் விதைக்கிறது.

கடவுளே இருக்கிறாரா இல்லையா என்பதே  விவாதத்துக்கு உரியது.  இதில் பேய் பூதம் என்றெல்லாம் தேவராய ஸ்வாமிகள் பயமுறுத்துகிறாரே - இது மூட நம்பிக்கை இல்லையா என்று சிலர்  கேட்கலாம்.  இதை நாம் வேறு கோணத்தில் சிந்திக்கலாம்.

பேய் பூதம் இருக்கிறதோ இல்லையோ - அது வேறு விஷயம் - நம்மில்  பலர் அத்தகைய விஷயங்களை நம்புகிறோமோ இல்லையா ?  அதெல்லாம் இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்யத் தேவை இல்லை. அப்படி அவை இருந்தாலும் உன்னை எதுவும் செய்யாது என்று நம்மை தைரியமூட்டுகிறார்.

ஒரு தாய் தன் குழந்தைக்கு சாதம் ஊட்டும்போது "நீ சாப்பிடவில்லை என்றால் பூச்சாண்டி வந்துடுவான்" என்று சொல்லும் போது அந்த தாய்க்குக் தெரியும் பூச்சாண்டி என்று யாரும் இல்லை என்று.  குழந்தை சாப்பிட வேண்டும் என்பதற்க்காக சொல்லப்படும் வார்த்தைகள் அவை.

ரமண மகரிஷி அருணாச்சல அக்ஷரமணமாலையில் "என்போலும் தீனரை இன்புற காத்து நீ எந்நாளும் வாழ்ந்தருள் அருணாச்சலா" என்று இறைவனிடம் வேண்டுவார்.  ரமண மகரிஷியின் வாழ்வை அறிந்தவர்களுக்கு அவர் எவ்வளவு பெரிய ஞானி என்று தெரியும்.  அப்படிப்பட்டவர் தன்னை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்.  அந்த வார்த்தைகள் அவருக்காக எழுதப்பட்டவை அல்ல.  நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு எழுதப் பட்டவை.

அப்படித்தான் தேவராய ஸ்வாமிகளும் ஒரு சாதாரண பாமரன் பார்வையில் இருந்து இந்த கந்த சஷ்டி கவசத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்.  

ஒரு மனிதனுக்கு உடம்பில் ஒரு குறையும் இல்லை என்றாலும் தனக்கு ஏதோ ஒரு நோய் இருக்கின்றது என்று நினைத்து பயந்து கொண்டிருந்தால் ஒரு நல்ல டாக்டர் சில வைட்டமின் மாத்திரைகளை மட்டும் கொடுத்து இதை தொடர்ந்து சாப்பிட்டு வா உன் நோய் தீர்ந்து விடும் என்று சொன்னால் எப்படி அதை நம்பி சாப்பிட்டு தன் நோயிலிருந்து விடுபட்டதாக அந்த மனிதன் நினைப்பானோ, அத்தைகய ஒரு மருந்தைத்தான் தேவராய ஸ்வாமிகளும் நமக்குள் கொடுக்கிறார்.

Mind over Matter என்று ஆங்கிலத்தில் சொன்னால் புரிந்தது போல தலை ஆட்டுகிறோம்.  அதையே எளிய தமிழில் வேறு வார்த்தைகளில் சொன்னால் கிண்டல் செய்கிறோம்.

மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால் கந்த சஷ்டி கவசம் என்பது ஒரு Psychology based Motivational Book (மனித மனம் சார்ந்த ஒரு தன்னம்பிக்கை நூல்)  அவ்வளவுதான். 

மதம்  பெயரிலோ  அல்லது கடவுளின்  பெயரில்  சமூகத்துக்கு எதிரான சடங்குகளை எதிர்ப்பது என்பது வேறு, தனிப்பட்ட மனிதர்களின் காலம் காலமான நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது என்பது வேறு.

கந்த சஷ்டி கவசம் குறித்த அடிப்படை புரிதல் இல்லாமல் அருவருப்பான விளக்கம் அளிப்பது பகுத்தறிவில் விழுந்த பெரிய ஓட்டை.

ரங்கராஜ் பாண்டே "பெண் ஏன் அடிமையானாள் ?" என்ற பெரியாரின் புத்தகத்தை விமர்சித்து மக்கள் மறந்திருந்த அந்தப் புத்தகத்தை மீண்டும் ஆயிரக்கணக்கானவர் படித்து தெளிவு பெற்றதைப் போல இப்போது கந்த சஷ்டி கவசத்தையும் இதுவரை படிக்காத இளைஞர்களும் படித்து கந்தன் அருள் பெறுவார்களாக.