Saturday, June 15, 2019

மழை வரம்



கே. பாலசந்தரின், தண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து வந்த ”தண்ணீர் தண்ணீர்” திரைப்படம் வந்த ஆண்டு 1981.  அதற்குப் பிறகு தமிழகம் எத்தனையோ புயல் மழை பெருவெள்ளம் என்று பார்த்துவிட்டது.  ஆனால் இந்த 2019-ம் ஆண்டும் ”தவிக்கும் தமிழகம்” என்று தண்ணீருக்கு தவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு சில நாட்கள் பெய்யும் பெருமழையில் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடும். இயற்கை அந்தக் கருணையை கண்டிப்பாகச் செய்யும். ஆனால் நமக்கு ஏற்பட்ட இந்த கதிக்கு காரணம் இயற்கையின் சதியல்ல.  நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதுதான். 

படிக்கும் காலத்தில் படிக்காமல் தேர்வுக்கு முன்தினம் கோவில் கோவிலாக சுற்றினால் மட்டும் அதிக மதிப்பெண் வந்து விடாது. அப்படித்தான் ”மழை வேண்டி” இப்போது யாகம் நடத்தச் சொல்லி அரசு அறிவுறுத்துவதும் (யாகம் கோவில் நிர்வாகம் தானாக செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியது. அரசாங்கம் சொல்லவேண்டிய அவசியமில்லை).

கொடுக்கிற காசையெல்லாம் ”தான்தோன்றித்தனமாக” செலவு செய்துவிட்டு மீண்டும் மீண்டும் பணம் தேவைப்படுகிறது என்று சொன்னால் நமக்கு பணம் கொடுப்பவர்கள் எப்படி நம்மீது ”கடுப்பாவார்களோ” அதைவிட அதிகமான ”கடுப்பில்” நம்மீது கடவுள் இருக்கிறார்.   

நம்முடைய தண்ணீர் பிரச்சனைக்கு தனிமனிதர்களான நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருந்தாலும், இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பெரும் பொறுப்பு அரசாங்கத்திற்குத்தான் உள்ளது.

ஷவரில் குளிக்க வேண்டாம், Shave செய்யும் போதும் தண்ணீரை save செய்யுங்கள் என்று பொதுமக்களுக்கு ஆயிரம் advice செய்யும் அரசாங்கம், நீர் மேலாண்மையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தாலும் பிரச்சனை இந்த அளவுக்கு தீவிரம் ஆகியிருக்காது.

சென்னையைப் பொருத்தவரையில் இயற்கை எப்போதும் வஞ்சனை செய்ததே கிடையாது. பொதுவாக பெரிய புயலும் தாக்காது. பெரிய வறட்சியும் ஏற்படாது. நீர்நிலைகள் அதிகம் சூழ்ந்த ஊர் சென்னை. வளரும் சென்னையின் தேவைக்கேற்ப சரியான திட்டமிடல் இல்லாத ஆட்சியாளர்களால் ஏற்பட்ட அவலம் இது.   இந்த விஷயத்தில் ”திருட்டு திராவிடம்” ”பாசிச பாஜக” என்றெல்லாம் ஒருவர் மீது மற்றவர் பழி போட்டுக் கொண்டிருக்காமல் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு நீண்ட காலத் தீர்வு ஏற்பட வழிவகை செய்யவேண்டும்.  ஏனென்றால் இது சென்னைக்கோ அல்லது தமிழகத்திற்கோ மட்டுமான பிரச்சனை அல்ல.  இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இந்த தண்ணீர்ப் பிரச்சனை உள்ளது.

சரி அரசாங்கம் செய்வது இருக்கட்டும்.  தனிமனிதராக நம்மால் இந்தப் பிரச்சனையில் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டிய நேரம் இது.  ”நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர். நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்.  அதுவுமற்றவர் வாய்ச் சொல் அருளுவீர்” என்று பாரதி கூறியதுபோல நாம் ஒவ்வொருவரும் அவரவர் வசதி வாய்ப்புக்கு ஏற்ப கண்டிப்பாக இந்தப் பிரச்சனை தீர்வதற்கு நம் பங்கை அளிக்கலாம்.

தனிமனிதராக நம்மால் செய்யக் கூடியவைகளில் சில:

நம் வீட்டில் வசதிக்கேற்ப ஒரு சில மரங்களையாவது நட்டு வளர்க்கலாம்.

ஒரு மரம் வளர்வதற்கு பல வருடங்கள் தேவைப்படுகிறது.  ஆனால் அதை வெட்டுவதற்கு சில மணித்துளிகள் போதும்.  முடிந்த வரையில் எந்த மரம் வெட்டப்படுவதற்கும் நாம் நேரிடையான காரணமாக இருக்க வேண்டாம். அப்படி வெட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒரு மரத்திற்கு குறைந்தது இரு மரம் என் வாழ்நாளுக்குள் வளர்ப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.


நம் வீட்டில் மழைநீர் சேமிப்பு பெயரளவிற்கு இல்லாமல் அதிக அளவு மழையை சேமிக்கக்கூடிய வகையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வோம்.


தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வை நமது குழந்தைகளிடம் ஏற்படுத்துவோம் (அதற்கு முதலில் விழிப்புணர்வை நமக்கு ஏற்படுத்திக் கொள்வோம்).

எங்கெல்லாம் நாம் பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோமோ அங்கெல்லாம் அதற்கான மாற்று என்ன என்று யோசிப்போம்.

இதைப்போல இன்னும் பல சிந்திக்கலாம். 

ஆனால் இப்போது உடனடியாக நாம் எல்லோரும் செய்யக்கூடிய ஒன்று  மழை வேண்டி பிரார்த்தனை செய்வதுதான்.  இது மதம் சம்பந்தப் பட்டது அல்ல மனம் சம்பந்தப்பட்டது.  கடவுள் நம்பிக்கை இருப்பவர் இல்லாதவர் என்று யார் வேண்டுமானாலும் ”மழை வேண்டும்” என்று ஆழ்ந்து சிந்திக்கலாம். 

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஆண்டாளின் இந்தப் பாசுரத்தினை ஒரு தடவை படிக்கலாம் -  மழை சீக்கிரம் வந்து நம் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையுடன்.  நம்பிக்கை இல்லையென்றாலும் நல்ல தமிழை வாசித்த திருப்தி உங்களுக்கு ஏற்படும்.

ஆழி மழைக் கண்ணா – ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு. ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கருத்து
பாழியந்தோளுடை பத்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் – நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

மாமழை போற்றுதும் – மாமழை போற்றுதும்.