Wednesday, July 15, 2020

காக்க காக்க




கந்த சஷ்டி பாடல் வரிகளை தரம் குறைந்து விமரிசித்து ஒருவர் பேச அது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக ஆகியிருக்கிறது.

கந்த சஷ்டி கவசம் குறித்த அடிப்படை புரிதல் இன்றி அதன் பாடல் வரிகள் விமர்சிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழின் இலக்கிய அறிவு தேவைப்படாத சாதாரண மொழி அறிவு கொண்டவர் கூட ஒப்புக்கொள்வர்.

கந்த சஷ்டி கவசத்தை தொடர்ந்து படித்து வரும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அதனால்  பலன் அடைந்து இருப்பார்கள்.  இது தனிப்பட்ட ஒருவரின் நம்பிக்கை சார்ந்த விஷயம்.

கடந்த பல  ஆண்டுகளாக கந்த சஷ்டி கவசத்தை தொடர்ந்து படித்து பலன் பெற்றவன் என்ற வகையில் என் பார்வையில் கந்த சஷ்டி கவசம்  என்பது ஒரு மிகச் சிறந்த தன்னம்பிக்கை நூல்.

நான் பள்ளியில் படிக்கும் போது என் நண்பன் ஒருவன் "உனக்கு பயமாக இருக்கும்போது இதைப் படி" என்று என் கையில் ஒரு சிறிய கந்த சஷ்டி புத்தகத்தினை கொடுத்தான் (அவனுக்கு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை).  அந்த வயதில் ஏதோ ஒரு காணத்திற்க்காக அடிக்கடி பயந்து அடிக்கடி கந்த சஷ்டி கவசம் படிக்க ஆரம்பித்தவன் இன்று பயப்படுவதற்கு ஒரு காரணம் இல்லை என்றாலும் தொடர்ந்து படித்து கொண்டிருக்கிறேன்.

நான் வளர்ந்து கந்த சஷ்டி கவசத்தினை முழுமையாக புரிந்து கொண்ட போதுதான் அது நம்பிக்கையுடன் படிப்பவர்களுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை கொடுக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.

கந்த சஷ்டி கவசத்தின் ஆரம்ப வரிகளை கவனித்தாலே அதன் நம்பிக்கை வார்த்தைகள் விளங்கும்.

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதங்களை எல்லாம் கடந்து நம்மில் பெரும்பாலோனர் நாம் செய்யும் நல்வினைகளும் தீவினைகளும் நம்மையும் நம் சந்ததியையும் பாதிக்கும் என்று அழுத்தமாக நம்புவர்கள் நாம்.  So ஆரம்ப வரிகளே நமக்கு நம்பிக்கை கொடுக்கிறது.  கந்த சஷ்டி கவசத்தை நாம் தொடர்ந்து சொன்னால் நம்முடைய வல்வினைகள் தீர்ந்து போய் விடும். நமக்கு செல்வம் கிடைக்கும்.  கண்ணை மூடி உட்கார்ந்தால் தியானம் சுலபமாக நமக்கு கை கூடும் என்று படிக்கும்போது உணமையில் நமக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்று ஆழ்ந்து அனுபவித்து சொன்னவர்கள் நம் முன்னோர்.  அந்த நோயற்ற வாழ்வை பிரார்த்திக்கும் வரிகள்தான் இந்த கந்த  சஷ்டி கவசத்தில் பெரும்பாலும் இருக்கும்.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியாக காக்க வேண்டும் என்று வேண்டும் வரிகள் இதில் அதிகம். உதாரணத்திற்கு :

"நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க" 

சரி இப்படி ஒவ்வொரு உடலின் ஒவ்வொரு உறுப்பையும் காக்க காக்க என்று சொல்ல வேண்டுமா என்று கேட்கலாம்.

யோகாசன பயிற்சியின் கடைசியில் சாந்தி ஆசனம் செய்யும் போது கண்ணை மூடிக் கொண்டு உடலின் ஒவ்வொரு பாகமும் அமைதியும் ஓய்வும் அடைவது போல நினைக்கச் சொல்வார்கள்.  அதைத்தான் இந்த கந்த சஷ்டி படிக்கும் போதும் செய்கிறோம்.  

நாம் தொடர்ந்து எண்ணும் எண்ணங்கள் நமது ஆழ்மனதில் பதிந்து நமது உடலையும் நமது புறச்சூழலையம் மாற்றுகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமாக  பல விளக்கங்கள் உள்ளன.   கந்த சஷ்டி கவசம் அத்தகைய நேர்மறை எண்ணங்களைத்தான் நமக்குள் விதைக்கிறது.

கடவுளே இருக்கிறாரா இல்லையா என்பதே  விவாதத்துக்கு உரியது.  இதில் பேய் பூதம் என்றெல்லாம் தேவராய ஸ்வாமிகள் பயமுறுத்துகிறாரே - இது மூட நம்பிக்கை இல்லையா என்று சிலர்  கேட்கலாம்.  இதை நாம் வேறு கோணத்தில் சிந்திக்கலாம்.

பேய் பூதம் இருக்கிறதோ இல்லையோ - அது வேறு விஷயம் - நம்மில்  பலர் அத்தகைய விஷயங்களை நம்புகிறோமோ இல்லையா ?  அதெல்லாம் இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்யத் தேவை இல்லை. அப்படி அவை இருந்தாலும் உன்னை எதுவும் செய்யாது என்று நம்மை தைரியமூட்டுகிறார்.

ஒரு தாய் தன் குழந்தைக்கு சாதம் ஊட்டும்போது "நீ சாப்பிடவில்லை என்றால் பூச்சாண்டி வந்துடுவான்" என்று சொல்லும் போது அந்த தாய்க்குக் தெரியும் பூச்சாண்டி என்று யாரும் இல்லை என்று.  குழந்தை சாப்பிட வேண்டும் என்பதற்க்காக சொல்லப்படும் வார்த்தைகள் அவை.

ரமண மகரிஷி அருணாச்சல அக்ஷரமணமாலையில் "என்போலும் தீனரை இன்புற காத்து நீ எந்நாளும் வாழ்ந்தருள் அருணாச்சலா" என்று இறைவனிடம் வேண்டுவார்.  ரமண மகரிஷியின் வாழ்வை அறிந்தவர்களுக்கு அவர் எவ்வளவு பெரிய ஞானி என்று தெரியும்.  அப்படிப்பட்டவர் தன்னை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்.  அந்த வார்த்தைகள் அவருக்காக எழுதப்பட்டவை அல்ல.  நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு எழுதப் பட்டவை.

அப்படித்தான் தேவராய ஸ்வாமிகளும் ஒரு சாதாரண பாமரன் பார்வையில் இருந்து இந்த கந்த சஷ்டி கவசத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்.  

ஒரு மனிதனுக்கு உடம்பில் ஒரு குறையும் இல்லை என்றாலும் தனக்கு ஏதோ ஒரு நோய் இருக்கின்றது என்று நினைத்து பயந்து கொண்டிருந்தால் ஒரு நல்ல டாக்டர் சில வைட்டமின் மாத்திரைகளை மட்டும் கொடுத்து இதை தொடர்ந்து சாப்பிட்டு வா உன் நோய் தீர்ந்து விடும் என்று சொன்னால் எப்படி அதை நம்பி சாப்பிட்டு தன் நோயிலிருந்து விடுபட்டதாக அந்த மனிதன் நினைப்பானோ, அத்தைகய ஒரு மருந்தைத்தான் தேவராய ஸ்வாமிகளும் நமக்குள் கொடுக்கிறார்.

Mind over Matter என்று ஆங்கிலத்தில் சொன்னால் புரிந்தது போல தலை ஆட்டுகிறோம்.  அதையே எளிய தமிழில் வேறு வார்த்தைகளில் சொன்னால் கிண்டல் செய்கிறோம்.

மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால் கந்த சஷ்டி கவசம் என்பது ஒரு Psychology based Motivational Book (மனித மனம் சார்ந்த ஒரு தன்னம்பிக்கை நூல்)  அவ்வளவுதான். 

மதம்  பெயரிலோ  அல்லது கடவுளின்  பெயரில்  சமூகத்துக்கு எதிரான சடங்குகளை எதிர்ப்பது என்பது வேறு, தனிப்பட்ட மனிதர்களின் காலம் காலமான நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது என்பது வேறு.

கந்த சஷ்டி கவசம் குறித்த அடிப்படை புரிதல் இல்லாமல் அருவருப்பான விளக்கம் அளிப்பது பகுத்தறிவில் விழுந்த பெரிய ஓட்டை.

ரங்கராஜ் பாண்டே "பெண் ஏன் அடிமையானாள் ?" என்ற பெரியாரின் புத்தகத்தை விமர்சித்து மக்கள் மறந்திருந்த அந்தப் புத்தகத்தை மீண்டும் ஆயிரக்கணக்கானவர் படித்து தெளிவு பெற்றதைப் போல இப்போது கந்த சஷ்டி கவசத்தையும் இதுவரை படிக்காத இளைஞர்களும் படித்து கந்தன் அருள் பெறுவார்களாக.



Saturday, June 27, 2020

என் இனிய 2020-க்கு,



ஆயிரம் பேர் புடைசூழ அலங்காரமாய்
வலம் வந்து ஆர்ப்பரித்த மனிதர்களைக் கூட
அனாதைகளாய் அனுப்பி விட்டாயே;

நடுவில் கொஞ்சம் பக்கத்தை மட்டும்
எடுத்து விடுவாய் என்று நினைத்தால்
இப்படி சில அத்தியாயங்களையே
பிடுங்கி எறிந்து விட்டாயே;

தலைக் கவசம் அணியாமல் போனாலும்
தப்பித்து விடலாம் - ஆனால்
முகக் கவசம் அணியாமல் போனால்
முடிவுரைதான் என்று முகத்தில் அடித்து
சொல்லிவிட்டாயே;

இரண்டு குழந்தைகளுக்கு இடையில்
மட்டும் அல்ல
இரண்டு மனிதர்களுக்கு இடையிலும்
இடைவெளி தேவை
என்று சொல்லி சொல்லி
social distancing-ஐ
untouchability லெவலுக்கு
மாற்றி விட்டாயே;


அலுவலக வேலையை வீட்டுக்கு எடுத்து
செல்லக் கூடாது என்று நினைப்பவர்களின் 
வீட்டையே
அலுவலகமாக மாற்றி விட்டாயே;

ஆணும் பெண்ணுமாக களித்திருந்த
வாழ்க்கையை  இப்போது
online - ம் pendrive - வுமாக 
மாற்றி விட்டாயே;

இப்படித்தான் இருப்பேன் என்று
அடம் பிடித்தவர்களை கொஞ்சம்
அப்படியும் இருக்கலாம் என்றும்
எப்படி வேண்டுமானாலும் இருப்பேன்
என்பவரை இப்படித்தான் இருக்க
வேண்டும் என்றும் ஒரே நேரத்தில்
கட்டிப் போட்டாயே;

அலோபதி, ஹோமியோபதி, சித்தா
ஆயுர்வேதா, யுனானி  அனைத்தையும்
கலந்து அடித்தாலும் அடிநெஞ்சில்
ஒரு கலக்கத்தை அவ்வப்போது
மீட்டிச் செல்கிறாயே;

நாங்கள் இப்போதெல்லாம்
கனவிலும் அடிக்கடி கை கழுவிக்
கொண்டிருக்கிறோம் -
செல்போனில் பேசும்போது 
இருமல் வந்தால் கூட
execuse  me சொல்லி
கைக்குட்டையால் வாயை
மூடிக் கொள்கிறோம்
கிருமி நாசினியை
கிருமியைத் தவிர எல்லா
இடங்களிலும் தெளித்துக்
கொண்டிருக்கிறோம்.

கடைசியாக மனிதர்கள் சேர்ந்து
கொண்டாடியது 2020 புத்தாண்டு -
அடுத்த கொண்டாட்டம் 
2021 புத்தாண்டாகவாவது
இருக்குமா ?

ஆண்டு பிறந்து ஆறு மாதங்களாகியும் 
lock down என்று சொல்லியே எங்கள்
clock  down ஆகி விட்டது
அடுத்த ஆறு மாதமாவது
வளர் பிறையாக மனித வாழ்வு இருக்கட்டும்.

உன்னை நினைத்து அலுத்துக் கொள்ள
ஆயிரம் விஷயம் இருந்தாலும்
ஆயிரத்து நூறு மீம்ஸ் போட்டு
வள்ளுவன் வழி நின்று 
"இடுக்கண் வருங்கால் நகும்"
எங்கள் இளைஞர்கள் இருக்கும்வரை
இதையும் கடந்து செல்வோம்
எதிர்கால நம்பிக்கையுடன்.




Saturday, June 20, 2020

குறைவற்ற செல்வம்





கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறவில்லை என்று அரசாங்கம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தாலும், இப்போது அது சமூகத்தில் பரவலாக உள்ளது என்பதே உண்மை.   எப்போது கொரோனா நம்மை விட்டு முழுமையாக விலகும் என்பதை இப்போது வரை யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. சென்ற மாதம் வரை இன்னும் 3 நாட்களில் கொரோனா நம்மை விட்டு முழுமையாக விலகி விடும் என்று ஆருடம் சொல்லிக் கொண்டிருந்த நம்முடைய முதல்வரும் இப்போது செய்தியாளர் சந்திப்பில் இறைவனுக்குத்தான் தெரியும் கையைத் தூக்கிவிட்டார்.  

அரசியல் ரீதியாக அவர் சொன்னதற்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் உண்மையில் மனிதன் தம்முடைய சக்தியால் முடியாது என்ற நிலையில் இறைவனிடம்தான் சரணாகதி அடைகிறான்.  இறைவன் இருக்கின்றானா இல்லையா எனபதில் தர்க்க வாதங்கள் இருக்கலாம்.  ஆனால் இயற்கை இல்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த இயற்கையைத்தான் நம் முன்னோர்கள் இறை என்று நம்பி வழிபட்டார்கள்.

நம் வாழ்க்கையில் எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்கும் வரை நமது உடல் பலம் மீதும் அறிவின் ஆற்றல் குறித்தும் அளவுக்கு அதிகமாக நம்பிக்கை கொண்டு தன் சக்திக்கு மீறி ஒன்றும் இல்லை என்று மார் தட்டிக் கொண்டிருக்கும் மனிதர்கள் பலரும் வாழ்க்கை ஒரு சின்ன ஷாக் கொடுத்தாலும் ஆடிப்போய் விடுவார்கள்.   ஆனால் வாழ்க்கை இப்போது கொரோனா என்ற வடிவில் மிகப் பெரிய ஷாக் கொடுத்து மண்ணை ஆளும் அரசர்களையும் மண்டியிட வைத்திருக்கிறது.

ஆழிப் பேரலையில் மிகப் பெரிய கப்பல் கூட கவிழ்ந்து விடும்.  ஆனால் அதே நேரத்தில் சாதாரண கட்டுமரம் தட்டுத் தடுமாறியாவது கரை சேர்ந்து விடக் கூடும். அதைப் போல உலகின் மிகச் சிறந்த மருத்துவ வசதி கிடைத்தும் மனிதர்கள் கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருக்கும் நிலையிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத பலர் நம் ஊரில் இந்தக் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கின்றனர்.

Survival of the fittest என்று சொல்வார்கள்.  இப்போது கொரோனா அந்த டெஸ்ட்டைதான் நமக்கு வைத்திருக்கிறது.

பொதுவாக நாம் பிறக்கும்போது fit ஆகத்தான் பிறக்கிறோம்.  ஆனால் வளர வளர மெதுவாக நம்முடைய fitness ஐ இழக்க ஆரம்பிக்கிறோம்.  பிறகு அதை Fitness Centre சென்றும் மீட்க முடியாமல் திண்டாடுகிறோம். 

Self Immunity எனப்படும் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திதான் இப்போதைக்கு கொரோனவுக்கான மருந்து.  இந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ள அனைவரும் கொரோனவை வெற்றி கொண்டு மீண்டு வந்திருக்கிறார்கள்.

நம் முன்னோர்கள் நமக்கு இயற்கையுடன் வாழும் வாழ்க்கையை சொல்லிக் கொடுத்ததன் நோக்கமே நாம் நம்மைத் தாக்கும் நோயை வெற்றி கொண்டு உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்பதுதான்.  நோயற்ற வாழ்வே குறைவற்ற  செல்வம்  என்றால் என்ன என்று மருந்துக்கும் மாத்திரைக்கும் மருத்துவமனைக்கும் கொட்டிக் கொடுப்பவர்களை கேட்டுப் பாருங்கள்.  புட்டு புட்டு வைப்பார்கள்.

திருமூலர் சொல்கிறார் :

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘

இதன் பொருள் :


நமது உள்ளம் ஒரு பெரிய கோவில்.  நமது உடம்பு ஒரு ஆலயம்.  நமது வாய்தான் அந்தக் கோவிலின் கோபுர வாசல்.  இதைச் சந்தேகம் இல்லாமல் தெளிந்தவர்களுக்கு, நம் உள்ளத்தின் உயிரே (ஜீவன்) சிவலிங்கம்.  கள்ளத் தன்மை  உடைய நம்முடைய புலன்கள் ஐந்தும் (கண், காது, மூக்கு, வாய், மெய்) நம்முடைய அறியாமை என்னும் இருட்டைப் போக்கும் விளக்கு.
இந்தப் பாடலின் ஆன்மிகப் பொருள் குறித்து இப்போது அதிகம் ஆராய வேண்டாம்.  நம்முடைய அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு இதில் இருந்து என்ன தெரிந்து கொள்ளலாம் என்று மட்டும் இப்போது பார்க்கலாம்.

நமக்கு கோவில் என்பது ஒரு புனிதமான இடம்.  நாம் அங்கு செல்லும்போது உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்போம்.  அத்தகைய கோவிலை நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒப்பிடுகிறார் திருமூலர்.  மலமும், சிறுநீரும், எச்சிலும், வியர்வையும் எப்போதும் சுரந்து கொண்டிருக்கும் உடலையும், யாருக்கும் தெரியாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கேவலமான எண்ணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் உள்ளத்தையும் எப்படி கோவில் அல்லது ஆலயம் என்றும் ஏற்றுக் கொள்ள முடியும் ?  முடியும் என்கிறார் திருமூலர்.

எப்படி கோவிலை புனிதமான இடம் என்று எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள நினைக்கிறோமோ அப்படி நமது உடலையும் உள்ளத்தையும் கோவிலாக நினைத்தால் நாம் தானாகவே அதை ஒழுங்காக கவனிக்க ஆரம்பித்து விடுவோம்.  சரி practical ஆக மனிதர்கள் திடிரென்று புனிதர்கள் ஆகிவிட முடியுமா ? அது அவ்வளவு சுலபம் இல்லைதான்.  அது தெரிந்துதான் திருமூலரும் கள்ளப் புலன்கள் அதாவது திருட்டுத்தனம் செய்யும் புலன்கள் என்று குறிப்பிடுகிறார்.  அனால் அதே நேரத்தில் சரியான தொடர்ந்த பயிற்சியின் மூலம் அந்தக் கள்ளப்புலன்கள் ஐந்தும் நமது வாழ்வில் நமக்கு வழி காட்டும் விளக்காக மாறிவிடும் என்றும் சொல்கிறார்.

அப்படி உடலையும் உள்ளத்தையும் ஒழுங்காக கவனித்துக் கொள்வதற்கு நமது முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்து சென்ற பயிற்சிகள்தான்  யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி என்பதெல்லாம்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் கையையும் காலையும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆட்டிவிட்டு யோகாசனம் செய்து விட்டோம் என்றும், கண்ணை மூடிக் கொண்டு ஒரு பத்து நிமிடம் கண்டதையும் நினைத்து விட்டு தியானம் செய்து விட்டோம் என்றும் நம்மில் பெரும்பாலோர் நினைத்துக் கொள்வதுதான்.

அப்படி பேருக்காக அல்லது ஊருக்காக செய்யாமல், யோகாவை ஒழுங்காக கற்றுக் கொண்டு பொறுமையாக ஒரு சில மணி நேரமாவது தினமும் நம் உடல் என்னும் ஆலயத்துக்கு நாம் முதலீடு செய்தால் guaranteed குறைவற்ற செல்வம்தான்.

யோகா நம் நாட்டின் சொத்து.  இன்று அதை International Yoga Day என்று உலகம் கொண்டாடுகிறது.  நம் வரும் தலைமுறைக்கு யோகாவை முறையாக சொல்லிக் கொடுத்தால் கண்டிப்பாக வருங்கால இந்தியா இன்னும் அதிக வளமுடன் இருக்கும்.

சீக்கிரம் கொரோனாவின் தாக்கத்தில்  இருந்து விடுபட்டு எல்லோரும் நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறையை வேண்டுவோம்.

அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்.








Tuesday, May 5, 2020

சுவாமி விவேகானந்தரின் கடிதங்கள்



இந்த  கொரோனா  காலம்  நான்  வாங்கி  வைத்திருந்து  படிக்காமல்   இருந்த நிறைய புத்தகங்களை வாசிப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.  

அப்படி ரொம்ப நாளாக படிக்க நினைத்த ஒரு புத்தகம் "Letters of Swami Vivekananda" (சுவாமி விவேகானந்தரின் கடிதங்கள்) என்ற புத்தகம்.  1940-ம் ஆண்டு முதன்முதலில் பதிப்பிக்கக்பட்ட இந்த புத்தகம், சுவாமி விவேகானந்தர் தன்னுடைய நண்பர்களுக்கும் சீடர்களுக்கும் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களின் தொகுப்பு.  இந்த தொகுப்பில் மொத்தம்  228 கடிதங்கள் உள்ளன.   

இந்தப் புத்தகத்தை படித்து முடித்தவுடன் எனக்குத் தோன்றிய எண்ணம் ஒன்றுதான். நேர விரயங்களைத் தவிர்த்து செயல்பட்டுக் கொண்டே இருந்தால் நம்மால் ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்களை செய்ய முடியும் என்பதுதான்.  நாம்தான் தேவைக்கு அதிகமாக நம்மை பரபரப்பாக்கிக் கொண்டு தேவையான விஷயங்களை கவனிக்கத் தவறி விடுகிறோமா என்று தோன்றுகிறது.

மனிதன் தான் வாழ்ந்த சுமார் 39 வருடங்களில் எவ்வளவு செய்திருக்கிறார்.  "கர்ம யோகி" என்று அவரை அழைப்பதன் முழு அர்த்தத்தை இந்தப் புத்தகத்தை படித்தவுடன் புரிந்து கொண்டேன்.

இந்து மதத்தினை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் அல்லது  கண்மூடித் தனமாக எதிர்ப்பவர்கள் - இரு சாரரும் அவர் சொன்னதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருந்தால், இப்போது நிலவும் பரஸ்பர வெறுப்பு  அரசியலுக்கு இடம் இருக்காது.  தன்னை வழிபடுவதைவிட தன்னுடைய எண்ணங்களை  செயல்படுத்துவத்தைதான் தான் விரும்புவதாக அவரே குறிப்பிடுகிறார்.   ஆனால் நாம் கிருஷ்ண ஜெயந்தி என்பதுபோல் விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடிவிட்டு அவர் சொன்னதை மறந்து விட்டு  நமக்குள் அடித்துக் கொள்கிறோம்.

அவர் யாருக்கு எழுதிய எந்தக் கடிதமாக இருந்தாலும் அதில் நம்மை inspire செய்யும் ஏதோ சில வரிகள் கட்டாயம் இருக்கும்.  அவர் உச்சானிக் கொம்பில் அமர்ந்து கொண்டு நமக்கு அறிவுரை கூறுவதில்லை.  சக நண்பராக இருந்து கொண்டு அன்பாகவும், ஆழமாகவும் சில சமயங்களில் ஆவேசமாகவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.

அவர் 1900-ம் ஆண்டு பாரிஸில் இருந்து தன்னுடைய சீடர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தின் முக்கிய அம்சங்களை இந்தப் பதிவில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம் இந்தக் கடிதத்தினை விவேகானந்தர் அவர்கள் french மொழியில் எழுதி அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.

விவேகானந்தர் 1902-ம் ஆண்டு காலமானார்.  அவர் காலமாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே தன வாழ்க்கையின் இலட்சியம் நிறைவேறி விட்டதாக குறிப்பிடுகிறார்.  நூறு வயது வாழ்ந்தவர்கள் கூட செய்யாத செயல்களை 40 வயதுக்குள் செய்துவிட்டு, அவர் மறைந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் நம் நினைவில் இருப்பவர் இன்னமும் பல நூறு ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறவர்.

அந்தக் கடிதத்தின் சாரம்.

என் அன்பிற்கினிய கிறிஸ்டினா, உன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்  கடவுள் உன்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தொடர்ந்த பிரார்த்தனை.

உன்னுடைய  அழகும் அமைதியும் நிறைந்த கடிதம் நான் அடிக்கடி இழந்து கொண்டிருக்கும் புத்துணர்ச்சியைக் கொடுத்தது.

நான்  இப்போது மகிழ்ச்சியாக - உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.  துன்ப மேகங்கள் என்னை முழுமையாக நீங்கி விடவில்லை. சில சமயங்களில் மீண்டும் அது வந்து கொண்டுதான் இருக்கிறது.  ஆனால் என்னை பாதிக்கும் அளவுக்கு இப்போது அதற்கு வீரியம் இல்லை.

நான் இப்போது புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் எம். ஜூல்ஸ் போய்ஸ் (M. Jules Bois) என்பவரின் விருந்தினராக இருக்கின்றேன்.  எழுத்தை மட்டுமே நம்பி வாழ்வதால் அவர் பணக்காரர் கிடையாது.  அனால் எங்கள் இருவருக்கும் இடையில் நிறைய சீரிய சிந்தனைகள் பொதுவாக இருக்கிறது.  அதனால் அவருடன் இருப்பதை நான் மகிழ்வாக கருதுகிறேன்.

அமெரிக்காவில் நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் இந்தியாவிற்கு அனுப்புகிறேன்.  நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன் - முன்பை போலவே அடுத்த வேளை உணவைக் கூட இரந்து உண்ணும் சாதுவாக.  மடத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருந்தும் விலகி விட்டேன்.  என்னை அழுத்திக் கொண்டிருந்த சுமையில் இருந்து விடுதலை செய்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.  நான் இப்போது படபடப்பாகவும் பலவீனமாகவும் உணர்கிறேன்.   விடியல் வந்ததும் தன்னுடைய கூட்டில் தூங்கிக் கொண்டிருந்த பறவைகள் விழித்தெழுந்து நீல வானத்தை நோக்கி சிறகடித்து பறந்து செல்வதைப் போல, என்னுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தை உணர்கிறேன்.

நான் வாழ்வில் பல கஷ்டங்களையும், சில மிகப் பெரிய வெற்றிகளையும் அடைந்திருக்கிறேன்.   ஆனால் என்னுடைய எல்லா கஷ்டங்களும் துன்பங்களும் நான் அடைந்த வெற்றிக்கு முன் ஒன்றுமே இல்லை.  நான் என்னுடைய குறிக்கோளை அடைந்து விட்டேன்.  நான் எந்த முத்தை அடைவதற்க்காக வாழ்க்கை என்னும் கடலில் குதித்தேனோ அதை கண்டு கொண்டேன். எனக்கான வெகுமதி கிடைத்து விட்டது.  நான் மிகவும் நிறைவாக உணர்கிறேன்.

என்னுடைய வாழ்வின் அடுத்த அத்தியாயம் தொடங்குவதாக உணர்கிறேன். என்னுடைய தாய் என்னை இனிமேல் மிகவும் மென்மையாக வழி நடத்துவாள் என்று நினைக்கிறன்.  இனி நான் இடைஞ்சல்கள் நிறைந்த கரடு முரடான பாதையில் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை - பறவைகளின் இறகுகள் நிறைந்து மென்மையானதாக என்னுடைய பாதைகள் இனி இருக்கும்.  நான் சொல்வது உனக்கு புரிகிறதா ? நம்பு - நான் சொல்வதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதுவரையிலான வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்தது என்னவென்றால், நான் எதை மிகவும் ஆழமாக தேடினேனோ அது எப்போதும்  எனக்கு கிடைத்திருக்கிறது.   சில சமயங்களில் நிறைய போராட்டத்திற்குப் பிறகு - அதனால் என்ன ?  நாம் விரும்பியதை அடையும்போது நாம் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்து விடுகின்றன.  நீயும் உன்னுடைய வாழ்வில் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் - கவலைப்படாதே உனக்கான வெகுமதியும் கண்டிப்பாக  கிடைக்கும்.

என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய ஊழ்வினை என்னும் மேகம் விலகி மறைந்து கொண்டிருக்கிறது.  என்னுடைய நற்செயல்களின் விளைவுகள் என்னும் சூரியன் - மிகவும் அழகாக, பிரகாசமாக, வலிமையுடன் உதயமாகிக் கொண்டிருக்கிறான்.  நான் சொல்வது உனக்கும் பொருந்தும்.  நான் உனக்கு என்னுடைய இதயபூர்வமாக சொல்ல நினைப்பதை இந்த மொழியில் என்னால் முழுமையாக சொல்ல முடியவில்லை.  ஆனால் இதயத்தின் வார்த்தைகளை எந்த மொழியில்தான் சொல்ல முடியும்.  (சுவாமி விவேகானந்தர் இதுவரை இந்த கடிதத்தை பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது) 

அதனால் எழுத்தின் மூலம் என்னுடைய எண்ணத்தினை வெளிப்படுத்தும் முயற்சியை கைவிட்டு, என்னுடைய எண்ணங்கள் மிகவும் மென்மையாக, நேசமுடன், உன்னுடைய இதயத்தில் ஒளிரும் வகையில் இதயபூர்வமாக வெளிப்படுத்துகிறேன்.  குட் நைட்.

உன் உண்மை நண்பன் 
விவேகானந்தா 


Original Letter


6 Place Des Etats Unis, Paris
14th October, 1900.

God bless you at each step, my dear Christine, such is my constant prayer!

Your letter, so beautiful and so calm, has given me that fresh energy which I am often losing. 

I am happy, yes, I am happy, but the cloud has not left me entirely. It sometimes comes back, unfortunately, but it no longer has the morbidity it used to have.

I am staying with a famous French writer, M. Jules Bois. I am his guest. As he is a man making his living with his pen, he is not rich; but we have many great ideas in common and feel happy together.

He discovered me a few years ago and has already translated some of my pamphlets into French. We shall in the end find what we are looking for, isn't it?

Thus, I shall travel with Madame Calve, Miss MacLeod, and M. Jules Bois. I shall be the guest of Madame Calve, the famous singer. We shall go to Constantinople, the Near East, Greece, and Egypt. On our way back, we shall visit Venice.

It may be that I shall give a few lectures in Paris after my return, but they will be in English with an interpreter. I have no time any more, nor the power to study a new language at my age. I am an old man, isn't it?

Mrs. Funke is ill. I think she works too hard. She already had some nervous trouble. I hope she will soon be well.

I am sending all the money I earned in America to India. Now I am free, the begging-monk as before. I have also resigned from the Presidentship of the Monastery. Thank God, I am free! It is no more for me to carry such a responsibility. I am so nervous and so weak.  "As the birds which have slept in the branches of a tree wake up, singing when the dawn comes, and soar up into the deep blue sky, so is the end of my life."

I have had many difficulties, and also some very great successes. But all my difficulties and suffering count for nothing, as I have succeeded. I have attained my aim. I have found the pearl for which I dived into the ocean of life. I have been rewarded. I am pleased.

Thus it seems to me that a new chapter of my life is opening. It seems to me that Mother will now lead me slowly and softly. No more effort on roads full of obstacles, now it is the bed prepared with birds' down. Do you understand that? Believe me, I feel quite sure.

The experience of all my life, up to now, has taught me, thank God, that I always find what I am looking for with eagerness. Sometimes it is after much suffering, but it does not matter! All is forgotten in the softness of the reward. You are also going through troubles, my friend, but you shall have your reward. Alas! What you now find is not a reward but an additional affliction.

As to myself, I see the cloud lifting, vanishing, the cloud of my bad Karma. And the sun of my good Karma rises--shining, beautiful, and powerful. This will also be the case for you, my friend. My knowledge of this language has not the power to express my emotion. But which language can really do so? (It seems upto this part he has written in French).

So I drop it, leaving it to your heart to clothe my thought with a soft, loving, and shining language. Good night, gute Nacht !

Your devoted friend,
Vivekananda.

Monday, April 27, 2020

Man is Master of his own Destiny



The full meaning of the proverb "Man is master of his own destiny" is beautifully explained by Maharishi Mahesh Yogi in the following words:

The bad influence of the past Karma is something beyond the control of the doer.  The best the doer can do in the present in order to neutralise the influence of past Karma is to engage in the practice of Transcendental Meditation, which will readily raise the consciousness of the doer and produce favourable influence in the surroundings; when the consciousness is raised, energy and intelligence are increased.  Then, whatever is the influence of the past, that influence will not be able to nullify present action.  Certainly the influence of the past Karma will be there, but it may not completely guide the destiny of the present action.

If a businessman loses five hundred dollars, the loss is a loss for all times.  Although this loss will always remain a loss, if two thousand dollars are earned the next day, the gain overshadows the loss.

This is how, by due amount of performance of Transcendental Meditation, supplemented with the power of charity and virtuous deeds of helping others, the negative influences of the past Karma can be counteracted in order to smooth the path of the present Karma.  And then the action will be performed without resistance or obstacles, yielding maximum results.

Excerpts from Maharishi's Science of Being and Art of Living

"மனிதன் தன்னுடைய சொந்த விதிக்கு தானே எஜமானன்"  என்ற பழமொழிக்கான விளக்கத்தை மஹரிஷி அவர்கள் மிகவும் அருமையாக பின்வருமாறு விளக்கியுள்ளார்:

தன்னுடைய பழைய கர்மாவின் விளைவுகளில் அல்லது பாதிப்புக்களில் இருந்து விடுபடுவது என்பது மனிதனின் சக்திக்கு மீறிய செயலாகும்.  அதிகபட்சம் நம்மால் செய்யக்கூடியதெல்லாம் பழைய கர்மாவின் பாதிப்புக்களில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் செயலை இப்போது செய்வதுதான்.    அப்படியான ஒரு பாதுகாப்புக் கவசம்தான் "ஆழ்நிலைத் தியானம்".  ஆழ்நிலைத் தியானம் செய்யும் போது நம்முடைய விழிப்புணர்வு நிலை  மேலோங்கி நமக்கு ஒரு சாதகமான சூழ்நிலை நம்மைச் சுற்றி உருவாகும்.   அப்படி நம்முடைய  விழிப்புணர்வு நிலை  மேலோங்கும்போது நம்முடைய அறிவும், ஆற்றலும் அதிகரிக்கும்.  அந்த நிலையில் நமது பழைய கர்மாவின் பாதிப்புக்கள் அல்லது விளைவுகள் இன்றும் தொடர்ந்தாலும் கண்டிப்பாக அதனால் நாம் பாதிக்கப்படுவது பெருமளவு குறைந்து விடும் அல்லது  பழைய கர்மாவின் விளைவுகள் நம்முடைய இன்றைய வாழ்க்கையை பாதிக்காத அளவில் நம்மால்  செயலாற்ற முடியும்.

உதாரணமாக, ஒருவருக்கு தன்னுடைய தொழிலில் 50,000 ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம்.  அந்த நஷ்டம் நஷ்டம்தான்.  அதை மாற்ற முடியாது.  ஆனால் நஷ்டம் ஏற்பட்ட மறுநாளே அவருக்கு அவருடைய தொழிலில் இரண்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அப்போது அவருக்கு அந்த 50,000 ரூபாய் நஷ்டம் எந்தவகைகளிலும் பெரிதாக பாதிக்காது.   அதாவது பழைய நஷ்டத்தை விட இன்றைய லாபம் பலமடங்கு என்பதால் நாம் அந்த பழைய நஷடம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டோம்.

எனவே, நாம் தொடர்ந்த ஆழ்நிலைத் தியான பயிற்சி மூலமும், நம்முடைய தான தரும காரியங்கள் மற்றும் மற்றவர்களுக்கு உதவும் நம்முடைய நற்செயல்கள் மூலமும் பழைய கர்மாவின் எதிர்மறை பாதிப்புக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதோடு மட்டும் இல்லாமல், அதன் பாதிப்புக்கள் நாம் தற்போது செய்யும் செயல்களுக்கு எந்தவிதத்திலும் இடையூறு ஏற்படுத்தாமல் நமக்கு அதிகபட்ச வெற்றியைப் பெற்றுத் தரும்.

மகரிஷி "by due amount of performance of Transcendental Meditation, supplemented with the power of charity and virtuous deeds of helping others" என்று சொல்வதின் பொருள் - மருத்துவர் நம் நோய் சீக்கிரம் தீர மருந்து மாத்திரைகள் கொடுப்பதுடன் சில வைட்டமின் மாத்திரைகளையும், சில குறிப்பிட்ட உணவுகளையும் பரிந்துரைப்பார்.  நம்முடைய பழைய வினை என்னும் நோய் சீக்கிரம் தீர மகரிஷி பரிந்துரைக்கும் மருந்துதான் "ஆழ்நிலைத் தியான பயிற்சி".  தான தரும காரியங்கள் மற்றும் மற்றவர்களுக்கு உதவும் நற்செயல்கள் என்பது மகரிஷி நமக்கு பரிந்துரைக்கும் வைட்டமின் மாத்திரைகளும், சில குறிப்பிட்ட உணவுகளும்.

ஆனால் நம்முடைய பிரச்சனை என்னவென்றால், நாம் இழந்ததை நினைத்தே அதிகம் கவலைப் பட்டுக்கொண்டிருப்போம்.  நமக்கு கிடைத்த நல்ல விஷயங்களை நினைத்து கடவுளுக்கு நன்றி சொல்ல மாட்டோம்.  அதனால்தான் பழைய "கருமங்களிலேயே" விழுந்து கிடக்கிறோம். 

Let us count our blessings and become the Master of our own Destiny.






Monday, April 6, 2020

கொரோனா (கருணா) மூர்த்தி


கொரோனா (கருணா) மூர்த்தி 

என்னுடைய முன்றில் வலைத்தளத்தின் Tag Line ஆக "ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க" என்று எந்த சுபயோக சுபதினத்தில் வைத்தேன் என்று தெரியவில்லை - இப்படி ஒரு நீண்ட ஓய்வு கிடைக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.   

வாழ்க்கையின் அழகே அடுத்த நொடி நம் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்க்க முடியாத புதிர்தானே.  அப்படி ஒரு புதிராக நம் வாழ்வில் இப்போது வந்திருப்பது "கொரோனா வைரஸ்" என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. 

"கொரோனா வைரஸ்" பற்றி இன்று உலகமே பேசிக் கொண்டிருக்கிறது. உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் உயிர் பலிகளைத் தாண்டி இந்த வைரஸ் பல நல்ல விஷயங்களை இந்த உலகத்திற்கு தந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. 

காற்றின் மாசைக் குறைக்க எத்தனை எத்தனை திட்டங்கள். வருடக் கணக்கில் குறையாத காற்றின் மாசு ஒரு சில வாரங்களில் கணிசமாக குறைந்துள்ளது. 5 ஆண்டுகளில் படிப்படியாக மது விலக்கை கொண்டு வருவோம் என்ற வெற்றுக் கூச்சலை ஓரம் தள்ளி பூரண மது விலக்கை ஒரு சில நாட்களில் கொண்டுவந்தது.  விபத்துகளினால் ஏற்பட்ட மரணங்களைவிட  இந்த சில மாதங்களில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்கள் இந்தியாவில் மிகக் குறைவு (இதுவரை).

நமக்குதான் கொரோனா ஒரு வைரஸ். இந்த பிரபஞ்சத்தின் பார்வையில் கொரோனாவிற்கு நாம் ஒரு வைரஸ் - அவ்வளவுதான். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தின் பேருண்மையை எத்தனையோ மகான்களும் ஞானிகளும் காலம்தோறும் போதித்துக் கொண்டிருந்தாலும் அதையெல்லாம்  மனதில் கொள்ளாமல்,  தான் என்ற மமதையில் ஆணவத்தின் உச்சத்தில் இருந்து கொண்டு சர்வ வல்லமை பெற்றவன் நான் என்று கொக்கரித்துக் கொண்டிருந்த மனிதனின் உச்சந்தலையில் சம்மட்டியால் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறது இந்த கொரோனா.

குண்டு துளைக்காத கார், கறுப்புப்  பூனை காவல் படை, கண்ணசைவிற்கு காத்திருக்கும் ஆயிரம் வேலையாட்கள், ஒரு கைப்பொத்தானை அழுத்தி உலகையே கபளீகரம் செய்துவிடுவேன் என்று கர்ஜித்த வல்லரசுத் தலைவர்கள் எல்லாம்  இன்று நிலைமை எங்கள் கட்டுக்குள் இல்லை, எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியிடம்  மண்டியிட்டு புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

வல்லரசு நாட்டின் தலைவர்களின் ஆணவத்துக்கு கொஞ்சமும் சளைக்காதது நம் தனி மனித அகங்காரம்.  அதிகபட்சம் ஒரு 80 அல்லது 90 ஆண்டுகள் கூட இந்த உலகத்தில் இருக்கப் போவதில்லை என்று தெரிந்தும், காலம் காலமாக வாழப் போவது போன்று இயற்கையை அழித்து, மனிதர்களை வெறுத்து, என்னை யார் என்ன கேட்க முடியும் என்று சிலம்பாட்டம் ஆடிய கால்களை இன்று வீட்டுக்குள் முடக்கி இருக்கிறது இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ்.

இந்த அழகில் "Save the Planet" என்ற வெற்றுக் கூச்சல் வேறு.  விளம்பரங்களுக்கும், சுய விளம்பரங்களுக்கும் மனிதர்கள் வேண்டுமானால் மயங்கலாம்.  பிரபஞ்சம் மயங்காது.  "நீ யார் என்னைக் காப்பாற்ற - என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும் உன்னை முதலில் காப்பாற்றி கொள்" என்று நம் கன்னத்தில் அறைந்து சொல்லி விட்டது.

காற்றையும் நெருப்பையும் கடவுளாகவும், மரங்களை காவல் தெய்வங்களாகவும், காகம் போன்ற பறவைகளை தம் முன்னோர்களாகவும்  வணங்கிய நம் பாட்டனும் முப்பாட்டனும் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.  

இன்றையச் சூழலுக்கு பொருந்தும்படியாக சுந்தர ராமசாமி எழுதிய "காகங்கள்" என்ற சிறுகதை 1991-ம் ஆண்டு காலச் சுவடு ஆண்டு மலரில் வெளிவந்துள்ளது.

அந்தக் கதையின் சுருக்கம் இதுதான்.

ஒரு மனிதர் தன்னுடைய சிறு வயது முதல் தொடர்ந்து 40-50 ஆண்டுகள் காகங்களை கவனித்து வரும் பழக்கம் உள்ளவர்.  அது ஒரு நெடுஞ்சாலை.  அந்தச் சாலையில் ஒரு காலத்தில் மாட்டு வண்டியில் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வார்கள்.  அந்த நெல் மூட்டைகளில் இருந்து சிந்தும் நெல்மணிகளை கொத்தி தின்பதற்கு தினமும் விடியலில் காகங்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்லும்.  பிறகு மாட்டு வண்டிகள் மாறி லாரிகளானது.  ஆனாலும் நெல் மணிகள் சாலையில் சிந்துவது குறையவில்லை.  அதனால் காகங்கள் வருவதும் குறையவில்லை.  ஆனாலும் மாட்டு வண்டிக் காலத்தில் இருந்தது போல் காகங்களால் நின்று நிதானித்து சாப்பிட முடியவில்லை.  நெடுஞ்சாலையில் வேகமெடுக்கும் வண்டிகளில் சிக்காமல் தப்பித்து சாப்பிட காகங்கள் விடியலில் சீக்கிரமே அந்தச் சாலைக்கு வந்து விடுகின்றன.

ஒருநாள் அந்த ஊருக்கு வரும் கலெக்டர், வாகனப் போக்குவரத்தினை சீர் செய்யும் விதமாக அந்தச் சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றி உத்தரவிடுவார்.  அதனால் அந்தப் பக்ககமாக செல்ல வேண்டிய நெல் மூட்டை ஏற்றிய லாரிகள் வேறு வழியில் செல்ல ஆரம்பித்து விடும்.  காலம் காலமாக அந்தச் சாலையில் நெல் மணிகளை சாப்பிட்டு வந்த அந்த நூற்றுக் கணக்கான காகங்கள் பெருத்த ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் அங்கிருந்து செல்லும்.

அந்தக் காகங்களுக்காக அந்த கலெக்டரிடம் முறையிடும் அந்த மனிதருக்கு கிடைக்கும் பட்டம் "மனநலம் குன்றியவர்".

இந்தக் கதையின் highlight அந்த மனிதர் காகங்களுக்காக கலெக்டரிடம் முறையிடுவதை சுந்தர ராமசாமி சொல்லும் விதம்.  அந்தக் கலெக்டர் அதிகார வர்கத்தின் குறியீடு.

இனி சுந்தர ராமசாமியின் வார்த்தைகள் :

"பின் விளைவுகளை யோசிக்கத் தெரியாதவர்களுக்குக் கையெழுத்திட அதிகாரம் இல்லை.  இப்போது வணிகர்கள் அல்ல - காகங்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன.  கூடும் செலவுகளை வணிகர்கள் விலையில் ஏற்றி விடுவார்கள்.  காகங்களுக்கோ உணவில்லை.  மனித குலத்திற்கு அவை ஆற்றியுள்ள பங்கை நினைக்கும்போது மனம் விம்முகிறது.  அவற்றின் உன்னதங்கள் காற்றில் கலந்து கிடக்கின்றன.  உங்களது செத்த வரலாறு, செத்த நாகரிகம் எல்லாம் உங்களை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றன. 

இருகால் பிராணிகள் மட்டுமே உருவாக்கிய எந்த உன்னதமும் இந்த உலகத்தில் இல்லை. இருகால் பிராணிகள் உருவாக்கித் தந்திருப்பவை திமிர், கடைந்தெடுத்த அதிகாரம், ஆக்கமும் அழிவும் தங்கள் கைகளில்தான் என்ற அஞ்ஞான அகங்காரம். இந்தத் திமிரில் இருந்தான் சகல நோயுற்ற முடிவுகளும் உருவாகி வருகின்றன. புல்லும், பூண்டும், செடிகளும், கொடிகளும், புழுவும், பூச்சிகளும், காற்றும், ஒலியும், பறவைகளும், மிருகங்களும் இந்த நாகரிகத்தை உருவாக்க மனிதனுக்கு நிகரான பங்கை ஆற்றியுள்ளன.  தனக்கான உலகத்தை உருவாக்கும் திமிரில் உலகத்தை உருவாக்கப் பங்காற்றியுள்ள அனைத்துச் சக்திகளையும் ஈவிரக்கமின்றி மனிதன் அழித்துக் கொண்டிருக்கிறான். இந்த நன்றி கெட்டதனத்திற்கு தண்டனை வழங்க இந்த உலகத்தில் நீதிமன்றம் எதுவும் இல்லை.

காகங்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள எந்த நாகரிகமும் இல்லை.  பறவைகளில் அவை அதிக சங்கடம் அடைந்தன  எனில் பறவைகளில் அவைதாம் உங்களுடன் அதிகம் உறவாட விரும்பின.  ஆயிரக்கணக்கான கைக்குழந்தைகள் ஒரு பாதையில் கிடந்தது பசியால் துடித்துக் கதறினால் என்ன செய்வீர்கள் ?  

அழுகையின் குரலைப் புரிந்து கொள்ள முடியாத அதிகாரம் ஒருபோதும் நன்மையை விளைவித்தது இல்லை. இன்று ஒரு நொண்டிக் காகம் கூட உங்களை நம்பத் தயாராக இல்லை. இதனால் நீங்கள் காகங்களை அழித்துவிட முடியும் என்பதல்ல. ஒருக்காலும் உங்களால் அவற்றை அழிக்க முடியாது. தனக்காக மட்டுமே இந்த உலகம் படைக்கப்பட்டு இருக்கிறது என்ற அஞ்ஞான அகந்தை  அவற்றுக்கு இல்லை.  மேலும் அவற்றில் அலகுகள் திட்பமானவை.  சிறகுகள் வலிமையானவை.  பார்வை கூர்மையானது. இவற்றால் அவை வாழ்ந்து கொண்டிருக்கும்.  அவை பெரும் சக்தியாக திரண்டு ஒன்றாகப் பறக்கத் தொடங்கும்போது வானம் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போகக் கூடும். அவற்றின் ஆற்றலை அன்று உணர்ந்து கொள்வீர்கள்.  ஆனால் அன்று உங்களைத் திருத்திக் கொள்ள உங்களுக்கு அவகாசம் இருக்காது.

இந்த வைரஸ் ஒரு சாம்பிள்தான். இப்போதாவது மனிதன் தன்னை திருத்திக் கொள்ளாவிட்டால் இயற்கை முற்றாக நம்மைத் துடைத்தெறிந்துவிட்டு தன்னை மீண்டும்   அழகாக புதுப்பித்துக்கொள்ளும்.  

இப்போது நம்மால் செய்யக் கூடியதெல்லாம் அந்தக் கொரோனா மூர்த்தியிடமே மண்டியிட்டு பிரார்த்தனை செய்வதுதான். நாங்கள் செய்த பிழைகளை பொறுத்து எங்களை காப்பாற்றுவீராக. 

நாம் இயற்கைக்கு நம்மால் செய்யக் கூடிய கைம்மாறு ஏதாவது உண்டெனில் அது நம்மால் முடிந்தவரை இயற்கைக்கு விரோதமாக எதுவும் செய்யாமல் இருப்பதுதான்.


Thursday, March 12, 2020

ஆன்மீக அரசியல்

ஆன்மீக அரசியல்


திரு. ரஜினிகாந்த் அவர்களின் ஆன்மீக அரசியல் உதயத்திற்கு முன்பே அஸ்தமனமாகிவிட்டதா என்று நினைக்க வைத்தது அவரின் இன்றைய (12/03/2020) பிரஸ் மீட்.  பத்திரிகையாளர்களை அழைத்து தன்னுடைய ரசிகர்   மன்ற நிர்வாகிகளிடம்  பேசுவது போல பேசியதற்கு பிரஸ் மீட் என்பதற்கு பதில் பிரஸ் டாக் என்று பெயர் வைக்கலாம் (Press என்பதற்கு  அழுத்தம் என்றும் அர்த்தம் என்பது  நமக்குத் தெரியும். பாவம் அவருக்கு என்ன அழுத்தமோ ?).

நான் ரஜினியின் தீவிர ரசிகன் கிடையாது.  ஆனால் பஸ் கண்டக்டர் போன்ற சராசரி மனிதர்கள்கூட வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதற்கு என்னைப் போல பலருக்கும் மிகப் பெரிய inspiration ஆக இருந்தவர் - இருப்பவர்.

அவர் அரசியலில் முழுமையாக இறங்கி மக்களுக்கு சேவை செய்வார் என்று கனவிலும் நினைக்காத லட்சக்கணக்கான (அல்லது ஆயிரக்கணக்கான) மக்களில் நானும் ஒருவன்.

ரஜினிீ அவர்கள் தன்னுடைய ஆன்மீக அரசியலைத் தானே ஒழுங்காக புரிந்து வைத்துள்ளாரா என்பதே மிகப் பெரிய சந்தேகம் உள்ளது. நம்முடைய மக்கள் ஆன்மிகம் என்ற வார்த்தைக்கே ஆத்திகம், பக்தி, மதம் என்று பலவாறு குழப்பிக் கொள்கின்றனர்.  

"நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"

என்று சொன்ன சிவவாக்கிய சித்தர் நாத்திகரா ஆத்திகரா ?

உண்மையான ஆன்மீகம் என்பது  தன் உள் இருக்கும் இறைவனே எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறான் என்று உணர்ந்து உள்ளத்தை விரிவடையச் செய்வதே என்று பல அருளாளர்கள் சொல்லி இருக்கின்றனர்.  அதனால்தான் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரை மிகப் பெரிய ஆன்மீக வாதியாக நாம் கொண்டாடுகிறோம்.  

இந்த ஆன்மீகத்தை கொஞ்சம் அப்படியே அரசியலுக்கு மடை மாற்றுவோம்.  அரசியலில் ஆன்மீகத்தை கலக்க முடியுமா ?  கண்டிப்பாக முடியும்.  அதற்கு அடிப்படை மூன்று விஷயங்கள்தான் - 1) தனிமனித வாழ்வில் எளிமை 2) பொது வாழ்வில் தூய்மை 3) மக்களிடம் மாறாத அன்பு.

தமிழக அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் இந்த மூன்று அம்சங்களையும் கொண்டிருந்த தலைவர்களாக நான் நினைப்பது. காமராஜர் மற்றும் அண்ணா அவர்களைத்தான். அண்ணா கூட ஆட்சி அதிகாரத்தில் அதிக காலம் இல்லை.  அதனால் காமராஜர் அவர்களைத்தான் முழுமையான ஆன்மீக அரசியல் செய்தவர் என்று சொல்வேன்.  

சரி ரஜினியும் இப்படிப் பட்ட சில விஷயங்களைத்தானே முன் வைக்கிறார் என்று சிலர் நினைக்கலாம்.  ஆனால் சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.  நாம் சொல்லும் அல்லது நினைக்கும் எத்தனை கருத்துக்களை நம் வாழ்வில் கடைபிடிக்கிறோம் என்பதில்தான் சராசரி வாழ்விற்கும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குமான வித்தியாசம் இருக்கிறது.

இந்த நேரத்தில் காமராஜர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும் ரஜினி அவர்களின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகிறது.

காமராஜர் திருமணமாகாதவர்.  அவர் முதல்வரான பிறகு அவருடைய தாயார் தன் மகனுடன் இருந்து அவருக்குத் தேவையானதை சமைத்துப் போடலாம் என்று ஆசைப்பட்டார்.  அதற்கு காமராஜர் சொன்ன பதில் "நீங்கள் வந்தால் உங்களைத் தேடி நாலு பேர் வருவார்கள்.  அவர்களில் சிலர் என்னுடைய முதல்வர் பதவியை தவறாகப் பயன்படுத்தலாம்.  எதற்கு அதெற்கெல்லாம் இடம் கொடுக்க வேண்டும்.  தேவைப் படும்போது நானே வந்து உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டார்.

அவர்தான் தமிழகம் எங்கும் பல தொழிற்சாலைகளை உருவாக்கி தொழிற்துறையில் தமிழகத்தை முன்னணியில் கொண்டு வந்தவர்.  அதில் கொஞ்சம் கமிஷன் வாங்கியிருந்தாலும் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்திருப்பார்.   ஆனால் அவர் இறந்த பொது அவரிடம்  இருந்தது ஒரு சில ஆயிரங்கள்கூட கிடையாது. 

அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான் பாரதி.   ஆனால் அன்னத்தையும் அளித்து பல ஏழைகளுக்கு கல்வியையும் இலவசமாக அளித்து ஒரு அறிவார்ந்த சமூகத்தினை உருவாக்கியவர் காமராஜர்.

அந்த மாமனிதர் தேர்தலில் தோற்றபோது சொன்ன வார்த்தைகள் "காமராஜரும் தோற்பதுதான் ஜனநாயகம்".   

காமராஜருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா என்பது தெரியாது.  ஆனால் அவர் செய்ததுதான் உண்மையான ஆன்மீக அரசியல்.  அவர்  தேர்தலில் தோற்றும் இருக்கலாம்.  ஆனால் தனி மனித வாழ்வில் எளிமை, பொது வாழ்வில் தூய்மை, சக மனிதர்களிடம் மாறாத அன்பு என்று வாழ்ந்து காட்டியதின்  மூலம் இன்றும் அத்தகைய ஆன்மீக அரசியல் சாத்தியம்தான் என்று நமக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருப்பவர்.

ஆனால் திரு ரஜினி அவர்களால் அத்தகைய ஆன்மீக அரசியலை முன்னெடுக்க முடியாது.  அதற்கு அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களே உதாரணம்.

ரஜினியின் மனைவி தன்னுடைய வியபாரத்திற்கு வாடகை எடுத்திருந்த மாநகராட்சி கட்டிடத்தின் வாடகை பல வருடங்களுக்குப் பிறகு சில ஆயிரங்கள் உயர்த்தப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அதற்கு அவர் சொன்ன காரணம் தொழில் நலிவுற்ற நிலையில் உள்ளதால் அவரால் அந்த சில ஆயிரம் உயர்வைக் கூட தாங்க முடியவில்லையாம்.  பாவம்.  உயர்நீதிமன்றம் அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது. 

அதைப் போலவே அவரது பள்ளி நடக்கும் கட்டடத்திற்கு வாடகை சரியாக கொடுக்காமல் அந்த வழக்கும் நீதிமன்றம் சென்றது (இந்தப் பள்ளியில் சேர்வதற்கான கட்டணம் சில ஆயிரங்கள் அல்ல.  பல லட்சங்கள்).

பொது வாழ்வில் இருக்கும் ரஜினி அவர்கள் தன்னுடைய மனைவிக்கு சரியான அறிவுரை வழங்கி இதை தடுத்து இருக்க முடியாதா ?   

திரு சூர்யா போன்ற இளம் நடிகரே "அகரம் பவுண்டேஷன்" என்ற தொண்டு நிறுவனத்தினைத் தொடங்கி ஆயிரக்கணக்கான ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருக்கும்போது, உங்கள் ஒவ்வொரு துளி வியர்வைக்கும் தங்க காசுகளை கொடுத்த தமிழ் மக்களுக்கு நீங்கள் இதுவரை என்ன கொடுத்தீர்கள் ?

சிஸ்டம் சரியில்லை என்று சொல்லும் நீங்கள் உங்கள் வருமானத்திற்கு இதுவரை சரியான வரியை செலுத்தியுள்ளீர்கள் என்று மனசாட்சியுடன் பதில் சொல்ல முடியுமா ?  அப்படி இருந்தால் ஏன் வருமான வரித்துறை உங்கள் மேல் வழக்கு போட வேண்டும் ?   அல்லது நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் உங்கள் சொத்து விவரங்களை ஒளிவு மறைவு இன்றி சொல்ல முடியுமா ?

இப்போதும் உங்கள் பேச்சில் உங்கள் ரசிகர்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் வார்த்தைகள்தான் அதிகம் தெரிகிறது.  உங்கள் தொண்டன் என்பவன் கல்யாண வைபவத்தில் வேலை செய்யும் சமையல்காரர்கள் மற்றும் வேலைக்காரர்கள் போன்று தேர்தலுக்கு வேலை செய்துவிட்டு நீங்கள் பதவியில் அமர்ந்ததும் விலகிவிட வேண்டும்  என்ற ரீதியில் உதாரணம் சொல்லி இருக்கிறீர்கள்.  அதை நீங்கள் உதாரணத்திற்கே சொல்லி இருந்தாலும் அதில் உங்கள் ஆதிக்க மனப்பான்மையை அம்பலப்படுத்திவிட்டிர்கள்.

நான் உங்களின் ஒரு படத்தைக் கூட பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்த ரசிகன் இல்லை. அதனால் என்னைப் போன்றவர்களுக்கு  நீங்கள் இப்படிச் சொன்னதில் எந்த வருத்தமும் இல்லை.  ஆனால் உங்களை தெய்வமாக நினைக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை நீங்கள் அவமரியாதை செய்து விட்டீர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

நீங்களே சொன்னது போல உங்களால் சராசரி அரசியல்வாதியாக இருக்க முடியாது.  ஆன்மீக அரசியல் செய்வதற்கு உங்களுக்கு இன்னமும் அதிக தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.  அந்த தூரத்தைக் கடக்க உங்கள் ஆன்மீக குருக்களின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்.

அதுவரை ஊடகங்களின் "Breaking News" க்கு மட்டும் வந்து செல்லுங்கள்.

Tuesday, February 25, 2020

முன்றில்



சில விஷயங்களை ஆயிரம் முறை யோசித்து செய்தாலும் எங்கோ முட்டிக் கொண்டு நிற்கும்.  ஆனால் சில விஷயங்கள் அதிக மெனக்கெடல் இல்லாமல் மிகச் சரியாக தானாகவே அமைந்துவிடும்.

அப்படி அமைந்ததுதான் என்னுடைய இந்த "முன்றில்" வலைதளம்.  "எண்ணமே வண்ணமாய்" என்ற என்னுடைய வலைதளத்தை (Blog) இன்னும் சற்று மேம்படுத்தலாம் என்று நினைத்தபோது, அந்த வலைதளத்தின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராகவும்,  சிறியதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.   அப்படி நினைத்தவுடன் என் நினைவுக்கு வந்த பெயர்களில் ஒன்றுதான் இந்த முன்றில்.

முன்றில் நினைவில் பதிந்த பெயராக இருந்தாலும் அதிகம் பரிச்சியப்பட்டது கவிஞர் நா.முத்துக்குமாரின் "அணிலாடும் முன்றில்" புத்தகத்தை வாசித்தபிறகுதான்.

அடுக்கு மாடி குடியிருப்புக்கள் அதிகம் இருக்கும் இந்தக் காலத்தில் முன்றில், முற்றம், தாழ்வாரம் போன்ற வார்த்தைகள் நம்முடைய புழக்கத்தில் இருந்து விலகிச் சென்று விட்டன.  முன்றில் என்றால் வீட்டின் முன்பக்கம் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

முன்றில் என்ற பெயரை வலைதளமாக பதிவு செய்த நினைத்தவுடன் இந்தப் பெயரில் ஏற்கனவே யாராவது பதிவு செய்திருக்கிறார்களா என்று நண்பர் Innoweb பாரதியிடம் கேட்டேன்.  அவரும் இந்தப் பெயரில் எந்த வலைதளமும் பதிவு செய்யப்படவில்லை  என்று சொல்லி முன்றில் வலைதளத்தை உடனே பதிவு செய்து கொடுத்ததுடன், ஏற்கனவே என்னுடைய 'எண்ணமே வண்ணமாய்'  வலைதளத்தில் இருந்த எல்லா பதிவுகளையும் இந்த முன்றில் தளத்தில் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைத்து பதிவிறக்கம் செய்து கொடுத்துவிட்டார்.  அவருக்கு என் நன்றிகள் பல.

வலைதளத்தில் என்னுடைய நூறாவது பதிவு இந்த புதிய முன்றில் வலைதளத்தில் முதல் பதிவாக வருவது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியே.  நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல என்னுடைய பதிவுகளின் நோக்கம் “இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்” என்பதல்ல. பொருளாதாரத் தேவைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இந்த அவசர வாழ்வில், காலையில் செய்த தவற்றை நினைத்து மாலையில் மனம் வருந்தி மீண்டும் மறு நாள் காலையில் அதே தவற்றைச் செய்யும் நம்முடைய சராசரி மனித வாழ்வில் எப்படியாவது ஒரு படி மேலே வர வேண்டும் என்ற நம்முடைய இடையறாத போராட்டத்தில் கிடைக்கும் சில அனுபவங்களை குறித்து வைத்துக் கொள்ளும் ஒரு டைரிக் குறிப்பாகத்தான் இதை நினைத்துக் கொள்கிறேன்.

"பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்" இது ரமண மகரிஷியின் வார்த்தைகள்.  இந்த வார்த்தைகள் நாம் சொல்லும் எல்லா சொற்களுக்கும் நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும் பொருந்தும் - என்னுடைய இந்த வலைதளப் பதிவுகள் உட்பட.

இந்த முன்றில் குறித்து  வலைதளத்தில் கொஞ்சம் துழாவிக் கொண்டிருந்த போது மறைந்த எழுத்தாளர் திரு மா. அரங்கநாதன் அவர்கள்  முன்றில் என்ற பெயரில் ஒரு இதழ் நடத்தி வந்துள்ளார் என்பது தெரிய வந்தது.  இந்தப் பெயரில் இப்போதும் இந்த இதழ் வருகிறதா என்று தெரியவில்லை.

கல்யாண்ஜியின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது

தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் உங்களுடையது
என எழுதும் கவிதைக்கு
முன்பே  வரிகள் இருந்தன.

நீங்கள் அமிழ்கின்ற ஆறு
ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிறது.
நீங்கள் பார்க்கிற சூரியன்
பார்த்திருக்கிறது எண்ணற்றவர்களை.

உங்களுடைய சாப்பாட்டுத்
தட்டில் இருக்கிற பருக்கைகளில்
நேற்றின் எச்சில்.

உங்களுக்குத் பின்னாலும்
வர இருக்கிறார்கள்
நிறைய பேர்கள்
அடித்தல் திருத்தல் அற்று.

நாம் நம்முடைய வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு காரியமும் யாராலோ எப்போதோ செய்யப்பட்டவைதான். நேற்றின் தொடர்ச்சி நாம்.   நம்மைவிட சிறப்பாக செய்ய இன்னும் நிறைய பேர் வருவார்கள்.  அவர்களுக்கு இந்தப் பதிவுகள் ஒரு சிறு அகல் விளக்காக பயன்படலாம்.

"அணிலாடும் முன்றில்" கவிஞர் முத்துக்குமார் அவர்கள் ஒவ்வொரு உறவையும் பற்றி மிகவும் அழகாக எழுதி இருப்பார்.  அதில் நான் மிகவும் அதிகம் விரும்பியது அவர் தனது மகனுக்கு எழுதிய கடிதம்.  இந்த வார்த்தைகள் அவர் மகனுக்கு மட்டுமல்ல - எல்லா மனிதர்களுக்குமானது.

இதோ அவரது வீரியமான வார்த்தைகள்: 

கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்து தெரிந்து கொள்வதைவிட, தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக் கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இது தான், கற்றுப் பார். உடலைவிட்டு வெளியேறி, உன்னை நீயே உற்றுப் பார். எங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. 


உன் தாத்தா, ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்த்தார். அவரது 57-வது வயதில் தான் அதில் அமர்ந்து பார்த்தார். உன் தகப்பனுக்கு 27-வது வயதில் விமானத்தின் கதவுகள் திறந்தன. ஆறு மாதக் குழந்தைப் பருவத்திலேயே நீ ஆகாயத்தில் மிதந்தாய். நாளை உன் மகன் ராக்கெட்டில் பிறக்கலாம். இந்த மாற்றம் ஒரு தலைமுறையில் வந்தது அல்ல. இதற்குப் பின்னால் நெடியதொரு உழைப்பு இருக்கிறது. என் முப்பாட்டன் காடு திருத்தினான். என் பாட்டன் கழனி அமைத்தான். என் தகப்பன் விதை விதைத்தான். உன் தகப்பன் நீர் ஊற்றினான். நீ அறுவடை செய்து கொண்டு இருக்கிறாய். என் தங்கமே! உன் பிள்ளைக்கான விதையும் உன் உள்ளங்கையில் வைத்திரு. உழைக்கத் தயங்காதே. உழைக்கும் வரை உயர்ந்து கொண்டு இருப்பாய்.


நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறந்து வைக்கின்றன. புத்தகங்களை நேசி. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள். உன் உதிரத்திலும் அந்தக் காகித நதி ஓடிக் கொண்டே இருக்கட்டும்.


கிடைத்த வேலையைவிட, பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறம் தொடங்கு.  உறவுகளிடம் நெருங்கியும் இரு. விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும் விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள். உன் வாழ்க்கை நேராகும்.

என்னுடைய இந்த முன்றில் வலைதளத்தின் முதல் பதிவை எழுத்தாளர் திரு மா. அரங்கநாதன் அவர்களுக்கும் கவிஞர் திரு நா. முத்துக்குமார் அவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.