Thursday, December 28, 2017

ஓடி ஓடி .......


சென்ற சனிக்கிழமை (23/12/2017) அன்று மாலை அண்ணாமலை பல்கலை கழக முன்னாள் மாணவா் சங்கத்தின் விழாவின் ஒரு பகுதியாக திரு. வெ. இறையன்பு IAS அவா்கள்  ”அறுபது வயதிற்குப் பின் வாழ்க்கை” (“Life after 60”) என்ற தலைப்பில் பேசினார்.  அவா் பேச்சின் மையக் கருத்தானது, பொதுவாக ஒரு மனிதன் 60 வயதிற்கு மேல் தனக்கு, தன் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இந்த தேசத்திற்கே பாரமாகிவிடுகிறார்.  சென்ற நுாற்றாண்டில் 40 அல்லது 50 வயதானாலேயே அவா்களை வயதானவா்கள் என்று சொல்லிவிடுவார்கள்.  60 வயதைக் கடந்து வாழ்ந்தவா்கள் சிலரே.  ஆனால் இப்போது 80 வயதைக் கடந்தும் ஆரோக்கியமாக இருக்கும் பலரை நாம் பார்க்கிறோம்.  அதிலும் அரசாங்கத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவா்கள் தாங்கள் சம்பளமாக வாங்கிய தொகையை விட கூடுதலாக ஓய்வூதியம் பெறுகிறார்கள்.  இது அரசாங்கத்திற்கு கூடுதல் நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது.  இதைத் தவிர ஒருவா் 60 வயதிற்கு மேல் தன்னுடைய வாழ்க்கையை முறையாக நிர்வகிக்க வேண்டியதின் அவசியத்தையும் இல்லையென்றால் அவருக்கு ஏற்படும் நிதி மற்றும் மன அழுத்தங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

திரு. இறையன்பு அவா்கள் கடைசியாக சொன்ன விஷயம் இதுதான்.  வயதாகிவிட்டது என்று சோர்ந்து விடாமல் யார் தங்களை புதுப்பித்து கொண்டே இருக்கிறார்களோ அவா்களுக்கு வயதாகலாம் ஆனால் வயோதிகம் வருத்தாது.  நம் மூளையில் சுரக்கும் சில செல்கள் (நியுரான்கள்) வயதாக வயதாக குறைந்து கொண்டே இருக்கும்.  அதனால்தான் வயதானவா்களுக்கு மறதி போன்ற நோய்கள் வருகின்றன.  ஆனால் வயதானாலும் சோர்ந்து விடாமல் படிப்பது, எழுதுவது, இசை, சமையல், அழகுக் கலை இப்படி தொடா்ந்து ஏதாவது ஒரு துறையில் இயங்கிக் கொண்டே இருப்பவா்களுக்கு மூளையில் சுரக்கும் நியுரான்கள் குறைவதே இல்லையாம்.  அதனால் நாம் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருப்போம் – வயோதிகத்தை வெல்வோம் என்றார்.

ஒரு நல்ல பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைப்பதற்கு காரணமாக இருந்த திரு. இளநகை (சங்கத்தின் தலைவா்) அவா்களுக்கு என் நன்றிகள்.

இறையன்பு அவா்களின் பேச்சு எனக்கு இது தொடா்பான வேறு சில சிந்தனைகளையும் கிளறிவிட்டது.

சில மாதங்களுக்கு முன் என் குடும்பத்துடன் கோவை அருகில் உள்ள ஆனைக்கட்டி என்ற சுற்றுலா தலத்திற்கு சென்றிருந்தேன்.  நாங்கள் தங்கிய ரிசார்ட்டில் ஒரு வயதான தம்பதியை சந்தித்தோம்.  கணவா் ஒரு டாக்டா்.  வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு வகையிலோ உலகம் சுற்றியவா்கள். அவா்களுடனான உரையாடல் எனக்கும் சில தெளிவுகளைத் தந்தது.

அந்த டாக்டா் தன்னுடைய தொழிலின் மூலம் நிறைய சம்பாதித்தவா். பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்துள்ளார்.  தன்னுடைய சேமிப்பின் மூலம் நிறைய நிலபுலன்களையும் வாங்கி வைத்துள்ளார்.  இப்போதைய அவரின் பிரச்சினை என்னவென்றால் அவருடைய மகனும் மகளும் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள்.  மீண்டும் இந்தியாவிற்கு இப்போதைக்கு வரும் எண்ணம் இல்லை. இவா்களுக்கோ வயதாகிக் கொண்டிருக்கிறது.  தங்களுடைய சொத்துக்களைப் பராமரிப்பது மிகவும் கடினமாக உள்ளது.  விற்பதாக இருந்தால்கூட அது அவ்வளவு சுலபமாக இல்லை.  அப்படியே நீண்ட நாட்களுக்கு இருந்தாலும் அதை யாராவது அபகரிக்க முயற்சி செய்வார்களோ என்ற பயம் உள்ளது.  அவா்களது பிள்ளைகளும் அதுகுறித்து கவலைப்படுவதாக இல்லை. 

இதற்கு இடையில் சில காலம் அவரும் அவா் மனைவியும் IAS ஆபிசா்களாக வெளிநாட்டில் வேலை பார்த்ததாக வேடிக்கையாகச் சொன்னார். அது வேறு ஒன்றும் இல்லை.  வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட பிள்ளைகள் அங்கேயே குழந்தை பெற்றுக் கொள்ளும்போது அவா்களுக்கு மிகவும் நம்பிக்கையான, ஊதியம் இல்லாத ”ஆயா” வேலை செய்பவா்கள் அவா்களது பெற்றோர்கள்தாம்.  இப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும் பெற்றவா்கள்தான் தங்களை ”பெருமையாக” (??) IAS (Indian Aaya Service) ஆபிசா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.

கடைசியாக அவா் சொன்ன விஷயம் இதுதான்.  நாம் நன்றாக இருக்கும்போது பிள்ளைகள் நம் கூடவே இருப்பார்கள் என்று நினைத்து அவா்களுக்குத் தேவைப்படும் என்று நிறைய அசையா சொத்துக்களை சோ்த்து விடுகிறோம்.  ஆனால் காலம் மாறிவிட்டது.  அந்தக் காலத்தின் கூட்டுக் குடும்ப கலாசாரம் மறைந்து விட்டது.  பிள்ளைகள் அவரவா் வாழ்க்கை என்று பறந்து விடுகின்றனா்.  நாம் Assets என்று நினைப்பது வயதாகும் போது உண்மையிலேயே Liability ஆகி விடுகிறது.  இன்னும் சில வருடங்கள் கழித்து எங்கள் உடல்நிலை வெளிநாடு சென்று எங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதற்கும் இடம் கொடுக்காது.  எங்களையே பார்த்துக்கொள்வது கடினமாக இருக்கும்போது இந்தச் சொத்துக்களை எப்படி பாதுகாப்பது ?.

இப்படி பல உதாரணங்களை நாம் தினமும் பார்க்கலாம்.

உண்மைதான்.  நாம் நம் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டியது நல்ல வருங்காலத்தைதான்.  அதை ஒழுங்காக கொடுத்துவிட்டால் நாம் சம்பாதித்தை விட பல மடங்கு அவா்கள் சம்பாதிப்பார்கள்.

நாம் நம் குடும்பத்தையும், இளமையையும் மறந்து ஓடிக்கொண்டே இருந்தால் ஓட்டம் நின்று திரும்பிப் பார்க்கும்போது நாம் மட்டும் தனியாகத்தான் நின்று கொண்டிருப்போம்.

அதற்காக நாம் சோம்பேறியாகவும் ஊதாரியாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை.  60 வயதுக்கு முன் மட்டுமல்ல அதற்குப் பிறகும் நாம் நம் சொந்தக் காலில் நிற்கக்கூடிய பொருளாதாரச் சுதந்திரம் நமக்கு இருக்க வேண்டும்.  அதற்காகக் கண்டிப்பாக ஓடத்தான் வேண்டும்.  ஆனால் அந்த ஓட்டம் யாரையும் முந்தியடித்துச் சென்று முதலிடம் பெற வேண்டும் என்ற ஓட்டமாக இல்லாமல், நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் வலு சேர்க்கும் ஆரோக்கிய ஓட்டமாக இருந்தால் போதும்.  ஓடி ஓடி களைக்க வேண்டாம். நான் கடவுளை வேண்டுவதும் அந்த ஓட்டம்தான்.

திரு. இறையன்பு அவா்கள் சொன்னது போல் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்கலாம் – இருக்கும்வரை….

Thursday, December 14, 2017

கொடுப்பது எல்லாம் கொடையல்ல ....


எனக்கு கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகளை மிகவும் பிடிக்கும்.  காரணம் நாம் மிகவும் சுலபமாகப் புாிந்துகொள்ளக்கூடிய வகையில் சிக்கல் இல்லாத வாா்த்தைப் பிரயோகம்தான்.  சிலருடைய கவிதைகளைப் படித்தால் அது ஒரு மாடா்ன் ஆா்ட் போல இருக்கும்.  நாமாக ஒன்றைப் புரிந்துகொண்டு ஆகா அபாரம் என்று சொல்ல வேண்டும்.  இல்லையென்றால் நம்மை கவிதை ரசனை இல்லாதவா் என்று சொல்லிவிடுவாா்கள். 

கீழே உள்ள இந்தக் கவி்தையைப் படித்துப் பாருங்கள்.  உங்களுக்கே புரியும்.  நாம் சக மனிதா்களுக்கு செய்யும் உதவியைப் பற்றிய கவிதை இது.  ஒரு tube light வாங்கிக் கொடுத்துவிட்டு அதன் ஒளியை மறைத்து, உபயம் இன்னாா் என்று எழுதி வைக்கும் இந்தக் காலத்தில், கொடுப்பது எல்லாம் கொடையல்ல என்று நம் பொட்டில் அறைந்தது போல சொல்லி இருக்கிறது இந்தக் கவிதை.  அதேபோல் கொடுப்பது என்றால் பணம் மட்டுமில்லை என்பதை அழகான கவிதை வரிகளில் நமக்கு சொல்லியிருக்கிறாா் கவிக்கோ.  

கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே
இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே
உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை
கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாயப்படுத்தும்.

Friday, October 6, 2017

சுபம் உண்டாக. சுபம்


நேற்று மதுரையிலிருந்து நண்பா் செந்தில் அழைத்திருந்தார்.  என்ன சார் Blog எழுதுவதையே விட்டுவிட்டீா்களா ? கடைசியாக மே மாதம் 2-ம் தேதி எழுதியிருக்கிறீா்கள்.  அதற்குப் பிறகு ஒன்றையும் காணோம் என்று மாதம் தேதியுடன் குறிப்பிட்டிருந்தார்.  பிறகுதான் நானே கவனித்தேன்.  நாட்கள் வாரங்களாகவும் மாதங்களாகவும் பறந்து கொண்டிருப்பதை.

ஏன் எழுதவில்லை என்று என்ன காரணம் சொன்னாலும் அது வெறும் lame excuse தான்.  மாதத்தில் ஒரு சில மணி நேரங்களை இதற்காக செலவிடுவது என்பது ஒரு பெரிய விஷயமில்லை.  நம் எழுத்தை பின் தொடா்ந்து படிக்கும் செந்தில் போன்ற நண்பர்களுக்காகவாவது தொடா்ச்சியாக நிறைய இடைவெளி இல்லாமல் எழுத வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.  ஏற்கனவே ஒரு தடவை இப்படி முடிவெடுத்திருக்கிறேன்.  அதனால் என்ன – முடிவு என்பதும் முடிவில்லாமல் இருப்பதுதானே ?

எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.  கமலின் அரசியல் பிரவேசம், கழக ஆட்சி கவிழுமா ? என்பதில் இருந்து நம்மை சுற்றி நடக்கும் ஆயிரம் விஷயங்களை எழுதலாம்.  ஆனால் அதில் what is our intake? என்பதுதான் மிக முக்கியம்.

நேற்று செந்தில் அழைத்து முடித்தவுடன், வள்ளலாரின் 195 வது அவதார தினம் என்ற செய்தி கண்ணில் பட்டது.  அதனால் வள்ளலாரின் சில சிந்தனைகளையே இன்று பதிவு செய்யலாம் என்று தோன்றியது.

”வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் பிறந்த ஊரில், பயிர் வாடியவுடன் அதை பிளாட் போட்டு அதற்கு வள்ளலார் நகர் என்றே பெயர் வைக்கும் மனிதர்கள் இருக்கும் இன்றைய சமூகத்தின்  நிலையைப் பற்றி எழுத்தாளரும் பேச்சாளருமான பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் கருத்தை என்னுடைய கட்டுரை ஒன்றி்ல் பதிவு செய்திருந்தேன்.  டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் மூலமாக அதை அறிந்த பாரதி கிருஷ்ணகுமார் அவா்கள் உடனே என்னை அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார். 

அவர் பாராட்டியது இதுதான்.  நீங்கள் நான் சொன்ன கருத்தை சொன்னது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், அதை நான்தான் சொன்னேன் என்று என்னுடைய பெயரையும் சோ்த்து எழுதியது அதைவிட மகிழ்ச்சி.  காரணம் கருத்துத் திருட்டு (knowledge theft) அதிகம் இருக்கும் காலம் இது.  பல நேரங்களில் மற்றவர் கருத்தையே (அவா்கள் இருக்கும்போதே) தன் கருத்தாக பலரிடம் சொல்லி பாராட்டு பெறும் மனிதர்கள் அதிகம் வாழும் உலகம் இது.  அதனால் என் பெயரை மறக்காமல் சொன்ன உங்கள் நோ்மை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.  அதனால்தான் உடனடியாக உங்களை அழைத்துப் பாராட்டினேன் என்று சொன்னார்.  இதைச் சொல்லுவதன் நோக்கம் என்னுடைய நோ்மையை அவர் பாராட்டினார் என்பதால் (மட்டும்) அல்ல, அந்தப் பாராட்டில் அவருடைய பெருந்தன்மைதான் அதிகம் வெளிப்பட்டது.  வஞ்சம் இல்லாமல் பாராட்டும் நெஞ்சம் இருந்துவிட்டால் நாம் வாழ்க்கையில் பக்குவப்பட்டுவிட்டோம் என்று அா்த்தம்.

இந்த சம்பவத்தினை நினைவு கூறுவதற்கு மற்றொரு காரணம் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் அவருடைய நண்பா்களுக்கு எழுதிய பல கடிதங்கள் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

”சுபம் உண்டாக. சுபம்
அன்பு அறிவு ஒழுக்கம் கருணை முதலிய நன்மைகளாற் சிறந்து சிவத்தைப் பொருளென் றுணர்ந்து சன்மார்க்கத்தில் விளங்குகின்ற தங்கட்கு வந்தனம் வந்தனம்.

தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விருப்பமுடையவனாக விருக்கிறேன்.”

மேற்கூறிய வார்த்தைகளில் வள்ளலாரின் நண்பர்களுடைய புகழை விட அதை அகமகிழ்ந்து பாராட்டிப் பேசும் வள்ளலாரின் பெருங்கருணைதான் நமக்குத் தெரிகிறது.

மேலும் பல கடிதங்களில் அவா் தன்னுடைய நண்பர்களின் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கரையுடன் இருந்தது தெரிய வருகிறது. அவருடைய நண்பருக்கு அவர் எழுதிய கடிதத்தில் அவா் இப்படிச் சொல்கிறார் – ”தாங்கள் தங்கள் தேகத்தை பொன்போல சர்வ சாக்கிரதையோடு பாராட்டிக் கொண்டு வரவேண்டும்.

இதில் நமக்கான செய்தியும் இருக்கிறது.  நாமும் பொதுவாக நம்முடைய  ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வண்டி ஓடிக்கொண்டிருக்கும் வரை ஒன்றும் தெரிவதில்லை.  ஒரு சில நாட்கள் படுத்துவிட்டால்தான் தெரிகிறது ”உடலினை உறுதி செய்” என்று பாரதி சொன்னதும், ”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்று திருமூலா் சொன்னதும் எவ்வளவு சத்தியமான வாா்த்தைகள் என்று.  வள்ளலாரின் ”பொன் போல நமது உடலினை பார்த்துக்கொள்ள வேண்டும்” என்ற வார்த்தைப் பிரயோகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  இத்தகைய வார்த்தைகளுக்காகவது திருஅருட்பாவை முழுமையாக படிக்க வேண்டும்.

1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் நாள் பிறந்து 1874-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் நாள் மறைந்தவர் வள்ளலார்.  உண்மையிலேய ”மறைந்த” என்ற சொல் இவருக்குத்தான் பொருந்தும்.  இவர் மறைந்த நாள் தைப்பூசத் திருநாளாகும். அன்று அவர் தன்னுடைய அறைக்குள் சென்று உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு தன்னுடைய சீடர்களிடம் அறையைத் திறக்க வேண்டாம்.  திறந்தாலும் தன்னுடைய சரீர உடம்பில் இருக்கமாட்டேன். இறைவனுடன் கலந்து விடுவேன் என்று சொல்லிவிட்டார்.

கடைசியாக அன்றைய ஆங்கில அரசாங்கம் 1874-ம் ஆண்டு மே மாதம் அந்த அறையின் கதவைத் திறக்க ஆணையிட்டார்கள்.  திறந்து உள்ளே சென்றால் அங்கே வள்ளலாரின் உடல் இருந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை.

அதுதான் வடலுாரில் தற்போதுள்ள ”சித்தி வளாகம்” என்றழைக்கப்படும் ஆலயமாகும்.

வள்ளலாரைப் போன்ற பல மகான்கள் வாழும்போது மற்றுமொரு மனிதராய் தம்மைக் காட்டிக்கொண்டாலும் அவா்களின் ஆன்ம ஒளி அவா்களின் மறைவிற்குப் பின்னும் தம்முடைய இருப்பை நமக்கு உணா்த்திக் கொண்டே இருக்கும்.

சுமார் 51 ஆண்டுகளே வாழ்ந்து உடலால் மறைந்தாலும் இன்னும் அருட்பெரும் சோதியாய் தனிப் பெருங் கருணையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் வள்ளலாரின் நினைவைத் துாண்டிய செந்திலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


Tuesday, May 2, 2017

மானுடம் வென்றது


The touch of grace என்று சொல்வார்கள்.  எந்த ஒரு விஷயமும் சிறப்பாக அமைய நமது முயற்சி மட்டும் போதாது.  அதற்கும் மேல் ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அது எப்போதும் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.  ஆனால் எழுத்தாளர் திரு. பிரபஞ்சனுக்கு சென்ற சனிக்கிழமை அது அழகாக அமைந்தது.

சென்ற பதிவில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவா்களுக்கான விழாவைப் பற்றி எழுதியிருந்தேன்.  அதில் அவருக்கு அளிக்கப்படவிருந்த ரூபாய் பத்து இலட்சம் நிதி உதவிபற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.  விழா நடைபெற்ற தினமான ஏப்ரல் 29-ம் தேதி சனிக்கிழமைக்கு முன்னதாகவே பத்து இலட்சம் நிதி சேர்ந்த தகவலை திரு. வேடியப்பன் என்னிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பத்து இலட்சம் என்பது இந்த மகத்தான எழுத்தாளனுக்கு பெரிய தொகை அல்ல.  ஏன் தமிழ் வாசகர்களுக்குக் கூடத்தான் என்று சென்ற பதிவில் எழுதியிருந்தேன்.  தமிழ் வாசகர்கள் அதை மெய்ப்பித்துவிட்டார்கள்.

பொதுவாக தமிழ் எழுத்தாளர்களை தமிழ்நாட்டைவிட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள்தான் அதிகம் பெருமைப்படுத்துகிறார்கள் என்று சொல்வார்கள்.  அது ஓரளவுக்கு உண்மையும்கூட.  நம் ஊரில் இருக்கும்போதைவிட வெளிநாடுகளில் வசிக்கும்போதுதான் நமது தாய்மொழி மீதான பற்று அதிகரிக்கிறது.

ஆனால் முதல்முறையாக ஒரு எழுத்தாளருக்கு அரசு சார்பில்லாத தனி நபா்களின் முயற்சியால் நடத்தப்பட்ட ஒரு விழாவில் புதுவை முதல்வர் திரு நாராயணசாமி, கனிமொழி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், நடிகர் திரு. சிவகுமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள், பிரபல எழுத்தாளர்கள், பிரபஞ்சனை கொண்டாடும் வாசகர்கள் என்று பலரும் கலந்து கொண்ட விழாவில், ஒரு நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாக செய்த முடித்த எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர் திரு. பவா செல்லத்துரை, பதிப்பாளர் திரு. வேடியப்பன் அவர்களுக்கு எவ்வளவு வாழ்த்துக்கள் சொன்னாலும் தகும்.

விழாவில் பேசிய அனைவரும் பிரபஞ்சன் அவர்களின் எழுத்தில் இழையோடும் அன்பையும் வாழ்க்கை குறித்த நம்பிக்கையையும்தான் அதிகம் சிலாகித்துப் பேசினார்கள். 

விழாவில் ஏற்புரை அளித்த பிரபஞ்சன் ”என் வாழ்க்கையில் அன்பையும் நியாய உணர்வையும் அடிநாதமாக கொண்டு வாழ்ந்து வருகிறேன்.  அதனால் வாழ்க்கையில் ஏற்பட்ட வறுமை என்னை வருத்தவில்லை. என்ன - இருவேளை சோற்றுக்கு உத்திரவாதம் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகம் எழுதியிருப்பேன்” என்று சொன்னபோது மிகவும் கஷ்டமாக இருந்தது.  தன்னுடைய வறுமையை வெளிக்காட்டாத அவரது கம்பீரமும், தன்னுடைய சொந்த வாழ்க்கையின் அவலங்கள் குறித்த சுய பச்சாதாபம் எதுவும் இன்றி வாழ்வு குறித்த நம்பிக்கையையும், அன்பையும் வெளிப்படுத்தும் அவரது எழுத்துக்கள் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் உலகில் நிலைத்து இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த விழாவின் வெற்றி பிரபஞ்சனுக்கான வெற்றி மட்டுமல்ல.  மொத்த தமிழ் சமூகத்திற்கான வெற்றியாகும்.

விழா ஏற்பாட்டாளா்களுக்கு மீண்டும் ஒருமுறை தமிழ் வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

பிரபஞ்சன் அவா்களின் சில எழுத்துச் சிதறல்கள்

”மனசை போஷி. ஆனால் கடிவாளத்தை உன் கையில் வைத்துக் கொள். அதுபோதும். நிம்மதி பெறு. நீ உத்தமனடா குழந்தை. நீ தொட்டதெல்லாம் துலங்கும்.”

”குற்றம் எது. சரி எது ?. எல்லாம் பிரமைதானேடா குழந்தை.  மனசை அடிக்கடித் துடைத்துச் சுத்தம் செய்துகொள். அது போதும்.”

”தரிசு மண்ணில் விதைச்சவனும் தாசிக்கு கொடுத்தவனும் எந்தக் காலத்திலும் சுகம் பெறப் போவதில்லை.  தமிழ் மொழியில்தான் எத்தனைப் பழமொழிகள்.”

”இந்நேரம் நீ கல்யாணம் பண்ணிட்டு இருந்தா, நாலு புள்ளைகளைப் பெத்துக்கிட்டு இருப்பே.  என்னத்துக்கு இந்த மாதிரி ஊா் சுமையைத் தோள்லே போட்டுக்கிட்டு திரியறே சாமி? எதுக்கு மனுஷர் குடும்பத்தை துறக்கணும் ? பொண்டாட்டி புள்ளை சுகத்தை இழக்கணும் ? எனக்குத் தெரியும் – சாமியார்னு ஒரு மனுஷன் என்னத்துக்குப் புறப்படணும்? எல்லோரையும் அன்பு பண்ணனும்.  பொண்டாட்டி புள்ளைன்னு ஆயிட்டா, எல்லாத்தையும் சமமா பார்க்க முடியாதே.  அதான் வீட்டைவிட்டு புறப்பட்டுட்டியாக்கும்.  அதுவும் சரிதான்”

”மற்றவா்களுக்கு காட்டும் முகம் அழகாக புத்துணா்ச்சியோடு இருக்கணும்.  நம் கஷ்டம் நம்ம கிட்டயே இருக்கட்டும்.  அதை எதுக்கு மற்றவங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டணும் ?”

”பிறருக்குக் காட்டும் முகம், அது அசல் முகமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.  அதே சமயம் அது பொய்யாகவும் இருந்துவிடக்கூடாது. தன் அசல் முகத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதிகளை மட்டும் பிறருக்கு அன்பளிப்பாக, ஒரு “பொக்கே“வாக அளிப்பது.”


இன்னும் நிறையச் சிதறல்கள் இருக்கிறது. அதற்கான நேரமும் இன்னும் இருக்கிறது. 

Wednesday, April 19, 2017

மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்


நாம் செய்யாத தவறுகளுக்குக் கூட வாழ்க்கை நமக்கு சில சமயங்களில் பெரும் வலியைத் தரும்போது வலி நிவாரணியாய் அமைவதும் அல்லது செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யாதிருக்கும் மனவலிமையை நமக்குத் தருவதும் புத்தகங்கள்தான். 

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சாதளையாளரும் தன்னுடைய வெற்றிக்குக் காரணமாக அல்லது தன்னுடைய வாழ்வின் திருப்புமுனையாக அமைந்ததற்கு ஏதோ ஒரு புத்தகத்தினைத்தான் பெரும்பாலும் காரணமாகக் கூறுவார்கள்.

சில மணித்துளிகள் நம்மை மகிழ்விக்கும் திரைக் கலைஞா்கள் பலர் இலட்சங்களிலும், கோடிகளிலும் புரளும்போது நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும் மகத்தான எழுத்தாளா்கள் பலர் பெரும்பாலும் வறுமையில் வாழும் நிலையில்தான் எப்போதும் உள்ளனா்.  கடந்த காலங்களில் நாம் சில மகத்தான எழுத்தாளா்கள் சிலரை வறுமையிலும் நோயிலும் பறிகொடுக்காமல் இருந்திருந்தால் தமிழ் இன்னும் வளமை பெற்றிருக்கும்.

பிரபஞ்சன்.  இந்தப் பெயா் தமிழ் வாசக உலகிற்கு மிகவும் பரிச்யமான பெயா். 1961-ல் பிரபஞ்சன் எழுதிய முதற்கதை வெளியானது.  அதிலிருந்து கடந்த 55 ஆண்டுகளாக இலக்கியத் தளத்தில் சீராக இயங்கி தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்து வருகிறார்.

சாகித்ய அகாடமி போன்ற பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்ற பிரபஞ்சன் முழுநேர எழுத்தாளர்களுக்கே உண்டான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் மற்றுமொரு மகத்தான எழுத்தாளா்.

பிரபஞ்சனின் இலக்கிய பங்களிப்பினை தமிழ் வாசகா்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுகூறும்விதமாக ஒரு சிறப்பு நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்த ஏப்ரல் மாதம் 29-ம் நாள் சனிக்கிழமையன்று நடைபெற உள்ளது.

இந்த விழாவை ஒருங்கிணைப்பவா்கள் எழுத்தாளா் எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளா் பவா செல்லத்துரை மற்றும் பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்கள்.

பிரபஞ்சன் அவர்களின் பொருளாரதாரத் தேவையை ஓரளவுக்கு நிறைவேற்றும் வகையில் அவருக்கு பத்து இலட்சம் சிறப்பு நிதியாக அளிப்பதும் இந்த விழாவின் ஒரு முக்கியமான அம்சம்.

நான் வேடியப்பனிடம் பேசும்போது வேடிக்கையாகக் கேட்டேன்.  இலட்சக்கணக்கான தமிழ் வாசகா்கள் உலகம் முழுவதும் இருக்கும்போது ஒரு ஆயிரம் போ் தலா ஆயிரம் ரூபாய் அளித்தால்கூட சுலபமாக பத்து இலட்சம் சோ்ந்துவிடுமே என்று சொன்னேன்.  அவா் சொன்னார்  ”நீங்கள் சொல்வது மிகவும் சரி.  ஆனால் பிரச்சனை என்னவென்றால் எல்லோரும் மற்ற யாராவது உதவுவார்கள் என்று நினைத்து விட்டுவிடுகிறார்கள். பலருக்கு தங்களால் முடிந்த தொகையை தருவதற்கு மனம் இருந்தும் தினசரி அலுவல்களில் மறந்து விடுகிறார்கள். 

அதனால் நண்பர்களே இந்தப் பதிவின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இதைப் படிக்கும் உங்களில் யாராவது பிரபஞ்சனின் வாசகராகவோ அல்லது அவரை அறிந்தவராகவோ இருந்தால் மற்றவா்கள் உதவுவதைப் பற்றி கவலைப்படாமல் சில நூறு அல்லது சில ஆயிரம் ரூபாயை பிரபஞ்சனின் வங்கிக் கணக்குக்கு நேரிடையாகவோ அல்லது அவர் பெயரில் வரைவோலை (டிடி) அல்லது காசோலை எடுத்து அனுப்பலாம்.

வங்கி ஆன்லைன் மூலம் பணம் செலுத்த விரும்புவா்கள் கீழ்க்கண்ட அக்கவுண்டில் செலுத்தலாம்.

A/c Name: Prapanchan (Mobile No.98945 83715)
A/c No. 403441392, Indian Bank, Peters Road Branch, Royapettah, Chennai
IFSC Code: IDIB000R047

வரைவோலை (டிடி) அல்லது காசோலை அனுப்ப வேண்டிய முகவரி

டிஸ்கவரி புக் பேலஸ்
6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனிசாமி சாலை
கே.கே. நகர் மேற்கு, சென்னை – 600 078
போன் 044-6515 7525

”சித்தன் போக்கு” என்ற சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் எழுத்தாளா் பெருமாள்முருகன் இப்படி குறிப்பிடுகிறார் –

”பிரபஞ்சனைப் பொருத்தவரை மனிதர்கள் மகத்தானவர்கள்.  அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவா்.  அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம்.  பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார்.  அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம் முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்”.


இப்போதும் பிரபஞ்சன் அவர்கள் அப்படியான ஒரு சூழலைத் தான் நமக்கு அமைத்துத் தருகிறார்.  அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம் முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்.

பத்து இலட்சம் என்பது இந்த மகத்தான எழுத்தாளனுக்கு பெரிய தொகை அல்ல.  ஏன் தமிழ் வாசகர்களுக்குக் கூடத்தான்.

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.


Saturday, April 8, 2017

மகிழ்ச்சியின் மந்திரம்


சில வாரங்களாக என்னுடைய வலைதளத்தில் எந்தப் பதிவையும் செய்ய முடியவில்லை.  கொஞ்சம் busy. நாட்கள் போல் வாரங்கள் ஓடுகின்றன. 

இன்று என்னுடைய வலைதளத்தினை திறந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, நான் பார்க்கவில்லை என்றாலும்கூட என்னுடைய வலைதளத்தினை தினமும் ஒரு பத்து பேராவது படித்துவிட்டு (அல்லது எட்டிப் பார்த்துவிட்டு) செல்கிறார்கள் என்பது.  உண்மையிலேயே மனதுக்கு கொஞ்சம் நிறைவாக இருந்தது. அதிலும் பார்வையாளா்கள் (அல்லது வாசகர்கள்) நம் ஊரில் மட்டுமோ அல்லது சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற தமிழர்கள் அதிகம் உள்ள நாடுகளில் மட்டுமோ அல்லாது  உக்ரைன், போலந்து இன்னும் பல நாடுகளில் இருந்தும் பார்க்கிறார்கள் என்று நினைக்கும் போது உண்மையில் நம் வலைதளத்தினை பார்க்க வந்தார்களா அல்லது தவறி நம் வலையில் விழுந்தவர்களா என்றுகூட கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஆனால் ஒரு விஷயம் உறுதியாகத் தெரிந்தது.  தமிழா்கள் உலக நாடுகளில் பரவிக் கிடப்பதுபோல வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று.

என்னுடைய நண்பர்கள் சிலர் என்னுடைய பதிவுகளை பார்த்துவிட்டு பாராட்டும்போது அது அவா்களின் அன்பின் மிகுதி என்ற அளவில் மட்டுமே எடுத்துக் கொள்வேனே தவிர என்னை நான் ஒரு படைப்பாளியாக என்னை இதுவரை நினைத்துக் கொண்டதில்லை.

ஒரு வாசகனாக நான் படித்த அறிந்த விஷயங்களை மற்றவா்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன். அவ்வளவுதான்.  என்னுடைய எழுத்திற்கும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதால் இனி பகிர்வதை at least வாரத்திற்கு ஒருமுறை என்று முறைப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

என்னுடைய ”கண்கவர் கயிலாய மலையும் மாசற்ற மானசரோவர் ஏரியும்” என்ற புத்தகத்திற்கு பிறகு ஆழ்நிலைத் தியானம் குறித்து ”மகிழ்ச்சியின் மந்திரம் ஆழ்நிலை தியானம்” என்ற புத்தகத்தினை எழுதியுள்ளேன். 

கயிலாய மலை யாத்திரை அனுபவத்தினைப் போலவே இதுவும் தியானம் குறித்த என்னுடைய அனுபவம்தான்.  ஆழ்நிலை தியானத்தினை உலகுக்கு வழங்கிய மகரிஷி மகேஷ் யோகியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ஜனவரி மாதம் 12-ம் நாள் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. 

(என்னுடைய இந்தப் புத்தகத்திற்கும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தமிழக முன்னாள் முதல்வா் திரு. பன்னீர்செல்வம் அவா்கள் பெரினாவில் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் ????).


மீண்டும் சந்திப்போம்.


Saturday, February 18, 2017

வாழ்க ஜனநாயகம்


மீண்டும் ஒரு முறை நாம் ஓட்டு போடும் போது நம் விரலில் வைக்கப்படும் மையை நம் முகத்தில் பூசி விட்டாா்கள் நமது மாண்பு மிகுக்கள்.

இதைப் போன்ற சட்டசபை நிகழ்வுகள் நமக்குப் புதிதல்ல.  அண்ணா மறைவுக்குப் பின்பும், எம்ஜிஆா் மறைவுக்கு பின்பும் ஏற்பட்ட கலாட்டாக்களின் மறு ஒளிபரப்புதான் இன்று நடந்தது. The dust will settle soon.  

செல்வி ஜெயலலிதாவும் அரசியலில் நிறைய  நாடகங்களை அரங்கேற்றியவா்தான். ஆனால் அதை மிகக் கச்சிதமாக நிறைவேற்றி அவருக்கான ஆதரவை திரட்டிவிடுவாா்.  நாடகம் என்று தெரிந்தே நம்பும் மக்கள் நாம். கலைஞரும் அதில் ஜித்தா்.   ஆனால் திரு. ஸ்டாலினுக்கு அந்த ”ஓரங்க நாடகம்” சாியாக கைவரவில்லை.  சேலை கலைந்து ஜெயலலிதா சட்டசபையில் இருந்து வெளிவந்தபோது கிடைத்த அனுதாபம் சட்டை கிழிந்து பனியன் தெரிய சட்டசபையில் இருந்து இன்று வெளிவந்த ஸ்டாலினுக்கு கண்டிப்பாக கிடைக்காது.   அவருக்கு இருந்த Gentleman என்ற பிம்பத்தையும் கொஞ்சம் குறைத்துக் கொண்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

தளபதியின் தளபதிகள் இன்று சட்டசபையில் போட்ட ”குத்தாட்டம்” எடப்பாடி கும்பலின் தகிடுதத்தங்களை மறைக்கும் அளவிற்கு அதிகமாகிவிட்டது.

இன்றைய சட்டசபை நிகழ்வுகளில் எனக்கு ஆறுதலாக இருந்த ஒரே விஷயம் ஓபிஎஸ் அணியினர் மிகவும் கண்ணியமான முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தவிதம்.  ஒவ்வொரு பிரிவாக சபாநாயகா் வாக்கு எடுக்கும் போது ஒவ்வொரு பிரிவிலும் ஒன்று அல்லது இரண்டு போ் மட்டுமே ஓபிஎஸ் அணியில் இருந்தாலும் தைரியமாக எழுந்து நின்று தங்கள் எதிா்ப்பை பதிவு செய்த துணிவை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

எடப்பாடி திரு. பழனிசாமி அவா்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் இன்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  முதலில் அவருக்கு வாழ்த்துக்கள்.  ஆனால் இந்த வெற்றி அவருக்கு நிலையும் இல்லை அதற்கு அவருக்கு தகுதியும் இல்லை. எடப்பாடியாா் என்ற தனி நபா் மிகவும் நல்ல நபராகக்கூட இருக்கலாம். ஆனால் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்ட ஒருவரின் ஆசியோடும் ஆலோசனைப்படியும் ஒருவா் நம்மை ஆளவேண்டி இருந்தால் அது நம் தமிழக மக்கள் எல்லோருக்கும் கேவலம்.

மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவாா் - தம் மக்கள் நலம் ஒன்றேதான் கருத்தில் கொள்ளுவார் என்று கலைஞரையும் குடும்ப அரசியலையும் எதிர்த்தே கட்சியை வளர்த்தவா்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும். ஆனால் எடப்பாடி முதல்வரானது உறுதியான உடனே திருவாளர் தினகரன் அவா்கள் பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டார்.  இனி சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் மீண்டும் தமிழகத்தை வளைக்க ஆரம்பிக்கும்.

இனி நம் முதல்வா் வாரத்திற்கு ஒருமுறை பெங்களுரு சென்று சின்னம்மாவிடமிருந்து ஆசியையும் ஆலோசனையையும் பெற்று வந்து நம்மை பரிபாலிப்பாா்.

கடவுளை நம்புவோம்.  நல்லதே நடக்கும். 

ஓம் ஸ்ரீ ஆளுநர் வித்யாசாகராய நமஹ. 


Sunday, January 22, 2017

போதும் இந்தப் போராட்டம் (இப்போதைக்கு)


ஆங்கிலத்தில் Timing என்று சொல்வார்கள்.  அதாவது எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கும் அல்லது முடிப்பதற்கும் சரியான நேரம் என்று ஒன்று உண்டு.  இதற்கும் நாம் நல்லநேரம் பார்ப்பதற்கும் சம்மந்தமில்லை.  சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படும் செயல் எப்படி வெற்றிகரமாக முடியுமோ அப்படித்தான் ஒரு செயலை சரியான நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவதும்.

ஜல்லிக்கட்டு விஷயமும் அப்படித்தான் எனக்குப் படுகிறது.  இந்தப் போராட்டம் ஆரம்பித்ததும் அது மிகப் பெரிய தன்னெழுச்சியான போராட்டமுமாக மாறியதும் வரலாறு.  தமிழா் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.  ஆனால் அந்தப் போராட்டத்தினை முடிக்க இப்போது அந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தவா்கள் தாமதப்படுத்தும் ஒவ்வொரு கணமும் அந்தப் போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்வது மட்டுமல்லாமல், விஷமிகள் அல்லது புல்லுருவிகள் இந்த மக்கள் சக்தியை தங்களுடைய சுயநலத்துக்காக மாற்றக் கூடிய அபாயம் பெருமளவில் இருக்கிறது.  அதற்கு நம் இளைஞா்கள் பகடைக் காய்களாகிவிடக் கூடாது.

என்னைப் பொறுத்த வரையில் தமிழக அரசின் இந்த அவசரச் சட்டம் இப்போது நிரந்தரத் தீர்வு இல்லையென்றாலும் கண்டிப்பாக நிரந்தரத் தீா்வுக்கான முயற்சியாக கண்டிப்பாக அமையும்.  இந்த சட்டம் (Ordinance) ஆறுமாத காலத்திற்கு மட்டும்தான் செல்லுபடியாகும் என்றாலும் அதற்குள் கண்டிப்பாக அரசாங்கம் இதை நிரந்தரமாக்க எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.  இத்தகைய போராட்டத்தினை பார்த்த பிறகு எந்த அரசாங்கமும் இந்தச் சட்டத்தினை நிரந்தரமாக்கத்தான் கண்டிப்பாக முயற்சி செய்யும்.  அப்படி செய்யாத பட்சத்தில் மீண்டும் மக்கள் தங்களுடைய சக்தியை இதற்கு மேலாகக் காட்டலாம்.

ஆனால் இப்போது போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர தாமதிக்கும் நேரத்தில் இந்தப் போராட்டம் திசை மாறிப் போவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் மட்டுமல்ல, அதற்கான விஷயங்களும் நடக்க ஆரம்பித்திருக்கின்றன.

இப்போது Social Media வில் சில செய்திகள் வருகின்றன.  அதாவது நாம் தமிழா் என்பது உண்மையாக இருந்தால் குடியரசு தினத்தினை கொண்டாடக் கூடாது.  நம் தேசியக் கொடியை அன்று அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்பது போன்ற செய்திகள்தான் அவை.

நாம் தமிழா் என்று பெருமைப்படும் ஒரு விஷயத்தினை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகளுக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ இரையாகி விடக்கூடாது.
நாம் தமிழா் என்பதற்கு பெருமைப்படும் அதே நேரத்தில் நாம் இந்தியர்  என்பதற்காகவும் பெருமைப்படும் மக்கள்தான் இங்கு அதிகம்.  அதனால் நாம் மிகவும் கவனமாக இருந்து இத்தகைய களைகளை முதலிலேயெ பிடுங்கி எறிந்துவிட வேண்டும்.


ஏனென்றால் நம் வெற்றியை வாழ்த்தும் வாய்கள் இங்கே குறைவுதான்.  ஆனால் நாம் தவறுதலாக தடுக்கி விழுந்தாலும் கை கொட்டி சிரிக்க இங்கே ஆயிரக்கணக்கான கைகள் தயாராக இருக்கின்றன.  ஏனென்றால் தமிழரின் இந்த மாபெரும் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாமல் எத்தனையோ வயிறுகள் எரிந்துகொண்டு இருக்கின்றன. நாம்தான் கவனமுடன் இருக்க வேண்டும்.


Friday, January 20, 2017

வாடி வாசலில் இனி ஆடிக் கொண்டாட்டம்


At last நம் இளைஞா்கள் சாதித்து காட்டிவிட்டார்கள்.  வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட்டார்கள்.  இனி வெற்றிக் கோப்பையை வாங்க வேண்டிய சம்பிரதாயம் மட்டும்தான் பாக்கி. அதுவும் அநேகமாக இந்த ஞாயிற்றுக் கிழமையே கூட இருக்கலாம்.

சென்னைவாசியான என்னைப் போன்றவா்களுக்கும் இன்னும் பலருக்கும் இந்த வருடம் வரை ஜல்லிக்கட்டைப் பற்றி பெரிதாக ஒன்றும் நினைக்கக் கூடிய அளவில் இருந்தது இல்லை. கிராமப் புறங்களில் பொங்கல் சமயத்தில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு என்ற அளவில் மட்டுமே அது இருந்தது.  ஆனால் இந்த விளையாட்டுக்கு பின்னனியில் இருக்கும் நுணுக்கமான அரசியலைப் பார்க்கும்போதுதான் இந்த இளைஞா்களின் தன்னெழுச்சியான போராட்டத்தின் அழுத்தமான காரணம் புரிந்தது.

இப்போது கூட நிறையப் போ் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாக மட்டும் இதை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  அப்படி இருந்தால் ஜல்லிக்கட்டுப் பற்றி அதிகம் தெரியாத அல்லது அந்த விளையாட்டு குறித்த அதிக அக்கறை இல்லாத பல லட்சக்கணக்கான மக்கள் இதை தங்கள் போராட்டமாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.   இது உண்மையில், நாம் நம்பும் நம் தலைவா்கள் நம்மை வார்த்தை ஜாலம் செய்து ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை ஏமாற்றுகிறார்களே என்ற கோபத்தின் வெளிப்பாடுதான்.  இனி இவா்களை நம்பியது போதும்.  நாமே நமக்கானதை போராடிப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார்கள்.  அதில் முதல் வெற்றியும் பெற்று விட்டார்கள். 

அரசியல், மதம், இனம் என்று பல அணிகளாக இருந்த தமிழ் மக்கள் இன்று Team தமிழ்நாடு என்ற ஒரே அணியாக மாறி சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.  இந்த விழிப்புணர்வு தொடா்ந்தால் வருங்காலத்தில் இந்தியா கண்டிப்பாக வல்லரசாகும். 

சென்னை மெரினாவில் நடக்கும் இந்தப் போராட்டத்தின் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.  அதில் தமிழனாகவும், சென்னைவாசியாகவும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சியில் ஜல்லிக்கட்டு குறித்த சில Tit Bits.

நாடா ? மாடா ? என்ன தேவை உங்களுக்கு.  எங்களுக்குத் தேவை நாட்டு மாடு.

இன்று ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால் நாளை ”ஜல்லிக்கட்டு இதிகாசம்” என்ற புத்தகத்தை வருங்கால வைரமுத்து எவராவது எழுத வேண்டியிருக்கும்.

மாடு முட்டி செத்த மனிதா் உண்டு, மனிதர் முட்டி செத்த மாடு உண்டா ?

இது காளைக்கான போராட்டம் மட்டுமல்ல, நமது நாளைக்கான போராட்டமும் கூட.

அரசியல்வாதிகளே நீங்கள் குனிந்து குனிந்து எங்களையும் உலக அரங்கில் குனிய வைத்தீர்கள். காளையரே, கன்னியரே  நீங்கள் நெஞ்சம் நிமிர்த்தி எங்களையும் நிமிர வைத்து விட்டீர்கள்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் வழித்தோன்றல்கள் நாங்கள். மிருகவதை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்காதீா்கள்.

வாடி வாசலில் இனி ஆடிக் கொண்டாட்டம்.

Wednesday, January 18, 2017

தும்பை விட்டு விட்டு ......


சட்டக் கல்லூரியில் படிக்கும் எனது மகள் நிவாஷினி இன்று காலை கல்லூரி சென்றவுடன் போன் செய்தாள் .  "அப்பா இன்று எங்கள் college strike. எல்லோரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக "மெரினா" செல்கிறார்கள். நானும் செல்லட்டுமா?" என்று கேட்டாள்.  ஒரு அப்பாவாக ஒரு சின்ன தயக்கம் எனக்குத் தோன்றியது.  அங்கே சென்று ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்று.  

உடனே இன்னொரு எண்ணமும் தோன்றியது.  அங்கே போராடும் மாணவ மாணவிகள் எல்லோருக்கும் பெற்றோர்கள் இருப்பார்களே.  அந்த மாணவர்கள் எல்லாம் தங்களுடைய சுயநலத்துக்காகவா போராடுகிறார்கள். இப்படி பொது நலத்துக்காக போராடும்போது, "நீ மட்டும் போகாதே. பத்திரமாக வீடு வந்து விடு" என்று சொல்வது எவ்வளவு சுயநலமாக இருக்கும் என்று தோன்றியது. "பத்திரமாக போய் விட்டு வா" வாழ்த்திச் சொல்லி அனுப்பினேன். எனது மனைவியும் என் மனநிலையில்தான் இருந்தார்.

எனக்கு நினைவு தெரிந்து தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக ஒரு போராட்டத்தில் இறங்கி இருப்பது இப்போதுதான்.  ஒரு பலமான அரசியல் தலைமை இல்லை என்பதும் ஒரு காரணம் என்றாலும்,  நம்முடைய இளைஞர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களில் மிகுந்த கோபம் கொண்டு அதை எதிர்ப்பதற்கு ஒரு காரணியாக ஜல்லிக்கட்டை கையில் எடுத்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.  அது உண்மையாக இருந்தால் ஜல்லிக்கட்டு is just the beginning.

தற்போதைய நம்முடைய இளைஞர்கள் பொதுவாக நாட்டு நலனைப் பற்றி அவ்வளவு கவலைப் படாமல்  தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார்கள் என்ற  பொதுவான குற்றச்ச்சாட்டை இந்தப் போராட்டம் தகர்த்து ஏறிந்து இருக்கிறது.

முன்பெல்லாம் corporate media சொல்வதுதான் நியூஸ்.  இப்போது social media எல்லா விஷயங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக பிடுங்கி விடுகிறார்கள். மக்களை முட்டாளாக்க நினைக்கும் அரசியல்வாதிகளை மக்கள் முட்டாளாக்கி விடுவார்கள்.  அதனால்தான் போஸ்டர்  அடித்து அது காய்வதற்குள் சாணி அடித்து விடுகிறார்கள்.  

இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் இந்த இரண்டு மூன்று நாட்களாக நடக்கும் இந்தப் போராட்டம் மிக மிக பொறுமையுடனும் பொறுப்பாகவும் நடந்து கொண்டிருக்கிறது.  இத்தனை லட்சம் இளைஞர்கள் திரண்டிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு எவ்வளவு போலீஸ் போட்டாலும் பத்தாது.

இந்தப் போராட்டத்தை சீக்கிரம்  நல்ல முறையில் முடிவுக்கு கொண்டு வருவது அரசாங்கத்தின் கையில் இருக்கிறது.  ஏனென்றால் எதற்கும் ஒரு boiling point இருக்கிறது.  நிலைமை கைமீறாமல் தடுப்பது அரசாங்கத்தின் முதல் கடமை.  ஜல்லிக்கட்டு போராட்டம் என்பதால் இந்த உதாரணம் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறன்.  "தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க வேண்டாம்".

இளைஞர்களின் அடுத்தப் போராட்டம் டாஸ்மாக்கை மூடுவதற்கும், மணல் கொள்ளைகளை தடுத்து நீர்நிலைகளை காப்பதற்குமாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.  வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களாய் நம் இயற்கை அன்னை வெள்ளமாய் 2015 ல் மழை பொழிந்தும் இப்போது அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கிறோம்.  இதை வெட்கக் கேடு என்று சொல்வதா அல்லது சாபக் கேடு என்று சொல்வதா ?  இன்னொரு நல்ல மழை வந்தாவது நம் பிரச்சினை குறையட்டும் என்று இயற்கையிடம் பிரார்த்திப்பதைத் தவிர இப்போது நமக்கு வேறு வழியில்லை. 

எண்ணங்களை விதைத்து வைப்போம்.  சீக்கிரம் துளிர்க்கட்டும்..