Friday, October 6, 2017

சுபம் உண்டாக. சுபம்


நேற்று மதுரையிலிருந்து நண்பா் செந்தில் அழைத்திருந்தார்.  என்ன சார் Blog எழுதுவதையே விட்டுவிட்டீா்களா ? கடைசியாக மே மாதம் 2-ம் தேதி எழுதியிருக்கிறீா்கள்.  அதற்குப் பிறகு ஒன்றையும் காணோம் என்று மாதம் தேதியுடன் குறிப்பிட்டிருந்தார்.  பிறகுதான் நானே கவனித்தேன்.  நாட்கள் வாரங்களாகவும் மாதங்களாகவும் பறந்து கொண்டிருப்பதை.

ஏன் எழுதவில்லை என்று என்ன காரணம் சொன்னாலும் அது வெறும் lame excuse தான்.  மாதத்தில் ஒரு சில மணி நேரங்களை இதற்காக செலவிடுவது என்பது ஒரு பெரிய விஷயமில்லை.  நம் எழுத்தை பின் தொடா்ந்து படிக்கும் செந்தில் போன்ற நண்பர்களுக்காகவாவது தொடா்ச்சியாக நிறைய இடைவெளி இல்லாமல் எழுத வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.  ஏற்கனவே ஒரு தடவை இப்படி முடிவெடுத்திருக்கிறேன்.  அதனால் என்ன – முடிவு என்பதும் முடிவில்லாமல் இருப்பதுதானே ?

எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.  கமலின் அரசியல் பிரவேசம், கழக ஆட்சி கவிழுமா ? என்பதில் இருந்து நம்மை சுற்றி நடக்கும் ஆயிரம் விஷயங்களை எழுதலாம்.  ஆனால் அதில் what is our intake? என்பதுதான் மிக முக்கியம்.

நேற்று செந்தில் அழைத்து முடித்தவுடன், வள்ளலாரின் 195 வது அவதார தினம் என்ற செய்தி கண்ணில் பட்டது.  அதனால் வள்ளலாரின் சில சிந்தனைகளையே இன்று பதிவு செய்யலாம் என்று தோன்றியது.

”வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் பிறந்த ஊரில், பயிர் வாடியவுடன் அதை பிளாட் போட்டு அதற்கு வள்ளலார் நகர் என்றே பெயர் வைக்கும் மனிதர்கள் இருக்கும் இன்றைய சமூகத்தின்  நிலையைப் பற்றி எழுத்தாளரும் பேச்சாளருமான பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் கருத்தை என்னுடைய கட்டுரை ஒன்றி்ல் பதிவு செய்திருந்தேன்.  டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் மூலமாக அதை அறிந்த பாரதி கிருஷ்ணகுமார் அவா்கள் உடனே என்னை அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார். 

அவர் பாராட்டியது இதுதான்.  நீங்கள் நான் சொன்ன கருத்தை சொன்னது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், அதை நான்தான் சொன்னேன் என்று என்னுடைய பெயரையும் சோ்த்து எழுதியது அதைவிட மகிழ்ச்சி.  காரணம் கருத்துத் திருட்டு (knowledge theft) அதிகம் இருக்கும் காலம் இது.  பல நேரங்களில் மற்றவர் கருத்தையே (அவா்கள் இருக்கும்போதே) தன் கருத்தாக பலரிடம் சொல்லி பாராட்டு பெறும் மனிதர்கள் அதிகம் வாழும் உலகம் இது.  அதனால் என் பெயரை மறக்காமல் சொன்ன உங்கள் நோ்மை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.  அதனால்தான் உடனடியாக உங்களை அழைத்துப் பாராட்டினேன் என்று சொன்னார்.  இதைச் சொல்லுவதன் நோக்கம் என்னுடைய நோ்மையை அவர் பாராட்டினார் என்பதால் (மட்டும்) அல்ல, அந்தப் பாராட்டில் அவருடைய பெருந்தன்மைதான் அதிகம் வெளிப்பட்டது.  வஞ்சம் இல்லாமல் பாராட்டும் நெஞ்சம் இருந்துவிட்டால் நாம் வாழ்க்கையில் பக்குவப்பட்டுவிட்டோம் என்று அா்த்தம்.

இந்த சம்பவத்தினை நினைவு கூறுவதற்கு மற்றொரு காரணம் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் அவருடைய நண்பா்களுக்கு எழுதிய பல கடிதங்கள் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

”சுபம் உண்டாக. சுபம்
அன்பு அறிவு ஒழுக்கம் கருணை முதலிய நன்மைகளாற் சிறந்து சிவத்தைப் பொருளென் றுணர்ந்து சன்மார்க்கத்தில் விளங்குகின்ற தங்கட்கு வந்தனம் வந்தனம்.

தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விருப்பமுடையவனாக விருக்கிறேன்.”

மேற்கூறிய வார்த்தைகளில் வள்ளலாரின் நண்பர்களுடைய புகழை விட அதை அகமகிழ்ந்து பாராட்டிப் பேசும் வள்ளலாரின் பெருங்கருணைதான் நமக்குத் தெரிகிறது.

மேலும் பல கடிதங்களில் அவா் தன்னுடைய நண்பர்களின் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கரையுடன் இருந்தது தெரிய வருகிறது. அவருடைய நண்பருக்கு அவர் எழுதிய கடிதத்தில் அவா் இப்படிச் சொல்கிறார் – ”தாங்கள் தங்கள் தேகத்தை பொன்போல சர்வ சாக்கிரதையோடு பாராட்டிக் கொண்டு வரவேண்டும்.

இதில் நமக்கான செய்தியும் இருக்கிறது.  நாமும் பொதுவாக நம்முடைய  ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வண்டி ஓடிக்கொண்டிருக்கும் வரை ஒன்றும் தெரிவதில்லை.  ஒரு சில நாட்கள் படுத்துவிட்டால்தான் தெரிகிறது ”உடலினை உறுதி செய்” என்று பாரதி சொன்னதும், ”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்று திருமூலா் சொன்னதும் எவ்வளவு சத்தியமான வாா்த்தைகள் என்று.  வள்ளலாரின் ”பொன் போல நமது உடலினை பார்த்துக்கொள்ள வேண்டும்” என்ற வார்த்தைப் பிரயோகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  இத்தகைய வார்த்தைகளுக்காகவது திருஅருட்பாவை முழுமையாக படிக்க வேண்டும்.

1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் நாள் பிறந்து 1874-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் நாள் மறைந்தவர் வள்ளலார்.  உண்மையிலேய ”மறைந்த” என்ற சொல் இவருக்குத்தான் பொருந்தும்.  இவர் மறைந்த நாள் தைப்பூசத் திருநாளாகும். அன்று அவர் தன்னுடைய அறைக்குள் சென்று உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு தன்னுடைய சீடர்களிடம் அறையைத் திறக்க வேண்டாம்.  திறந்தாலும் தன்னுடைய சரீர உடம்பில் இருக்கமாட்டேன். இறைவனுடன் கலந்து விடுவேன் என்று சொல்லிவிட்டார்.

கடைசியாக அன்றைய ஆங்கில அரசாங்கம் 1874-ம் ஆண்டு மே மாதம் அந்த அறையின் கதவைத் திறக்க ஆணையிட்டார்கள்.  திறந்து உள்ளே சென்றால் அங்கே வள்ளலாரின் உடல் இருந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை.

அதுதான் வடலுாரில் தற்போதுள்ள ”சித்தி வளாகம்” என்றழைக்கப்படும் ஆலயமாகும்.

வள்ளலாரைப் போன்ற பல மகான்கள் வாழும்போது மற்றுமொரு மனிதராய் தம்மைக் காட்டிக்கொண்டாலும் அவா்களின் ஆன்ம ஒளி அவா்களின் மறைவிற்குப் பின்னும் தம்முடைய இருப்பை நமக்கு உணா்த்திக் கொண்டே இருக்கும்.

சுமார் 51 ஆண்டுகளே வாழ்ந்து உடலால் மறைந்தாலும் இன்னும் அருட்பெரும் சோதியாய் தனிப் பெருங் கருணையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் வள்ளலாரின் நினைவைத் துாண்டிய செந்திலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


1 comment: