Sunday, December 21, 2014

ஆழி மழைக் கண்ணா


"ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்து
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்சங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்"

மேலே சொன்ன ஆண்டாள் திருப்பாவையின் பொருள் :

"மேகத்திற்கு அதிபதியான கண்ணா, கடல் நீர் முழுவதையும் எடுத்துக் கொண்டு மேலே செல். கண்ணனின் நிறம் போல் கருத்து, பத்மநாபன் கையில் உள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல மின்னலை வீசு.  வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலி எழுப்பி அவனது   வில்லில் இருந்து வெளிப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக.  மார்கழி நீராடுலக்காக எல்லா நீர் நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சி அடையச் செய்வாயாக".

கடல் நீர் ஆவியாகி பிறகு மேகமாகி மழை பொழிகிறது என்று இன்றைய அறிவியல் சொல்வதை போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறாள் ஆண்டாள்.  இப்படி பல விஷயங்களை நம்முடைய முன்னோர் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர்.  நாம்தான் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றோம்.

திருப்பாவையின் ஒவ்வொரு பாடலின் வரிகளும் positive vibration அளிப்பது என்பது என் கருத்து.  உதாரணத்திற்கு திருப்பாவையின் 3 வது பாசுரத்தில் வரும் சில வரிகள் "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து",  "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்" , "நீங்காத செல்வம்". இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.     

ஆண்டாளின் திருப்பாவையை நாம்தான் கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் (அது என்ன கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் என்று கேட்காதீர்கள் - but  ஆனா, நடு  centre  என்ற வகையில் புரிந்து கொள்ளவும்) மட்டும் நல்ல கணவன் கிடைப்பதற்காக படிக்க வேண்டும் என்று சுருக்கி விட்டோம்.

என்னைப் பொறுத்த வரை திருப்பாவையை ஆண்  பெண் என்று எல்லோரும் படிக்க வேண்டும்.

கல்யாணம் ஆகாத பெண்கள் (ஆண்களும்தான்) தினமும் திருப்பாவை பாசுரம் படித்தால் நல்ல வாழ்க்கைத் துணையும், நிறைந்த செல்வமும் கிடைக்கும் என்பது நம் பெரியவர்களின் நம்பிக்கை.

"நாம் கூட திருப்பாவை பாசுரங்கள் படித்திருந்தால் நமக்குக் கூட .........." என்று மணமான (I mean கல்யாணமான) சிலபேர் நினைக்கக் கூடும். கவலையே படாதீர்கள்.  இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை.  இப்போதாவது ஒழுங்காகப் படித்தால், கொஞ்சம் ஏடாகூடமாக வாழ்க்கை (துணை) இருந்தால் கூட, தட்டி சரி செய்துவிடுவார் நம் ஆண்டாள்.  




No comments:

Post a Comment