Saturday, October 17, 2015

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் ....


கூடவே இருந்தாலும் சில விசயங்களை நமக்கு பிடிப்பதில்லை (ஒரு வேளை  கூடவே இருப்பதால்தானோ  என்னவோ).  அப்படி ஒரு பாவப்பட்ட ஜன்மம் நம் வீட்டில் இருக்கும் பல்லி. (நீங்கள் உங்கள் கணவர் அல்லது மனைவி அல்லது வேறு ஏதாவது உறவை நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)

நம் வீட்டு பெண்கள் பல்லிக்கும் கரப்பானுக்கும் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.  ஒரு வேளை அவர்கள் அப்படி பயப்படுவதால்தான் ஆண்கள் பயப்படாமல் இருக்கிறோமோ (அல்லது பயப்படாமல் இருப்பது போல் இருக்கிறோமா)  என்றும்  தெரியவில்லை.

எங்கள் வீட்டு சமையல் அறையில் கடந்த சில நாட்களாக ஒரு சிறிய பல்லி சுற்றிக் கொண்டு இருந்தது. அதை வெளியேற்றச் சொல்லி  என் மனைவி இரண்டு நாட்களாக சொல்லியும். கொஞ்சம் பொறு அதுவாக போய் விடும் என்று சால்ஜாப்பு (சமாதானம்) சொல்லிக் கொண்டிரேந்தேன்.  ஆனால் அது போன மாதிரியாகத் தெரியவில்லை.

கடைசியாக அதை வெளியே விரட்டி விடுவது என்று முடிவெடுத்தேன். என்னுடைய  plan ஒரு துணியை அதன் மேல் போட்டு அப்படியே அலேக்காக தூக்கிச் சென்று வெளியில் விட்டு விடுவது.  அதன்படி ஒரு துணியை கையில் வைத்துக் கொண்டு அதன் அருகில் சென்றேன்.  என்னைப் பார்த்ததும் அந்த பல்லி தன தலையை மெல்லத் தூக்கி நாக்கைத் துருத்தி பாகுபலி வில்லன் போல ஜிப்ரிஷ் மொழியில் ஏதோ சொல்லியது.  அதை நானாகப் புரிந்து கொண்டது "என்னை வெளியில் தூக்கிப் போடுவதற்கு உனக்கு ஏன் இவ்வளவு நடுக்கம் ?"  ஒருவேளை என்னுடைய body vibration ஐ (உடல் அதிர்வுகள் - நடுக்கம் என்று தவறாகவோ அல்லது சரியாகவோ? புரிந்து கொள்ள வேண்டாம்) வைத்து அப்படி சொல்லியிருக்கக் கூடும் என்று நானாக புரிந்து கொண்டேன்.  என்னுடைய பயம் எல்லாம் பல்லியை விரட்டுகிறேன் பேர்வழி என்று சொல்லி அதற்கு குந்தகம் விளைவித்துவிடக் கூடாது என்பதுதான்

அதனால் பல்லி  என்ன நினைத்தது என்று கவலைப் படாமல் நான் வைத்திருந்த துணியை அதன் மேல் சார்த்தினேன் (போட்டேன் என்று சொன்னால் அது மிகவும் harsh ஆக இருக்கும்).  ஒரு இந்தியனாக என்னுடைய planning நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதே இந்தியனாக execution-ல் கோட்டை விட்டு விட்டேன்.  அந்த பல்லி துணியின் நடுவில் இருந்த சின்ன cycle gap ல் வெளிய வந்து விட்டது. வெளியில் வந்து என்னைப் பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்தது (அல்லது சிரிப்பது போல எனக்குப் பட்டது).

இப்போது அடுத்த plan ஆக ஒரு துடைப்பத்தை கையில் எடுத்துக் கொண்டு அதை வெளியில் தள்ளி விடலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் அந்த பல்லி என்ன நினைத்ததோ (எனக்கு அதிகம் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நினைதிருக்கலாம்)  குடு குடுவென்று பால்கனி பக்கம் ஓடியது.  எங்கள் வீடு இரண்டாவது மாடியில் இருந்தாலும் பல்லி மேலே இருந்து கீழே விழுந்தாலும் அதற்கு ஒன்றும் ஆகாது என்று என்று என் அறிவுக்கு ஏற்கனவே தெரிந்து இருந்ததால் அதை அங்கிருந்து தள்ளி விட்டு எட்டிப் பார்த்தேன்.  கீழே இருந்த மணலில் விழுந்த பல்லி எந்த சேதாரமும் இல்லாமல் ஓடியதைப் பார்த்து திருப்தியுடன் வீட்டுக்குள் வந்தேன்.

இந்த பதிவு பல்லியை விரட்டிய என் பராக்கிரமத்தை பறை சாற்றுவதற்காக அல்ல. பல்லி ஒரு சாதுவான அப்பிராணி.  அதை விரட்டுவதற்கு எந்த மெனக்கெடலும் தேவை இல்லை.

பின் எதற்கு இந்தப் பதிவு ?  பல்லியை துரத்திய பிறகு அது குறித்த சில விவரங்களை கூகுளில் தேடினேன்.  சில முக்கியமான விஷயங்கள் தெரிய வந்தது. அதில் சில :

முதலில் பல்லிக்கு பற்கள் கிடையாது.  அதனால் பல்லி நம்மை கடித்து விடுமோ என்ற பயம் தேவை இல்லை.

பல்லியின் உணவு பொதுவாக கரப்பான், கொசு, ஈ போன்ற insects தான். பல்லி ஒரு நாளில் சில நூறு insects ஐ தன்னுடைய உணவாக கபளீகரம் செய்துவிடும்.  பல்லி என்ற ஒரு ஜந்து (ஐந்து என்று படித்து விடவேண்டாம்) இல்லாவிட்டால் நம்முடைய வருமானத்தின் பெரும் பகுதியை Hit வாங்குவதற்கே செலவு செய்ய வேண்டி இருக்கும்.

இப்படி காசு செலவில்லாமல் நமது ஆரோக்கியத்தை காப்பாற்றுவது பல்லிகள்தான்.  

இதுவும் தவிர இந்து நம்பிக்கையில் பல்லி வீட்டில் இருந்தால் அதை ஒரு good vibration என்றுதான் சொல்கிறார்கள்.  

ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.  பல்லி வீட்டில் இருப்பது நம் யாருக்கும் எந்தக் கெடுதலும் இல்லை (சில சமயங்களில் அதற்குத் தான் கெடுதல்).  நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு செயல் உணவு பண்டங்களை ஒழுங்காக மூடி வைக்க வேண்டியதுதான்.

நான் பல்லிக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைத்து விடாதீர்கள். 

கண்ணதான் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது "பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா ?  யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்   எல்லாம் சௌக்கியமே. கருடன் சொன்னது" (அப்பாடா இன்று  கண்ணதாசனின் நினைவு நாள். அவரையும் நினைத்தாகி விட்டது)

ஆண்டவன் படைப்பில் எதுவுமே தேவை இல்லாத ஒன்றல்ல.  யாரும் (அல்லது எதுவும்) இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.


No comments:

Post a Comment