Wednesday, May 28, 2014

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ......

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ......


"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகன்
சான்றோன் எனக்கேட்ட தாய்".

வள்ளுவன் தாய் மகன் என்று குறிப்பிட்டு இருந்தாலும் இந்தக் குறள் தந்தை மகளுக்கும் பொருந்தும்.

எங்கள் மகள் நிவாஷினி (என்ற நிவி) CBSE பிளஸ் 2 தேர்வில் 500 க்கு 480 மதிப்பெண் பெற்று அவள் படிக்கும் மகிரிஷி வித்யா மந்திர் பள்ளியில் commerce பிரிவில் 2 வது இடம் (முதல் இடம் 482 மதிப்பெண்) பெற்ற தகவல் கிடைத்ததும் எனக்கு திருவள்ளுவரின் மேலே குறிப்பிட்ட திருக்குறள்தான் நினைவுக்கு வந்தது.

ஸ்கூல் first அல்லது ஸ்டேட் first என்ற கனவெல்லாம் எனக்கு எப்போதும் இருந்தது கிடையாது (அதாவது என் மகள் எடுப்பாள்  என்று -  நான் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்).  ஆனால் மதிப்பெண்ணை வைத்து மட்டுமே நாம் நினைத்த  கல்லூரியில் சுலபமாக இடம் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தினால் என் மகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.   அந்த ஆசைக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டாள் நிவி.

இங்கு ஒரு விசயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.  சுமார் 14 ஆண்டுகளுக்கு முன் நிவியை LKG சேர்க்கும்போது, எல்லா பெற்றோர்களையும் போலவே நாங்களும் நிவிக்கு, தகுதிக்கு மீறிய விசயங்களை மூளையில் திணித்துக் கொண்டிருந்தோம். எங்கள் பங்குக்கு  ஐந்து ஆறு திருக்குறளையும் எக்ஸ்ட்ராவாக  மனப்பாடம் செய்ய வைத்து அவளை interviewக்கு தயார் செய்தோம்.

ஆனால் முதல் ரவுண்டு interview விலேயே நிவி clean  bold  ஆகிவிட்டாள் (ஆகிவிட்டோம்).  நீங்கள் உங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாள் போட்டோ ஆல்பத்தை எடுத்து பாருங்கள்.  பெரும்பாலும் குழந்தையைத் தவிர அனைவரும் மெழுகுவர்த்தியை ஊதிக் கொண்டிருப்பார்கள்.  அதே போல் கேக்கை குழந்தைக்கு ஊட்டும் போது அது வாயை இறுக்கமாக மூடிக்  கொண்டிருக்கும்.  ஆனால் சுற்றியுள்ள அனைவரும் வாயை "ஆவேன்று" திறந்து கொண்டிருப்பார்கள்.

அப்போது நாங்களும் அந்த நிலையில்தான் இருந்தோம்.  திருக்குறளை நானும் என் மனைவியும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் நிவி வாயைத் திறக்கவேயில்லை.

"Child not able to speak" என்ற முத்திரையுடன் எங்களை தலைமை ஆசிரியர் அறைக்கு அனுப்பி விட்டார்கள்.

அன்றுதான் "counseling" என்றால் என்ன என்று நிவி எனக்கு முதன் முதலாக சொல்லிக் கொடுத்தாள்.  தலைமை ஆசிரியர் அறைக்கு செல்லும் முன் அவளை தனியே அழைத்துச் சென்று ஒரு ஐந்து நிமிடம் அவளிடம் திருக்குறள் ஒழுங்காகச்  சொன்னால் என்ன கிடைக்கும் என்று ஆசை காட்டியும் ஒழுங்காகச் சொல்லவில்லை என்றால் என்ன நடக்கும் என்று பயமுறுத்தியும் (ஆனால் உண்மையில் பயந்திருந்தது நாங்கள்தான்) அவளை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றோம்.

உள்ளே சென்றதும்  தலைமை ஆசிரியர் Radha மேடம் ரிபோர்ட்டை பார்த்துவிட்டு "என்னம்மா பேச மாட்டியா" என்று பரிவாக கேட்க, நாங்கள் பாவமாக பார்க்க, என்ன நினைத்தாளோ  என் மகள் - அருள் வாக்கு வந்தது போல் கட கடவென்று ஆறு திருக்குறளையும் ஒப்பித்து விட்டாள்.

தலைமை ஆசிரியர் ஆச்சரியமாக அவளைப் பார்த்து உன்னையா பேச மாட்டாய்  என்று சொன்னார்கள் என்று சொல்லி உடனே "Child eligible for Admission" என்று எழுதி எங்களை அனுப்பி வைத்தார்கள்.  அன்று முழுவதும் கடவுளுக்கு நன்றி சொன்னோம். 

இப்போதும் அதே கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டேயிருக்கிறோம். "இறைவா நன்றி."

   

 

 


No comments:

Post a Comment