Monday, January 12, 2015

விவேகானந்தர் பாறை

இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள். தேசிய இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் அவரைப் பற்றிய சில சிந்தனைகள்.
நமெக்கல்லாம் விவேகானந்தர் பாறை கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவில் உள்ளது என்று மட்டும்தான் தெரியும் (என்று நினைக்கிறன்).  அதன் வரலாற்றை கொஞ்சம் சுருக்கமாக தெரிந்து கொள்வோமா ?
துறவியாக இந்தியா முழுவதும் வலம்  வந்த விவேகானந்தர் கடைசியாக 1892 ம் ஆண்டு டிசம்பர் மாதம்  வந்து சேர்ந்த இடம் கன்னியாகுமரி. இங்கு வந்து சேர்ந்த போது அவரிடம் கையில் ஒரு பைசா கூட இல்லை. கடற்கரையில் இருந்து கொஞ்ச தூரத்தில் தெரிந்த அந்த ஒற்றைப் பாறையை பார்த்ததும் அதில் சென்று அமைதியாக தியானம் செய்ய விரும்பினார்.  ஆனால் அவரிடம் காசில்லாததால் படகோட்டி அவரை அழைத்து செல்ல முடியாது என்று கூறிவிட்டான்.
உடனே விவேகானந்தர் கொஞ்சமும் கவலைபடாமல் திமிங்கலங்களும் சுறா மீன்களும் நிறைந்த அந்த கடலில் குதித்து நீச்சல் அடித்துச் செல்லத் தொடங்கிவிட்டார்.  இங்கு ஒரு பெரிய படிப்பினையை சொல்லாமல் சொல்கிறார் சுவாமி விவேகானந்தர்.  வாழ்க்கையில் நாம் பிறருடைய உதவியை பெற்றுக் கொள்ளலாம்.  ஆனால் அப்படி உதவுவதற்கு யாரும் இல்லை என்றாலும்கூட தன்  கையே தனக்குதவி என்று தன்னம்பிக்கையுடன் நம் வாழ்க்கையில் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கவேண்டும். படகோட்டி மட்டும் என்னை அழைத்துச் சென்று இருந்தால் நான் சூப்பர் ஆக தியானம் செய்திருப்பேன் என்று சொல்லவில்லை.
அப்படி அவர் அந்த பாறைக்குச் சென்று சேர்ந்த நாள் ஒரு  Chiristmas தினம் - 25 டிசம்பர் 1892.  அந்த பாறையில் தொடர்ந்து 3 நாட்கள் தியானம் செய்து 28 ம் தேதியன்றுதான் கரைக்குத் திரும்பினார்.  
1970 ம் ஆண்டு திறக்கப்பட்ட விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டத் தொடங்கப்பட்ட ஆண்டு 1964.
சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, திரு ஏக்நாத் ரானடே என்பவற்றின் பெருமுயற்சியால் இந்த நினைவு மண்டபம் உருவானது.
இன்று எனக்கு என் நண்பர் சசி (Company Secretary) ஒரு மெயில் அனுப்பி இருந்தார்.   அதன் content கீழே.  தேங்க்ஸ் சசி.  
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்...
சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.
சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!)
சுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்று சொல்கிறீர்களா?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்.
சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை….
இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)
சுவாமி விவேகானந்தர் : சரியான பாதையில் போகும்போதும் தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றி என்பது பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது.
சுவாமி விவேகானந்தர் : கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : எப்பொழுதும், இனி எப்படி போகப்போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.
சுவாமி விவேகானந்தர் : இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பப்படும்போதுஎனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.
சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.
சுவாமி விவேகானந்தர் : கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!) அச்சத்தை விடு. நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்னை அல்ல. எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும். என்னை நம்பு



1 comment: