Saturday, April 25, 2015

ஜெ .கே - சில குறிப்புக்கள

ஒரு எழுத்தாளன் எழுதுவதை நிறுத்தி 25 ஆண்டுகளுக்குப் பிறகும் அவனுடைய மரணம் எல்லோராலும் பரவலாகப் பேசப்பட்டது திரு ஜெயகாந்தனாகத்தான் இருக்கும்.

ஜெ .கே என்று பிரியமுடன் அழைக்கப்படும் ஜெயகாந்தனின் எழுத்து எனக்கு  பரிச்சயமாக இருந்தாலும், அவரின் எழுத்து வீரியத்தையும் அவரின் குணநலன்களையும் முழுமையாக அறிந்து கொண்டது எங்கள் Discovery Book Palace சார்பில் நடத்தப்பட்ட அவரது அஞ்சலிக் கூட்டத்தில்தான்.

முகநூலில் (Facebook) பத்து வரிகளுக்கு மேல் தமிழில் ஒரு தகவல் வந்தாலே படிக்கச் சிரமப்படும் இன்றைய தலைமுறைக்கு (நான் பொதுவாச் சொன்னேன்) ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.  ஆனால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த நமது சமூக சூழ்நிலையோடு ஒப்பிடும்போது, அவருடைய அக்னிப் பிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற கதைகள் அந்தக் காலத்தில் எந்த அளவு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் என்று உணர முடிகிறது.

மது, கஞ்சா என்ற அவரது வாழ்க்கை முறை எனக்கு உடன்பாடில்லாதது. ஆனால் பாசாங்கு இல்லாத அவரது வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்தமானது. நாம் எல்லோரும் பெரும்பாலும் நமது செய்கைக்கு நியாயம் கற்பிப்போம். நாம் சொல்வதையும் செய்வதையும் மற்றவர்கள் அங்கிகரிக்க வேண்டும் என்று நினைப்போம்.   ஆனால் எனக்கு சரி உனக்கு தவறு என்றால் உனக்கு சரி எனக்குத் தவறாகும் என்ற அவரது சிந்தனை, அவரது எந்த செயலையும் அவர்  நியாயப் படுத்தவும் இல்லை, பிறர் அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இல்லை.  உன் வாழ்கையை நீ வாழ். என் வாழ்க்கையை  நான் வாழ்கிறேன் என்ற அளவில் வாழ்ந்து சென்றவர் அவர்.

பொதுவாக இருவர் பேசிக் கொண்டிருக்கும் போது,  தங்களைப் ப ற்றிய  தற்பெருமையோ அல்லது மூன்றாவது மனிதரைப் பற்றிய அவதூறோ  (அல்லது கிசுகிசுப்போ) இடம் பெறுவது இப்போதெல்லாம் வாடிக்கையான ஒன்று.  ஆனால் ஜே.கே. இருந்த இடத்தில இந்த இரண்டும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.  இது நாமெல்லோரும் பின்பற்றவேண்டிய மிகச் சிறந்த பண்பாகும்.

ஜே.கே. கதைகள் மட்டும்தான் எழுதுவார் என்று நினைத்திருந்தேன்.  ஆனால் அவர் மிகச் சிறந்த திரைப்படப் பாடல்கள் சிலவற்றையும் எழுதியுள்ளார் என்பது இப்போதுதான் தெரிந்தது.   அவருடைய ஒரு பாடலின் சில வரிகள் - பருவ மழை பொழியப்  பொழிய பயிர்களெல்லாம் செழிப்பாகும்.  ஆனால் பருவ மழை பொழிந்ததால் இவள் வாழ்க்கை பாலைவனம் ஆகியது என்ற வரிகளின் மூலம்  வாழ்கையில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவலத்தை மிகச் சில வரிகளில் உணர்த்திவிட்டார்.

பேச்சு என்பது காற்றில் கரைந்துவிடக் கூடியது.  எழுத்துதான் நிரந்தரமான பேச்சு.  இது ஜெயகாந்தன் சொன்னது.  அதனால்தானோ என்னவோ அவருடைய மூச்சு நின்ற பின்னும் அவரது பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இனிமேல்தான் ஜெயகாந்தனின் எழுத்துக்களை முழுமையாக படிக்க வேண்டும்.  அப்போது தேவைபட்டால் அவரது எழுத்துகளைப் பற்றி மீண்டும் எழுதுகிறேன்.






No comments:

Post a Comment