Thursday, October 22, 2015

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் ....

என்னுடைய Blog-இல் இது 50-வது பதிவு. இன்று விஜயதசமி என்பதால் 50-வது பதிவை இன்றே எழுதி விடலாம் என்று முடிவெடுத்தேன். 


உண்மையில் சொல்வதென்றால் blog எழுதுவதை விளையாட்டாகத்தான் ஆரம்பித்தேன்.  ஆனால் விளையாட்டு வினையாகிவிட்டது (வினை என்பதை செயல் என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளவும்).  


இந்த நேரத்தில் இருவரை நான் நினைத்துக் கொள்ளவேண்டும்.  ஒன்று என் மகன் கோகுல். அவன்தான் ஒருமுறை சொன்னான். "அப்பா நீங்கள் இவ்வளவு புத்தகங்களை படிக்கிறீங்களே.  ஏன் உங்கள் புத்தகம் ஒன்று கூட இல்லை". வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத சிறுவனாக இருந்தாலும், தந்தைக்கு உபதேசித்த மந்திரமாக அந்த வார்த்தைகள் எனக்குப் பட்டது. அப்போதுதான் என்னுடைய எண்ணங்களை ஏதோ ஒரு வகையில் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

இரண்டாவது, நண்பர் மோகன்குமார். Blog-ல் எழுதுவது குறித்த சில அடிப்படை விஷயங்களை ஆரம்பத்தில் சொன்னது அவர்தான். .   


எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் Discovery Book Palace திரு வேதியப்பன் மூலமாக எனக்கு நன்கு அறிமுகம் ஆனவர்.  ஒருமுறை பேசும் போது அவர் சொன்னது. எழுத்தாளன் என்பவன் லட்சக் கணக்கான வாசகர்களை கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை.  சில நூறு பேராவது உங்கள் எழுத்தை விரும்பினால், உங்கள் எழுத்துக்கள் அவர்களை எதோ ஒருவகையில் பாதித்தால் நீங்களும் ஒரு எழுத்தாளர்தான் என்று.  


என்னுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் என் நண்பர்கள் என்னுடைய எழுத்து நடை நன்றாக இருப்பதாக சொன்னபோது ஒரு திருப்தி இருந்தாலும் அவர்களுக்கு என்னைப் பிடிக்கும், அதனால் என்னுடைய எழுத்தைப் பிடித்திருகிறது என்ற அளவில்தான் அவர்களுடைய feedback-ஐ எடுத்துக் கொண்டேன்.


ஆனால் எனக்கு அறிமுகம் இல்லாத பல நண்பர்களும் என்னுடைய பதிவுகளைப் பாராட்டிய போது, ஓகே நானும் rowdy தான் என்று காலரைத்  தூக்கிவிட்டுக் கொண்டேன். ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும். நான் செல்ல வேண்டிய தூரம் மிக மிக அதிகம் என்பது. அதனால் என்ன இது ஓடிக் கடக்கும் ஓட்டப்பந்தயமா என்ன ? என்னுடைய கால் தடங்களை அழுத்தமாக பதித்து மெதுவாகவே செல்ல விரும்புகிறேன்.  எவ்வளவு அதிகம் எழுதுகிறேன் என்பதில் என் கவனம் இல்லை. எவ்வளவு அழுத்தமாக எழுதுகிறேன் என்பதில்தான்  என் கவனம் எல்லாம். 

என்னுடைய பதிவுகளின் நோக்கம் "இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்" என்பதல்ல.  பொருளாதாரத் தேவைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்  இந்த அவசர வாழ்வில், காலையில் செய்த தவற்றை நினைத்து மாலையில் மனம் வருந்தி மீண்டும் மறு நாள் காலையில் அதே தவற்றைச் செய்யும் நம்முடைய சராசரி மனித வாழ்வில் எப்படியாவது ஒரு படி மேலே வர வேண்டும் என்ற நம்முடைய இடையறாத போராட்டத்தில் கிடைக்கும் சில அனுபவங்களை குறித்து வைத்துக் கொள்ளும் ஒரு டைரிக் குறிப்பாகத்தான் இதை நினைத்துக் கொள்கிறேன்.  அதற்காக மாதத்தில் சில மணி நேரங்களை செலவிடுவது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. 

சுற்றமும் நட்பும் சூழ இருப்பது ஒரு காலம்.  சுற்றமும் நட்பும் சூழ இருந்த நாட்களை நினைத்துக் கொண்டு தனிமையில் இருப்பது ஒரு காலம்.  எல்லாக் காலங்களிலும் யாரையாவது நாம் காயப் படுத்திக் கொண்டோ அல்லது யாராலோ நாம் காயம் அடைந்து கொண்டோ தான் இருக்கிறோம்.

எந்தக் காலமாக இருந்தாலும் யாரையும் காயப்படுத்தாமலும் யாராலும் காயப்படமாலும் நம்மால் சந்தோஷமாக வாழ முடிந்தால் நாம் வாழ்கையில் வென்று விட்டோம் என்று அர்த்தம்.  அந்த அர்த்தத்திற்கு இந்த டைரிக் குறிப்புக்கள் உதவும் என்று நம்புகிறேன்.  

ரமண மகரிஷி சொல்வது போல் "பிறர்க்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்". அந்த வகையில் இந்தப் பதிவுகள் பிறருக்கு என்று சொல்வதை விட முதலில் எனக்கு. 

நம்மால் முடியும் போதே நமக்குப் பிடித்த சில நல்ல விஷயங்களை செய்து விட வேண்டும். பிறகு முடியாத போது அப்போதே செய்திருக்கலாமே என்று புலம்புவதால் எந்தப் பயனும் இல்லை.

பெரியாழ்வார் திருமொழியில் ரங்கநாதனை நினைத்துச் சொல்கிறார். எனக்கு மூப்பு வந்து நான் நலியும் போது உன்னை நினைக்க முடியுமா என்று தெரியவில்லை.  அதனால் இப்போது நான் நன்றாக இருக்கும்போது உன் நாமத்தைச் சொல்லி விடுகிறேன்.  இப்போது நான் சொல்வதையே என்னுடைய கடைசிக் காலத்தில் சொல்வதாக நினைத்து என்னை கரையேற்றுவயாக என்று, அந்தப் பாடல் இதுதான்.

துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் 
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன் 

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே

என்னுடைய பதிவுகளும் கிட்டத்தட்ட அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் category தான்.

இந்த 50-வது பதிவை எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் கவிதையோடு முடிக்கிறேன் (கண்டிப்பாக இதற்கு translation தேவை இல்லை என்று நினைக்கிறன்).

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

3 comments:

  1. 50வது பதிவுக்கு வாழ்த்துகள்.. என்னை பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றிகள் :)

    எஸ். ரா சொன்னதாக நீங்கள் குறிப்பிட்டது மிகச்சரி. நமது எழுத்தை வாசிக்க ஆயிரம் பேர் இருக்க வேண்டுமென அவசியமில்லை.. நூறு பேர் என்பதே நல்ல விஷயம் தான்.

    மேலும் இது ஒரு டைரி குறிப்பு என்பது ரொம்ப பொருத்தமான விஷயம்.. வீடுதிரும்பலில் இதுவரை 920 பதிவுகள் வந்துள்ளன. அவ்வப்போது Random-மாக சிலவற்றை மட்டும் படித்து சிரிப்பதுண்டு..

    தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மேலும் எழுதவும் மிக விரைவில் புத்தகம் வெளியிடவும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete