Thursday, December 31, 2015

நல்ல காலம் பொறக்குது


மார்கழி மாதத்தின் அதிகாலை பொழுதில் குடுகுடுப்பைக்காரன் குரலைக் கேட்டது பழங்கனவாகி விட்டது.  சிறு வயதில் அவனது குரலும் உருவமும் சற்று அச்சமூட்டுபவையாக இருந்தாலும், இப்போது யோசித்துப் பார்த்தால் அவன் பொதுவாக நம்பிக்கை ஊட்டுபவனாகத்தான் இருந்திருக்கிறான். ஏனென்றால் அவனை நினைத்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது "நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது" என்ற வாக்கியங்கள்தான்.

பாரதியாருக்கும் அவனைப் பிடித்திருக்கிறது போல் இருக்கிறது. அதனால்தான் புதிய கோணங்கி என்ற தலைப்பில் குறி சொல்லி இருக்கிறான் (அவனது முண்டாசும், மீசையும்கூட ஓரளவு  குடுகுடுப்பைக்காரனைத்தான் நினைவு படுத்துகிறது).

குடுகுடுப்பைக்காரன் வாயில் இருந்து வரும் நல்ல வார்த்தைகள் எப்படி நம் மனதுக்கு நம்பிக்கை அளிக்கிறதோ அதேபோல அவன் தவறாக எதுவும் சொல்லிவிடக் கூடாது என்ற பயமும் இருக்கும்.  பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போதும் அந்த உணர்வுதான்  வருகிறது.

அதனால்தான் "தரித்திரம் போகுது; செல்வம் வருகுது; படிப்பு வளருது; பாவம் தொலையுது" என்று அவன் சொல்லும்போது நம்பிக்கையாக இருந்தாலும், "படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான், போவான், ஐயோவென்று போவான்" என்று சொல்லும்போது "ஐயோ நாமும் படித்திருக்கிறோமே, ஏதாவது தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்திருக்கிறோமா அல்லது செய்துவிடுவோமோ" என்று  மனம் பதைபதைக்கிறது.  ஏனென்றால் சூது அல்லது பாவம் என்பதின் முழுமையான   விளக்கமே நமக்கு சரியாகப் புரிவதில்லை.  இதற்கும் பாரதியே நமக்கு வழி காட்டுகிறான்.  அவன் சொல்கிறான் -

பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன் றுமுதல்
நீயாய்  ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தருமமென யான் குறிப்பதிலும்
ஓயாதே நின்றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால். 

"தருமமென யான் குறிப்பதிலும்", இந்த வார்த்தைகளுக்கு நான் கொண்ட பொருள் நம்முடைய மனசாட்சிப்படி நடப்பதுதான்.   மற்றது எது குறித்தும் கவலை கொள்ளத் தேவை இல்லை. சூது வாது அல்லது பாபம் எதுவும் இல்லாமல் அது பார்த்துக் கொள்ளும் (சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லியவண்ணம் செயல் - அதனால் என்ன கஷ்டம் என்பதற்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறோமா என்ன ? - முடிந்தவரை மனசாட்சியின்படி வாழ்ந்துதான் பார்ப்போமே).

2015-ன் துன்ப நினைவுகளை 2015-லேயே விட்டுவிட்டு, சந்தோஷ நினைவுகளை மட்டும் 2016-ம் ஆண்டுக்கு கொண்டு சென்று அதை மேலும் பல மடங்கு பெருக்குவோம்.

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.  Again  எனக்குப் பிடித்த பாரதியின் கவிதையுடனேயே முடிக்கிறேன் (அவர்  சென்றதினி மீளாது மூடரே என்று சொன்னார், நான் நண்பரே என்று சொல்லி இருக்கிறேன். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. எனக்கு இல்லை).

சென்றதினி மீளாது, நண்பரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

புதிய கோணங்கி

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரந் தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான்.

வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்;
சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது,வளருது,

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடீ சொல்லடி,மலையாள பகவதீ!
அந்திரி,வீரி,சண்டிகை சூலி!
குடுகுடு குடுகுடு.

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது;சுறுசுறுப்பு விளையுது;
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
பயந் தொலையுது,பாவந் தொலையுது,
சாத்திரம் வளருது, சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தௌயுது;
வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;
சொல்லடீ சக்தி,மலையாள பகவதீ!
தர்மம் பெருகுத,தர்மம் பெருகுது


No comments:

Post a Comment