Sunday, April 22, 2018

கடந்து செல்வதின் கலை ....


எழுத்தாளர் எஸ்.ரா. அவா்களின் வலைப்பக்கத்தினை வாசித்துக் கொண்டிருந்தபோது அவா் கவிஞா் ஷங்கா்ராமசுப்ரமணியன் வலைப்பக்கத்தில் வாசித்ததில் மிகவும் பிடித்த கதை என்று பின்வரும் புத்தரின் கதையை குறிப்பிட்டிருந்தார்.  ஏற்கனவே இந்தக் கதையினை ஓஷோவின் புத்தகத்தில் வாசித்திருந்தாலும் மீண்டும் படித்தபோது இதை எனது வலைப்பக்கத்திலும் பகிரலாம் என்று தோன்றியது.
இதற்கு மிக முக்கிய காரணம் நாம் தியானம் என்ற வார்த்தையை பொதுவாக மிகவும் தவறாக புரிந்துகொண்டிருக்கிறோம்.  Hallucination (ஹாலுசினேசன்) என்ற ஒரு வார்த்தை கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டது.  இதன் பொருள் மாயத்தோற்றம்.  அதாவது நாமாக ஒரு விஷயத்தினை கற்பனை செய்துகொண்டு அதுதான் உண்மை என்றும் நம்ப ஆரம்பித்துவிடுவோம்.  இந்த தியான விஷயத்திலும் அப்படி நிறைய ஹாலுசினேசன் நிறையப் பேருக்கு உண்டு.  
”மகிழ்ச்சியின் மந்திரம்” என்ற தலைப்பில் ஆழ்நிலைத் தியானம் குறித்து நான் எழுதிய புத்தகத்தினை படித்த என் நண்பா்கள் பலா் என்னிடம் ”தியானம் குறித்து நாங்கள் என்னென்வோ கற்பனை செய்து வைத்திருந்தோம்.  ஆனால் இப்போது நிறைய புரிதல் ஏற்பட்டுள்ளது” என்னிடம் தெரிவித்தனர்.  
அதனால்தான் புத்தரின் இந்தக் கதையை படித்ததும் கண்டிப்பாக இதைப் பகிர வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.  ஒரு விஷயத்தினை முழுவதும் புரிந்து கொள்ளாமல் அதை ஆதரிப்பதோ அல்லது எதிா்ப்பதோ மிகவும் ஆபத்தானது.  தியானமும் அப்படித்தான். 
இதோ அந்தக் கதை .....
ஒரு நாள் புத்தர் தனது சீடன் ஆனந்தாவுடன் வனத்தைக் கடந்துகொண்டிருந்தார். அது கடுமையான கோடைக்காலம் என்பதால் புத்தருக்குத் தாகமாக இருந்தது. அவர், ஆனந்தனிடம், “கொஞ்சம் திரும்பிப் போனால், மூன்று நான்கு மைல் தூரத்தில் நாம் கடந்த ஒரு சிறு நீரோடை வரும். அதில் இந்தப் பிச்சைப் பாத்திரத்தில் நீர் மொண்டு வா. நான் மிகுந்த தாகம் மற்றும் சோர்வை உணர்கிறேன்” என்றார்.
ஆனந்தா வந்த வழியிலேயே திரும்பிச் சென்றான். ஆனால் அவன் அந்தச் சிறு நீரோடையை அடையும்போது, அவனுக்கு முன்னால் சென்ற சில மாட்டு வண்டிகள் நீரோடைக்குள் இறங்கித் தாண்டிச் சென்றதால், அந்த நீரோடை முழுவதும் கலங்கிச் சேறாகிவிட்டது. நீரினடியில் கிடந்த இலைகளும் மேலே வந்துவிட்டன. புத்தனின் சீடன் ஆனந்தா, நீரோடையின் நிலையைப் பார்த்துவிட்டு, இந்தத் தண்ணீரைக் குடிக்கவே முடியாது என்று நினைத்து, வெறும் கையுடன் திரும்பிவிட்டான்.
“நீங்கள் கொஞ்சநேரம் காத்திருக்க வேண்டும். கொஞ்சம் பொறுங்கள். அடுத்த இரண்டு மூன்று மைல்களில் ஒரு பெரிய நதி ஒன்று இருக்கிறது. அங்கே போய்த் தண்ணீர் கொண்டு வருகிறேன்’ என்று புத்தரிடம் கூறினான்.
ஆனால் புத்தரோ, மறுபடியும் சிறு நீரோடைக்குச் சென்றுதான் நீர்கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆனந்தாவால் இந்த வலியுறுத்தலைப் புரிந்துகொள்ளவே முடியவேயில்லை. ஆனால் குரு சொல்லிவிட்டாரென்றால், சீடன் அதைப் பின்பற்றுவதுதானே முறை. என்ன இது அபத்தம் என்று மனதில் நினைத்துக்கொண்டே மீண்டும் மூன்று, நான்கு மைல்கள் திரும்பவும் நடந்தான். அந்த நீரோடையின் நீர் குடிப்பதற்கு லாயக்கில்லாமல் இருக்கும் என்று நினைத்தான். அவன் திரும்பி நடந்தபோது, “ நீரோடையில் தண்ணீர் அழுக்காக இன்னும் இருந்தால் உடனடியாக வந்துவிடாதே ஆனந்தா. கரையில் கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார். எதுவும் செய்ய வேண்டாம். நீரோடைக்குள்ளும் போக வேண்டாம். சும்மா, கரையில் அமர்ந்து அமைதியாகப் பார். கொஞ்ச நேரம் கழிந்தோ நீண்ட நேரம் கழிந்தோ தண்ணீர் தெளியலாம். அப்போது தண்ணீரை முகந்து எடுத்துவந்தால் போதும்.” என்றார்.
ஆனந்தா நீரோடைக்குச் சென்றான். புத்தர் சொன்னது சரிதான். தண்ணீர் முன்பைவிட கலங்கல் குறைவாக இருந்தது. இலைகள் ஒதுங்கியிருந்தன. சேறு இறங்கியிருந்தது. ஆனால் இன்னும் முழுமையாகத் தெளிவடையவில்லை.
ஆனந்தா கரையிலமர்ந்து நீரோடையின் ஓட்டத்தை அமைதியாகக் கவனிக்கத் தொடங்கினான். மெதுவாக, நீரோடையின் மேற்பரப்பு ஸ்படிகம் போல மாறிவிட்டது. ஆனந்தாவுக்கு மகிழ்ச்சியில் நடனமாடத் தோன்றியது. புத்தர் ஏன் அவ்வளவு தூரம் அவனைக் கட்டாயப்படுத்தினார் என்பது புரிந்தது. 
புத்தருக்கு அவன் தண்ணீரைக் கொண்டுவந்து தந்தான். அவரது பாதங்களைத் தொட்டு நன்றி சொன்னான்.
“நீ என்ன செய்கிறாய் ஆனந்தா. நீ கொண்டு வந்த நீருக்காக நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்.”
“எனக்கு இப்போது புரிகிறது. நான் முதலில் கோபமடைந்தேன்; ஆனால் உங்களிடம் அதைக் காண்பிக்கவில்லை. திரும்ப நீரோடைக்குப் போவது முட்டாள்தனமான வேலை என்று நினைத்தேன். தற்போது எனக்கு உங்கள் செய்தி புரிந்துவிட்டது. இதுதான் எனக்கு இப்போதைய அவசியமான செய்தி. என் மனதிற்கும்தான்; அந்தச் சிறிய நீரோடையின் கரையில் அமைதியாக அமர்ந்திருந்ததைப் போல, என் மன விஷயத்திலும் விழிப்புணர்வை அடைவதற்காகக் காத்திருக்க வேண்டும்.
மனதுக்குள் குதித்துவிட்டால், சத்தம் அதிகமாகி, கூடுதலான பிரச்சினைகள் தான் எழும். இப்போது என் மனதின் கரையில் அமர்ந்திருப்பதன் முக்கியத்துவத்தை உணர்கிறேன். அதன் அசிங்கம், பிரச்சினைகள், பழைய இலைகளைப் போல மேலே வரும் பழைய வலிகள், நினைவுகள், ஆசைகள் ஆகியவற்றை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். அதைப் பற்றித் துயருறாமல், அமைதியாக அமர்ந்திருந்தால் எல்லாம் தெளிவடையும் என்பது புரிகிறது” என்றான் ஆனந்தா.
எல்லாம் அதன் போக்கில் நடக்கும். உங்கள் மனதின் கரையில் உட்கார்ந்துவிட்டால் போதும், அதற்கு எந்த ஆற்றலையும் நீங்கள் செலவழிப்பதில்லை. அதுதான் உண்மையான தியானம். கடந்து செல்வதின் கலைதான் தியானம்.


No comments:

Post a Comment