Wednesday, June 25, 2014

புத்தரின் மனைவி


கடந்த ஜூன் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) சென்னை பல்கலை கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற தினமணி தமிழ் இலக்கியத் திருவிழாவின் இரண்டாவது நாள் அமர்வில் பார்வையாளனாக சில மணி நேரங்கள் பங்கு பெற்றேன்.

நிறையப் பேர் நிறைய  பேசினாலும் நிறைவாகப் பேசியது சில பேர் மட்டுமே. அவர்களில் என்னை மிகவும் கவர்ந்த இருவர் - வைகோ மற்றும் பாரதி கிருஷ்ணகுமார்.  கையில் ஒரு குறிப்பைக் கூட வைத்துக்கொள்ளாமல் தங்கு தடையின்றி சரளமாகப் பேசுவது ஒரு கலை.  அதில் இருவருமே வல்லவர்கள்.

வைகோவைப் பற்றி பலருக்கும் "ராசி இல்லாத" அல்லது "பிழைக்கத் தெரியாத" அரசியல்வாதி என்ற அளவில் தெரிந்து இருக்கும்.  ஆனால் இன்று பேச்சாற்றலிலும் இலக்கிய அறிவிலும் செறிந்து இருக்கும் ஒரே அரசியல்வாதி வைகோ என்று கூறலாம்.

என்னைச் செதுக்கிய இலக்கியம் என்ற தலைப்பில் சிலப்பதிகாரத்தினை அவர் மடை திறந்த வெள்ளம் போல் பேசியது "வாவ்" போட வைத்தது.  ஆனால் எதைப் பற்றி பேசினாலும் அதை இலங்கைப் பிரச்சினையோடு ஒப்பீடு செய்து பேசுவது அவருடைய பலமா அல்லது பலவீனமா என்று தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது.  அரசியலில் இன்று அவருடைய நிலை எப்படியோ எதிர்காலத்தில்  தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக வைகோ விளங்குவார்.

பாரதி கிருஷ்ணகுமார் அவர்களை ஒரு இலக்கியவாதி என்ற அளவில் தெரியும்.  ஆனால் இவ்வளவு அருமையான பேச்சாளர்  என்று தெரியாது.

புத்தக வாசிப்பின் அவசியத்தைப் பற்றி பாரதி கிருஷ்ணகுமார் பேசியது புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களைக் கூட வாசிப்பின் அருகில் கொண்டு வந்துவிடும்.

பேச்சில் கேட்ட புத்தரைப் பற்றிய ஒரு சம்பவம் சுவையாக இருந்தது.

புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர்.  அவர்  தனது 16 வயதில் யசோதரையை 
மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன்.  பிறகு அவர் தனது 29வது வயதில் மனைவி மக்களைப் பிரிந்து துறவறம் பூண்டார்  என்பது அனைவரும் அறிந்ததே. 

ஆனால் நிறையப் பேருக்குத் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது.  சித்தார்த்தர் புத்தர் ஆனா பிறகு நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய மனைவியையும் மகனையும் சந்தித்தார்.  அப்போது அவர் மனைவி யசோதரை புத்தரைப் பார்த்து  சில கேள்விகள் கேட்டாள் :

1. நீங்கள் எங்களை விட்டுச் செல்லும்போது எங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்று விட்டீர்களே.  ஏன்  ?

2. நீங்கள் போக வேண்டாம் என்று நாங்கள் தடுத்து விடுவோம் என்று சொல்லாமல்  சென்று இருந்தால் அவ்வளவு பலகீனமானவரா நீங்கள் ?

3. நீங்கள் செய்த இதே வேலையை நான் செய்து இருந்தால் நீங்களும் இந்த சமுதாயமும் என்னை இப்படி கொண்டாடி இருப்பீர்களா ?

போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரால் ஒரு கேள்விக்கும் பதில் கூற முடியாமல் மௌனமாகத் தலை கவிழ்ந்தார்.

போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தனுக்கே மனைவியின் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்றால் ???? - ஆகையால் ஆண்மக்களே  .........

எனக்குத் தெரியும் நான் தனி மரமல்ல ஒரு பெரிய தோப்பு என்று. ......





1 comment: