Sunday, August 16, 2015

அனந்தராமன் சார்

திருவல்லிக்கேணி அருணாச்சலம் தெரு எண் 36-இல் இருக்கும்  குடியிருப்பு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும்.  இந்தக் குடியிருப்பின் மாடியில் உள்ள வீட்டில்தான் அனந்தராமன் சார்  வசித்து வந்தார்.  வீட்டின் வாசலில் K S .Anantharaman, Advocate & Professor என்ற ஒரு board மட்டும் இருக்கும். ஆனாலும் இந்த விலாசம் ஊர் அறிந்த ஒன்று.

அந்த வீட்டின் ஹாலில் அதிக பட்சம் 15 பேர் அமர முடியும்.  ஆனால் இந்த ஹால் அனந்தராமன் சார் மூலமாக பல நூற்றுக்கணக்கான கம்பெனி செக்ரெட்டரிகளையும் (Company Secretaries) Aravind Dattar  உள்ளிட்ட பல வழக்கறிஞர்களையும் (Advocates) உருவாக்கியுள்ளது.

அவர் தன்னுடைய 87 வது வயதிலும் கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் கொண்டு இருந்ததால்  அவருக்கு 60 வயது முதல் 20 வயது வரை எல்லா வயதிலும் மாணவர்கள் உண்டு.   அவர்களில் பெரிய வழக்கறிஞர்களாகவும், அல்லது உயர்ந்த பதவிகளிலும் இருப்பவர் பலர்.   ஆனால் எவரிடமும் பர்சனல் ஆக எந்த உதவிக்கும் செல்லாதவர்.  

சில ஆண்டுகளுக்கு முன் நான்  நண்பர்கள் Prakash மற்றும் Sandeep உடன் சென்று அவரை சந்தித்து ஒரு shirt பரிசாக  அளித்து ஆசி பெற்று வந்தோம்.  அந்த shirt ஐ கொடுப்பதற்கே, ஏதாவது சொல்லி விடுவாரோ என்று கொஞ்சம் பயந்தோம்.  நல்ல வேளை எதுவும் சொல்லாமல் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

நானும் அவரிடம் Company Law கற்றுக் கொள்வதற்காக ஒரு மாணவனாக சேர்ந்தவன்தான். ஆனால் விரைவில் Teacher - Student என்ற நிலையில் இருந்து குரு சிஷ்யன் என்ற நிலைக்கு வந்தது. என்னைப் போலவோ அல்லது என்னை விட அதிக நெருக்கமாகவோ அவருக்கு பல சிஷ்யர்கள் உண்டு.  என்னைப் பொறுத்தவரை நான் அவரை மிகவும் நெருக்கமாக நினைத்தற்கு சில காரணங்கள் உண்டு.

நான் Company Secretaryship Course சேர்ந்த போது வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.  அதனால்  வேலை பளுவின் நடுவில் exam-ஐ சுலபமாக பாஸ் செய்வது எப்படி என்ற கோணத்தின் அடிப்படையில்தான் அவரிடம் சேர்ந்தேன்.   ஆனால் அவர் law subject எடுத்த விதம் என்னை  வெறும் மார்க்குக்காக படிக்காமல் subject-ஐ ஆழமாக படிக்கும் ஆர்வத்தினை உண்டாக்கியது.

அனந்தராமன் சார் மிகவும் கோபக்காரர்.  அவர் வீட்டில் வரிசையாக போட்டிருக்கும் chair-களை நம் இஷ்டத்திற்கு மாற்றினாலோ அல்லது உட்காரும் போதும் எழுந்திருக்கும் போதும் chair-களை நகர்த்தி சத்தம் உண்டாக்கினாலோ tension ஆகி விடுவார்.   கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப உடனே கோபம் தணிந்து cool ஆகி விடுவார்.

அவரின் கோபத்திற்கு இடையில் புகுந்து தப்பித்து அவரின் அன்பை மட்டும் பெற்ற பாக்கியவான்களில் நானும் ஒருவன்.

ஸ்ரீனிவாசன் உங்களுக்கு law subject நன்றாக வருகிறது.   Advocate தொழிலில்  உங்களால் நன்றாக shine ஆக முடியும் என்று சார் சொன்னதும் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி  பட்டம் வாங்கிய மகிழ்ச்சி எனக்கு.

அவருடைய Lectures on Company Law புத்தகத்தின் 7 வது பதிப்பின் போது என்னை பிழை திருத்தம் (proof reading)  செய்யச் சொன்னார். எனக்கு company law-வை ஓரளவு முழுமையாக அறிந்து கொள்ளும் ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக அது அமைந்தது.

அந்தப் பதிப்பில் என்னுடைய பெயரை போட்டு எனக்கு நன்றி கூறியதை highlight செய்து ஊருக்கெல்லாம் காட்டிக் கொண்டிருந்தேன்.  அது அவ்வளவு பெருமையான விஷயமாக இருந்தது.

அந்தப் பதிப்பின் ஒரு புத்தகத்தில் "With Blessings"  என்று தன் கைப்பட எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.

அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தாலும் கடந்த ஓராண்டாக அவரை சந்திக்கவில்லை.  அதற்கு ஒரு முக்கியமான காரணம் நான் "Professional Guide on Drafting, Appearances and Pleadings" என்ற தலைப்பில் ஒரு சிறிய புத்தகம் எழுதி இருந்தேன்.  அதை அவரிடம் காட்டி அவரின் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  ஏனென்றால் இந்தப் புத்தகம் எழுதுவதற்கான நம்பிக்கையையும்  அறிவையும் ஊட்டியது அவர்தான்.  ஆனாலும் அந்தப் புத்தகத்தை அவரிடம் நேரில் காட்டுவதற்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு உதறல்.  அதனால் அதை தள்ளி வைத்துக் கொண்டே இருந்தேன்.  வாழ்கையில் சில விஷயங்களை நினைத்தபோது செய்து விட வேண்டும்.   ஏனென்றால் மீண்டும் செய்வதற்கு அது வாய்க்காமல் போய் விடக் கூடும்.

அதனால் என்ன சார், உங்கள் "Blessings" இன்றும் என்னுடன் உள்ளது.  எப்போதும் அது என்னுடன் இருக்கும்.


No comments:

Post a Comment