Friday, August 28, 2015

தவமின்றி கிடைத்த வரமே


Advocate  தொழிலில் இருப்பதால் இப்போதெல்லாம் நிறைய விவாகரத்து case- களும் வருகின்றன.  நாய் விற்ற காசு குரைக்காது என்று தெரியும். இருந்தாலும் பிரித்து வைத்து சம்பாதிக்க மனம் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால்  விவாகரத்து வழக்குகளை நடத்துவதில்லை என்று ஒரு பொதுவான விதியை வைத்து இருக்கிறோம். 

மிகவும் அரிதாக ஒன்றிரண்டு வழக்குகளைத்  தவிர விவாகரத்துக்கான காரணங்கள் பெரும்பாலும் மிகவும் silly ஆக இருக்கின்றன. இந்தக் காரணங்களுக்கெல்லாம்   விவாகரத்து செய்து இருந்தால் நம்முடைய பெற்றோரோ அல்லது ஏன் நாமோ கூட (I mean கல்யாணம் செய்து சண்டையும் சமாதானமுமாக இருக்கும் பெரும்பான்மையான தம்பதியர்) குறைந்தது சில நூறு தடவையாவது விவாகரத்து செய்து கொண்டிருக்க வேண்டி இருந்திருக்கும்.

விவாகரத்துக்கு  வரும்  சில  தம்பதியர் குறைந்தது 6 அல்லது 7 வருடங்கள் காதலித்து கரம் பிடித்தவர்கள் (காதலித்து இருக்கும் போதும் பிடித்து (??) இருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை) .  "என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" என்று ஆணும், "தவமின்றி கிடைத்த வரமே, இனி  வாழ்வில் எல்லாம் சுகமே" என்று பெண்ணும்  உருகி உருகி காதலித்தவர்கள்தான்.  ஆனால் கல்யாணம் ஆகி சில வருடங்களில் (அல்லது சில மாதங்களில்)  court படி ஏற வேண்டிய நிலை என்ன என்று யோசித்தால் சில விசயங்கள் புரிகிறது.

ஆங்கிலத்தில் juxtaposition என்று ஒரு வார்த்தை உள்ளது. இதன் ஆங்கிலப் பொருள் "place something closely alongside something else".  சுருக்கமாக சொல்வதென்றால் இரு துருவங்கள் இணையும் இடம் என்று பொருள் கொள்ளலாம்.  நாம் இப்போது கிட்டத் தட்ட அந்த காலக் கட்டத்தில் இருக்கிறோம்.

அதாவது "அடங்க மறு அத்து மீறு" என்று தொல் திருமா பாணியில் பெண்ணும், அதே கோஷத்துடன் ஆணும் புறப்பட்டு இருப்பதுதான் (விந்தையாக இருந்தாலும் அதுதான் உண்மை - atleast நடுத்தர வர்க்கங்களில்  அல்லது அதற்கும் மேலே).

ஆணும் பெண்ணும் சமமாக வளர்க்கப்படும் இந்த நாட்களில் இருவருக்குள்ளும் ego சரிசதவிகிதமாக இருக்கிறது. அடிப்படையில் ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் தான் இருக்கிறோம். ஆண் Hello FM என்றால் பெண் Big FM   (Hello அது என்ன ஆண் என்றால் Hello பெண் என்றால் Big என்று சண்டைக்கு வந்து விடாதீர்கள் - ஒரு எதுகை மோனைக்காக போட்டது. வேண்டுமானால் மாற்றிப் போட்டுக் கொள்ளுங்கள்). அதனால் இரண்டும் ஒரே அலைவரிசையில் இருக்க முடியாது.  அவரவர் நிலையில் இருந்துதான் ஒரே விஷயத்தை இருவரும் அணுகுவார்கள். அதனால் கருத்து வேறுபாடு தவிர்க்க முடியாதது.  அதே சமயத்தில் ஆணோ பெண்ணோ மற்றவரை சார்ந்து இருக்கும் சமயங்களில் அடங்கி இருப்பார்கள் (அல்லது அடங்கி இருப்பது போல இருப்பார்கள்).  இல்லாவிட்டால் அடங்க மறு அத்து மீறுதான்.


இதற்குதான் நம் முன்னோர்கள் "அர்த்தநாரி" தத்துவத்தை சொன்னார்கள். அதாவது ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். அதே போல ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள் என்று.   இதன் முக்கிய பொருள் எந்த ஒரு விஷயத்திலும் ஆண் இந்த விஷயத்தை எந்தக் கோணத்தில் அணுகுவான் என்று பெண்ணும் அதே போல பெண் இந்த விஷயத்தை எந்தக் கோணத்தில் அணுகுவாள் என்று ஆணும் சிந்திப்பதுதான்.  இப்படிச் செய்தாலே பல தகராறுகளை தவிர்த்து விட முடியும்.

ஆனால் இதற்குத் தேவை கொஞ்சம் சிந்திக்கும் திறனும், ஈகோவை மிஞ்சின கொஞ்சம் extra அன்பும்தான்.

அப்படி இருந்தால் சண்டையே வராதா என்று கேட்காதீர்கள்.  அப்பவும் நிறைய வரும்.  ஆனால் முதல் நாள் போட்ட சண்டையை மறந்து விட்டு மறுநாள் ஆனந்தமாக சிரித்துக் கொண்டு இருப்போம் - சிரிப்பின் முடிவில் மற்றொரு சண்டை ஆரம்பிக்கக்கூடும் என்று தெரியாமல்.

சண்டையே வேண்டாம் என்று நினைத்தால் சரணாகதி தத்துவம்தான் ஒரே வழி.   நான் ஏன் சரணாகதி அடைய வேண்டும் என்று இருவரும் நினைத்தால் அதற்கு இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம்.  அது வரை சந்தோஷமாக சண்டை போட்டுக் கொண்டிருப்போம்.



No comments:

Post a Comment