Sunday, August 16, 2015

நல்லாயிரு



சமீபத்தில்  படித்த ஒரு கதை.  நீங்களும் கேள்விப்பட்டு இருக்கலாம்.  இருந்தாலும் நல்ல விஷயங்களை மீண்டும் படிப்பதில் தவறில்லை என்பதால் இந்தப் பதிவு.

ஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான்.  எல்லோரையும் எப்போதும் வம்புக்கு இழுத்துக் கொண்டே இருப்பான். அதனால் அவனிடம் நெருங்குவதற்கே எல்லோரும் பயப்பட்டார்கள்.  ஆரம்பத்தில்  அவனுக்கு இதில் ஒருவித பெருமிதம் இருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல தன் மீதே அவனுக்கு ஒரு கோபம் தோன்றியது.  தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.   ஆனால் எப்படி என்று தெரியவில்லை. 

அந்த சமயத்தில் அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்தார். அவரிடம் சென்று அந்த முரடன் தானும் ஒரு சாதாரண ஒரு மனிதனாக எல்லோரையும் போல் வாழ வேண்டும் என்று ஆசைப் பாடுவதாகவும் அதற்கு அந்த ஞானி உதவ வேண்டும் என்றும் வேண்டினான். 

அந்த ஞானி சிரித்துக் கொண்டேஅவனிடம் இனி யாரைப் பார்த்தாலும் "நல்லாயிரு" என்று சொல்லிக் கொண்டே இரு. வேறு எதுவும் அவர்களிடம் பேசாதே என்று சொல்லி சென்று விட்டார்.

முரடனுக்கு இப்போது ஒரே குழப்பம் மற்றும் சந்தேகம்.  எப்படி நல்லாயிரு என்ற ஒரு வார்த்தை தன்னுடைய வாழ்க்கையை மாற்றிவிடும் என்று. இருந்தாலும் சொன்னது ஞானி ஆயிற்றே.  அதனால் முயற்சி செய்து பார்த்து விடுவோம் என்று முடிவு செய்தான். 

அன்றிலிருந்து அவன் யாரைப் பார்த்தாலும் நல்லாயிரு என்ற வார்த்தையை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.  அவனை இதுவரை முரடனாக பார்த்தவர்கள் எல்லாம் இப்போது அவனை வியப்புடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.  அவனைத் தெரியாத பக்கத்துக்கு ஊர்க்காரர்கள் அவனிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நம்ப ஆரம்பித்தார்கள்.  

ஊர்க்காரர்கள் சிலருக்கு அவன் நல்லாயிரு என்று சொன்ன ராசி சில நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பித்ததும் அவனைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.  

இப்போது அந்த முரடன் யோசிக்க ஆரம்பித்தான்.  ஒரே ஒரு நல்ல வார்த்தை சொன்னதற்கே இவ்வளவு நல்லது நடக்க ஆரம்பித்தால் நம் வாழ்க்கை முழுவதும் நல்ல வார்த்தைகளை பேசினால் எப்படி இருக்கும் என்று.  

முன்பு சந்தித்த ஞானி இப்போது மறுபடியும் அந்த முரடன் இருந்த ஊருக்கு வந்தார்.  முரடன் அந்த ஞானியை வணங்கி தன்னுடைய வாழ்கை மாற்றத்தினை சொன்னான்.  

ஞானி சிரித்துக் கொண்டே சொன்னார் "நல்லாயிரு" என்று.


சமீபத்தில் படித்த இன்னொரு விஷயம்.

நம் ஊரில் திருக்குறள் முனுசாமி என்ற ஒரு பிரபல பேச்சாளர் இருந்தார்.  திருக்குறளை நாடு முழுவதும் கொண்டு சென்ற முன்னோடி இவர்.  திருக்குறளார் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் இவர்.

ஒரு முறை அவரிடம் ஒருவர் தன்னுடைய பிள்ளைகள் தன் பேச்சை கேட்பதில்லை என்று ஆதங்கப் பட்டார்.

அதற்கு திருக்குறளார் சொன்ன பதில் classic.

அவர் சொன்னார்.  நாம் பிறந்ததில் இருந்து நம் கூடவே இருக்கும் நம் கை கால்களே ஒரு காலத்தில் நம் பேச்சைக் கேட்பதில்லை.  அப்படி இருக்கும் போது நம் வாழ்வின் பாதியில் வந்த பிள்ளைகளோ மற்ற உறவுகளோ நம் பேச்சைக் கேட்பார்கள் என்று நினைப்பது எப்படி சரியாக இருக்க முடியும் என்று.

அப்போதுதான் யோசித்தேன். 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்து  நாம்  வைத்த அலாரத்தை நாமே கேட்பதில்லை.  பிறகு நம் பேச்சை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமானது.


No comments:

Post a Comment