Sunday, March 23, 2014

நம்பிக்கையில் நிம்மதி

நம்பிக்கையில் நிம்மதி

நான் அடிக்கடி படிக்கும் புத்தகங்களில் ஒன்று கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்.  இதன் ஆறாம் பாகம் 'நெஞ்சுக்கு நிம்மதி' என்ற புத்தகத்தை இன்று புரட்டிக் கொண்டு இருந்தபோது கண்ணில் பட்டது 'நம்பிக்கையில் நிம்மதி' என்ற தலைப்பு.  வாருங்கள் கவிஞரின் வார்த்தைகளை கொஞ்சம் உள் வாங்கலாம்.

எதன் மீது எனக்கு சந்தேகம் வந்தாலும் நிம்மதி தொலைகிறது.  எது பிடிக்கவில்லையோ அதில் இருந்து ஒதுங்கி  நில். ஆனால் தினமும் சந்தேகப்பட்டு உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொள்ளாதே.

சாப்பிட்டு முடித்த பின் எதை சாப்பிட்டோமோ என்று நினைத்தால் அடிவயிற்றை கலக்கும்.  சாப்பிடுவதற்கு முன்னாலேயே நன்றாகப் பார்.

யோசித்து செய்த முடிவுகளில் நம்பிக்கை வை.

திருப்பதிக்கு போவது என்று முடிவு கட்டினால் திரும்பி வரும்போது பலன் இருக்கும் என்று நம்பு.

நம்பிக்கையும் சந்தேகமும் மாறி மாறி இருந்தால் அப்போதும் நிம்மதி இருக்காது.  மீன் கூடைக்கு பக்கத்தில் பூக்கூடையை வைத்தால் மீன் வாசமும் தெரியாது பூ வாசமும் தெரியாது. கலப்படமான ஒரு அருவருப்பே தோன்றும்.

இன்றைய பொழுது நன்றாக இருக்கும் என்று நம்பு. நன்றாகவே இருக்கும்.

தண்ணீரில் விழுந்து விட்டால் நீந்தத்  தெரியும் என்று நம்பு. நீந்தத் தெரிந்து விடும்.  கடன் வந்துவிட்டால் கட்ட முடியம் என்று நம்பு. கட்டிவிட முடியும்.

திருநீறோ திருமண்ணோ இடும் போது கடனுக்கு இடாமல் நம்பிக்கையில் இடு. அவை இருக்கும்வரை மூளை பிரகாசிக்கும்.

நாளைக்குத்  திருச்சிக்கு போகிறோம் என்று Rockfort  எக்ஸ்ப்ரஸில் ஏறு.  அது திருச்சி போய்  சேர்ந்து விடும். இதுவா போகும் என்று சந்தேகப்படு.  அது புறப்படவே புறப்படாது.

நம்பினால் கை கொடுப்பது நம்பிக்கை.

என்ன நண்பர்களே எப்படி இருக்கிறது கவிஞரின் வார்த்தைகள். எப்போதாவது நமக்கு வாழ்க்கையில் அவநம்பிக்கை தோன்றினால் சற்று கவிஞரின் வார்த்தைகளை படிப்போம். நம்பிக்கை கொள்வோம்.

  










No comments:

Post a Comment